Friday 28 September 2012

முதல் சொட்டு











ஒரு பறவையை வர்ணிப்பது சுலபமில்லை. அதிலும் அந்தப் பறவை ஒரு காக்கையாக இருந்தால் இன்னும் கடினம். இன்று எங்கள் வீட்டுக்கு வந்தது ஒரு காக்கை கூட அல்ல, காக்கைக் குஞ்சு. முதல் முறையாக ஒரு காக்கைக் குஞ்சைப் பார்க்க நேர்கிற ஒருத்தன் அப்படியொன்றும் பெரிதாக அதை வார்த்தைகளில் வரைந்து விட முடியாது. என் மிகக் குறைந்த எல்லைகளுடைய கவனத்தில், ஒரு சாம்பல் காக்கையை அசல் சாம்பல் கழுத்துடன் வரைந்தவர் ஆர்.கே.லக்‌ஷ்மணன் தான்.

ஒரு கேலிச்சித்திரக்காரனுக்கு மட்டுமே அவன் கேலிசெய்கிற உயிரின் ஆன்மா தெரியும். மிகுந்த வருத்தத்துடனுடனும் அக்கறையுடனுமே அவன் கேலி செய்கிறான். லக்‌ஷ்மண் காக்கையின்ஆத்மாவை உணர்ந்தே அந்தக் காக்கைகளை வரைந்திருப்பார். கேலி எதுவும் கிடையாது. அப்படியே அவர் கேலி  செய்திருந்தாலும், அதைக் காக்கைகள் சந்தோஷமாகவே ஒத்துக்கொண்டிருக்கும். காக்கைகளும் அரசியல் செய்யாது. லக்‌ஷ்மணன் விரல்களுக்கும் அந்த உத்தேசம் இருந்திருக்க வாய்ப்பிலலை.

நாங்கள் இரண்டு பேரும் ஏதோ சில்லறைக் காரியங்களுக்காக வெளியே
போய்விட்டு வருகிறோம். இது தெற்குப் பார்த்த வீடு, மேற்கே பார்த்த நடை ஏறினால் ஒரு சிறு கல் திண்டு. இரண்டு பேர் உட்காரலாம். உங்களை  உட்காரச் சொல்லும்படி அதில் ஏதோ இருக்கிறது. இப்போது சற்று மெலிந்து சோகையாகப் போய்விட்ட நந்தியாவட்டையின் இலைகளின் நிழல் அந்தக் கல்லை தூசு இல்லாமல் சதா துடைத்துக்கொண்டே
இருக்க, வெயில் அதனுடைய அன்றைய தினத்தின் சாகசத்தை அதன் மீது எழுதுகையில், எட்டிப் பார்த்து வாசிக்கும்  நம் அடிப்படை ருசிக்காகவேனும் உங்களுக்கு உட்காரத் தோன்றும். வீட்டின் கதவே அற்ற கதவை அது திறந்துவைத்துவிடுதாகவே சொல்லலாம்.

அந்தக் காக்கைக் குஞ்சு  பம்மிப்போய் கல் திண்டுக்கும் முன் கதவுக்கும் மத்தியில் சுவரோடு சுவராக ஒண்டி உட்கார்ந்திருந்தது. நான் கூட அதைப் பார்க்கவில்லை. நான் உற்றுப் பார்க்கிற லட்சணம்தான் தெரியுமே. “இது யாரு, வந்திருக்கா”   என்று சங்கரியம்மாவிடம் இருந்து ஒரு சத்தம் வருகிறது. நமக்கு முன்னால் நம் வீட்டில் யாராவது விருந்தாள் வந்து உட்கார்ந்திருந்தால் ஒரு சந்தோஷம் நம் குரலில் கசியும்.  அந்த வகை அது. கிட்டத்தட்ட ஒரு கொஞ்சல், கையைத் தூக்கிப் போடுகிற் குழந்தையை வாங்குவதற்குக் கை இரண்டையும் விரித்துக் கொண்டே குனியும் போது நம்முடைய முகத்திலேயே ஒரு குழந்தைமை வந்திருக்குமே அது எல்லாம் சேர்ந்த ஒன்று சங்கரியம்மாவிடம்.

ஒரு கன்றுக்குட்டியிடம், ஒரு குட்டிப் பூனையிடம், தேங்காய் நாரோடு கீழே விழுந்திருக்கிற அணில் குஞ்சிடம் எல்லாம் எனக்கும் பிரியம் உண்டுதான்.  ஆனால் இப்படிப் ,பெத்த பிள்ளைக்குப்’ பால் கொடுக்கப் போகிற மாதிரி உடனடியாக நான் சாலப் பரிந்துநிற்கிறேனா என்று தெரியவில்லை. எனக்கு அந்தக் காக்கைக்குஞ்சை விட, முதலில் அதைப் பார்த்தவுடன் வேறு மனுஷியாகிவிட்ட சங்கரியம்மாவைப் பிடித்திருந்தது.
உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்ற வரியை வாசித்திருக்காமலே
அப்படி இருக்கமுடிகிறது இவர்களுக்கு.

நான் கால்மடக்கி அப்படியே உட்கார்ந்தேன்.  அப்படி உட்கார்கிற நேரத்திலேயே என் பாஷை மாறிவிட்டிருந்தது. ”யாரு வந்திருக்கா?” என்ற கேள்வியையே நான் வேறு விதமாகக் கேட்டபடி என் உரையாடலைத் துவங்கினேன், ‘’ இங்க வந்து உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க/”. அது பதிலா சொல்லப் போகிறது. இன்னும் அதிகமாக  சுவரோடு ஒதுங்கியது.  அது தவறிவிழுந்த கூடு இருக்கும் புங்கைமரக் கிளைக்கு ஒரு சுரங்கப்பாதை அந்தச் சுவரில் இருந்து துவங்குவது போல தன்னுடைய அலகால் மர்மச் சாவிகளிட்டுத் திறந்துவிடும் முயற்சியில் இருந்தது.

“உங்க அம்மைய எங்கே/ இப்படி உன்னை இங்க விட்டுட்டு அவ எங்க ஊர் சுத்தப் போயிருக்கா/” என்று நான் மேற்கொண்டு பேசினேன். ஒரே ஒரு பாத்திரத்திற்கு எழுதப்பட்ட நாடக வசனங்களை மாறிமாறி நாங்கள் இரண்டு பேரும்  பேசிக் கொள்கிறோமோ என்று அந்தக் காக்கைக் குஞ்சிற்கே பட்டிருக்கும், “வரட்டும் பார்த்துக்கிடுதேன்” என சங்கரியம்மா
தொடர்ந்த போது.

நன்றாக வளர்ந்த குஞ்சுதான். பறக்கச் சொல்லிக் கொடுக்கும் போது சற்று அவசரமாக முதல் கியருக்குப் பதிலாக முன்றாவது கியரைப் போட்டிருக்க வேண்டும். விபத்து பெரிதாக ஒன்றுமில்லை. அடிகிடி கிடையாது. விழுந்த வேகத்தில் உண்டான அதிர்ச்சி இருந்தது பார்வையில்.     என்னுடைய நெருக்கம் கூடினதும் படபடவென்று சிறகை அடித்தது. ஒரு பக்கச் சிறகு
சுவரிலும் இன்னொரு பக்கச் சிறகு தரையிலும் சரசரத்தன. அந்தச் சத்தம் ஒரு பறவையின் சிறகுகளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருந்தது. காற்றுடனும் வெளியுடனுமே அடிக்கப்பட்ட சிறகுகளுக்குள் காலம் காலமாகச் சேகரிக்கப்பட்ட நெடிய மௌனம் தரையில் என் முன் உடைந்து சிதறுவதை உணர முடிந்தது.  ஒரு மரணம், மீசை தடவும் ஒரு கருப்புப் பூனையின் வடிவில் இன்னும் சற்று நேரத்தில் எட்டிப் பார்க்கும்
எனில் என்ன செய்வது/ அதிகாலைகளில் சிதறிக் கிடக்கிற ஏழுசகோதரிக் குருவிச் சிறகுகளை வேறொரு நிறத்தில் பார்க்க நேரும் நாளைக் காலை வெளிச்சத்தை எப்படித் தவிர்ப்பது.

எதையும் தவிர்க்கும் உத்தேசம் இல்லாமல், அனைத்தும் நிகழத் தயாராக தன் நிரலை அந்தக் குஞ்சு வைத்திருந்தது. ஒரு முறை கூட இதுவரை பார்த்திராத வானத்தைப் பற்றிய எந்த இழப்புணர்வும் இன்றி அது மிகுந்த அமைதியுடன் இருந்தது.  பதற்றம் எல்லாம் எங்களுக்கு மட்டுமே.  இதுவரை இருந்த மரம், கிளை, இலை, வெயில், வாயில் ஊட்டப்பட்ட உணவு எதன் ஞாபகத்தையும் முற்றிலும் துறந்துவிட்ட பரிபக்குவம் அதன் கண்களின் வட்டத்தில் மினுங்கியது. ஒரு கருப்பு புத்தர் அது என்று சொன்னால் தப்பில்லை.

‘’அதைத் தூக்கி மரத்தில விட்டுற முடியுமாண்ணு பாப்பமே’’  - இப்படிச் சொன்னால், நீங்கள் கொஞ்சம் பாருங்களேன் என்றுதானே அர்த்தம்.  பறவைகளை வசக்குவது எப்படி? என்று இதுவரை நான் எந்தப் புத்தகமும் வாசித்தவன் இல்லை.  வழக்கமாக இருவாட்சிப் பூ பறிப்பதற்கு ஒரு சிறு துறட்டி உண்டு. அதை எடுத்துக்கொண்டு வந்தேன்.  நல்ல திடகாத்திரமான கூரிய அலகு, மற்றும் முழு வளர்ச்சியடைந்த, அதிகபட்ச  எண்  காலணிகள் தேவைப்படும் அளவுக்கு வளர்ந்த நகங்கள் இருந்ததால், ஒரு குச்சியின் உதவியே போதுமானதாக இருக்கும் என நம்பி, அதை கிளைப்பெயர்ச்சி செய்ய உட்கார்ந்தேன்.

