Saturday 28 April 2012

’திரும்பி வர நினைக்கிறவன் தேனருவி பார்க்க முடியுமா?’ என்று எப்போதோ ஒரு கவிதையில் எழுதி இருந்தேன்.
திரும்பி வர நினைக்காமல்தான் இந்தத் தடவை தேனருவிக்குப் புறப்பட்டேன்.
இது இரண்டாம் தடவை. முதல் தடவை போனது என்னுடைய இருபதுகளில். தோற்றுத் தோற்று ஒரு வழியாகப் பட்டம் வாங்கி வேலை கிடைக்காமல் இருந்த சமயத்தில் அது.   வெற்றி நம் ரசனையின் உடைவாட்களை உபயோகமே இல்லாமல், இடுப்புக் கச்சையில் செருகி
வைப்பதுடன் பொறுப்பு முடிந்தது என ஒதுங்கிவிட, அ-வெற்றிகள்தான் தொடர்ந்து இரண்டு பக்கங்களையும் அவ்வப்போது சாணை பிடித்துக் கொண்டே இருக்கின்றன.
என்னைக் கூர்மையாக அப்படி ஏந்திக்கொண்டே, செண்பகா தேவி அருவிக்கும், தேனருவிக்கும்,கிருஷ்ணாபுரத்துக்கும், சுத்தமல்லி மறுகாலுக்கும் கூட்டிப் போக ஒரு எல்.பாலுவோ, முருகவேள் அண்ணனோ, சக்தி கணபதியோ இருந்தார்கள்.
இந்த முறை ரவிசுப்ரமணியனும் மனோஜ் அண்ணாதுரையும் காந்தியும் அதைச் செய்தார்கள். அந்த வெற்றி தோல்வி என்ற சொற்கள் எல்லாம் தன்னுடைய ஆதி அர்த்தங்களை இழந்து, தேனருவிக்குப் போகிற வழியில் பெரிய பாறைகளாகவும் கூழாங்கற்களாகவும் நீரால் கழச்சி விளையாடப் பட்டுக் கிடந்தன.  ஒரு பச்சைப் பிள்ளையை ஒக்கலில் தூக்கிக் கொண்டு போகிற தாயாரைப் போல,  மனோஜும் காந்தியும் என்னை அந்தத் தேனருவியை நோக்கி நகர்த்திகொண்டே இருந்தார்கள்.  நம்மை அறியாமலே ஒரு பெரும் தீயின் திசையில் செலுத்தப்படுவதும் இப்படி ஆர்ப்பரிக்கும் நீரின் ஆனந்த சுதந்திரத்தின் திவலைகள் நம் புறங்கை ரோமங்களில் பாசி கோர்ப்பதும் ஒரு வகையில் ஒன்றுதான்.  ஆன்மீக உணர்வு என்பது அடர்வனங்களில் உண்டாகுமா எனத் தெரியாது எனக்கு. நான் அடர்வனங்களை அறிந்தவன் இல்லை. ஆனால், எங்கெங்கு எல்லாம்
ஒரு படுகை போல வழியெங்கும் சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றதோ, அங்கெல்லாம், சமீபத்தில் நான், கிட்டத்தட்ட அப்படியொன்றை அடைந்து கொண்டிருக்கிறேன். சருகுகளின் அருகில் எடுக்கப்பட்ட நிழற்படங்களில்
நான் அழகாக இருக்கிறேன். என் சிரிப்பில் பெருமரங்களின் ஆசீர்வதிக்கப் பட்ட பச்சையம் மினுங்குகிறது. \
நான் மற்றுமோர் சருகாக, பழுத்து, பளபளத்து உதிர்ந்து, அடையாளம் காணமுடியாத படி, அடையாளமற்று இந்தச் சருகுகளின் விரிப்பில் புகுந்து விடுவேனோ என மனோஜை விட, காந்திக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
 என்னிடமிருக்கும் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனத்தின் இழையை அவன்
முதலிலேயே உணர்ந்தவனாக இருந்ததால் தான், என்னை அவன் தன்னுடைய முழுப் பொறுப்பில் ஏற்றுக் கொண்டிருந்தான்,
‘ஸார். இன்னும் ரெண்டே ரெண்டு இடம்தான். அதைத் தாண்டிட்டோம்னா
அருவிதான்’ -  அப்படிச் சொல்வதன் மூலம் அந்தச் சருகுகளில் இருந்து பெயர்த்து என்னைப் பாறைகளின் வழவழப்புக்கு அழைக்க, ஒரு சிரிப்புடன், அவனால் முடிந்தது.  ஒரு மலை அணில் போல அவன் துறுதுறுவென்று இருந்தான். பாறைகளில் காலகட்டி அவன் தாவுகிற விதத்தில் ஒரு வனத் தனம் இருந்தது.  பயப்படாத, பயம் உண்டாக்காது மற்றவர்களை வழி நடத்துகிற ஒரு வீரம் அவனிடம் சதா ஒளிர்ந்து கொண்டிருக்கப் போய்த்தான், அவனால் எங்களது கண்ணுக்குப் புலப்படாமல், பாறைகள் மேல் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புக்களை அவனால் வாசிக்க முடிந்தது. புகைப் படங்களுக்கு அவன் போஸ் கொடுக்கிற விதமும்,  எங்களைப் படம் பிடிக்க, அவன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பாறைகளும் அசலானவை.
