Thursday 31 January 2013

வாசிப்புக்குரியவர்கள்.


அப்படியெல்லாம் எனக்கு ஓவியம் பற்றித் தெரியாது எனக்கு. ஒரு அரூப
ஓவியக் கண்காட்சி வரிசையில், வழிதப்பி வந்து மிரண்டு நிற்கிற கிழட்டுப் பூனை போலத்தான் நான் நிற்பவனாக இருப்பேன். என்னிடம் உரத்துக் கூட அல்ல, மௌனமாக உச்சரிக்க எந்த செவ்வியல், நவீன, பின் நவீன ஓவியர்களின் பெயர்களும் இல்லை. ஆனாலும் ஓவியமும் ஓவியர்களும் சார்ந்த சிறு பூகோளம் எனக்குள் உண்டு.

பாஸ்கரனை ஓவியராக மட்டும் அல்ல மனிதனாகவும் ரவிசுப்ரமணியன்
அறிந்திருக்கலாம். கிருஷ்ணமூர்த்தியை இளையபாரதி அவருடைய ஓவியம் சாராத முகத்துடன் நெருக்கமாக உணர்ந்திருக்கலாம். மறைந்த ஆதிமூலத்தை என் அம்பாசமுத்திரம் நண்பர் நாறும் பூ நாதன் ஒரு தகப்பனை விட மேலான மனிதராக அறிந்திருக்கிறார். சந்ருவுக்கும் கோணங்கிக்குமான  உறவு ஓவிய வெளியைத் தாண்டிய  அகண்ட கலையின் பெரு வியாபகம் சார்ந்தது. நான் சக்திகணபதியை, அவருடனான மிகச் சிறிய நெருக்கத்தில், ஒரு ஓவியனாக, சுதைஞனாக,கேலிச்சித்திரக்காரனாக மட்டும் அறிந்திருக்கவில்லை. சுசீந்திரம் சன்னதித் தெருவீட்டில் அவரைப் பார்த்தபோதும், சுசீந்திரம் கோவில் மேல் விமானத்தில் நாங்கள் இருந்த சமயத்திலும் உணர்ந்த சக்திகணபதியின் குரலில் துக்கமும் கண்ணீரும் இருந்தன. தன் மகள் வயிற்றுப் பேத்தியை, தொட்டிலுக்குள் குனிந்து பார்த்து, அவர் சொன்ன சொற்களை, ஒரு புழுங்கிய வாடை அடிக்கும் பழஞ்சேலை சுருக்கங்களுக்கும் தொட்டில் கம்பின் கடைசல் வளைவுகளுக்கும் இடையே மட்டுமே சொல்லியிருக்க முடியும்.

புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது மருதுவுக்குப் பேசாமல் தீராது. அவருடைய உரையாடலில் குறுக்கிடும் அளவுக்கு என் சந்தோஷம் இருந்தது. சில பொழுதுகளில் சந்தோஷம் இப்படி நாகரீகக் குறைவுகளை அனுமதிக்கிறது.
அவர் அப்படியே தழுவிக் கொண்டார். அவர் சிரிப்பில் சமீபத்தில் அவர் இழந்திருந்த முன் கடைவாய்ப் பல்லின் இடைவெளி இருந்தது. அவருடன்  நான் கழித்த ‘திரைக்கூடம்’ பொழுதுகளை நினைவூட்டினேன். அஞ்சுகம் நகர் ஐந்தாவது தெருவாகி விட்டது அந்த ஷெல்லி வீதி. அவர் எப்போதும் சொல்லத் தயாராக இருக்கிற, அவருடைய செல்ல வட்டாரமான சந்திரபாபு, சோலை மலைத் தாத்தா பற்றி நுனியெடுத்துக் கொடுத்தேன். அதற்குள் சாம்ராஜ். பி.ஜி.சரவணன் எல்லோரும் வந்துவிட்டார்கள். ஒரு சொடக்குப் போடும் நேரத்துக்குள், அது வைகை மேல் பாலமாகவும், கோரிப்பாளையம் ஆகவும் தல்லாகுளமாகவும்  அழகர்கோவிலாகவும் மாறிவிட்டது. மருது  ராக்கியம்மன் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அரஸ் என்கிற திருநாவுக்கரசையும் அங்கேதான் பார்த்தேன். இதுதான் முதல் முறை. எனக்கு அரஸ் எழுதுகிற பத்திரிகை ஓவியங்களை ரொம்பப் பிடிக்கும். வரைவதை எழுதுவது என்று சொல்வது கூட, சக்திகணபதிதான்.  அரசின் வரைகோடுகளில் தென்படும் கைவைத்த பனியன் போட்ட நடுத்தர வயது மனிதர்களை நீங்களும் நானும் எங்காவது ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். நடுத்தர வயதைக் கொண்டுவருவது சுலபமில்லை. இழுத்துக் கட்டிய தோலும் அல்லாத, சுருக்கம் விழுந்த தோலும் அல்லாத நடுத்தர வயதுப் பெண்களை அரஸ் மிகச் சரியாக வரைய முடிபவராக இருக்கிறார். அவர் வரைகிற கேலிச் சித்திர முகங்கள் கடந்த இருபதுவருட பத்திரிக்கைப் பக்கங்களில், சமீபத்திய கண்ணா தவிர்த்து, வேறு யாரிடமும் பிடிபடாதவை. அவரிடம் என் கூடப் பிறந்த அண்ணன் தம்பியிடம் பேசுவது போலப் பேசிக்கொண்டு இருந்தேன். அழகற்ற முகங்களை அழகாக வரைவது பற்றி எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். முத்தாரத்தில் குமுதத்தில் தீபம் பத்திரிக்கையில் எல்லாம் ஓவியங்கள் வரைந்திருக்கிற விமலா எனும் செல்லப்பன் வரைந்த முகங்கள் அப்படிப் பட்டவை. அருமனையிலோ, தோவாளையிலோ, சுத்தமல்லியிலோ ராமையன்பட்டியிலோ, பனைவிடலிச் சத்திரத்திலோ பார்க்கமுடிகிற மூக்கும் முழியும் உடைய முகங்கள் அவை.  இந்த என்னுடைய பேச்சு அரஸ் முகத்தில் ஒரு நெகிழ்வைக் கொண்டுவந்திருந்தது. அவருடைய முகவரி அட்டையை
சந்தோஷமாக எடுத்து நீட்டினார். என்னிடம் எப்போதுமே முகம் மட்டுமே உண்டு. முகவரி அட்டைகள் கிடையாது.

அன்றோ மறு நாளோ சந்திக்க முடிந்த இன்னொரு ஓவியர் ராஜா. சுபமங்களா நாட்களில் ராமச்சந்திரனைப் பார்க்கப் போகும்போது பார்த்ததன் பின் இப்போதுதான் பார்க்கிறேன். அதே அமைதி. அதே புன்னகை. தணிந்த குரலில் பேசுகிறவர்களுக்கே உண்டான அழகு அவரிடம். விகடனில்  லே அவுட் ஓவியர். எனக்கு பாண்டியன் ஞாபகம் வந்தது. அகம்புறம் தொடரின் கடைசிப் பகுதிக்கு லே அவுட் செய்த கையோடு அவர் பேசின குரல் ராஜாவிடம் கேட்டது. வைகறை நஞ்சப்பன் வெளியிட்ட ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்கிற என் கடிதத் தொகுப்பின் முகப்பை வரைந்தவர் ராஜாதான்..அவருடைய  கைகளையும் நான் பிடித்துக் கொண்டேன். காவேரி தீரத்துக்காரர். ஒரு நதி ஒரு ஓவியனிடம் என்னென்ன ஒப்படைத்திருக்குமோ அது அவரிடம் அப்படியே இருப்பதை அந்தக் கைகளில் உணரமுடிந்தது.

புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்களைச் சிலர் பட்டியல் இடுகிறார்கள். ஒரு மாறுதலுக்கு நான் இடுகிற பட்டியல் இது. மனிதர்களை, அதுவும் ஓவியர்களை புத்தகங்கள் அல்ல என்று யாராவது சொல்லமுடியுமா, என்ன?,

%

Tuesday 29 January 2013

பச்சைக் கனவு.







சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ’தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’ வாசித்துக்கொண்டு இருக்கிறேன். சிறு புத்தகம்தான். அனேகமாக
தாத்ரிகுட்டியை அறிந்துகொண்டவனாக இருக்கிறேன். மலையாளத்தில் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் எழுதியது. நம்முடைய யூமா.வாசுகி தமிழில் தந்திருக்கிறார்.