வீட்டுக்கணக்குப் போடாமல் வந்து ஜான்ஸன் ஸார்வா பிரம்புக்குக்குக் கையைப் பயந்து பயந்து தணிவாக நீட்டுகிற ஐயன்னா முத்தையாவாக ஆகியிருந்தது அந்தக் குஞ்சு. நான் அந்தக் குச்சியை நீட்ட நீட்ட அது பயந்து நகர்கிறது.  நந்தியாவட்டை மூட்டுப் பக்கம் விழுந்து சுவர் ஓரமாகவே தத்தித் தத்திப் போகிறது. ஒரு கச்சிதமான காக்கைத் தத்தல் அதற்கு வந்துவிட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நெருக்கடிகளின் மத்தியிலான உடல்மொழி நம்மையறியாமல் நம்மை நிரூபிக்க அல்லது அடையாளம் காட்டிவிடத்தானே செய்கின்றன.  சரி. கிட்டத்தட்ட அது புங்கை மரம் பக்கம் போய் விட்டது ஒரு ஊடு சுவர். கொஞ்சம் முயற்சி செய்து எவ்விப் பறந்தால் அதன் கிளையை அது அடைந்துவிடவும் கூடும். அதனுடைய நகங்கள் பறண்டின கிளையின் பச்சை வாசம், அல்லது அதன்
பெற்றோரின் எச்சத்தின் வாடை அல்லது கூட்டில் ஊட்டப்பட்டபோது பிளந்த வாயிலிருந்து சிந்திய ஒரு உணவின் பூர்வ ருசி ஏதேனும் அந்தச் சிறகுகளுக்கு முதல் பறத்தலை அருளலாம் என்று நான் நம்பினேன். என் பயம் பூனைசார்ந்தது மட்டுமே.

காக்கைக் குஞ்சைத் தவிரவும் வீட்டில் அன்றாட அட்டவணைகள் இருக்கும் தானே.  சாப்பாட்டுக் கடையை முடித்துவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது செல்லக் குரல்களுக்கான தேடல்கள், சுகன்யா, ப்ரகதி, கௌதம், யாழினி பாடல்கள். அடுப்படியில் இருந்து ஒரு குரல் வருகிறது. இதுவும் செல்லக் குரல்தான். சங்கரியம்மாவுடையது. “இங்க பாருங்களேன். இது எங்க வந்து உக்காந்திருக்குண்ணு”.

காக்கைக் குஞ்சு குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தில், ஒரு பச்சை ப்ளாஸ்டிக் கூடையில் இருந்த பெல்லாரி வெங்காயக் குவியலின் மேல் அமர்ந்திருந்தது. அடுக்களை சன்னல் வழியாக எப்படிப் பறந்து எப்படி உள்ளே வந்தது எனத் தெரியவில்லை. தவறான கைகாட்டிகளை அது நம்பியிருக்கவேண்டும். நேர் எதிர்த்திசையில் முயன்றிருந்தால் அதனுடைய கூட்டையே அடைந்திருக்கலாம் இதற்குள்.

‘அரிசி உப்புமா சாப்பிடுமா”  இல்லை, அந்த தவிட்டு பிஸ்கட்டைப் புட்டுப் போடுவமா/”  சங்கரியம்மா கவலை சங்கரியம்மாவுக்கு. சுபாஷ் அண்ணன்தான் சொல்வார், ‘ ஏ, பரம வைரிக்குத்தான் டே எங்க வீட்டில அரிசி உப்புமா கிண்டி, சாப்பிடச் சொல்லுவோம். நீ என்னைச் சாப்பிடச் சொல்லுத, பாவி” என்று.  எனக்கும் அந்தக் காக்கைக் குஞ்சுக்கும் எந்தப் பகையும் இல்லை என்பதால் உப்புமாவுக்குப் பதிலாக பிஸ்கட்டைத் துண்டு துண்டாகப் போட்டேன்.  மிகுந்த சுதேசி உணர்வு மேலிட்டு அது அதைப் பகிஷ்கரித்துவிட்டது. “ஒரு கிண்ணியில தண்ணியையாவது ஊத்தி முன்னால வைங்க. எப்ப குடிச்சுதோ. அடிக்கித வெயிலுக்கு நமக்கே என்னமோ மாதிரி வருது. அதுக்கு தண்ணி தவிக்குன்னு வாய்விட்டுச் சொல்லவா தெரியும்”. அவள் முகத்தைப் பார்த்த படி நான் சிறு கிண்ணம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி அதன் முன் வைக்கிறேன்.   வைத்த மறு நொடியில் அது அலகை முக்கிவிட்டு, முகத்தை உயர்த்தி அந்தச் சொட்டை உள்ளே இறக்குகிறது. நான் என் வாழ்வில் மிகச் சமீபத்தில் பார்த்த, உணர்ந்த ஒரு அற்புதமான காட்சியும் தருணமுமாக அது என்றுமே இருக்கும். ஒரு தனிமையும் பதற்றமும் அன்னியமுமான நீண்ட பொழுதின் பின் ஒரு பறவை, அலகு நனைத்து தன் முதல் சொட்டு நீரை அருந்த, தன் கழுத்தை உயர்த்திய அந்தப் பொழுது எவ்வளவு மகத்தானது

என்னால் இன்று, அல்லது இனிவரும் நாள் ஒன்றில் நிச்சயம் ஒரு சாம்பல் காக்கையை வரைய முடியும். அந்தக் காக்கை, இதோ இந்தக் காக்கைக் குஞ்சைப் போல, தன்னுடைய கழுத்தை உயர்த்தி அதன் முதல் சொட்டு நீரை அருந்துவது போலத்தான் இருக்கும்

%




Wednesday 26 September 2012

யான், எனது








இந்த வெயில் பயணத்தில்
எங்கேயாவது சின்னஞ் சிறு காற்றடித்து
நெற்றியில் அப்பிய ஈர முடி உலர்த்தி
உங்கள் முகம் குளிர்ந்தது எனில்,
அது நானாக இருக்கும்.

எங்கேயாவது
ஒரு கருப்பு நிற பட்டாம் பூச்சி
நீங்கள் பார்த்தும் பார்க்காத
சாலையோர உன்னிப் பூவில் அமர்ந்ததெனில்
அது நானாக இருக்கும்.

தாய்க் காம்பில் இருந்து உதடு விலக்கி,
பால் வாசத்துடன் ஒரு சிசு
தொலைந்து போகும் உங்கள் முகம் பார்த்து
அடையாளமற்றுச் சிரிக்கும் எனில்
அது நானாக இருக்கும்.

காய்ந்த மட்டையைத்
தென்னந்தோப்பில் இழுத்துக் கொண்டே
தன் கதையைத் தன்னிடமே ஒப்பிக்கும் ஒரு கிழவி
உங்களைப் பார்த்ததும் நின்று,
‘பார்த்துக் கொள்ள நாளாச்சு. நல்லா இருக்கியா ப்பா’
எனக் கண் இடுங்கக் கேட்டாள் எனில்,
அது நானாக இருக்கும்.

தீட்டுத் துணி சிக்கிக் கிடக்கும்
இலந்தம் புதரில் பழம் பறிக்கும்
கருத்த ’செவனி’ப் பெண்ணின் கைக் கயிற்றில்
வெயிலைத் தின்றபடி ஒரு வெள்ளாட்டுக் குட்டி
தளிர்க் குரல் எழுப்புகிறதெனில்
அது நானாக இருக்கும்.

பம்ப் செட் குழாயில் குளிக்கிறவரின்
உச்சந்தலையில் சிதறும் தண்ணீரில்,
மண்வெட்டியைச் சாட்சி வைத்து,
ஊறுகாய் வாசனையடிக்கும் உச்சிவெயில்
ஒரு வானவில் வரைந்தது எனில்
அது நானாக இருக்கும்.

சோணை டீக் கடைப் பக்கத்து,
சொர்ணமஹால் நகைக்கடை விளம்பரத்தில்
மகளின் தோள் வருடி, கண்கலங்கி
ஒரு நரைத்த மீசை அப்பா நிற்பார் எனில்
அது நானாக இருக்கும்.

சிவந்த ஆலம்பழங்களை மிதித்தபடி
மொத்த வாழ்வின் செம்புழுதியும் படிந்த
நெடுங்கால்களுடன் செல்லும் ஒரு பித்தனை
உங்கள் வாகனம் கடந்து செல்லும் எனில்,
அது நானாக இருக்கும்.

இரண்டு மக்காச் சோள வயல்களுக்கு இடையே
ரோட்டோரச் சுடுகாட்டில்
வெந்து தணிந்த சாம்பல்
வெதுவெதுத்துக் கிடந்தது எனில்,
அது என்னுடையதாகவே என்னுடையதாகவே
இருக்கும்.

Monday 24 September 2012

வெள்ளிக் கிழமையில்...





புல்லிடை நகர்ந்துகொண்டிருக்கிறேன்
ஒரு வெல்வெட் பூச்சி என.
அடைந்துவிடுவேன் எப்படியும்
மழைக்காலக் காளான்களின் கீழ்
காத்திருக்கும் என் காதலியை.
 %





கல்வெட்டாங் குழியிலிருந்து
கடைசியாக வெளியேறுகிறது ஆமை.
சுழன்று சுழன்று விழுகிறது
கழுகின் நிழல்
மஞ்சணத்தி மர இலைகளின் மேல்.
வெண் பூ வாசம் கலைத்து.
 %

கட்டுமானம் முடிந்து
பால் காய்ச்சாத
சுண்ணாம்பு வாசச்
சுவர்களின் மத்தியில்
கலந்து கரையும் அவர்களை
தூரத்திலிருந்து காவல் காக்கிறது
வெள்ளிக்கிழமை பிற்பகல்.
 %

என்
இல்லாத முலைக்காம்பில்
விழுந்து தெறிக்கிறது
பெய்யாத மழை.
 %



சாம்பல் பூனைக்குட்டிக்கு
பித்துப் பிடித்துவிடும்போல இருக்கிறது,
மதிலுக்கு அப்புறம்
சுருள் அவிழும் வாழைக்குருத்தினுள்
பொட்டலம் கட்டப்பட்டிருக்கும்
வெயில் நிறம் பார்த்து.
 %
வெயிலின் ஐந்தருவியில்
ஆடையற்றுக் குளிக்கிறது என்
ஐம்புலன்
செண்பகப் பூக்கள் மணக்க.
 %
பார்த்தால்தான் என்ன
பாம்புக் கலவியை?
 %



என் மலைப்படுகை பூராவும்
நீயே புஷ்பித்திருக்கிறாய்.
என் சுனை நீர்
உன் மீன்களால்
சுத்தீகரிக்கப் பட்டிருக்கிறது
உன் அழகிய தீயை
என் சுள்ளிகள் கொண்டு
நெடிதாக வளர்த்தேன்.
உன் தாவரம் முழுமையையும்
என் காற்று தொட்டது.
 %



குறுக்கே பறக்கும் சிறு குருவி
நிரப்பிவிடுகிறது
என் சாலையை.
 %
நிலம் துளைக்கிறார்கள்.
நீர் வரட்டும்.
 %
வேண்டுமென்றே
மகனிடம் தோற்கும் தந்தை
அடிக்கிற பந்து
அன்பின் சிறகுகளால்
வடிவம் கொண்டிருக்கிறது.
 %

மைதானக் கால்பந்திற்கு
படபடக்கின்றன வெள்ளைப் புறாக்கள்.
உதிர் சிறகு பொறுக்குகிறாள்
உள்மனச் சிறுமி

%

Sunday 23 September 2012

கனவுப் பிரபஞ்சம்.