அவன் பாறைகளின் சினேகிதத்தையும் நீரின் காதலையும் ஏற்கனவே
சம்பாதித்து இருந்தான். அவன் புசித்து எறிந்த கனி, அவன் பல் பதிவுடன்
அருவி நீரில் உருண்டோடிக்கொண்டு இருந்தது எப்போதுமே என எனக்கு
உவப்புடன் கற்பனை செய்துகொள்ள முடிந்தது.
இரண்டாவது இடத்தைத் தாண்டிய நொடியில் அந்தப் பரவசத்தை தூரத்தில் காட்சியாக பார்க்கவும் இசையெனக் கேட்கவும் முடிந்தது,  தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகிக் கொண்டிருந்தது. செங்கதிரோன் இல்லை, தேர்க் கால் இல்லை, பரிக் கால் இல்லை. நாங்கள் நால்வர் மட்டுமே, நால்வர் மட்டுமே, இன்னும் உரக்க அல்ல, ஓர் மந்திரம் போல் மனதுள்  ஓதுவேன், நாங்கள் நால்வர் மட்டுமே.
எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் தேனருவித் தடாகம் என்னையே முதலில் அழைத்தது.  நான் செலுத்தப்பட்டவன் போல நீருண்டு நீரால்
அமைந்த நீராலான கூழாங்கற்களை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ஒரு குளிர்ந்த கண்ணாடித் தகடு போல, தடாகம் தன் பாதாதி காட்டி மலர்ந்திருந்தது.  தண்ணீருக்குள் ஊடுருவுவது என்பதும் தீயினுள் புகுவதும் முதல் கணத்தில் வேறு வேறில்லை.தீண்டும் இன்பம்தான்
அது.  பாதம், கரண்டை, முழங்கால் என என் உடலே ஒரு தண்டாகி உள்ளிறங்க, வெள்ளத்தனையது மலர் நீட்டம்.
இதே தடாகத்தில் தான் முதன் முதல் என் இருபதுகளில் நீரின்
அழைப்பைக் கேட்டேன்.  தன் ஆழங்களை எனக்குக் காட்டிவிட நினைத்த
அழைப்பு.   என்னை நீரால் நிரப்பி,  ஒரு நீர்ப் பூவென மலர்த்த முயன்ற அழைப்பு.  நான் நீரால் அன்று நிராகரிக்கப் பட்டேன்.  என் நுரையீரல்கள் ஒரு நீர் உயிரிக்கானது அல்ல. நான் தாமரைகளை பார்ப்பதற்கு மட்டும். தாமரையாவதற்கு அல்ல. கூழங்கற்கள் பொறுக்குவதற்கு மட்டும். கூழாங்கற்கள் ஆவதற்கல்ல என்ற நிராகரிப்பு அது என இந்த அறுபத்தைந்தில் புரிகிறது.
என்னைத் தடாகம் நினைவு கூர்வதை என்னால் சில்லென உணரமுடிந்தது. ஒரு கணம் தண்ணீருக்குள் கிடந்த வெவ்வேறு வடிவக் கற்களும் ஒரு வெள்ளை ஒற்றை மலராகி, தடாகம் நிரப்பி, மறு படியும் கற்களாக அமிழ்வதை நான் கண்டுகொண்டிருந்தேன். அந்த நொடியில்
எனக்குத் திறக்கப் பட்ட நீரின் வாயிலை, மனோஜோ, ரவி சுப்ரமணியமோ அறிந்தாரில்லை. காந்தியிடம் அதைப் பூரணமாக உணர்ந்ததற்கான சித்து இருந்தது. அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், ‘வாங்க ஸார். போலாம்.