ஆரங்கோட்டுக் கரையிலிருக்கிற கல்பகச்சேரி இல்லத்து குரியேடத்து தாத்ரியை ஸ்மார்த்த விசாரணை செய்கிறார்கள். அவள் மீது வைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தாத்ரி ஒரு கலகம் செய்கிறாள். அதே பெண்ணுடலும் அதே பாலியலுமே அவளின் ஆயுதம். அறுபத்து நான்கு ஆண்களை அவள் குற்றவாளிகள் ஆக்கி, பெயர்களுடனும் விவரங்களுடனும்  விசாரணையில் தெரியப்படுத்துகிறாள். அறுபத்தி ஐந்தாவது நபரை அவள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அது கொச்சி மகாராஜா அல்லது அவருடைய மிக நெருங்கிய உறவினர் என்று யூகிப்பதற்கான அடையாளமாக அவருடைய மோதிரத்தை தன் தோழியின் மூலம் காட்டுகிறாள். அந்த அறுபத்து நான்கு பேரும் சாதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தின் மொத்த  வெறுப்புக்கும் நிந்தனைக்கும் உள்ளாகும் அவர்கள்  ஊரையும் வீட்டையும் விட்டுவெளியேற நேர்கிறது.

அப்படி வெளியேறியவர்களில் ஒருவர்தான் ‘காவுங்கல் சங்கரப் பணிக்கர். இந்த இடத்தில் இருந்து நான் குரியேடத்து தாத்ரியை விட்டு விலகி, முழுக்க முழுக்க சங்கரப் பணிக்கரின் பக்கம் போய்விட்டேன்.  குரியேடத்து தாத்ரிக் குட்டி பெரும் ரசிகை. கதகளிப் பாட்டும்,  கர்னாடக இசையும் தாத்ரி  அறிவாள்.
ஏழு  இரவுகள்  கதகளி கண்டும்  எட்டாம் இரவுக்காக அவள் காத்திருப்பவள்.
களரியும் கதகளியும் அறிந்த காவுங்கல் சங்கரப் பணிக்கர் செம்மந்தட்ட சிவன் கோவிலுக்கு கதகளி நிகழ்த்த வருகிறார். கீசகன் வேடம் அவருக்கு.

தாத்ரிக் குட்டி, சங்கரப் பணிக்கரை, கதகளி ஆட்டத்தின் கீசகவேடத்தைக்
கலைக்காமலேயே குளப்புரைக்கு அழைத்துவந்து கூடுகிறாள். ஒப்பனை அகலாமல்,அலங்காரம் அழியாமல் அப்படியொரு கூடியாட்டம். அவள் சங்கரப் பணிக்கரை மாயாவியாக்கிக் கீசகனுடன் லயிக்கிறாள். மனிதனை முற்றிலும் அருவமாக்கி, கலைஞனுடன் ஒரு அகாம உன்னதம் துய்க்கிறாள்.

ஸ்மார்த்த விசாரத்தின் சாதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்த சங்கரப் பணிக்கர் மட்டுமே.பிற்பாடு தன் செயல்பாட்டுக்கு வருகிறார். மற்ற அறுபத்து மூன்றுபேரும் காணாது போய்விடுகிறார்கள். பணிக்கரை அவரது  கதகளியும் களரியும் மட்டுமா உயிர்த்தெழ வைத்திருக்கும்? எனக்கென்னவோ கீசகவேடம் கலையாமல்  குரியேடத்து குளப்புரையில் பாசிபடிந்த தண்ணீரின்  பச்சை வாசனையடிக்க, தாத்ரிகுட்டியுடன் அவர் கலந்து கரைந்திருந்த மதனோற்சவத்தின  காந்தர்வமும் அவருக்குப்  பெரும் அழைப்பாக இருந்திருக்கவேண்டும்.என்று தோன்றுகிறது.

’திரும்பா பயணம்’  என்கிற அத்தியாயத்தின் துயரார்ந்த வரிகளின் ஊடு நடமாடும்  காவுங்கல் சங்கரப் பணிக்கர் அதற்குப் பின் தொடர்ந்து நடத்துகிற ‘மறுக்கப்பட்டவனின் கலக வரலாறு,  குரியேடத்து தாத்ரிக்குட்டியின் பெண்ணுடல் கலகத்துக்கு ஒரு உணர்வு பூர்வமான நீட்சியாகவே நிலை பெறுகிறது. வேடங்கட்ட உரிமையில்லாது அலைந்த அந்த கதகளிக் கலைஞன் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறான். கலையின் பொன் கிரீடம்  அணிந்து  நடமாடிய காவுங்கல் களரியை அவர் கடைசியாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் படியிறங்கி  நகர்வது என்பது எத்தனை வதை..அந்த நள்ளிரவில் அவர் தன் குல வீட்டைப் பார்த்துப் பிரார்த்தனையில் மூழ்கி இருக்கிறார். ஒரு கூக்குரல் கேட்கிறது.

சங்கரப் பணிக்கரின் சகோதரிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை இந்த உலகத்திற்கு உரத்துச் சொல்லும் நற்செய்தியாக அது இருக்கிறது. ‘இவனுக்குக் கச்சைகட்டி ஆட்டம் சொல்லிக்கொடுக்க நான் வருவேன்’ என்று முடிவுசெய்தபடியேதான் அவர் குன்றிறங்குகிறார்.  அதே போலத் திரும்பிவரவும்  செய்கிறார்.சுதந்திரத்துடன் ஐக்கியம் கொண்ட அந்தக் கலைஞன், தன் எதிர்த்து நிற்றலுக்கான வழியாக ,மேடையையே தேர்ந்தெடுக்கிறான். அறுவடை முடிந்த நெல் வயல்களிலும் வெள்ளரி நிலங்களிலும் ஆட்டக் களம் அமைக்கிறார். தன்னுடைய தொடர்ந்த இந்த கலைக் கலகத்தின்  மூலம் அவருடைய  கதகளிக்கும்  மக்களுக்கும் ஸ்மார்த்த விசாரப் பிரஷ்டம் உண்டாக்கிய இடைவெளிகளைத் தகர்க்கிறார்.

கொச்சி ராஜாவுக்கு முன்னால் கதகளி ஆடும்  வாய்ப்பையும் அவர் தன் சக கலைஞன் வெங்கிச்சன் மூலம் சம்பாதிக்கிறார். வெங்ஙு நாட்டு அரண்மனையில் விளக்கு வைத்த நாடக சாலையின் மூலையில் அவர் பூரண ஒப்பனைமுடித்துத் தயாராக இருக்கிறார். நாடக சாலைக்குத் தீவைப்போம் என சில பழமைவாதிகள்  ஓடிவருகிறார்கள்.சங்கரப் பணிக்கரின் முகத்து ஒப்பனையையும்  பூண்டிருந்த அணிகலன்களையும் பலவந்தமாகக் கலைக்கிறார்கள்.   பாதி அழிந்து அசிங்கமான ஒப்பனையின் மீது தாரை தாரையாகக் கண்ணீர் பெருக, ‘அணிகலன்களையும் கிரீடத்தையும் பெட்டியையும் தீயில் இட்டு, தானும் அத் தீயில் மாய்ந்து போகிறேன்’ எனத் துடிக்கிறார்.

ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் எழுதிக்காட்டாத ஒரு காட்சியை நான் எழுதிக் கொண்டேன். கீசகனின் வேடம் கலைக்காமல் குரியேடத்துக் குளப்புரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பணிக்கரின் முகம், கொச்சிராஜா நாடக சாலையின் மூலையில் பலவந்தமாக ஒப்பனை கலைக்கப்பட்டு தீப்பாயத் தயாராகிற
பணிக்கரின் முகம். கலைஞனை உருவமாக்கி, மனிதனை அருவமாக்கிக் கலந்த காமினியே தாத்ரிக் குட்டி, நீ அறிவாயா உன் கூடியாட்டத்தின் களிக்கூட்டுகாரன் தன் கலைக்கப்பட்ட ஒப்பனையின் மீது வழியவிடும் இந்தக் கண்ணீரின் தாரையை?

எப்போதும் போல ,  இப்போது நான் காவுங்கல் சங்கரப் பணிக்கராக இருக்க விரும்புகிறேன். அதே சமயம் என் கண்ணீர் உலருமுன், அந்த குடியேடத்து குளப்புரையின் பாசிவாசனை தீராப் பச்சைக் கனவையும் நான் மீண்டும் காண விரும்புகிறேன்.

%


Sunday 27 January 2013

ஊர்த்துவம்..