ஒரு ஐம்பது பக்கங்கள்தான் படித்திருபேன், விமல்குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவலை. உறங்குவதற்கு முந்திய வாசிப்பில், மைலிப் பெத்தாதான் பாறை மேல் நிற்கிற மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கனவில் வந்திருந்தால்  ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த மரமோ பாறையோ வரும் சாத்தியங்களும் ஒரு நரை கூடிக் கிழப் பருவம் எய்தும்
ஒருவனின் கனவில் உண்டு. ஆனால் என் கனவில் மைலிப் பெத்தாவுக்குப் பதிலாக பிரபஞ்சன் வந்திருந்தார்.

இந்தப் பெருமாள்புரம் சிதம்பரம் நகர் வீட்டுக்கு அல்லவா அவர் வரவேண்டும். அவர் வந்தது சுடலைமாடன் கோவில் தெரு வீட்டிற்கு.  வரச் சொல்லியது கூட நான் தான் என்று தோன்றுகிறது. அவருடைய விரலில் ஒரு மோதிரம் இடுவது என்று ஏற்பாடு. அப்படி ஒரு மோதிரம் போட வேண்டும் என ஆசைப்பட்டது நான் இல்லை. என்னுடைய அப்பாச்சி. அப்பாவைப் பெற்றவள் அப்பாச்சி. இதை நான் பிரபஞ்சனிடம் எல்லாம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அவர், ‘நீயும் ஆச்சு. உன் பிடுங்கி மோதிரமும் ஆச்சு’ என்று சொல்லியிருக்கவும் கூடும்.

எங்கள் தெருவாசலில் இருந்து இரண்டு கல்படிகள் ஏறினால்,ஒரு நாலுக்கு நாலு சவுக்கம். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் படி. அதில் இருந்து ஒரு முடுக்குப் போலத் துவங்கி நடக்க வேண்டும். குறைந்த வெளிச்சமும் குறைந்த நிழலும் உள்ள ஒரு அழகான மன நிலையை நமக்கு அது தரும். இடது பக்கம் உள்ள பொதுச் சுவர் அபாரமானது, காரை பூசப் படாதது. செங்கல் கட்டுமானம் வரி வரியாகத் தெரியும். ஒவ்வொரு செங்கலிலும் ஒரு நூறு வருடச் சரித்திரம் இருக்கும். ஐப்பசி கார்த்திகை தாண்டி, மழைக்காலத்திற்குப் பிந்தி வந்தால் அந்தச் சுவர் முழுவதும் பச்சைப் பசேல் என்று பாசி படர்ந்திருக்கும். மரகதப் பச்சை என்று எந்த இடத்தில் வாசித்தாலும் எனக்கு ஞாபகம் வருவது அந்தச் சுவரே பம்பாய் திரைப்படத்தில் அந்த ‘உயிரே, உயிரே’ பாடலில் வருகிற பாசி படர்ந்த பாறை கூட எனக்கு எங்கள் வீட்டுச் சுவரையே ஞாபகப் படுத்தியது. யாரோ ஒருவனின் வீட்டுச் சுவரை நினைவூட்டும்படி ஒரு வரியையாவது நான் எழுத வேண்டும்.

பிரபஞ்சன் ஒருவேளை அந்தச் சுவரைப் பார்ப்பதற்குக் கூடப் புறப்பட்டு வந்திருக்கலாம். அவர் செருப்புக்களைக் கழற்றுகிறார். அவர் நேர்த்தியான உடைகளையும் நேர்த்தியான காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிகிறவர் என நான் அறிந்திருக்கிறேன். ஒரு பெரியப்பாவோ, மாமாவோ ஊரிலிருந்து வந்து, நம் வீட்டுப் பக்கம் செருப்பைக் கழற்றிக் கொண்டே, ‘என்ன டே, எப்படி இருக்கே?’ என்று கேட்கிற நேரம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த நேரம்.

பிரபஞ்சன் அன்று அமைதியாக இருந்தார்.  என்னுடன் அவர் எதுவும் பேசவில்லை. அவர் தரையைப் பார்த்தபடியே வருகிறார். ஏற்கனவே இந்தத் தரைக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்துகொண்டிருந்த உரையாடலை அவர் தொடர்வது போல இருந்தது. மிகுந்த தீவிரமான உரையாடலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தது பிரபஞ்சன் முகம்.

ஒரு மகராஜாவை அழைத்துவருவது போல அவரை அழைத்து வருகிறேன். ’பூப் போல ஏறுங்கள்’ என்று சொல்லவில்லையே தவிர, நான் அரை வட்டமான அந்த இரண்டு கல் படிகளைப் பற்றி பிரபஞ்சனுக்குக் கவனப்படுத்துவதைப்பார்த்தால், நான் சொல்லுகிற முறையில் அந்தப் படிகளே இரக்கப்பட்டு, பஞ்சு போல ஆகியிருக்கும் என்ற அளவுக்கு என் செய்கைகள் மரியாதையுடன் இருந்தன.

பிரபஞ்சன் வாசலில் நிற்கிறார். அவரை அப்படி வாசலில் காத்திருக்க வைத்திருப்பதை எனக்குத் தாளமுடியவில்லை. ‘ஆச்சி, ஆச்சி’ என்று சத்தம் கொடுக்கிறேன். ‘ஒஞ்சரித்த பெரிய மரக்கதவில், நடுச் சட்டத்தில் பதித்து இருந்த வெண்கலக் குமிழ்களையே பிரபஞ்சன் பார்க்கிறார். எதைப் பார்ப்பார், எதைபார்க்கமாட்டார் என்று தெரிந்தாலாவது, திட்டமாக அதற்கு ஏற்ப என் அடுத்த பேச்சிற்கான சொற்களை நான் சேகரிக்கலாம். அதற்கு வழியில்லாத பறவைப் பார்வையாக இருக்கிறது அவருடையது.

அப்பாச்சி அங்கணக் குழியை ஒட்டின இடத்தில் பெரிய மரக் கட்டிலில் படுத்திருக்கிறார். நல்ல தூக்கம் போல. இடது கையை மடித்துத் தலைக்கு வைத்துப் படுக்கிற கிராமத்துப் பழக்கம். அப்படிப் படுக்கும் போது மனிதர்கள், குறிப்பாக நமக்குப் பிடித்த மனுஷிகள் அழ்காகவே இருக்கிறார்கள். தூக்கம் கலைந்து எழுந்தாலும். அப்பாச்சி முகம் துடைத்து வைத்தது மாதிரி இருக்கிறது. பொட்டு பளிச்சென்று இருக்கிறது. ‘கொஞ்சம் அசந்துட்டேன்’ என்று சொல்லும் போது ஒரு இளஞ் சிரிப்பு வருமே, அது ஆச்சியின் முகத்தில் இருந்தது. நான் பிரபஞ்சன் வந்திருப்பதையும், அந்த மோதிர விஷயத்தையும் தணிவாகச் சொல்கிறேன்.

பிரபஞ்சன் உள்ளே வருகிறார். ஆச்சியை எல்லாம் பார்க்கவில்லை. ஒரு மர நாற்காலியும், ஒரு அகலமான மர மேஜையும் இருக்கிறது. இரண்டாம் கட்டுக் கதவுப் பக்கம் ஒருபழுப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலி கிடக்கிறது. அப்பாச்சியின் காலம் பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு முந்தியது. கனவுகள் எப்போதும் கால வழுவமைதி உடையவைதானே. பிரபஞ்சன் மர நாற்காலியில் உட்காருவார் என்றே எதிர்பார்த்தேன். அப்படியேசெய்தார். உறுதியான வழுவழுத்த மரங்களுக்குள் ஒரு வனத்தின் அழைப்பு எப்போதும் இருக்கிறது என அவருக்குத் தெரியாதா?

விளக்கு மாடம். குத்துவிளக்கு. அதையொட்டித் தான் மேஜை. பிரபஞ்சன் அந்த மேஜையில் இருந்த ஏதோ ஒரு புத்தகததை எடுத்துப் படிக்கத் துவங்கிவிடுகிறார். மிஞ்சி மிஞ்சிப் போனால் வழிபாட்டுக்குரிய தேவாரத் திரட்டு, திருவிளக்கு வழிபாடு என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டவையாக இருந்திருக்கும். எங்களுடன் பேசுவதை விடவும் அது உத்தமம் என்று பிரபஞ்சன் தீர்மானித்திருக்க வேண்டும்.  அவர் பேசினால் தானே நான் இரண்டு வார்த்தைகள் பேச முடியும். விரலுக்கு மோதிரம் போடுகிறேன் என்று சொல்லுகிற அப்பாச்சியிடமாவது நான்கு வார்த்தைகள் பேசியிருக்கலாம். இந்த அளவுக்குக் கூட லௌகீகம் தெரியாவிட்டால் எப்படி? பிரபஞ்சனிடம் கேட்டால்,’அதெல்லாம் தெரிந்தால் நான் ஏன் இப்படி பீட்டர்ஸ் காலனி வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்?’ என்று சொல்லக் கூடும்.