நீங்க நல்லாத்தான் நீச்சல் அடிக்கிறீங்க’ - அவனுடைய சிரிப்பில் நீலம் இருந்தது. நீலம் சிந்திச் சிந்தி தடாகம் நீலமாகிக் கொண்டு இருந்தது.
நான்  சின்னச் சங்கரன் கோவிலில் கேட்ட,நீரின் இரண்டாவது அழைப்பும் இதே போல நீல நிறத்தில்தான் இருந்தது.  இரண்டு முறை சுழற்றி இழுத்து அது கரையில் தூக்கி எறிந்த போது. அதை ஏற்கனவே எதிர்பார்த்தது போல தட்டான்கள் தும்பைச் செடிகள் மேல் பறந்துகொண்டிருந்தன.  என்னை எறிந்த நீர் ஒரு வட்டப் பாறை மேல் நீலாபிஷேகம் செய்து மறுபடி ஓடும் நீரினுள் வழிந்தது,
‘என் பின்னாலேயே வாங்க’ என்ற காந்தியின் அழைப்பை நான் திடமாக
மறுத்தேன். மனோஜ் இதற்குள் தேனருவிக்கு நீந்திப் போய்க் குளிக்க ஆரம்பித்திருந்தார். காந்தி எனக்கும் அருவிக்கும் மத்தியில் நீந்தியபடி இருந்தார். எனக்கு நீச்சல் தெரியாததற்காக் முதன் முறையாக வருந்தினேன். நான் அமிழ்ந்திருக்கும் தடாகத்திற்கும் அந்த பேரருவிக்கும் இடையே நூறு அடிகள் தூரம் கூட இராது. கடக்க முடியா பாலையென
அது கண்முன் விரிந்து கிடந்தது. எத்தனை முறை முங்கினாலும் தூரம் குறையவே இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன் தெரியாத தூரம் எல்லாம் இன்று தெரிகிறது. இடது நாசிக்கும் வலது நாசிக்கும் உள்ள தூரம். பெரு விரலுக்கும் சுட்டு விரலுக்கும் உள்ள தூரம்.
என் முகத்தின் மீது எழுதப்படும் புதிய புதிய சஞ்சலங்களை ரவிக்குப் புரிய முடிந்தது. ‘அண்ணே. உங்களுக்குப் பிடிச்ச தண்டபாணி தேசிகர் பாட்டுப் படிக்கிறேண்ணே’ என்றார். நேற்றிரவு கேட்டுக் கொண்ட சமயம் பாடாத அவர், அந்த நேற்றிரவை இந்தத் தடாகத்துள் புலர விடுகிறார். என்
வலப் பக்கம், இடுப்பளவு நீரில் நின்றபடி, ஒரு பெரும் நெடும் பாறையின் படுதா பின்னிருக்க, பாடுகிறார். கும்பகோணம் , நாகேஸ்வரன் வீதி, செல்வம்
லாட்ஜ் எல்லாம் கரைந்து கரைந்து, அவரே காணாது போய், தேசிகராகி, தேனருவித் தடாகத்தில் நிறைகிறார். தடாகம் அலம்பாமல் அப்படீயே\
உறைந்து தளும்புகிறது. உச்ச இசையில், நொறுங்கிய கண்ணடிக் கோப்பை எனச் சிதறும் ரவியின் முக பாவனைகளிலிருந்து இசை பெருகிப் பெருகி
வழிகிறது.
நான் எனக்கும் அருவிக்கும் இருந்த தூரத்தை மறந்திருந்தேன். எனக்கும்
இசைக்கும் இடையே இருக்கும் தூரம் குறைந்து ஒன்றுமற்றதாகி  விட்டதை நினைத்துக் கொண்டே இருந்தேன். ரவி, தன்னிடமே எதைப் பாடுவது என்று கேட்டு, அவர் அவருக்குச் சொன்னதையே பாட ஆரம்பித்திருந்தார்.
அவர் பாடப் பாடத் தான் அந்தச் செடி அங்கு முளைத்திருக்க வேண்டும். அந்தச் செடி ஒருவேளை தன் நாலைந்து இலைகளுடன் அங்கிருந்தது எனினும், அந்த அற்புத கரு நீலப் பூ அப்போதுதான் ரவியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இதழாகத் தன்னை மலர்த்தி இருக்க வேண்டும்.