முருகவேள் அண்ணன்  சொன்னது போல ‘ஈகிள்’ கடையில் முன்பதிவு செய்யவில்லை. புத்தக விழாவில் வாங்க விட்டுப் போயிற்று . கடைசி தினத்தில் ஞாபகம் வந்தது. உமாசக்தியிடம் சொல்லி எடுத்துவைக்கச் சொல்லிவிடலாம் என நினைத்தேன். தொலைபேசி அழைப்பில் அவர் கிடைக்கவில்லை. கடைசியில், ஊருக்கு வந்து மூன்று நாட்களுக்குப் பின் தங்கராஜிடம் இருந்துதான் சில்பி அவர்களின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொகுப்பு இரண்டையும் எடுத்துவந்தேன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஊர்த்துவ கணபதியை முதலில் வரைந்துதான் அந்தத் தொடரை ஆரம்பித்தாராம். நான் ஓவியர் சில்பியைச் சந்தித்தது, அப்படிச் சொல்லவும் முடியாது,’தரிசித்தது’ என்று சொன்னால் இயல்பாகவும் இராது, அதே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான். எந்தக் கோபுர வாசல் என்பது ஞாபகமில்லை. அனேகமாக மேலக்கோபுரவாசலாக இருக்கலாம். திண்டுக்கல் ரோடு வழியாக நடந்து, மேலக்கோபுரவாசலில் திரும்பி நடந்தால், சோத்துக்கடைத் தெரு முக்கில் இருக்கிற ‘பாட்டா’ கடை வந்துவிடும். அதில்தான் சொக்கன் வேலைபார்த்தான். முதலில் சேல்ஸ்மேன் அப்போது. முகங்களை விடக் கால்களையே அதிகம் உற்றுப்பார்க்கவேண்டும். அதுவும் சிரித்துக் கொண்டே. மனுஷ்யபுத்திரனை விட, முடிவற்ற ‘கால்களின்
ஆல்பம்’ கவிதை எழுத சொக்கலிங்கத்தால் முடியக்கூடும்.

69 அல்லது எழுபதாம் ஆண்டாக அது இருக்கலாம்.வேலை கிடைக்காத எனக்கு எல்லாக் காலமும் வேனில் காலம் போலத்தான் இருந்தது. வெயில் காலத்தில் மழை பெய்யக் கூடாது என்று கட்டாயமா என்ன? மழைக்கால மழையை விட, வெயில் கால மழைக்கு ரம்மியம் அதிகம். நான் மழைக்கு கோபுரவாசலில் ஒதுங்கினேன். எனக்கு முன்பே அப்படி ஒதுங்கிய ஒருவராக சில்பி நின்றுகொண்டிருந்தார். கையில் வரைபலகை. க்ளிப் மாட்டிய ஓவியக் காகிதம். பார்த்தவுடனே சில்பி என்று தெரிந்துவிட்டது.

 எல்லா உயர்ந்த கலைஞனுக்கும் பார்த்தவுடனே தன்னை  அடையாளம் தெரிவித்துவிடுகிற ஒரு தோற்றம் இருக்கிறது. தோற்றம் என்பதை விட அப்படி ஒரு அம்சம் அவர்களிடம் அமைந்துவிடுகிறது.ஜானகிராம் படிக்கட்டில் இறங்கிவருகிற ஒருவரைப் பார்த்ததும் இவர் பாடகி என்பதனை உணர முடிந்தது. அவர் பெயர் சுதா ரகுநாதன் என்பதை அப்புறம் யாரோ சொல்லத் தெரிந்துகொள்கிறேன்.  பாளை மார்க்கெட் பக்கத்து ஜவஹர் மைதானத்தில்  ஏதோ ஒரு கலை இரவு. தூரத்தில் இருந்து பார்த்தாலே இவர்தான் ஓம் பெரியசாமி என்று தெரிந்துவிட்டது. அசோகமித்திரனை அவர் கதைகளை வாசித்திருக்கிற யார் பார்த்தாலும், அவர்தான் அசோகமித்திரன் என்று தெரிந்து போகும்.  சில்பியும் அப்படித்தான் இருந்தார். இதுவரை அவர் வரைந்து வந்த அத்தனை கோடுகளையும் பார்த்தவர்களுக்கு, அவரை அடையாளம் காண்பதில் எந்தச் சிரமமும் இருந்திராது.

ஒரு ஓவியன் அவனுடைய எல்லாக் கோடுகளிலும் தன்னையும் சேர்த்தே வரைகிறான். சோபனாவின் இரண்டு நடனத் தோற்றங்களை சமீபத்தில் சுரேஷ்குமார இந்திரஜித் முகப் புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார். அலர்மேல் வள்ளியைப் போல சோபனாவையும் எனக்குப் பிடிக்கும். சோபனா எப்போதும் சோபனாவையே ஆடிக்கொண்டிருக்கிறார். அந்த இரு படங்களிலும் கூட. எந்த மெல்லிசைக்குழுவின் புல்லாங்குழல் கலைஞனும் அவனையே அவன் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

நான் சில்பியை இரு கை கூப்பி வணங்கினேன். அகன்ற நெற்றியில் திருநீறு துலங்க, யாரையும் பார்க்காமல் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் தீர்க்கமாக இருந்தது. அவரைத் தொழுவது என்பது அவர் அந்த தினத்து மழையின் முதல் தாரை விழும்வரை வரைந்திருந்த அத்தனை ஆயிரம் சிற்பங்களையும் ஒருசேரத் தொழுவது போன்றது. எந்தெந்த நூற்றாண்டுக் கல்லையும் உளியையும் விரலையும் தொழுவது அது. அடுக்கடுக்கடுக்கான பாறைகளில், அகாலம் கண்ட பெருந்தச்சர்கள் ஆண்டாண்டு  செதுக்கிய கல்லோவியங்களின் ஒற்றைப் பிரதிநிதியாக, மேலக்கோபுரவாசலில் அந்தத் தேர்ந்தெடுத்த கணத்து மழை வடித்த சிலையாக அவர் நின்றுகொண்டு இருந்தார். அவருடைய சிரிப்பு மட்டுமே அவரின் ஆசீர்வாதமாக இருந்தது.
நான் அவருடன் ஒன்றும் பேசவில்லை. மழை நிற்கும் வரை நானும் நின்றேன். மீண்டும் அவரை வணங்கிக் கொண்டேன். அவருடைய அகன்ற நெற்றியே எனக்கு விடை கொடுத்தது.

இன்று மறுபடியும் அந்த நெற்றியும் நீறும் துலங்குகிறது. சிதம்பர நகரில் அல்ல.நான் இப்போது மேலக் கோபுரவாசலில் ஒதுங்கி நிற்கிறேன்.

சொல்ல முடியாது, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் இப்போது இந்த தை நிசியில் மழைபெய்துகொண்டு  இருக்கக் கூடும். சில்பி இப்போது மழை நடனத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்குத்தான் ஊர்த்துவம் பிடிக்குமே.

%


Saturday 19 January 2013

ஏற்கனவே...



ரொம்ப  நாட்கள் ஆயிற்று என் கவிதைகளைப் பதிவேற்றி.
எந்தக் கவிதையை இதற்கு முன் இந்தப் பக்கத்தில் வைத்திருக்கிறேன்
என்ற தீர்மானமும் இல்லை.

ஏற்கனவே  பார்த்திருக்கிறீர்கள் என்றால், இது மீள் பார்வை.
ஏற்கனவே வாசித்து விட்டிருக்கிறீர்கள்  என்றால் இது மீள் வாசிப்பு.

*

நதிக் கல்.

இதற்கு  மேல்  உருள முடியாது
கல் நதியை விட்டுக் கரையேறிற்று .
இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று.


விடுவித்தல்.

சிலுவை ஒரு அழகான வடிவம்.
குறுக்கும் மறுக்குமான
கிராமத்துத் தெருக்களாக.
ஆணிகளின் உறுதிக்கும்
குறைவில்லை.
அறையப்பட்டவரை அகற்றினால்
விடுவித்துவிடலாம்
சிலுவையை..


*
கல்யாண்ஜி.