அப்பாச்சி இரண்டு மூன்று டப்பாக்களை என் முன் வைக்கிறார். ஒவ்வொன்றாகத் திறந்து காட்டுகிறார். எல்லாம் ‘பொட்டுப் பொடிசு’ ஆகத் துண்டு துண்டாக, ஒக்கிட வேண்டிய நிலையில் இருக்கும் பழைய நகைத் துணுக்குகள். அப்பாச்சி செய்திருந்த மோதிரத்தைக் காணோம். அடுத்தடுத்து, அப்பாச்சி, தணிந்த குரலில், ‘வரச் சொல்லீட்டு, இப்போ காணோம்னு எப்படிச் சொல்ல? எனக்கு மானமா இருக்கு’ என்கிறார்.  ‘இதைப் போட்டுவிடலாமா?’ என என்னிடம் ஒரு வெள்ளி வளையத்தைக் காட்டுகிறார். இரண்டு முனைகளிலும் குண்டுவைத்த தண்டை போல இருக்கிறது அந்த வளையம். ‘ பதறாமல் பாருங்க. எங்கியாவது இருக்கும்.’ என்று நான் சொல்ல, அப்பாச்சி உள்ளே போகிறார்.

பிரபஞ்சன் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. அவர் இந்த திரு விளக்கு வழிபாடு புத்தகத்தைப் படிப்பதற்காக மட்டுமே இங்கே வந்தது போல இருக்கிறார். மன்னன், கையில் ஒரு புத்தகத்தை எடுத்தால், அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார் போல.

இதுவரை ஒழுங்காக இருந்த என் புத்தி, செருப்பால் அடித்தாலும் தகும் என்கிற அளவுக்கு ‘கீழாறப் போனது’ இப்போது தான்.  பிரபஞ்சன் என்னை கவனிக்கவே இல்லை. அப்பாச்சியும் பக்கத்தில் இல்லை. நான் அந்தப் ‘பொட்டுப் பொடிசு’ மத்தியில் உருப்படியாக இருக்கிற தங்கத்தையெல்லாம் ஓரமாக எடுத்து வைக்கிறேன். அந்தக் கள்ளத்தனம் எனக்கு வந்தவுடன், இதுவரை கண்ணுக்குத் தெரியாத, அப்பாச்சி காட்டும் போது எல்லாம் டப்பாவில் இல்லாத சிறு சிறு மரச் சிராய் போன்ற தங்கத் துணுக்குகள் எல்லாம் தென்படுகின்றன. நான் பைய அதை ஒரு ஓரமாக எடுத்து எடுத்து
வைக்கிறேன். அப்படி வைக்கிற தினுசைப் பார்த்தால். நல்ல மாதிர்யாகத்
தெரியவில்லை. அப்பாச்சிக்கும் பிரபஞ்சனுக்கும் தெரியாமல் செய்வதற்கு என்னிடம் வேறு திட்டங்கள் இருப்பது தெரிந்தது.

கனவு எப்போது கலைந்தது என்று தெரியவில்லை. எனக்கு இந்தக் காலை
நேரத்தில் இரண்டு குற்ற உணர்வுகள். அப்பாச்சி போடுவதாகச் சொன்ன மோதிரத்தை பிரபஞ்சனுக்குப் போட முடியவில்லை.என்பது ஒன்று. அப்புறம் சமயம் கிடைத்தால். வெளியே தலையைக் காட்டுவதற்குத் தயாராக ஒரு கள்வாணி எனக்குள் இருக்கிறான் என்பது எனக்குத தெரிய வந்தது இன்னொன்று.

எனக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி. என் இன்றைய குற்ற உணர்வுகளின் பட்டியல் கனவில் இருந்து மட்டுமே துவங்கியிருக்கிறது.  அப்புறம்  அப்பாச்சி செலவிலேனும் பிரபஞ்சனுக்கு ஒரு மோதிரம் போடும் ஆசை எனக்கு இருக்கிறது.

%






Thursday 20 September 2012

இப்போது மேகங்களுடன்








இதுவரை உயரத்தில் இருந்தவை

எப்போதுமே
எனக்கும் வீட்டுக்கும்
கோடைகாலச் சாயுங்காலங்களில்
அதிகமாகிவிடுகிறது தூரம்.
இந்தத் தெரு வழி போனால்
சற்று அருகில் வரும் அது.
புதிதில்லை இங்குள்ள
பூவரச மரங்களும் நாய்க்குரைப்பும்.
வாய் உடைந்த ஒரு தொட்டியில்
நீர்வார்த்துக்கொண்டிருக்கும் பெண்
என்னைப் பார்க்கவில்லை.
இரண்டு பசுக்களும் ஒரு கருப்புக் கன்றும்
தாகத்துடன் முகத்தைத் தணித்தன.
 தலையை உயர்த்திய மூத்த பசுவின்
தாடை வழியே நீர் ஒழுகியது.
இதுவரை உயரத்தில் இருந்த வானம்
இப்போது மேகங்களுடன்
கீழிறங்கி நின்றது.
எங்கள் வீடு நகர்ந்து அதன்
நடுவில் வந்திருந்தது.

%

இன்னும் அப்படியே.


இன்று யாரும் வரவில்லை
நீங்கள் உட்பட.
நீண்ட காலத்திற்குப் பிறகு பார்த்த
மரங்கொத்தி பற்றிச் சொல்லியிருப்பேன்.
செங்குத்துத் தோற்றத்தில்
யாரோ ஒட்டவைத்துப் போன ஒன்றாக
பார்க்கமுடிகிற ஒரே பறவை அது.
உங்களுக்கு இதில் மறுப்பெதுவும் இராது.
பறவையை விட, தாவர இயலோ
விலங்கியலோ விருப்பம் உடையவரெனில்
மரப்பட்டைகள் பற்றி, புழுக்கள் குறித்து
நீங்கள் உரையாடலைத் தொடர்ந்திருக்கக்கூடும்.
வழியில்லாமல் போயிற்று அதற்கு.
யாரும் வராத,
தன்னைப் பார்த்த ஒருவர், யாருடனும்
தன்னைக் குறித்து எதுவும் சொல்லாத
ஒரு சாயுங்காலம் பற்றிக் கவலைப்படாமல்
பறந்து போய்விட்டது மரங்கொத்தி.
மற்றும் மரத்தில்
சாத்திவைக்கப்பட்ட இளம்பச்சை நிற
பள்ளிக்கூட சைக்கிள்
இன்னும் அப்படியே இருக்கிறது புத்தகப்பையுடன்
என்பதை அறியாமலும் கூட.

%


தான்மட்டும்.

எப்போதும் விளையாடுவதற்கு
இரண்டுபேராக வரும் சிறுமி,
விபத்தில் அக்கா இறந்துவிட்ட
துக்கத்தின் இடைவெளிக்குப் பின்
முதன் முறையாக வருகிறாள்
இறகுப் பந்து மைதானத்திற்கு
தான் மட்டும்.
சைக்கிள் கேரியர் கவ்வலுக்குள்
செருகிவைக்கப் பட்டிருக்கின்றன
இரண்டு மட்டைகள்
மறதியாக / ஞாபகத்துடன்


%


கல்யாண்ஜி
உயிர் எழுத்து - செப்டம்பர். 2012

Monday 17 September 2012

இறை-ச்சி.






                                                       மக்காச் சோளத்தை
                                                       இப்படி அடுக்கிய இறைவனை
                                                       சாப்பிடுகிறேன்
                                                       சிறிது உப்பில் வேகவைத்து.
                                                       அப்படியொன்றும்
                                                       மக்காச் சோளத்தைவிட
                                                       ருசியில்லை
                                                       இறைவன்.

                                                        %

                                                        கல்யாண்ஜி.

Sunday 16 September 2012

முகம் தெரியா அம்மாவின் முகம்



பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி 15.09.2012, 16.09.2012 இரு தினங்களிலும்
சிறுகதை வாசிப்பும் படைப்பும் என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியது.  ‘தனுமை’ சிறுகதையை எப்படி எழுதினேன் என்பதைப் பயிலரங்கின் மத்தியில் பகிர்ந்து கொள்ளச் சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். 

இத்தனை வருடங்களுக்குப் பின் அந்தக் கதையைப் படித்துவிட்டு, அங்கே பேசுவதற்கான குறிப்புக்களை எடுத்துகொண்டபோது, கிட்டத்தட்ட ஒரு சரியான கட்டுரையின் வடிவத்தை அது எட்டியியிருந்தது.  வழக்கம் போல இதை ஓரமாக வைத்துவிட்டு, இதன் நீள அகலங்களுக்கு, பேசுகிற அந்தக்
கணத்தில் விகசிக்கும் அழகையும் ஆழத்தையும் சேர்த்து, பயிலரங்கில்
பங்குகொண்டவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இந்த இரவில் எழுதிவைத்த அந்தக் குறிப்பைப் படிக்கையில் இதைப் பதிவு செய்வது அப்படி ஒன்றும் தப்பில்லை என்று தோன்றுகிறது.

%

   


நான் தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரியில் படித்தது 64 - 67 ம் வருடம். அது எல்லாம் ஞாபகம் இருக்கிறது. ஆனால் ‘தனுமை’ கதையை எப்போது எழுதினேன் என்று திட்டமாகச் சொல்லமுடியவில்லை.  74 அல்லது 75 ஆக இருக்கலாம். அதற்கு இலக்கிய சிந்தனை ஆண்டுப் பரிசு கொடுத்தார்கள். வானதி பதிப்பகம் போடும் அந்தப் புத்தகத்தை நூலகத்தில் தேடினால், ஒருவேளை எந்த வருடம், எந்த மாத ‘தீபம்’ இதழில் அது வெளிவந்தது என்ற விபரம் கிடைக்கலாம்.

64-67ல் நிகழ்ந்ததை 74-75ல் எழுதி, 2012ல் எப்படி உருவானது என்று சொல்வது மிகவும் சிரமமானது. உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமானது எது தெரியுமா? கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது. எழுதுகிறவனுக்கு, அதுவும் என்னைப் போன்ற மனநிலை வாய்த்தவனுக்கு, 35/40 வருடங்கள் கழித்து , எழுதிய மேற்படி கதையின் கருமூலம் பார்ப்பது எனபது கூடுதலான துயரம் தருவது.

கதையின் கதையைச் சொல்வது, ஒரு புதிய கதையாகிவிடக் கூடுமே தவிர, பொய்யாய்ப் பழங் கதையாய் மெல்லப் போனதுவே   எனும்படியாக மட்டுமே அது  இருக்குமே தவிர,  அதே தனுமையாக இருக்காது.