நான் எனக்களிக்கப் பட்ட பரிசாக, அந்தக் கரு நீலப் பூவையே பார்த்துக்
கொண்டிருந்தேன். அதன் அருகில் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டேன்.
அதை நான் தொடவே இல்லை. 
அது நான் காந்தியிடம் மறுத்த அந்த மூன்றாவது அழைப்பின் நீலம் என்பதை நான் அறிவேன்.





இது சித்திரை மாசம் மாதிரியே இல்லை.
ஐப்பசி, கார்த்திகை மாதிரி இருக்கிறது இரண்டு நாட்களாக.  அனேகமாக
வெயிலே இல்லை. மத்தியானம் கொஞ்சம் தூறல். தூறல் என்பதை விட
‘தூத்தல்” என்று சொன்னால் தான் மழையும் ஈரமும் அந்தச் சொல்லில்
இருந்து சொட்டுகிற மாதிரி இருக்கிறது திருநெல்வேலி உள்ளங்கைக்கு.
'எங்கேயாவது போகலாம்’ என எப்போது தோன்றிற்று எனச் சரியாய்ச் சொல்ல முடியவில்லை. இப்படிச் சரியாகச்  சொல்ல முடியாத நிறையப்
புள்ளிகள் நம்மைச் சுற்றி உதிர்ந்து கிடக்கின்றன.
ஒரு வேளை வாசல் பக்கம், பொங்கலுக்கு நான் போட்ட கரும்பும் சூரியனும் மழையில் நனைந்து கிடப்பதைப் பார்த்ததில் இருந்து. (’ நனைந்த சூரியன்’ என்று முந்தின வரியில் உதித்திருக்கிற  சொல் வெளிச்சம் இந்த வரியில் எனக்குப் பிடித்திருக்கிறது.) பச்சைக் குடத்தைத் தோளில் வைத்துக்கொண்டு, வலது கையில் மஞ்சள் குடத்தில் தண்ணீர் எடுத்துப் போகிற அந்த ராஜபாளையத்துக் கட்டிடத் தொழிலாளியின் முதுகு,  அல்லது கல்வெட்டாங்குழி அருகில் கொட்டப்பட்டிருக்கிற மாமிசக் கழிவுகளைக் குறிவைத்துத் தரையிறங்க வட்டமிடுகிற கள்ளப் பருந்துகள், இதையெல்லாம் விட இந்த ஈரமான பிற்பகலில் எவ்வி எவ்விக் கூப்பிடும் அக்காக் குருவி இவற்றில் ஏதோ ஒன்று என்னை எங்கேயாவது போகச்
சொல்லியிருக்கலாம்.
பாரதி பேரனைப் பார்க்கலாம். அவள் என் சித்தப்பா மகள். எனக்கு  ஒன்றுவிட்ட தங்கச்சி. அவளுக்குப் பேரன் பிறந்து நான்கு மாதங்கள் கூட இருக்கும்.
பொதுவாக,நான்  பிறந்த குழந்தைகளை, ‘அறைக்குள்ளேயே”  பார்க்க விரும்புவேன். பார்க்கக் கூட அல்ல. கைகளில் அப்படியே ஏந்தி எடுத்துக்
கொள்ள. ஒரு களங்கமின்மையை பௌதிகமாக ஏந்துவது என்பது ஒரு
பிறந்த் குழந்தையை இப்படித் தொப்புள் கொடி விழுவதற்கு முன் ஏந்துவது தான்.  ஒரு வெளிச்சத்தை வாங்கிக் கொள்வது போல, இசையை இரண்டு கைகளிலும் அள்ளிக் கொள்வது போல என எப்படியும் சொல்லிக் கொண்டு போகலாம். குழந்தையைக் குழந்தையாகவே வாங்கிக் கொள்ள
நிறையப் பேருக்குத் தெரியாத்தால்தான் இப்படியெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கிறது.
காப்பியைக் குடித்த கையோடு புறப்பட்டு விட்டோம். எனக்கு வெளியே
சொல்லாமல் இரண்டு தீர்மானங்கள் இருந்தன. இந்த சீண்ட்ரம் பிடித்த ஹெல்மெட்டை கையில் வைத்திருப்பது ஆனால் போடுவதில்ல. அப்புறம்
மழை வந்தால் எங்கேயும் ஒதுங்கக் கூடாது, நனைந்துகொண்டே வர
வேண்டும். காற்றை வகிர்ந்து அல்லது மழையினூடு செல்கிற வாகனம் தருகிற புத்துணர்வு தனி.