Friday 18 January 2013

மறக்க முடியாதவர்






’ ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது குணக்கிக்கிட்டே இருக்கு. ஆஸ்பத்திரி வீடுண்ணு அலஞ்சு முடியல’ என்று மடியில் ‘சுழண்டு’ படுத்திருக்கும் ஏழு எட்டு வயதுப் பெண்பிள்ளையைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, மேலே ஒரு கையால் கம்பியைப் பிடித்தபடி,  ’என்ன செய்து?’ என்று குனிந்து கேட்கிற இன்னொருத்தரிடம்  யாராவது சொல்வதை ஹைகிரவுண்ட் போகிற எந்த டவுண் பஸ்ஸிலும் இங்கே கேட்கலாம். 'ஒண்ணும் செய்யாது.சரியாப் போகும்’ என்று ஆறுதல் சொல்கிற முகத்தை,கிறங்கின கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு,மறுபடியும் மடியில் தலையைச் சாய்க்கிற பிள்ளையை அதனுடைய அம்மாவின் கை கூடுதலாக இரண்டுதடவை தட்டிக் கொடுக்கும்.
தன்னை அறியாமல், அதனுடைய  சட்டை முதுகில் போட்டிருக்கிற ஊக்கு அழுத்துமோ என்பது போல நகர்த்திவிட்டு,’தல பின்னிவிட்டு நாலு நாளாச்சு’ என்று மகளின் தலையை வருடும்

 நானும் மடியில் படுத்திருக்கிற அந்தப் பிள்ளை மாதிரித்தான் இருக்கிறேன். பத்து நாட்களாக உடலையும் மனதையும் யாராவது அப்படித் தட்டிக் கொடுக்க மாட்டார்களா என்றுதான் இருக்கிறது. நல்ல வேளை ராமசந்திரன் அதைத் தெரிந்து கொண்டார். அவருடைய இரண்டு புத்தகங்களைக் கூரியரில்  நேற்று அனுப்பிவைத்திருக்கிறார். இரண்டும் அவருடைய கட்டுரைப் புத்தகங்கள்.  ‘பின்னகர்ந்த காலம்’  மற்றும் ’மறக்க முடியாத மனிதர்கள்’. முன்னதை நற்றிணை பதிப்பகமும் அடுத்ததை கிழக்கு பதிப்பகமும் அழகாக வெளியிட்டு இருக்கின்றன  அதிலும் நற்றிணையின் முகப்பு, அதன் பாசிக்கலர் எல்லாம் நேர்த்தி. புத்தர் குட்டிப் பையனைப் போல வலதுமுட்டின் மேல் தலையைச் சாய்த்து உட்கார்ந்திருக்கிற அவர்களின் இலச்சினையே ஒரு அழகு.

கிட்டத் தட்ட வண்ணநிலவனின் அத்தனை தொகுப்புக்களையுமே புதிதாகப் பதிப்பித்துவிட்டார்கள். ஏற்கனவே, தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை’ வந்திருந்தது. இப்போது ‘கடல்புரத்தில்’, ‘கம்பா நதி’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’  தவிர புதிதாக ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்று, ’ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்’ என்ற பெயரில். சி.மோகன் தான் பதிப்பு ஆசிரியர் போல. அவருடைய கூர்மையான ரசனையை அவர் பதிப்பித்த எந்தப் புத்தகத்திலும் நாம் உணரமுடியும். ஏனைய படைப்புகள் மீதும், படைப்பாளிகள் மேலும் அவர் கொண்டிருக்கிற மரியாதையை, அவர் பதிப்பிக்கிற புத்தகத்தின்
எல்லாப் பக்கங்களிலும் அவர் வெளிப்படுத்தி விடுகிறார். அவர் விடுகிற வெள்ளைப் பக்கம் கூட, அது சார்ந்த கலைஞன் குறித்த எதையோ ஒன்றை நம்மிடம் சொல்லிவிடும். இதுவும் அதையே செய்கிறது.

‘பின்னகர்ந்த காலம்’ தொடரை அனேகமாக, மணாவின் ‘நட்பூ’ இணைய இதழில் ஏற்கனவே வாசித்துவிட்டேன். மிஞ்சினால்,ஒன்று இரண்டு விட்டுப் போயிருக்கும். அதைப் பின்னால் படித்துக்கொள்ளலாம் என்று, முதலில் மறக்க முடியாத மனிதர்களைத் துவங்கினேன். வல்லிக்கண்ணனில் ஆரம்பித்து சோ வரை மறக்கமுடியாதவர்களாக  இருக்கிறார்கள். என் பெயரும் உண்டு.

முன்பு என்றால், என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று அதைத்தான் முதலில் திருப்பியிருப்பேன். ஆல்பத்தின் கூட்டுமுகங்களில் நம் முகத்தை முதலில் தேடிப் பார்க்கிற இயல்பான சிறுபையன் தொலைந்துபோனான். அது வருத்தத்திற்கு உரியது. சந்தோஷத்திற்கும் உரியது.  தொலி உரித்த பின், சில சமயம் தொலியும் அழகாக, பழமும் அழகாக இருந்துவிடுகிறது, என்னசெய்ய?

வல்லிக்கண்ணன் முதல் பிரபஞ்சன் என்ற பிரபஞ்ச கவி வரை வந்துவிட்டேன்.  அம்பை என்கிற சி.எஸ்.லட்சுமி அடுத்து. இதற்குள்ளாகவே மனம் துல்லியமாகி விட்டது. அது அப்படியாவது  துன்பம்தான். ராமச்சந்திரனின் மறக்கமுடியாத மனிதர்களை அறிய அறிய, ராமச்சந்திரன்தான் மேலும் மேலும் எனக்கு மறக்கமுடியாத மனிதர் ஆகிவருகிறார். அவரை நான் அடைந்தது போலவும் இருக்கிறது. இழந்துவிட்டது போலவும் இருக்கிறது.

அவர் ‘என்ன கல்யாணி? எப்படி இருக்கிய?’ என்று இப்போது வந்து நின்றால் கூட நல்லதுதான்.  அது கூட வேண்டாம், ஒரு போன் போட்டு,பேச ஆரம்பிக்கு முன் அவருக்கு ஏற்படும் கொன்னலின் சிறு குரலைக் கேட்டால் கூடப் போதும்.

நான் இப்போது ‘கண்ணு முழிக்காமல்’ கிடக்கிறேன். இப்போதைக்கு  இந்த ‘காச்சல்’ விட்டுவிடும் என்று தெரியவில்லை.

%

Wednesday 16 January 2013

வாழ்வெனும் பெரும் பூ.








எதிர்த்த வீட்டில் நெல்லி மரம் இருக்கிறது. அல்லது நெல்லிக்காய் மரம் சுவரோரமாகத் தெருப்பக்கம் சாய்ந்திருக்கிற வீட்டிற்கு எதிரே நாங்கள்
இருக்கிறோம். எப்படிச் சொன்னாலும் சரிதான்.

இது ஜோதியம்மா வீட்டில் நிற்கிற ஒட்டு ரக வீரிய நெல்லி இல்லை. . இப்போது பழமுதிர்சோலைகளில் மினுமினுவென முன்வரிசைக்
கூடைக்கு வந்துவிட்ட, வேறு ரகம் அது.  அந்த வகை நெல்லியின் நிறத்தை ஒரு ஓவியன் வரைவதில் ஒரு சவால் இருக்கும். ‘தண்ணிக் கலர்’ என்று
தெய்வக்கா , வேறு யாரும் இல்லை, எங்கள் அம்மா, சொன்ன நிறத்தையும்
என்னால் வரைய முடியாது. சில வார்த்தைகளே ஓர் அற்புத நிறம் உடையது.

கோபாலின் இடைகால் வீட்டில்  இருந்து, அவனை நெல்லிமரத்து ஊஞ்சல் கவிதை எழுதச் சொல்லிய அரிநெல்லியும் இல்லை. வீட்டு  முன் திண்ணையில் உட்கார்ந்திருக்கிற கோபாலை, தன்னுடைய வேறு வடிவ இளம்பச்சையால், கலாப்ரியா ஆக்கிவிடும் மாயம் அரிநெல்லி இலைகளுக்கு  உண்டு. ‘யப்பா. எனக்கு வேண்டாம்ப்பா. புளிச்சுக் கொடுக்கீரும்” என்று சொன்ன பால்யகால சகி அல்லது சகாக்கள் நம் எல்லோர்க்கும் இருப்பார்கள். இப்படி சொல்லும்போது இடுங்குகிற கண்களின் அழகை சாகும் வரை மறக்க முடியாது. சற்றுப் பழுத்த அரிநெல்லியின் மிச்சமாக கடைவாய்ப் பற்களில் உருளும் சிறுவிதையை உணரும் நேரம், சற்று யோசித்தால், கிட்டத் தட்ட இந்த வாழ்வை உணர்வது போலத்தான்.  விழுங்கவும் முடிவதில்லை. துப்பவும் முடிவதில்லை. ஆனால் அதன் பல் கூசாத, நீர்த்த புளிப்பு  நமக்குத் தேவையாகவே இருக்கிறது.  அதிகம் ருசிசாராத ஒரு  களங்கமின்மை இருப்பதால்தான் ஆரம்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அரிநெல்லிக்காய் விற்கிற கிழவிகள் இன்னும்  கூடத் தென்படுகிறார்கள் சில சமயங்களில் அதே  அரிநெல்லிக்காய்கள் போலத்தான், அதைச் சாக்கில் கூறுகட்டி விற்கிற அந்த மனுஷிகளும் இருக்கிறார்கள். எதில் புழங்குகிறோமோ, அதன் சாயல் கொஞ்சம் நமக்கு ஒட்டிகொள்ளும் போல.