ஞானப்பன் எனப்படுபவனாகியவன், யதார்த்தத்தில் இந்தக் கதையை எழுதியவனாக இருக்கும் எனக்கு விடுதியில் அறைத்தோழன்.  மொத்தம் அறையில் நான்கு பேர். ஜவஹர் முக்கூடல்காரர். ஞானப்பன் (பத்திரிக்கைக் காரர்கள் குறிப்பிடுவது போல, ‘பெயர் மாற்றப்பட்டிருக்கிறது’) வாசுதேவ நல்லூர் பக்கத்துக் கிராமக்காரர். திருச்செந்தூர் பக்கம் சிவசுப்ரமணியனுக்கு. என்னைத் தெரியும், நான் திருநெல்வேலிக்காரன்.

ஜவஹர் பி.யூ.சி.   திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படம் துவங்குவதற்கு முன் ஏ.பி.நாகராஜன் பேசுவாரே, அதை அப்படியே அதே குரலில் பேசுவார். சிவசுப்ரமணியன் பௌதிகம் படித்தார். சீனியர். எட்டுமுழ வேட்டியை அப்படி அழகாகக் கட்டுவார். ஒரு தட்டை மடித்து, ஒரு தட்டை கரண்டை வரை அவர்  வேட்டியைக் கடடுவது புதுவிதமாக இருக்கும். நான் யார், எப்படி என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. நான் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறவன். தீபத்தில் ஏற்கனவே நான்கைந்து கதைகள் வந்துவிட்டிருந்தன. அப்புறம் படிப்பு எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

நாலாவதுதான் ஞானப்பன். பொருளாதாரம் இளங்கலை படித்தார். ஆள் நல்ல கருப்பு. ஜோராக இருப்பார். சுருட்டை முடி. அழகான பல் வரிசை. வசீகரச் சிரிப்பு. கலகலப்பாகப் பழகுவார். சற்று உள்வாங்கியே இருக்கும் எனக்கு அவரைப் பிடித்ததில் ஆச்சரியமில்லை. விடுதி விழாக்களில் அவர் பாட்டு, வில்லுப் பாட்டு எல்லாம் இருக்கும். பாடும் போது அவருக்கு ஒரு பழக்கம்.  கிட்டத் தட்ட வானத்தைப் பார்த்துக் கொண்டு பாடுவார். குனிந்து முகத்தை நேராகப் பார்த்துப் பாடச் சொன்னால், அவரால் பாடவே முடியாது.  இவை எல்லாம் போக, வாலிபால் விளையாடுவார். போதாதா. மொத்தத்தில் எங்கள் அறையின் கதாநாயகன்.

கதாநாயகன் என்றால், கதாநாயகிகளும் காதலிகளும் இருப்பார்கள்தானே. அவருக்குக் காதல் கடிதம் ஊரிலிருந்து வரும். தனியாக, இப்போதைக்கு உள்ள கூரியர் தபால் மாதிரி, விடுதிக் காவலர் ராமையாவுக்கு நாலணா கொடுத்தால், பத்திரமாக எடுத்துவைத்து, நேரடியாக, பூப் போல நம் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.  என்னிடம் நாலணாக்கள் கூட இருந்தன. கடிதம் எழுதி அனுப்பக் காதலிகள்தான் இல்லை.

காதலிக்கு ஞானப்பன் எழுதிய பதில் கடிதத்தை, நான் திருட்டுத் தனமாக
அவருடைய ட்ரங்குப்பெட்டியைத் திறந்து வாசித்திருக்கிறேன்.  கொஞ்சம் நெருக்கமான, தணிக்கைக்குரிய வரிகள் உள்ள கடிதம்தான் அது. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பாரதி சொன்னது சரி. அவன் காதலினால் மானுடர்க்கு என்னென்ன எல்லாம் உண்டு என்று சொன்னானோ அவை பூராவும் கடிதத்தில் இருந்தது.

இப்படி ஊரில் ஒரு காதலி இருக்க, அல்லது ஊரெல்லாம் காதலிகள் இருக்க, ஞானப்பனுக்கு தனலட்சுமியின் மேலும் காதல் வந்தது. சொல்லப் போனால் தனலட்சுமியின் மேல் யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும். எனக்கும் கொஞ்சம் வந்திருந்திருக்குமோ என்றுதான் இப்போது தோன்றுகிறது. இதற்குப் பின்னால் நிறைய சமூக, உளவியல் சார்ந்த  காரணங்கள்  இருக்கின்றன.

ஞானப்பனின் தந்தை வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிறவர்.  அந்த அவருடைய வம்ச வாடையை உடம்பில் ஏந்தியிருக்கிறவன் ஞானப்பன்.  ஞானப்பன் ஒரு இடத்தில் இருப்பதை ஞானப்பனின் வாடையே சொல்லி விடும்.  ஞானப்பனுக்குப் பிடித்த தனலட்சுமி மெலிந்து சிவந்தவள் அல்லது சிவந்து மெலிந்தவள். டெய்ஸி வாத்திச்சியை விட இவள் சின்னஞ் சிறியவள். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அளவுகளை மீறிய பாரமான உடம்புடன், பெருந்தொடை தெரிய சைக்கிள் ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லும் அந்த ஆங்கிலோ இந்தியப்பெண்ணை ஞானப்பனுக்குப் பிடிக்கவில்லை. தனலட்சுமியின் மெலிந்த சிவப்பு மட்டுமே பிடித்திருக்கிறது. அவளை மேலும் பிடித்தவள் ஆக்குகிற ஒன்று அவளுடைய சிறிய ஊனம். இது போன்ற எளிய ஊனங்கள் கருணையை மட்டும் அல்ல, காதலையும் உண்டாக்குகிறது அனேகமாக.

அந்த தனலட்சுமியையும் விட, டெய்ஸி வாத்திச்சியையும் விட, என்னை இந்தக் கதையை எழுதத் தூண்டியது அந்த ஆர்பனேஜாகத்தான் இருக்கும் என்று இப்போது படுகிறது.நான் தனலட்சுமியும் அவளுடைய சின்ன வழித்துணையான அவளுடைய தம்பியும் வரும் பாதைகளுக்கு ஞானப்பனை அனுப்பிவிட்டு, அந்த ஆர்பனேஜில் திரிந்தவனாக அந்த வருடங்களில் நான் இருந்திருக்க வேண்டும்.

துக்கமும் தனிமையும் அனாதரவும் எழுதுகிறவனைக் கூடுதலாக ஈர்க்கவும் அலைக்கழிக்கவும் செய்கின்றன. இந்தக் கதையின் நுட்பமான சாம்பல் சித்திரங்கள் அனைத்தும் ஆர்பனேஜ் சார்ந்தவையாகவே தீட்டப் பட்டு இருக்கின்றன.  பழைய தமிழ்ப்படங்களின் ஷெனாய் வாத்தியப் பின்னணி இடையறாது ஒலிக்கிற வரிகள் இந்த ஆர்பனேஜ் காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பவையே.\

நான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும், இந்தக் கதையை எழுதியதற்காக
சந்தோஷப்படுவது, தனலட்சுமியையோ ஞானப்பனையோ அல்லது டெய்ஸி வாத்திச்சியையோ எழுதியதற்கு அல்ல.  இந்த ஆர்பனேஜ் பற்றி இவ்வளவு எழுதியதற்காக மட்டுமே.  ஒரு நல்ல திரைப்படத்தின் மாண்டேஜ் காட்சிகள் போல, ஒரு அனாதை இல்லத்தை அப்படியே நான் தனுமையில் துல்லியச் சித்திரங்கள் ஆக்கியிருக்கிறேன்.

’இந்த நல் உணவை தந்த நம் இறைவனை வணங்குவோம்’ - அனாதைகளை மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடல்

அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம் பூக்களும் பாடுவது போல, வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய்வருகிறவரின் புழுதிக் கால்களின் பின்னணி போல

பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவது போல

வாரத்துக்கு ஒருமுறை வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கும் பையனின் சோகம் போல

எந்த சத்துக் குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிறகான பிரார்த்தனை போல

கிணற்றடியில் உப்பு நீரை இறைத்து இறைத்து, ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களின் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல் போல

இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாக தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்துகொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக் கனவுகள் போல

இதைத் தவிர, ஒரு தகர டின்னில் வரிசையாக நிற்கிற வேப்ப மரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்கள்...   ஊடுசுவருக்கு அந்தப்புறக் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொரிந்து கிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கஞ் செடிகளில் போய் வண்ணத்துப் பூச்சியின் முட்டையும் புழுவும் எடுக்கிற....   குப்பைக் குழிகளுக்கும் அய்யாக்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதியில் க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை...  ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாக முன்பிருந்து, இப்போது இடிந்து தகர்ந்து போன
சர்ச்சின் சுவர்களில் கருப்பாகச் சிந்தியிருக்கிற கெட்டவார்த்தைகள், வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் அப்படியொரு வரிகளில் ஒன்றில் சுவரில் அறையப்பட்டிருக்கிற டெய்ஸி வாத்திச்சி...

இப்படியாக. இப்படியாக, மீண்டும் இந்தக் கதையை வாசிக்கையில், நான் தனுமையை அல்ல, தனிமையை உணர்கிறேன். அனாதரவை உணர்கிறேன். எழுதுகிறவன் தன்னை அனாதையாக உணர்கிற சந்தர்ப்பங்கள் அவனுக்கு எப்போதுமே இருக்கின்றன.

இக்கணம் என்னை விடக் கைவிடப்பட்டவன் இந்த இரவில் வேறு யாரும் இருக்க முடியாது.


%

Thursday 13 September 2012

லகுவான கனமும் நகரும் ஜன்னல்களும்.







கருங்குருவி அளவுக்கு.

அது மக்காச் சோள அறுவடைக் காலம்.
வாகனங்கள் மேலேறிச் செல்ல
நீ உன் தானியங்களுடன்
சாலையில் காத்திருந்தாய்.
உன்னுடைய இடுப்பில் இருந்தது
உன்னுடைய மூன்றாவது குழந்தையாகக் கூட
இருக்கலாம்.
அதனால் என்ன?
உன்னிடம் எதையோ சொல்லிக்கொண்டு
இன்னொருவரின் சைக்கிள் பின்னால்
ஏறிப்போனவர் உன் கணவராக இருக்கலாம்.
அதனால் என்ன?
நீ அணிந்திருந்த மூக்குத்திப் பொட்டுதான்
உன்னுடைய ஒரே ஆபரணமாக இருக்கலாம்.
அதனால் என்ன?
என்னுடைய இருசக்கர வாகனம் தாண்டுகையில்
நான் பெற்றுக்கொண்ட சிரிப்பு,
எப்போதும் இதுபோன்ற அறுவடைக்காலங்களில்
நீ வழங்குகிற சிரிப்பாக இருக்கலாம்.
அதனால் என்ன?
உன்னிடம், உனக்குத் தெரியவே தெரியாத
ஒரு மறக்க முடியாத அழகு இருந்தது,
இத்தனை வருடங்களின் பின்பும்
இந்தப் பேனா முனையில்
மக்காச் சோளக் கொண்டையில் வந்தமரும்
கருங்குருவி அளவுக்கு.
அவ்வளவுதான்.