 இரண்டு கரையிருக்கிற கடலில் நுரை ஒதுங்கப் பார்த்தால் எப்படி யிருக்கும்? ஆளற்ற சேவியர் தெரு அப்படித்தான் இருந்தது பாத்திகட்டிய மாதிரி ஒதுங்கிய வேப்பம் பூக்களுடன். இந்தப் பாதையில் நான் மட்டும் நடந்து செல்கையில், நீங்கள் அல்லது யார் வந்தாலும் இந்த வேப்பம் பூக்களை அள்ளி அப்படியே கொடுத்து விடவே
எனக்குத் தோன்றுகிறது. இந்த வாழ்வின் உன்னதமான சந்தோஷமாகவும்
துக்கமாகவும் அவை மலர்ந்தும் உதிர்ந்தும் கிடக்கின்றன. அனேகமாக
எப்போதேனும், என் கனவில் கூட, ஒரு சில நட்சத்திரம் என் கையில்
உதிரும் எனில், அதன் விஞ்ஞான உண்மைகளையும் தாண்டி, அவை இப்படி எடையற்றும் வெள்ளையின் உண்மையுடனுமே இருக்கும் எனத்
திடமாக நம்புகிறேன்.
அடைக்கலாங்குருவிகள் இடம் பெயர்ந்த பிறகு, ஒரு கம்பி போன்று வால்
நுனியில் நீட்டிக் கொண்டிருக்கிற அழகிய குருவிகள் அடைவதை இந்த இரண்டு வேப்ப மரங்களிலும் தான் பார்க்கிறேன் எனச் சொல்ல நினைத்தேன். எந்தக் குருவியையும் காணோம். பறவைகளின் கடிகாரம் துல்லியமானது. அதன் வலசைத் திசைகள் மாலுமிகளுக்குக் கற்றுக் கொடுக்க வல்லது.  இன்னும் நேரம் இருக்கிறது கிளைகளுக்குத் திரும்ப என அவை அறியும். மழைகளை முன்னிட்ட விடுமுறைகள் அவற்றின் பள்ளிக்கூடங்களுக்கு இல்லை. 
பின் இருக்கையில் இருக்கிற சங்கரியம்மாவுக்கு, பொன் விழா நகருக்கு நான் போகிற வழி சரிதானா என்ற சந்தேகம்.  அவரவர் மனம் தனக்குள் அவரவர் பாதையொன்றை வைத்திருக்கிறது அல்லவா.  ’முக்குல ஒரு ஆத்துத் தண்ணீர்க் குழாய் உடைந்து தெரு பூராவும் போன தடவை வம்பாப் போயிக்கிட்டு இருந்தது ஞாபகம் இருக்கா? என்று கேட்டால் நான் என்ன சொல்ல?  ’மேடு மாதிரி ஏறி ஒரு பள்ளத்துக்குள்ளே இறங்கும் போது நான் கூட பையப் போகப் பிடாதா’ண்ணு சத்தம் போட்டேனே!
எனக்கு எதுவும் நினைவில்லை. 
ஆனால் சரியாக வீட்டுக்கு முன்னால் போய் பைக்கை நிறுத்திவிட்டேன்.
வீட்டுக்கு முன்னால் பத்தமடை பட்டுப் பாய் விரித்தது போல, வேப்பம்
பூ. வீட்டுக்குள்ளே போகவே மனசில்லை. எனக்கு மாத்திரமில்லை. சங்கரியம்மாவுக்கும்தான்.  சில எளிய அழகுகள் ஒருத்தர் பாக்கியில்லாமல் இப்படி எல்லோரையும் அப்படியே கட்டிப் போட்டு விடும்.
‘எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க’ - வீட்டுக்குள் நுழைந்தவரிடமிருந்து
குரல் வருகிறது. வண்டியை ஸ்டாண்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு உலகிலேயே தொந்தரவு பண்ணக் கூடாத மற்றவர்களின் நேரம் அவர்கள் தூங்கும் பொழுதுகள் தான்.  பழக்கத்தால், முதுமையால், நோய் காரணமாய், அயர்வு மேலிட்டு, துக்கத்தின் ஊமைவலியுடன், அடைந்த அன்றைய சந்தோஷத்தின் நிம்மதியுடன் யார் எப்படித் தூங்கினாலும் எனக்குப் பிடிக்கும். சத்யஜித் ரே, வரைந்திருந்த தூங்கும் பெண் ஒருத்தியின் கோட்டுப்படத்தை நான் இன்னும் எங்கேயோ வைத்திருக்கிறேன். நான் அப்படியொரு படத்தை வரைந்துவிட முடியும்
என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் வரைய நினைத்து வரையாதிருக்கிற நிறைய ஓவியங்களுடன் சுழன்றுகொண்டே இருக்கின்றன சில மாயக் கித்தான்கள்.