வெளியூரில் இருந்து வந்தவர்கள் , பொதுவாக இந்தப் பக்கம் வெயிலடித்தால் காரை எதிர்வீட்டுச் சுவர்ப் பக்கம் நிறுத்துவார்கள் தானே. நான் பார்க்கும் போது அந்த டிரைவர் உதிர்ந்துகிடந்த நெல்லிக்காயைப் பொறுக்கிக் கடித்துவிட்டு, கடித்த வேகத்திலேயே துப்பிக் கொண்டு இருந்தார். இது போன்ற நேரங்கள் யாரிடம் வேண்டுமானாலும் உடனே ஒரு உரையாடலைத் துவக்கிவிடச் செய்கின்றன. . தான் நினைப்பதை தன்னிடம் சொல்வதுதான் அது. அவர் என்னைப் பார்த்துக் கொண்டு சொன்னார்,”கடுத்துக் கிடக்கு ஸார். புளிப்பும் இல்ல. இனிப்பும் இல்ல.” . என் முகத்தில் இருந்து பார்வையை நகர்த்தி அவர்
சுவருக்கு அந்தப் புறம் நிற்கும் நெல்லிமரத்தைப் பார்த்தார். அது இதுவரை இவர் பார்ப்பதற்கு முன், எப்படிச் சடை சடையாய்க் காய்த்து, கனம் இழுத்த,
தணிந்த கொப்புடன் அசைந்ததோ அப்படியே இருந்தது.  இப்போது அவர் மறுபடியும் என்னிடம் தொடர்ந்தார். “காட்டு நெல்லி போல ஸார்”. அவர் காடு பார்த்திருப்பாரோ என்னவோ. நான் பார்த்ததில்லை. பார்க்காத ஒரு வனத்தில் ஒரு நெல்லிமரத்தை உடனடியாக எனக்கு முன்னால் வளர்த்துவிட அவரின்
அந்தச் சொற்கள் போதுமானதாக இருந்தன.

காட்டு நெல்லி என்ன, எல்லா நெல்லியுமே இப்படிச்  சடைடையாகக் காய்த்து
நிற்பவை தான். இப்படி காய்த்துக் கிடக்கும் நெல்லி மரத்தை, அது கண்ணில் பட்டும், ஒரு தடவை ஏறிட்டுப்  பாராமல் செல்கிற ஒருவனை நான் முற்றிலும் சந்தேகிக்கிறேன் அல்லது அவனுக்காகப் பரிதாபப் ப்டுகிறேன். சற்று அவனிடம் எனக்கு பயம் கூட. கீழாநெல்லி இலையின் கீழ் கடுகுகடுகாக
வரிசைகோர்த்திருக்கிற நெல்லியின் அழகை தன்னிடம் கற்கவந்திருக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியன் காண்பித்துக் கொடுத்தால், அதைவிட அவன் எந்த மொழியின் ஆனா ஆவன்னாவையும் கற்றுக் கொடுக்கவேண்டியதே இல்லை. சிறு தாவரங்களின் தன்னிச்சையான மொழி அத்தனை அபூர்வமுடையது. ஒரு நெல்லி இலையை அறியமுடியாத ஒருவன் ஒருபோதும் ஒரு வனத்தை அறிவதற்கில்லை.

நான் அந்த டிரைவருக்கு நன்றி சொல்ல்வேண்டும். அது காட்டு நெல்லி என்று அறிந்த பின் அதை நான் அதிகம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு மரத்தின் காய்களைவிடவும் கனிகளை விடவும் அதன் கிளைகளின் அசைவும் இலைகளின் அசைவுமே தொடர்ந்த ஈர்ப்பைத் தருகின்றன. அப்போதுதான் விடிந்திருக்கிற  அதிகாலைகளில், தூக்கம் வராத அல்லது தூக்கத்தை நானே தவிர்த்து  விட்ட பின்னிரவுகளில் நான் இந்த நெல்லி மரத்தை வெகு நேரம் பார்த்து நின்றிருக்கிறேன். என்னைப்  போலவே நெல்லி மரத்தைத் தேர்ந்து, வேறெந்த பக்கத்து மரங்களிலும் அமராமல், அதன் அடர்த்திக்குள் இருந்து, அமர்ந்து, மறைந்து, பறந்து போகிற சிறிய கருங்குருவிகளை சில காலைகள் எனக்குக் காட்டியிருகின்றன. அந்தக் குருவிகள் நெல்லி மரத்தில் அமர்ந்து இசைப்பதற்கென்றே சில பாடல்களை வைத்திருக்கும் போல. திரும்பத் திரும்ப அந்த நெல்லிமரப் பாடலையே அவை பாடுவதாகவும், அப் பாடலை அவை வேறெந்த மரக் கிளையிலும் பாடாது என்று கூட எனக்கு ஊகம். அவை அப்படிப் பாடிப் பறந்த பின் சுவோரோரம் தெருப்பக்கம் உதிர்ந்து கிடக்கும் நெல்லிக்காய்களில் அந்தப் பாடல் கேட்கக் கூடும். இப்படியெல்லாம் தோன்றுகிறதே தவிர, நான் அந்த நெல்லிக்காய்களைக் காதருகே வைத்துக் கேட்க இதுவரை முயன்றதே இல்லை.

எனக்குப் பதிலாகத்தான் அந்தக் கிழவன் அதைச் செய்துகொண்டிருந்தான். தெருப்பக்கம் உதிர்ந்து கிடந்த நெல்லிக் காயகளை அவன் பொறுக்கிக் கொண்டு இருந்தான். முகர்ந்து பார்த்தான். காதோரம் வைத்து, ஒரு கிலுக்கு
போலச் சத்தம் வருகிறதா என அசைத்தான். உலர்ந்த காட்டுப் பழங்களுக்குள் குலுங்கும் விதைகளை அறிந்த ஒருவனின் நுட்பமான குலுக்கல் அது. அந்தக்
கிழவனை இதற்கு முன் இந்தப் பக்கம் பார்த்ததில்லை. அவனுடன் அவன் மகளும் இருந்தாள். சிறியதும் பெரியதுமாய் இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண் குழந்தைகள். அழகிய முகங்களைப் பார்க்கையில் அதைப் பெற்ற தாயையும் தகப்பனையும் நினைத்து வணங்கிக் கொள்வேன் என்று மகுடேஸ்வரன் முகப் புத்தகத்தில் இட்டிருக்கும் நிலைத்தகவல் முற்றிலும் மெய். அந்த இரு குழந்தைகளையும் பெற்றதற்கு அவற்றின் தகப்பனையும். இவளைப் பெற்றதற்கு இந்தக் கிழவனையும் வணங்கத்தான் வேண்டும். அந்தப் பெண் குப்பைகள் பொறுக்கிக் கொண்டுவந்த பெரிய உரச்சாக்குப் பை அவள் அருகிலும் முதுகிலும் இருந்தது.  அவளும் குழந்தைகளும் நெல்லிக் காய்களைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தக் கிழவன் தன் கால்களை அகலமாக நீட்டி, ஒரு வினோதமான இருப்பு நிலையில் தன்னை வைத்திருந்தான். அவனுடைய இடுப்பில் இருந்து அந்தக் கால்கள் வெகுதூரம் நீண்டிருந்தன. அவன் பிறந்து, வளர்ந்து, திரிந்த அத்தனை ஊர்களையும் இப்போதும் அவை தொட்டுக்கொண்டு இருந்ததாகவே சொல்ல முடியும்.  அவற்றின் மீது படிந்திருக்கும் மண்ணையும் புழுதியையும் ஒருபோதும் கழுவுவதற்கு இல்லை  என அவன் இதுவரை தாண்டிவந்த நீர் நிலைகளிடமும் அவனை நனைத்த மழையிடமும் அறுதியிட்டிருக்க வேண்டும். அவனுடைய முகத்தையும் கைகளையும் விட அந்த மண்ணும் புழுதியும் படிந்த கால்களும் பாதங்களும் மிகுந்த சோபையுடன் இருந்தன. வலது கரண்டை மேல் ஒரு செப்பு வளையம் கிடந்தது. அது சதா சுழன்றுகொண்டு இருப்பது போலவும், அந்தச் சுழற்சி ஒரு வண்டு தூரத்தில் பறக்கும் உறுமலை உண்டாக்குவதாகவும் நான் நினைத்துக் கொண்டேன். அவன் என்னைப் பார்த்தால் நன்றாக இருக்கும் .