நகர்தல்.

வந்து நிற்கிறது
நான் ஏறவேண்டிய தொடர்வண்டி.
பெரும் சுமைகளுடன்
அந்தப் பெண் இறங்கிக்கொண்டிருந்தாள்.
நீலப்பையை வாங்கி வைத்தேன்.
அந்தப் பை என்னுடையதே போல
லகுவாகக் கனத்தது.
இடுப்பில் இருந்த குழந்தையை
ஏந்தி வாங்கிக்கொண்டேன்.
அந்தக் குழந்தை என்னுடையது போல
சிரித்தது, சட்டைப் பேனா உருவி.
குழந்தையைத் தோளில் இட்டு
சுருட்டை முடியை ஒதுக்கி
நன்றி சொல்லிச் சிரித்து
நகர்கிற பெண்ணும்
என்னுடையவள் போலவே ஆக்குகிறது
நடைமேடையிலிருந்து
விடைபெறத் துவங்கும் சன்னல்கள்.

%

கல்யாண்ஜி

Monday 10 September 2012

சின்ன விஷயங்களின் மனிதன்








அந்த 407ம் அறையின் முதல் நாற்காலியில் சச்சி இருந்தார். அவருக்கு இடப் புறம் நான். எனக்கு அடுத்து தங்கராஜ். சந்தியாநடராஜன், பெரியசாமி,  கோபால், செந்தில், செந்தி,  ஆண்டிபட்டி முருகன், இசை, லிபி ஆரண்யா,விஜி, அருணாசாயிராம் இசைகேட்க அமர்ந்திருக்கும் ஒருமையுடனிருந்த கோவை ரவீந்திரன், சாதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இடைகால் முருகன், காந்தி மற்றும் கடைசி வரை சன்னதம் குறையாத சாம்ராஜ்  ....

அமெரிக்கன் கல்லூரியின் நூற்று இருபது ஆண்டுச் சிவப்புச் செங்கல் நிறம் நனைத்து ஓடிக்கொண்டிருந்த அன்னியமற்ற நதி, சாரதா ராஜன்
விடுதி அறைக்குள் திசை திரும்பி ஓடிக் கொண்டிருந்தது.  ஏற்கனவே பழகிய கரைகளுக்குள் ஓடி வந்தது போலவும். இப்போதுதான் புதிதாகப் பாயப் புறப்பட்டு, பாயப் பாய புதிய கரைகளை உண்டாக்குவதாகவும் அது நகர்ந்து கொண்டிருந்தது.

இப்போது நினைத்துப் பார்க்கையில், அந்த ஏழாம் தேதிப் பிற்பகலும், அமெரிக்கன் கல்லூரி மாலையும், இரவும் இதுவரை நான் வாழாத ஒரு பிற்பகலாகவும், மாலையாகவும், இரவாகவும் இருந்தன.

அன்று காலையில், ஃபாத்திமா கல்லூரியில். எம்.ஏ. சுசிலா அறக்கட்டளை
நிகழ்வாக அந்த ஜூபிலி அரங்கத்தில்,  வழக்கமான என்னுடைய எந்தப்
பதற்றமான முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய பேச்சு சரியாக அமைந்து
விட்டது என்றே நினைக்கிறேன்.முன்னால் அமர்ந்து கேட்ட மாணவிகளின், மேலே சுழலும் மின்விசிறிச் சத்தம் கேட்கும் அளவுக்கான, அமைதியை
ஒரு அலகாக வைத்துக் கொண்டால், அப்படித்தான் கொள்ளவேண்டும்.

ஆனால், அந்தப் பிற்பகல் மிக மிக மோசமானது.  என் ஐம்பதாண்டுப் படைப்புக் காலத்தை, ‘கொண்டாடுகிற’ விதமாக சந்தியா பதிப்பகம் மிகுந்த விருப்புடன், அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து நின்று ஒழுங்கு செய்திருக்கிற இந்த மாலை நிகழ்வில் என்னுடைய ‘ஏற்புரை’ நன்றாக அமையவேண்டுமென நானே விரும்பினேன்.  ‘சாரல் விருது’  ஏற்புரை, எல்லோர்க்கும் அதைத் தாண்டி நான் செல்வதைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் என நானே நினைத்துக் கொண்டேன். அதனால்   என்னிடம் ஏற்கனவே ஒரு உளவியல் சுழற்சி உண்டாக்கிய பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

நான் இதுவரை அறிந்த, புழங்கிய சொற்கள் அனைத்தும் என்னைக் கைவிட்டு நகர்ந்து பெரும் தொலைவுக்கு அப்பால் போயிருந்தன. நான் என் பேச்சைத் துவங்குவதற்கான ஒற்றையடித் தடம் விழவே இல்லை. நான் இதுவரை எழுதியிருந்த எந்தக் கதைகளின் தலைப்பும் கூட நினைவுக்கு வரவேயில்லை.  மூளை மடிப்புகள் எனக்கெதிரான ஒரு சாம்பல் நடனத்தைத் தீவிரமாக ஆடுவது தெரிந்தது.  நான் இந்த 50 நிகழ்வை முதலில் இருந்தே விரும்பாததால், என் மனம் முற்றிலும் எதிர்த் திசையில் தொலைந்து போய் இருந்தது. என்னுடைய  சமீபத்திய சிறுகதையான, ‘பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்’  கதையில் வரும் தாயம்மா அத்தையின் கணவர் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சக்திஜோதிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அது சூரி மாமா எனப்படும் சூரியநாராயணன் என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த மறதித் தீவு இருந்தது.

நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கலாப்ரியாவை, செந்திலை, ரவீந்திரனை, தங்கராஜை எல்லாம் தவிர்த்திருந்தேன். சமயவேல் தொலை பேச்சைச் சுருக்கிக் கொண்டேன்.  அந்த விசாலமான தனிமைக்குள் நான்
மூழ்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இனி பேசுகிறதற்கான எல்லா
இழைகளும் அறுந்து போய்விட்டதை உணர்ந்த ஒரு கசந்த புள்ளியில்
ஒரு நான்கு பக்க உரையை நான் எழுத ஆரம்பித்தேன்.  எழுதிய வரையில், சற்றுத் தொய்வான, எதிர்மறையான குரலில் இருந்தாலும், அது சரியாகவே இருந்தது. வாசித்துவிடவேண்டியதுதான் என பேனாவை மூடிய போது மணி நாலே கால் ஆகிவிட்டிருந்தது.

இப்படியொரு மோசமான பிற்பகலுக்குப் பின்,  அந்த நல்ல, அமெரிக்கன்
கல்லூரி மாலையை நான் எதிர்பார்க்கவே இல்லை.  அந்த 120 வருட சிவப்புக் கட்டிடம் தன்னிடம் ஏதோ ஒரு மாயத்தை வைத்திருந்தது.  ஒரு மரத்தின் அடியில் பாரதி கிருஷ்ணகுமாரும் ஏழெட்டுப் பேர்கள் நிற்பதைப்
பார்த்ததுமே எனக்கு உயிர் திரும்பிவர ஆரம்பித்துவிட்டது.  கல்லூரிப் பேரவை அரங்கின் வாசல் படியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நின்றார். அவர் உயரம், அவர் தோற்றம் எப்போதுமே நம்மை என்னவோ செய்யும்.  அவரை
அந்த இடத்தில் பார்த்ததும், தமிழ்ச் செல்வன் வந்துவிட்டாரா என்று நான்  அவரிடம் கேட்டதும், ‘எல்லாரும் வந்துட்டாங்க, அங்கங்க நிண்ணு பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று பதில் சொன்னதுமே எனக்கு போதும் என
இருந்தது. நான் அந்த நிமிடம் முதல் பேசுவதற்குத் தயாராகிவிட்டேன் என்பதே நிஜம்.  அன்றைய பேச்சை எஸ்.ஏ.பி தந்தார் என்பதை இப்போது நிச்சயமாகச் சொல்லமுடிகிறது.

ஒவ்வொருவராக, ஒவ்வொருவராக அப்புறம்.  சாம்ராஜ், லிபி ஆரண்யா, சீனு, முத்துமணி, நோபிள் சார், சௌந்திர ராஜன் சார், ஆகாச முத்து எல்லோரும் நான் நுழைந்த இடது ஓரத்தில்.  என்னுடைய நிலகோட்டை காலத்து அலுவலக சகா சின்ன சாமி. எங்கள் மகள் சங்கரிக்கு பாண்டியராஜபுரம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்த திருநாவுக்கரசு ஸார் எல்லோரும் வந்து கையைப் பிடிக்கிறார்கள். கிருஷ்ணகுமார் வருகிறார். என்னைவிட வளர்த்தியான அவருடைய தோள்களைப் பற்றி உலுக்குகிறேன்.  எஸ்.ஏ.பி உயரம் இரண்டு விதையிலைகளைத் தந்தது எனில், கிருஷ்ணகுமாரின் தோள் மூன்றாவது இலையை. காஃபி அருந்துகையில் ஜயபாஸ்கரன்,  சுரேஷ்குமார் இந்திரஜித், சமயவேல் எல்லோரும்.  சற்றுப் பிந்திச் சந்தித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முன்பு அவர் மனைவி  என் பக்கம் வந்து சிரித்துக் கொண்டே விசாரிக்கிறார். நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது.

இதற்குள் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் வந்துவிட்டதாக, பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் சொல்கிறார். மேடையில் நான் அழைக்கப் படுகிறேன். நிலக்கோட்டை அசோகன் முகத்தைப் பார்க்கையில், ராமகிருஷ்ணனைத் தாண்டி, தமிழ்ச் செல்வனைத் தாண்டி மேடை வந்துவிடுகிறது . வலப் புறமாகவாகவா, இடப் புறமாகவா என்ற தயக்கத்தில் லேசாகக் கால் தடுமாறுகிறது. வேறு எந்த விதப் பரபரப்பும் இல்லை. முற்றிலும் அமைதியாக இருக்கிறது மனம். அடுத்தொரு கணத்தில் மலரவிருக்கும் ஒரு நீர்ப் பூ போல.