‘சத்தம் போடாம, பைய்ய வாங்க” -  பாதி சைகையும் பாதி குரலுமாக
வீட்டு வாசல் பக்கமிருந்து கை அசைகிறது.  மனிதர்கள் மனிதர்களாகவேவா எப்போதும் இருக்கிறோம்? இல்லையே. மிருகங்கள் ஆவதில், இன்று இப்படியோர் பூனைக்குட்டி ஆவதில் ஒன்றும் பழுதில்லை தான். பதுங்கிப் பதுங்கிப் போகிறோம்.
ஒரு நெகிழி நார்க் கட்டில் காலியாக் கிடக்கிறது முதலில், இடது பக்கம் அந்த முதிர்ந்த மனுஷி அயர்ந்துறங்குகிறார்( இது வரை வாழ்க்கை முழுவதும் சேலை தவிர வேறொன்றும் கட்டியிராத நம் அம்மைகளும் அத்தைகளும் ஆச்சிகளும் பைப் அடியிலோ, கழிவறையிலோ சறுக்கி விழுந்து அடிபட்டு, இப்படி முதல் முறையாக ‘நைட்டி’ எனப் படும் தேசிய, சர்வ தேசீய உடையை அணிய நேர்வதும், அதை முதல் முறையாக நாம் பார்க்க நேர்வதும் எத்தனை கஷ்டம் தெரியுமா?)
(இந்தப் பதிவை மூன்றாவது முறையாக முயல்கிறேன், நேற்றிரவில் இருந்து. மூன்று முறையும் அறிவிப்பற்ற மின்தடவை. அந்தத் ‘தும்பம்’  கூடப் பழகி விட்டது, எல்லாத் துன்பங்களும் போல. அதை விடப் பெரிய
துன்பம், இம்சை ஒவ்வொரு முறையும் நான் எழுதின கடைசிப் பத்தி, கணினியில் சேமிக்கப்படாமல், காற்றோடு போய்விடுவது. நான் நிச்சயமாக நம்புகிறேன், ஒரே ஆற்றில் இருமுறை குளிக்க முடியாது என்று. ஒரு அரசிலை அதே போலக் காற்றில் இரண்டாவது முறை அசையாது என்று. மொழி என்பது என்னுடைய மன நிலையின் உச்ச நீசங்களைப் பொறுத்தே அதன் தாழ்ச்சி உயர்ச்சிகளை அடைகிறது. அது ஒரு வகையில் நேர் விகிதம் அல்ல. தலைகீழ் விகிதம். நான் பள்ளத்தில் கிடக்கையில் என் சொல் சிகரத்தில் வட்டமிடும் ஒரு பறவையின் சிறகிலிருந்து தரை நோக்கி உதிர்கிறது.  நான் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஏற்றிவிட்டு வந்த கார்த்திகை அகல்,  ஆன் இரண்டாவது படி இறங்குவதற்குள் எந்த  வெளிச்சமுமற்றதாக என் வார்த்தையைஇருட்டில் எறிந்துவிடுகிறது. 
நான் மூன்று முறைகளாக இழந்த வரிகளை அதே உயிர்ப்புடன் மீண்டும் எந்த ஜென்மத்திலும் அடைந்துவிட முடியாது.
அந்தந்தச் சொல்லுக்கு அதனதன் பிறவி. அந்தந்த அம்புக்கு அதனதன் வேட்டை.  புதிய சோப்புக் குமிழிகளை ஊதிப்பறக்க விடாது தடுக்கின்றன
ஏற்கனவே தன் வானவில்களை உடைத்துச் சிதறிக்கொண்ட முந்திய குமிழிகள்.)