பார்க்கவே இல்லை. அந்தப் பெண்ணும் குழந்தைகளும் நெல்லிக் காய்கள்
பொறுக்கிக் கொண்டிருக்க, அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த ஒரு குச்சியால்  தன்னுடைய நீண்ட கால்களுக்கு இடையே இருந்த மண்ணைக் கொத்திக் கொண்டே இருந்தான். அப்படிக் கொத்தும் போது, கிளம்பி வந்த சிறு கற்கள் ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டுத் தூர வீசினான். ஒரு சிறு கல். ஒரு நொடி நேர நுகர்வு. ஒரு எறிதல் என அந்தக் கிழவன் தொடர்வதில் ஒரு பெரும் வினோதம் இருந்தது.

இந்த முறை கிடைத்த கல்லை ஒரு முறை நுகர்ந்தான். நாசித்துவாரம் அழுந்தும்படி அந்தக் கல்லை மிக நெருக்கமாக வைத்து ஆழமாக மூச்சை உள்ளே இழுத்தான். மூக்கில் இருந்து கல்லை அகற்றி, விரல்களுக்குள் லேசாக உருட்டி அதைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, மறுபடியும் அந்தக் கல்லை நுகரத் துவங்கினான். இதுவரை தீவிரமாக இருந்த அவனுடைய முகத்துத் தசைகள் எல்லாம் இளகி, ஒரு சிரிப்பாக உருவடைந்திருந்தன.
வாயோரமும், கண்களின் பக்கவாட்டிலும் விழுந்திருந்த சுருக்கங்கள் அந்தச் சிரிப்பில் மேலும் துலங்கின.

அவன் அப்படி நுகர நுகர, மலர மலர, எனக்குள் நிரம்பத் துவங்கியது வாழ்வெனும் பெரும் பூவின் வாசம்.

%





Monday 14 January 2013

வராமலே







நான் எதிர்பார்த்த அந்தப் பிற்பகல் இன்று வராமலே போயிற்று.

பொஙகல் தினத்தின் பிற்பகல் மற்று எந்தப் பிற்பகல்களையும்
விட அபூர்வமானது. என் நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு
முந்திய பொங்கல் மத்தியானங்களில்  வெயில் மட்டும் வாசலில்
நடமாடிக்கொண்டு இருக்கும். அடுப்புக்கட்டிக்குள் வெதுவெதுப்பாகக்
கிடக்கும் ஓலைச் சாம்பல், சிறுசிறு கருந்தகடாக காற்றில் மலரும்.
நிறை நாழிக்கு விளக்கு முன்னால் வைத்த நெல் சிந்திக் கிடப்பதை
சிட்டுக்குருவிகள் ஒவ்வொன்றாகக் கொத்தும்.அவை கொத்துவதற்காக
இறங்குவதும், கொத்திவிட்டுப் பறப்பதுமாக, உண்டாக்கும் சாய்ந்த
பறத்தல்களை, அந்தப் பறத்தல்களை தன் குதூகலமான குரல்களில்
கோர்த்துக்கொண்டு எவ்வும் கணத்தை, அவதானித்துவிட்டது போல
அந்தந்த வீட்டில் இடப்பட்ட கோலங்களும் காவிப் பட்டைகளும், அவை
வரையப்பட்டிருக்கும்  தரையிலிருந்து நான்கு விரற்கடை உயரத்தில்
விம்முவதை, நான்கு வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டுப் பட்டாசல் ஜன்னலில்
யாராவது ஒரு குஞ்சமக்கா பார்த்துக்கொண்டு நிற்பாள்.

 கோயில்வாசல் கடையில் குவித்துவைத்திருக்கிற குங்கும வாசனை ஏன் இப்போது தனக்கு ஞாபகம் வருகிறது என அவளுக்குத் தெரியாது. பொருட்காட்சி ஸ்டாலில் பாம்பு உடலும் பெண்ணின் தலையுமாக வரையப்பட்டிருந்த படத்தில், அந்தப் பெண்ணின் தலைக்கு ரெட்டைச் சடை போட்டிருந்ததும்,ரிப்பன் முடிச்சுப் போடப்பட்டிருக்கிற இடத்தில் அந்த பேனர் துணி கிழிந்து போயிருப்பதும்  எத்தனையோ வருடங்களுக்குப் பின் சம்பந்தமே இல்லாமல்இப்படியொரு பொங்கல் மத்தியானத்தில் ஏன் அவளைச் சங்கடப்படுத்த நேர்கிறது என்ற காரணத்தை யாராலும் சொல்லமுடியாது. அவளுக்கு அழுகை அழுகையாய் வருவது என்னவோ நிஜம்.

அப்படி அழுவதற்குத் தயாராகும்நேரத்தைத் துல்லியமாக அறிந்தது போல, தெருவில் இருந்து வீட்டுக்கு வரும் முடுக்குக்குள் அந்த மகுடி ஊதும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். தெரு நடையில் வளைந்து வளைந்து படியேறி  அந்த மகுடிச் சத்தம் வாசலை நோக்கிச் சரசரவென்று ஊர்ந்துவரத் துவங்கி விட்டிருக்கும். முடுக்கின் பாதி தூரத்தில் அந்த்ச் சத்தம் கேட்கக் கேட்க, இங்கே வாசலில் போட்டிருந்த புள்ளிக் கோலமெல்லாம் தன் தன் இழைகளை ஆவேசமாக  உருவிக்கொண்டு பக்கத்துக் கோலங்களுக்குள் புகுந்துவிடுவது போல நெளிய ஆரம்பிக்கும். இது வரை பொங்கலிட்ட வாசலாகக் கிடந்த இடம், சட்டென்று இப்போது ஒரு சர்ப்பக்காவு ஆகிவிட்டது போல, வாசம் அடிக்கும். தடயமே இல்லாமல்  ஒரு மெல்லிய தகடு போலப் படர்ந்திருந்த வெயில், எட்டயாபுரம் ராஜா தோட்டத்து நாகலிங்கப் பூக்களைப் போல உதிர ஆரம்பிக்கும்.

இப்படி அதனதன் இடத்திற்கு எல்லாக் காய்களையும் நகர்த்தி முடித்துவிட்டதை அறிந்தது போல,மகுடியூதும் வாயும், ஊதி முடித்த மறுநொடியில் பாம்பு சீறுவது போன்ற குரலுமாகப் பிடாரன் தன்னுடைய பிரவேசத்தை நிகழ்த்துவான். ஒரு சொல் கூட பசிக்கிறது என்றோ, சோறு போடுங்க என்றோ அவன் உச்சரிப்பதே இல்லை. மகுடியின் துளைகளில் அமிழ்ந்து அமிழ்ந்து உயரும் விரல்களின்(அந்த விரல்களில் ஒன்றில் ஒரு ஈய வளையம்) ,  நர்த்தனம்  புற்றின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். எந்த அவசியமும் இன்றி, ஒரு சிரிப்புடன், கருங்கம்பளி வழியும் தன் இடதுதோள் பக்கம் திரும்பி, அவன் பேசும் மொழி மகுடித்தனம் உடையது. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பிரப்பங் கூடைக்குள் இருந்து அவனுடைய பேச்சுக்கு வரும் படமெடுத்த பதில்களைக் கேட்டுவிட்டு,  சாந்தப்படுத்துவது போல, வேறு விதமாக இப்போது அவன் மகுடியை இசைப்பது போல இருக்கும்.

குஞ்சமக்கா ஜன்னலை விட்டு விலகி, அழிக்கதவைத் திறந்து வெளியே வந்து,
‘நல்ல பாம்பு வச்சிருக்கியா?’ என்று கேட்பாள். இதற்குப் பதில் சொல்லும் முன்பு பிடாரன் மகுடிஊதுகிற விதம் என்னவோ போல இருக்கும்.  நிறுத்தவே இயலாத படி அகப்பட்டிருக்கும்  சிக்கலை அவன் எப்போது தாண்டுவான் என்பதை அந்தப் பிற்பகலால் சொல்லவே முடியாது.