சாம்ராஜ் கடிதங்கள் பற்றி, லிபி கவிதைகள் பற்றி, தமிழ் என் கதைகளில் வரும் பெண்கள் பற்றி, கிருஷ்ணகுமார் கிட்டத்தட்ட தமிழ்ச் செல்வன் பேசியவற்றின் இன்னொருகோணத்தில் பேசிக் கொண்டே போக, இடையிடையில் ராமகிருஷ்ணன் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, நான் பூரணமாக நிரம்பிட்டிருந்தேன். குனிந்து எடுத்துத் தண்ணீர் அருந்தும் போது,  ராமகிருஷ்ணன் ஓ ஹென்ரியின் ஒரே இலையில் உயிரைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உதிராத ஒற்றை இலையில் துவங்கிவிட்டது என்னுடைய ஏற்புரை.

நான் எழுதிவைத்திருந்த நான்கு பக்கங்களின் எந்தச் சொல்லும் இன்றி, எந்த வரியும் இன்றி, அந்த மேடையில் துளிர்த்த இலையுடன் துவங்கிய பேச்சு, மிக இயல்பாகவும், மிக அழகாகவும், உணர்வு பூர்வமான சிறு சிறு
இடைவெளிகளுடனும்  நீண்டு கொண்டே போய், இதற்கு மேல் பெருக வேண்டாம் எனத் தீர்மானித்தது போல, ஒரு சிறு மௌனத்திற்குப் பின் அப்படியே பேதமற்ற நிலையில் நிறைந்தது.

பேசிய நேரத்தை விட முக்கியமான நேரம், பேசிய பின், நிகழ்வு முடிந்து நான் மேடையை விட்டு இறங்குகையில் என்னுடன் கை குலுக்கவும் பேசுவதற்கும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சிலர் காத்திருக்கும் நேரம்தான். சொற்களையும் விட விரல்கள் எனக்கு முக்கியம் அல்லவா.

 அந்தச் சிறுபொழுதில் நான் வேறொருவன் ஆகியிருப்பேன். அப்படியொரு கல்யாணியை அனேகமாக வீட்டினர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.  இந்த மனிதர்களையே என் இந்த ஐம்பது வருட எழுத்துக்கள் மூலமாக அடைந்தேன். இந்தச் சிரிப்பு முழுமையும் இப்படி எழுத்தின் மூலமாக அடைந்த மனிதரிடமிருந்து நான் பெற்றதே. நான் இவ்வளவு உரக்கச் சிரிப்பேனா என்பதும். என் முகம் இவ்வளவு மலர மலர விரியும் என்பதும் என் கண்களில் இப்படியொரு சுடர்மிகும் என்பதும் இந்தச் சிரிப்பை,,  இந்த மலர்வை, இந்தச் சுடரை எனக்குத் தந்த அந்த மனிதர்கள்
மட்டுமே அறிவார்கள்.

அந்த 407 அறையும் அப்படித்தான் இருந்தது. அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள். அத்தனை பேரும் மலர்ந்திருந்தார்கள். அத்தனை கண்களும் சுடர் மிகுத்திருந்தன.  நான்  எல்லோருடனும், எல்லோரின் மத்தியிலும்
இருந்தேன்.  இங்கு என்னுடன் இருப்பது வெறும் பன்னிரண்டு அல்லது
பதிமூன்று பேர்கள் அல்ல. நான் இந்த ஐம்பது வருடங்களிலும்  எழுதிய
கவிதைகளின், கதைகளின் மனிதர் அத்தனை பேரும் என நான் வரித்துக் கொண்ட தருணமாக அது இருந்தது.

அண்ணாச்சி அண்ணாச்சி என எனக்காகச் சிரித்து, எனக்காக அழுதது லிபி அல்ல.  என் மடியில் தலை சாய்த்து, தன் சுருட்டை முடியை அளையவும் தன் தோளைத் தட்டிக்கொடுக்கவுமாக என்னை அனுமதித்து இருந்தது ஆண்டிப்பட்டி முருகன் அல்ல.  சன்னதம் கொண்டவராக, பெரும்பகுதி நேரம் எழுந்து நின்றுகொண்டு, வெளிச்சப்பாடு போல, திருவாளும் காற்சிலம்பும் ஒலிக்க அவ்வப்போது சாமிவந்து உறுமிக் கொண்டும் இருந்த சாம்ராஜை அவ்வப்போது மூர்க்கமான சமருக்கு அழைத்துக் கொண்டிருந்தது இசை அல்ல. இசை பாடிய, ‘முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக’ பாடல் அவர் பாடியதல்ல.  எல்லாமும் எல்லோரும் நான் இந்த ஐம்பது வருடங்களாக எழுதிய வரிகளிலிருந்து வெளிவந்து நடமாடிய நிழல்கள்.

அதிகம் தன்னை முன் வைக்காத, அதிகம் கவனத்தைக் கோரிப் பெறாத
என் உலகத்தின் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்கள்
அறையை நிரப்பியிருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும்  முழுமையாக நிரம்பியிருந்தேன். ’அண்ணாச்சி,  உங்களை நாங்கள் முத்தமிடுவதற்கான நியாயங்கள் உண்டு’ என லிபியும் இசையும் இட்ட முத்தங்களும், செய்த தழுவல்களும், கசியவிட்ட கண்ணீரும் அதிர அதிரச்
சிரித்த சிரிப்புகளும் எனக்கு முக்கியமானவை. நான் என் தந்தையின் மடியில் என் இருபதுக்களில் படுத்திருந்ததில்லை.  ஆண்டிபட்டி முருகன் வளரும் நல்ல புகைப்படக்காரன்.  என் மடியில் கிடக்கும் அளவுக்கு என் ஏதோ ஒரு வரி, அல்லது என் ஏதோ ஒரு அசைவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய விஷயம் இது. எல்லா பெரிய விஷயங்களும் சின்ன விஷயம் ஆவதும் எல்லாச் சின்ன விஷயங்களும் பெரிய விஷயமாவதும் இது போன்ற பொழுதுகளில் தானே.

‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பு இந்த நிமிடம் ஞாபகம் வருகிறது.  நான் ’சின்ன விஷயங்களின் மனித’னாக  மட்டுமே இருக்க விரும்புகிறேன்.  அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன்.

’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.


%

Monday 3 September 2012

ஒரு புதிய பறவை








இந்த முதல் வரியைத் தட்டச்சு செய்யும் போது, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை, கிடைக்கும் கல்யாணமாலை’ பாடல் போய்க் கொண்டு இருக்கிறது தொலைக்காட்சியில். கமலஹாஸன் ஓங்கிய பெருங்காட்டில், உயர்ந்தொரு ஆலமரத்தில் கிளிச் சத்தமிட்டுக் கொண்டு இருக்கிறார். ‘அதிலொரு ஆண்கிளி, அதனிடம் பெண் கிளி’ என்று பாடும்போது சுஜாதாவை நொடி நேரம் காட்டிவிட்டு, ஒரு பெண் குழந்தை முகம், கருப்புக் கண்ணாடியணிந்த பார்வையற்ற ஒரு பையனின் முகம் எனக் காட்சி படத்தில்  நகருமென்று ஞாபகம்.

இங்கே இந்தப் பிற்பகலில் கடவுள் அமைத்துவைத்த மேடை எதுவும் இல்லை. எந்த விகட கவிகளும் கதை சொல்லவில்லை. அவள் அல்ல, வெயில் ஒரு தொடர்கதை இந்த சிதம்பர நகரில்.

இன்று காலை திருச்செந்தூர் வரை, கோவை லாலா மாரியப்பன் வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் வருகிறேன். இரண்டு பக்கமும் செய்துங்க நல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, குரும்பூர், சோனகன் விளை, அம்மன்புரம் எங்கும் ஒரு வயலில் கூட நடவாகவில்லை. ஒரு புது வைக்கோலில் அடிக்கும் வெயிலின் மினுங்கும் நிறத்திற்கும்.  எப்போதோ அறுவடையான அடித் தாளோடு மல்லாந்து கிடக்கும் வயலின் உலர்ந்த விலாவைத் தன் அலகால் கொத்தி இழுக்கும் வெயிலுக்கும் எத்தனை வித்தியாசம். ரோட்டு ஓரத்தில், இனிமேல் காற்றுக்குக் கிழிய மிச்சமில்லாத வரிகளுடன், ஒரு பைத்தியக்காரியின் கோலத்தில் அசையும் வாழைகளை வெயில் ஒரு ’பச்சைக் காட்டேரி’ போல உறிஞ்சி இருந்தது. எத்தனையோ முறைகள் திரும்பத் திரும்பப் பார்த்து மனதுள் மிகப் பசுமையாக வரையப்பட்டிருந்த சில நிலக் காட்சிகளை ஒரே ஒரு பேருந்து சன்னல் நகர்வில் முற்றாக இழப்பது என்பதும் வெயிலுக்கு இப்படி அனைத்தையும் காவு கொடுப்பதும், என்னை நொறுங்க வைத்தது/

கவிஞர்  வைரமுத்து ஒரு திரைப்பாடலில், ‘தூக்கி வளர்த்த துயரம்’ என்பார். நான் பயணச் சீட்டெடுத்த துயரமிது.  சற்றே விழுதுகள் தொங்கும், பெரும்பகுதிக் கிளைகள் வெட்டப் பட்ட ஒரு ஆலமரத்தின் சாய்ந்த நிழலில், சைக்கிளில் பிளாஸ்டிக் குடங்கள் வியாபாரம் செய்யும் ஒருவர் படுத்துக் கிடந்தார். அவர் எதையும் குடித்திருக்க மாட்டார். வெயில்தான் அவரைக் குடித்திருந்திருக்கும்.  தலை நசுங்கக் கொன்று வீசப்பட்ட ஒரு தண்ணீர்ப் பாம்பின் தொய்வு இருந்தது அவர் உடலில். ஒரு தண்ணீர்ப் பாம்பை எப்போது கடைசியாகப் பார்த்தேன் என்று நீங்கள் கேட்டால் என்னால் உடனடியாக அல்ல, எப்போதுமே பதில் சொல்ல முடியாது.