ஒரு காலை பக்கவாட்டு அறைக்குள்ளும் ஒரு காலை முன்னறையிலும் வைத்துக் கொண்டு,  மருத்துவமனைக் காத்திருப்புச் சுவரில் ‘உஷ்ஷ்’
என்று உதட்டில் விரல் வைத்து எச்சரிக்கை செய்கிற புகைப்படக் குழந்தை போல, கையை அசைத்து, ‘பைய்ய்ய பைய்ய்ய’ வரச் சொல்லிக் கொண்டிருந்தாள்.  நான் மாறவேண்டும் என நினைத்த உத்தேசப் பூனைக் குட்டி கூட,  சத்தங்கேட்காமல் பாதம் பதித்து நான் நடக்கிற ‘அழகைப்’
பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கும்.
சிறிது வெளிச்சம் அந்தக் காட்சியை உன்னதப் படுத்தியிருந்தது.
ஹ!  அவ்வளவுதான் சொல்லமுடியும்
உள்ளே கட்டிலில் தங்கச்சி கணவர் குப்புறப் படுத்திருக்கிறார்.  இந்த
வாழ்வில் கடந்த அறுபது ஆண்டுகளில் அவர் சுமந்த பாரங்களின் எந்தத்
தடயமும் இன்றி, அந்த வயதின் தளர்வுடன் இருந்தது தோளும் முதுகும்.
அதையெல்லாம் விட, அவருடைய வலது கை, ‘செண்டு போல’ க் கிடந்த
அணைப்புக்குள் அந்த நான்குமாதச் சிசு உறங்கிக் கொண்டிருந்தது.  இந்த
‘தாயும் ஆன’ நிலையை நான் வணங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றியது. இந்த அறைக்குள் பரவியிருந்த
வெளிச்சம் என் மேல் கரைந்துகொண்டே இருந்தது. இருவரில் யாராவது ஒருவர் கூட விழித்துவிடக் கூடாது என்றும் இருந்தது. ‘ரெண்டு பேர்ல
யாராவது ஒருத்தர் முழிச்சா நல்லா இருக்குமே’ என்றும் இருந்தது.
’என்ன பண்ணிக்கிட்டு இருக்கே அடுப்பாங்கரையில? இங்க் கடுவாம் பூனை
மாதிரி ரெண்டு பேர் வந்து நடமாடிக்கிட்டு இருக்கோம்  பத்து நிமிஷமா.”
ஒரு உரையாடலை எந்தப் புள்ளியில் இருந்தும், ஒரு கதையின் சரியான
முதல் வரி மாதிரி இந்தப் பெண்களால் சுலபமாகத் துவக்கிவிட முடிகிறது எப்போதுமே.
‘வாங்க வாங்க. கவனிக்கவே இல்ல”  - பாரதி சிரித்துக் கொண்டே வந்தாள். தெற்றுப் பல் சிரிப்பு. ஒரே ஒரு பல் மட்டும் வேறு கலரில் இருக்கும் பழுப்பாக.   வரிசையாக, பச்சரிசி மாதிரி இருக்கிற பலவரிசைகளை விடவும் பிரியமான சிரிப்புக்களை இதுபோன்ற தெற்றுப் பல் தங்கச்சிகளே அளிக்கிறார்கள்.
இரண்டு பெண்கள் பேச ஆரம்பிக்கிற முதல் சொல்லில், மூன்றாவது ஆண்
உடனடியாகத் தனிமைப் படுத்தப் படுகிறான்.  அவன் காணாமல் போகிறானா, அப்படி ஒரு நிலைக்கு அப்புறப் படுத்தப் பட்டுவிடுகிறானா என்று யாராலும் சொல்லவே முடியாது.  நமக்காகத்தானே டி.வி மேல் புகைப்படங்கள், சுவரில் காலண்டர்கள், ஷோகேஸில்  பொம்மைகள் எல்லாம் இருக்கின்றன. பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். இந்த ஹெல்மெட்டை வாங்கி எவ்வளவோ காலம் இருக்கும். இந்த பைக் சாவி தொங்கும் கொத்தை உபயோகிக்க ஆரம்பித்து ‘கொள்ளை நாள்’ இருக்கும். இப்போதுதான் முதல் முதலாக என்பது போல அதையெல்லாம் ’ஆராய்ச்சி’ பண்ணவேண்டும்.