இன்றைக்கு வரும்  என எதிர்பார்த்தது அப்படியொரு பிற்பகலையே.
வராமல் போனது பிற்பகல் மட்டுமா?  பிடாரனிடம் அப்படிக் கேட்கிற குஞ்சமக்காக்களும் தான்.

%


Saturday 12 January 2013

ஒரு மாதிரி இருக்கிறவன்.






'என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?’
இந்தக் கேள்வியை வீட்டில் அதிகமும்,  என்னைத் தெரிந்தவர்களிடம் அவ்வப்போதும் நான் உண்டாக்கிக் கொண்டே இருக்கிறேன். இன்றைக்கு நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனில் அந்தக் கேள்வியை நீங்களும் கேட்கக் கூடும். அது எப்படி நான் ஒரே மாதிரி இருக்கமுடியும்? என்னை ஒரே மாதிரி வைக்க வேண்டிய பொறுப்பு என்னைத்தவிர அதிக சதவிகிதம் உங்களிடம் அல்லவா உண்டு?

இன்றைக்கு இதுவரை நான் சரியாகத்தான் இருந்தேன். கொஞ்சம் கவலைக்கு உள்ளானது எனில்,  ’என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? கண்டார ஓழி. வந்தம்’னா ஈரக் குலைய ரெண்டா வகுந்து போட்டிருவேம் பாத்துக்கோ’ என்ற குரல் அந்த வயதான அம்மாவிடம் இருந்து வந்துகொண்டிருப்பதைக் கேட்டபோதுதான். முந்திய தினத்தின் அத்தனை பூவும் உதிர்ந்து கிடக்கும் மரமல்லி மரத்தின் கீழ் வாசல் பெருக்கிக் கொண்டே, தன் நரைத்தமுடியை அள்ளிக் கொண்டை போட்டபடி, இங்கே பதிவு செய்யத் தயக்கம் தருகிற மேலும் சில உச்ச வசைகளுடன், திட்டிக்கொண்டிருந்த அவர் முன் யாருமே இல்லை. சற்று நேரம் குனிந்து பெருக்கியபடி இருந்தவர், தனக்கு முன் (எதுக்க)அந்த ’இல்லாதவன்’ வந்து நின்றுவிட்டது போல, ‘வாரியல் பிஞ்சுபோகும், இந்த ஜோலியெல்லாம் இங்க வச்சுக்கிடாதே’ என்று வேறோரு தேர்ந்த வசையுடன் முடித்தார். வன்மத்துடன் வீசி எறிந்த ஈட்டி, புல் தரையில் நுனி செருகி, அப்புறம் சிலநொடிகள் அதிர்ந்தாடிச் சமனப்படுமே, அது போல அந்த ‘கெட்டவார்த்தை’ அந்த இடத்தில் அசைந்து அடங்குவதை என்னால் உணரமுடிந்தது.

அவர் வளர்க்கிற நாயாகத்தான் தெரிந்தது. அதற்கு அன்றைக்கு கும்மியடிக்கிற மன நிலை இருந்திருக்கவேண்டும். அவரைச் சுற்றிச் சுற்றி வந்து. ஒவ்வொரு அரைச் சுற்றிலும் அவர் மீது காலைத் தூக்கி வைத்து ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மறுபடி வட்டம்போட்டு  அவரைச் சுற்றியது. ‘போ.மூதி.அந்தப் பக்கம். கவுட்டைக்குள்ள வந்து என்னத்த கொஞ்சிக்கிட்டுக் கிடக்க” என்று கையை உயர்த்தினார். அது என்னவோ அவரை மானபங்கப்படுத்த வந்தது போல, சேலைத் தலைப்பை எல்லாம் சரிபண்ணிக்கொண்டார், ‘கொஞ்சுததைபாக்கப் படாது, கொஞ்சுததை’ என்று முனகிக்கொண்டு மறுபடி குனிந்து பெருக்க ஆரம்பித்தார்.

இந்தப் பக்கத்தில் நான்கைந்து வீடுகளுக்கு இவர்தான் வாசல் தெளித்து வீடு கூட்டுகிறார். மிகவும் மெலிந்த மனுஷி. சற்று, கத்திக்கப்பல் செய்ய மடக்கின தாள் மாதிரி இருப்பார். செய்கிற வேலை துப்புரவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், இந்த வித வசைகளுடன் ஒரு நாளைத் துவங்க யாரும் விரும்பமாட்டார்கள். நான் அவரை மட்டுமல்ல, அவர் சதா சண்டைக்கு நிற்கும் அந்த இன்னொரு மனிதரையும் அனேகமாகப் பார்த்துவிடும்   அளவுக்கு, அவர் வீசும் கெட்டவார்த்தைகள்  உத்தேச அங்க அடையாளங்கள் தந்து உதவியிருக்கின்றன.  நான் என் வழியில் தேடுவது எல்லாம் அந்த உத்தேச மனிதரின் எதிர்வரவைத்தான்.

ஆனால், நடப்பில் அவருக்குப் பதிலாக எதிரே வந்தது அவரல்ல, ஒரு சிறு பெண். கல்லூரிக்குப் போகிற வயது. ஏதாவது பக்கத்து கிராமத்தில் இருந்து பஸ்ஸில் வந்து பாரதி நகர் ஸ்டாப் வந்துவிட்டதா, வந்துவிட்டதா என பக்கத்தில் இருப்பவரைப் பதற்றத்துடன் கேட்டு, பெருமாள்புரம் விலக்கு வந்ததில் இருந்தே எழுந்து நின்று குனிந்து குனிந்து பார்த்துக்கொண்டே வந்து இறங்கியிருக்க வேண்டும்.  களங்கமே இல்லாத ,. சிறுசிறு பருக்கள் வெடித்த, எந்தப் பூச்சுமற்ற முகம். இது ஒன்றும் பெரிய தெரு இல்லை.  இவ்வளவு அகலத் தெருவைக் கூட இதுவரை பார்த்திராதது போல் அகன்றிருந்த கண்கள்.
சற்று முன் தரையில் உதிர்ந்த ஒரு பழுத்த இலையின் சத்தத்துடன் அந்தப்
பெண் என்னுடன் பேச ஆரம்பித்தது. , “பாரதி நகர் அஞ்சாவது  தெருவுக்கு எப்படிப் போகணும்?’

என்னைப் போல, திசைதப்பி அலைகிறவன் முகத்தில் கைகாட்டிகள் தன்
அம்புக்குறிகளை நட்டிருக்குமோ என்னவோ?  பெரு நகரங்களில் நான், ‘ரெங்கநாயகி அபார்ட்மெண்டுக்கு எப்படிப் போகணும்?’ என்று பத்து பேரை அடுத்தடுத்துத் தேர்ந்து, தயங்கி, ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டே விடுவது என ஒரு முடிவுக்கு வரும் நிமிடத்தில்,  என்னிடம் யாராவது வந்து, மிகுந்த பணிவன்புடன், ‘’நியூ டெக்  அபார்ட்மெண்ட் எந்தப் பக்கம் சார் இருக்கு?’’ எனக் கேட்பார்கள். இந்தப் பெண் கேட்ட பாரதி நகர் ஐந்தாம் தெருவழியாகப் போனது இல்லையே தவிர, அது எங்கிருக்கிறது எனக்குத் தெரியும்.  எனக்கு அப்படித் தெரியும் என நானே நம்பியும், அந்தப் பெண்ணுக்கு வேறுயாரிடமும் வழி
கேட்க அவசியமின்றி நானே சரியாகச் சொல்லிவிடமுடிவதில் மனநிறைவு கொண்டும், ‘’ இது மூணாவது தெரு. ஒம்பதாவது தெருவரை இப்படியே போகலாம். மூணு, நாலு, அஞ்சுண்ணு கணக்கு வச்சுக்கிட்டுத் திரும்பீருங்க.
பக்கம்தான். சிரமம் இல்லை’ என்று என் உடம்பைச் சற்றுத் தெருப்பக்கம்
திருப்பி, கையை உயர்த்திக் காட்டினேன். நான் செய்த தப்பு அங்கே தான். தெருவின் வலது பக்கம் கையைக் காட்டுவதற்குப் பதிலாக இடது பக்கம் காட்டிவிட்டேன். அப்படித் திரும்பினால் நேத்தாஜி தெருவுக்குப் போய்விடும்.
இந்தத் தவறை நான் என்னையறியாது செய்திருக்கிறேன் என்பதை, அந்தத் தெருவை விட்டு விலகி,  ஆட்டோ ஸ்டாண்ட் தாண்டி, சிபி டெய்லர் போர்டு வரைக்கும் வந்தபிறகுதான் தெரிந்தது.