எங்கே வரவேண்டும் என்று எழுதத் துவங்கினேனோ அங்கே தான் வருகிறேன். தண்ணீர்ப் பாம்பைக் காணோம். மண் புழுவைக காணோம்.   ஆண் கிளி, பெண் கிளிகளைக் காணோம். வெயிலில் ஒரு காக்கை, இன்னொரு காக்கை இரண்டும் மட்டும் கரைந்து கொண்டே இருக்கின்றன. பொழுது போகாத பழைய சூதாடிகள், தன்னையே இரண்டு பேராக எதிர் எதிர் அமர்த்தி, குருட்டு ரம்மிகள் ஆடுவது போல, இந்தக் காக்கை கூட
எதிர் காக்கையாகவும் மாறிக் கரைந்துகொண்டிருப்பதும் ஒரு பின் நவீனத்துவப் பிற்பகலில் நிகழக்கூடியதே.

காக்கைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  சீனிக்குமார் வீட்டு வேப்ப மரத்தில் ரொம்ப நாளாக ஒரு காக்கைக் கூடு உண்டு.  மின்சார கம்பியிழை படுகிறது என  அவ்வப்போது வெட்டிவிடப்படுகிற எங்கள் தெரு வேப்பங் கன்றில் ஒரு காக்கைக் கூட்டைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் பிள்ளை உண்டான முகத்துக்கு ஒரு அழகு இருக்குமே அப்படி.

ஏற்கனவே சிட்டுக் குருவிகள் காணாமல் போய் வெகு காலம் ஆயிற்று. மாசு பட்டு வரும் சுற்றுப் புறச் சூழல், பாரதியின் வரிகளை நாமறியாது நம்மிடமிருந்து களவாடுவதை நாம் அறியவேயில்லை. முன் தினம் எத்தனை துக்கத்துடனும், முன் இரவு எத்தனை தூக்கமற்றும் கழிந்திருப்பினும், அதை ஒன்றுமற்றதாக்கும்  உங்கள் இன்றையதினத்தின் தரையில் தத்தித் தத்தி ஏழெட்டாக நகர்ந்து, தவ்வி, பறக்கும் ஏழு சகோதரிக் குருவிகளையும் அனேகமாக இப்போது காணோம். காம்பவுண்டுச் சுவரில் இருக்கும் சாம்பல் பூனைகளின் கனவில் மட்டுமே நந்தியாவட்டை நிழலில், சோழிகளைப் போலத் தன்னை விசிறி, தானே அள்ளிக் கொள்ளும் அந்தத் தவிட்டுக் குருவிகள் நடமாடுகின்றன.

இதைத் தவிர,  தானாகத் தன் காரியம் பார்த்துக் கொள்ளும் எளிய பறவைகளாக மிஞ்சுவது மைனாக்கள் மட்டுமே. அவையும் செழிப்பாக இல்லை. சோகையாக, மெலிந்து, துன்பமிலாத நிலையே சக்தி என்று நடமாடிக்கொண்டு இருக்கின்றன. மைனாக்கள் தான் நான் அதிகம் இப்போது அடிக்கடி பார்க்கமுடிகிற பறவையென ஐந்தாண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன் அவர்களிடம் சொன்ன உண்மை இப்போது சற்றுத் திரிந்துவிட்டது.  புறநகர்ச் சாலையில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அதிகமிருந்த மைனாக்களின் நிலை இப்போது அப்படியில்லை. நாம் எப்போதுமே அழிகிற இனங்களைத் தானே கணக்கெடுப்போம். மைனாக்களின் சரணாலயம், மைனாக்கள் நல வாரியம் எல்லாம் அப்புறம்தானே வரும்.

எந்தக் கவலையும் இன்றிப் பலுகிப் பெருகுவது இந்தப்  புறாக்கள் தான்.  கல்வெட்டாங்குழி தாண்டி உள்ள, அரசு உணவு தானியச் சேமிப்புக்கிடங்கு
தனக்கு மேல் உள்ள வானத்தில் அவ்வப்போது நூற்றுக்கணக்கான புறாக்களைக் கலைத்து வீசுவதை. இன்னும்  தொடர்ந்து பெருங்கருணை மிக, அளித்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் வட்டங்களிட்டு அமைதி கொள்வது, மேகங்கள் கலைந்து நகர்வது, இப்படிப் பறவைகள் கலைந்து கலைந்து வானில் சுழலும் சித்திரங்களை வரைவது, ஒரு பெரும் அரச மரத்தின் அத்தனை இலைகளும் தனித்தனியாக அசைவது,  தீ வளர்வது,  தீ தணிவது எல்லாம்  காணமுடிகிற தினங்களும் காண  அனுமதிக்கிற வாழ்வும், சாயுங்காலங்களின் கருக்கல் அழகை முற்றிலும் இழந்துவிட்ட கணினிச் சந்ததியர்க்குக் கிடைக்குமா? 

மீண்டும் விலகிப் போகிறேன். நான் பறவைகளில் துவங்கினேன். ஒரே ஒரு
பறவையை, சிவாஜி பட நினைவுடன் சொன்னால், ‘புதிய பறவை’யைப் பற்றிக் குறிப்பிடவே விரல்கள் விரும்பின.

இரண்டு வருடங்களுக்கு முந்திய மழைக்காலத்தில்தான் அந்தப் பறவையைப் பார்த்தேன். மழைக் காலம் முடிந்து தண்ணீர் அங்கங்கே தேங்கிக் கிடந்த பருவம். சவேரியர் தெரு முடிகிற, சாராள் தக்கர் கல்லூரிக்குப் பிந்திக் கிடக்கிற மைதானத்தின் செம்மண் பரப்புத் துவங்கும் இடம் அது. பெரும்பாலும் வேப்பமரங்கள் அடர்ந்த தெரு மருங்குகள்.
ஒரு காலை நடையில் அந்த அற்புதம் நிகழந்தது.  ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதத்தின் காட்சியில், அந்த நிமிடத்துப் பாத்திரமாக நானும் மேடையில் இடப்புற நுழைவு செய்தேன்.

அங்கிருந்த தந்திக் கம்பிகளில் நூற்றுக் கணக்காக, ட்ரில் வாத்தியார் உட்காரச் சொன்னது போல, கீழ்ப்படிவுடன், அந்தக் குருவிகள் அமர்ந்து இருந்தன. குருவிகளை விடப் பெரியவை. மீன் கொத்தியின் சிறகு நிறங்கள் உடையவை. ஆனால் மீன்கொத்தியை விடச் சிறிய உடல். நல்ல வலுவான அலகைப் பார்த்தால், கொத்தித் தின்னும் உணவுப்பழக்கம்
உடையதாக இருக்க வேண்டும். வால் மட்டும் இல்லை. வாலில் ஒரு கம்பியைச் செருகின மாதிரி, ஒரு ஒற்றை வளர்ச்சி. நான் இந்தப் பக்கம் இதுவரை பார்த்தே இராத பறவை. மழைக்காலம் முழுவதும் இங்கேயே
இருந்தது. காலையில் தந்திக் கம்பிகளில் பள்ளிக்கூடம் நடத்தும். மாலை குறிப்பிட்ட, அதிக உயரமற்ற இரண்டே இரண்டு வேப்பமரங்களில் மட்டும் அடையும்.  மழைக்காலம் முடிந்து பனிக்காலத்தில் கூட இருந்தன. வெயில் வந்ததும் ஒன்றைக்கூடக் காணோம். சொல்லிவைத்தது போல, மறுபடியும் அடுத்த மழைக்காலத்தில் வந்தன. அதே தந்திக் கம்பிகள். அதே வேப்ப மரங்கள்.

அந்த இரண்டு மழைக் காலங்களிலும் என்னிடமிருந்து  குறுஞ்செய்திகள்   பெற்ற யாருக்கும் அந்தப் பறவைகள் பற்றிய ஒன்றிரண்டு வரிகளாவது இல்லாமல் போயிராது.  என் அந்தப் பருவத்தைய காலைகளில் நான் அதன் சிறகுகள் அணிந்து திரிந்துகொண்டிருந்தேன்.  என் மழைக்கால வானம் வெளிவாங்கிய பின்னும் கூட, நான் கூட்டம் கூட்டமாக அந்த பெயர் தெரியாத பறவைகளை எனக்கு உள்ளும் வெளியும் பறக்கவிட்டுக் கொண்டே இருந்தேன்.  அதன் பெயரை எனக்கிட முடியாததால், என் பெயரையே அதற்கு இட்டுக் கொண்டதும் உண்டு.

யாரிடம் கேட்டும் தெரிந்து கொள்ள முடியாத அந்தப் பறவையின் பெயரை அறிய,  அவை நாயகன் தன் ஓசை வெளியீடாகப் பதிப்பித்து
நமக்குக் கொடுத்திருக்கும் காடுறை உலகம் புத்தகத்தின் 67-ம் பக்கம் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது. அதே பறவை. அதே கூர் அலகு.
வாலில் அதே போல ஒற்றைக் கம்பி. உன்னை நான் பார்த்ததே இல்லையே என்று என்னிடம் சத்தியம் செய்வது போல அது ஒரு முட்கிளையில் ஏகாந்தம் பயிலும் படம். உலவும் பூச்சிகள்/ பல்கிப் பெருகாமல்/ பறந்துண்டு கட்டுப் படுத்தக்/ காட்டில் அலையும்/ பஞ்சரட்டை ..
என்ற அவை நாயகனின் குறிப்பு.

இது ஒரு வரத்துப் பறவையாக வந்திருக்கும் எனில் எனக்குக் கூடுதல்  மகிழ்ச்சிதான். அதனதன் வாழிடத்தில் பூச்சி புழுக்கள் மறுக்கப் பட்ட
‘ஒரு துரத்து பறவை’யாக பஞ்சரட்டை புலம்பெயர்ந்திருக்கும் எனில் துயரம் தருவது தான். புலம் பெயர்ந்தவர் மேல் நாம் கொள்ளும் அக்கறை
எவ்வளவு என்றுதான் நமக்குத் தெரியுமே.

இதோ இது செப்டம்பர்.  அக்டோபர் நவம்பரில் மழை பெய்யாதா போகும்.? நான் செம்மண்ணை நம்புகிறேன். மண் புழுக்களை நம்புகிறேன். எனவே பஞ்சரட்டைகளையும் நம்புகிறேன். அவை நிச்சயம் வரும். அவை அமர்வதற்கான தந்திக் கம்பிகளையும், அந்த இரண்டு மரங்களையும் இன்றைக்கு அடிக்கிற வெயில் துடைத்து வைக்கும் .

வெயிலை என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

%