இதற்குள் அந்தப் பெண் எங்கெல்லாம் போயிருக்கிறதோ? நேத்தாஜி தெரு ஒன்றும் தொலைந்து போகச் சொல்லும் அளவுக்குப்  புதிரான திருப்பங்கள் உள்ளது அல்ல. இன்னும் (என்னைப்போல் அல்லாத) ஒருவரிடம் கேட்டால், பத்தே நிமிடங்களில் அந்த ஐந்தாவது  தெருவைச் சுலபமாகவே அது  கண்டு பிடித்துவிடலாம். ஆனால் அந்தப் பத்து நிமிடங்கள் அந்தப் பெண்ணுக்கு எத்தனை நெடுந்தூரம் உண்டாக்குகிற ஒரு நேரம். மறுபடியும் எச்சில் விழுங்கி,  நாலைந்தாக பாதுகாப்புக்கு வருவது போல ஒரு கொத்தாக நகரும் தெரு நாய்களுக்குத் தயங்கி, சாய்ந்த பல்ஸர் பைக்கில் காலூன்றிக்கொண்டு வேப்பமரத்தடியில் நிற்கும் இரண்டு பையன்களுக்குத் தேவையின்றிப் பயந்து, பிள்ளையார் கோவிலில் இருந்து  வந்துகொண்டிருக்கும் யாரிடமாவது வழி கேட்கும் வரை எவ்வளவு பதற்றம் உண்டாகியிருக்கும்?

எனக்கு இந்த தினத்தின் மிகப் பெரிய தவறை, நான் செய்துவிட்டது உறுதியாகி விட்டது. நான் இப்படித் திரும்பத் திரும்ப ஏதாவது எளிய தவறுகள் செய்வது அதிகமாகிவருவதை நினைத்து எனக்குக் கஷ்டமாக இருந்தது. வாகை மரத்தடியில் பிளந்து பிளந்து குவிந்து கிடக்கும் இளநீர்ப் பாதிகள் எல்லாம் யார் யாரின் முகங்களோ ஆகி, ‘ என்ன ஆச்சு? என்ன ஒருமாதிரி இருக்கீங்க?’ என்று என்னைக் கேட்பது போல இருந்தது.

‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?’ என்று தயவு செய்து  கேட்காதீர்கள்.
’என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே. வந்தம்னா...’ என்று இரண்டு  மூன்று கெட்டவார்த்தைகள் சேர்த்து, அந்த வயதான மனுஷியின் குரலில் திட்டுங்கள்.

நேற்றைய பூக்கள் உதிர்ந்துகிடக்கும் மரமல்லி மரம் ஏதாவது இந்தப் பக்கத்தில் இருக்கிறதா, தெரியவில்லை. அல்லது என்னைச் சுற்றிச் சுற்றிவந்து வட்டம் அடித்துக் கொஞ்சும் ஒரு நாயாவது .

%







Thursday 10 January 2013

அவனாகவே







அந்த முகப்புத்தகப் படத்துடன் இந்த நாளைத் துவங்கினேன். அது சிபியா வண்ணத்தில் இருந்தது. கருப்பு வெள்ளை இல்லை என்றே நினைக்கிறேன். கருப்பு வெள்ளைப் புகைப் படங்கள் தன்னிடம் ஜீவனைத் தக்கவைக்கின்றன. சிபியா படங்களில் காலம் உறைந்துவிடுகிறது. ஒரு ஆஸ்டின் கார் பக்கத்தில் அதன் பட்டணப்பிரவேசநகர்வுடன் எங்கள் அம்மாத் தாத்தா இணைந்து நடந்து வரும் படம் ஒன்று அந்த நிறத்தில் உண்டு. ஆரியங்காவு கணவாயை செங்கோட்டை பாஸஞ்சர் தாண்டும் போது, குடைவரைப் பாறையில் கசிந்து வழியும் நீரைப் போல அந்தப் படத்தில் காலம் எங்கோ சுரந்து எங்கோ வழிந்து சென்றுகொண்டு இருக்கும்.
இந்த அதிகாலைப் படத்தில், காலத்தை உணரவில்லை. கூடுதலாக இருந்த ஏதோ ஒன்று எது எனச் சொல்லமுடியவில்லை. இதை எது இப்படி எழுதவைக்கிறதோ, அது அதில் இருந்த்து. நிச்சயம் நம் ஊர் இல்லை. வேறு பூகோளம். ஆனால் கீழை நிலம். இரு புறமும் நெல் கதிர் அல்லது புல் கதிர் அசையும் வயல். அந்தச் சிறுவன் கண்மூடி வாத்தியம் இசைத்தபடி நிற்கிறான். வயோலின் வாத்தியத்தை அவன் தோளில் சாய்த்து ஏந்தியிருக்கும் விதமும் வில்லை அதில் படரவிட்டிருக்கும் நேர்த்தியும் ஒரு பிரபஞ்ச இசைஞனுக்கு உரியது. கிழக்குப் பார்த்து நிற்கிறான் போல. சூரியனுக்கு வாசிக்கிறவனாக இருக்கிறான். அவன் நெஞ்சில், முன்னுடம்பில் அங்கங்கே இளம்வெயில். அதை விடப் பேரழகு அந்த வெயிலைப் போலவே அவனை அடைந்துவிட விரும்புகிற இரு பறவைகள். புறாக்களாக இருக்க வேண்டும். அசைவின் படபடப்பில் புகைப்பட க்ளிக்கில் சிறகடிப்பு மையம் தவறிச் சிதறியிருக்கிறது. சிறகுகளை வைத்தல்ல, அலகுகளை வைத்துப் பறவையைத் தீர்மானிக்கலாம் என , வெகுசில பறவைகளை மட்டும் அறிந்த நான் நினைத்துக் கொள்கிறேன். வெகு சிலவற்றின் மூலமே வெகு பலவற்றை அடையவேண்டியதிருக்கிறது. அந்த அலகைப் பார்த்தால், புறாக்கள் என்ற சாயல். நமக்குப் பிடித்த சாயல்களைத் தான் முதலில் காண்கிறோம். சற்றுக் கழித்து அதன் அசல் சாயல் தெரியவரும்.. அதையும் தாண்டிவிட்டால், அ-சாயல். நான் முன்பு எழுதியது ஞாபகம் வருகிறது.   அ-சாயலை அடைவதற்குத்தான் ஆகிவிடுகிறது இத்தனை காலம்’.
அந்தச் சிறுவன் அணிந்திருக்கும் ‘முக்கால்இன்னும் நம் வயலோரச் சிறுவர்களை இன்னும் அடைந்துவிடவில்லை. ‘நைட்டிஎனப்படும் தளர்வாடை நீக்கமற நடத்தியிருக்கும் ஊடுருவலை இந்த ‘பெருமூடாஸ்கால் சட்டைகள் விரைவில் நிகழ்த்திவிடும். சந்தேகமே இல்லை.  வாரச் சந்தைகளில் விற்கப்படுவதற்கான இந்த வகை பழைய உடைகளை  பழந்துணி வியாபாரிகள் பெரு நகரங்களின் அடுக்குமாடிக்குடியிருப்புகளில்  சேகரித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஏற்கனவே.
நான் அந்த வயல்வெளியாக இருக்க நினைப்பது பேராசை. இருபக்கம் அசையும் கதிர்களில் ஒன்றாக, அல்லதொரு கதிர்மணியாக வேனும் இருக்க அனுமதிக்கப் படலாம். அதை விடவும் எனக்கு ஆசையுற அனுமதி உண்டெனில் அந்தப் பறவைகளில் ஒன்றாக. அந்த வயோலின் வாத்தியமாக இருக்க விழைந்து நான் பிரபஞ்ச கானத்தை அவமதிக்க விரும்பமாட்டேன். இருக்கலாம். அது என் கூடுதலான பெரு விருப்பாக்க் கூட இருக்கலாம். ஆனால், என்ன? நான் சூரியனுக்கு வாசிக்கும் அந்த மெய்மறந்த சிறுவனாக இருக்க விரும்புகிறேன்.
இக்கணம் அவனாகவே இருக்கிறேன்.
என் மீது படரும் வெயிலாக இருப்பதா, என்னை நோக்கிப் பறந்து வரும் பறவைகளாக இருப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
%