முதலில் புரண்டு படுக்கிற சத்தம் கேட்டது. அப்புறம் அவரே எழுந்திருந்து வந்தார். ‘இந்தப் பய கூட விளையாடிக்கிட்டு இருந்தேன். அசந்துட்டுது” என்று சிரித்தார்.  சட்டை போடாமல் விருந்தாட்களுடன் பேசலாமா? கூடாது இல்லையா? ஒரு கையை மாட்டி, இன்னொரு கையை சட்டைக்குள் விட்ட வாறே மறுபடி வந்தார். ‘பய சிணுங்குத மாதிரி இருக்கு’ என மீண்டும் உள்ளே போனார். ‘முழிச்சிட்டாரு மைனரு’ என தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வந்தார். ‘ இந்தா பாரு இஷான்.  தாத்தா. தா...த்த்..தா’. அவன் ஏற்கனவே அழுதுகொண்டிருந்தான். என்னைப் பார்த்தால் நிச்சயம் மேற்கொண்டு அழுவான்.
பூட்டன் அழுகைச் சத்தம் அல்லவா? தூங்க முடியுமா? ஒரு அருவமான
கையால் தொட்டு எழுப்பினது போல, நைட்டியில் பச்சைப் பிள்ளை மாதிரி, நாங்கள் வந்தது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த பெரிய மனுஷி எழுந்திருக்கிறார். எங்களைப் பார்த்ததும் ஒரு வெட்கம், ஒரு சிரிப்பு. தன்னறியாமல் நைட்டியை கரண்டை வரை இழுத்துவிட்டுக் கொண்டு, எப்ப வந்திய? எல்லாரும் நல்லா இருக்கேள் ளா?’ என்ற விசாரிப்பு.
‘’ஏ. லேசா என்னத் தூக்கி உக்காத்தி வையுப்பா’ என மகனிடம். அந்தப் பக்கம் மகனிடம் அப்படிச் சொல்லிக் கொண்டே பூட்டனிடம், ‘உம்மை யாரு இங்க விருந்துக்கு அழைச்சா?  வந்திருக்கேரு. ம்ம்?’ என்று கொஞ்சல்.
என்னிடம் கொடுக்கும் போதே, ‘ஒண்ணுக்குப் போனாலும் போவான்’ என்கிறார். இது பொறுக்கவில்லை பூட்டியாளுக்கு, ‘கொடுத்து வச்சிருக்கணுமே அதுக்கு’ என்று இருந்த இடத்தில் இருந்தே ஐந்துவிரல்களையும் கூட்டி தன் உதட்டில் வைத்து ஒரு முத்தம்.  சந்ததிக் கண்ணியில் இருந்து சந்ததிகள் மாறி மாறிச் செல்கையில் மனிதர்கள் எப்படிக் கனிந்து விடுகிறார்கள். ஒரு மரத்திற்குள்ளேயே, கிளை மாறிக்
கிளை மாறி உட்காரும் ஒரு பறவை போல அவர்கள் சிறகடிக்கிற விதம் என்ன?  உலகத்தில் என்னவோ ஒன்பது ரசம், ஒன்பது பாவம் என்று சொல்வதற்குள்ளே எல்லாம், இந்தக் கணத்தில் அந்த மனுஷியின் கண்கள் இடுங்கிப் பெருகும் சொற்கள் வருமா?  ‘பிடிச்சக் கள்ளாளி’ என்றால் என்ன அர்த்தம்?    பிடித்த கயவாளியே என்பதன் திரிபெனில், முன்னதைப் போலவா பின்னது அழகு.  திரியட்டுமே. தேயட்டுமே. இப்படி ஒரு சொல், பிரியத்தின் உச்சியிலிருந்து, ஒரு நாலாம் தலைமுறை நரை முடியில் துவங்கி, இன்னும் பத்து நாட்களில் அரபு நாடுகளில் ஏதோ ஒன்றுக்கு எமிரேட்ஸ் விமானம் ஏறப் போகிற ஒரு நான்கு மாதப் பூட்டனின் தொப்புள் குழியுள் விழுமுன் ஒரு மகா நதி உருட்டின கூழாங்கல் போல் உருவிழக்கும்  எனில்,  இருக்கட்டுமே. சொல்லப் போனால், மொழி உருமாறத்தானே செய்கிறது, உருவிழக்கவில்லையே.
பாதித் தூக்கத்தில், பையன் அழுகைச் சத்தம் கேட்டு எழுந்து வந்திருப்பாள் போல அம்மைக்காரி. பேறுகாலத்தின் சோர்வும், பேற்றுக்குப் பிந்தைய ஓய்வின் ஊட்டத்துடன் கனிந்திருக்கிறது அந்த முகம். வரும் போதே, ‘வேண்டாண்டா, வேண்டாண்டா” என்று சொல்லி வருகிறவளிடம். ‘நல்லா இருக்கியாம்மா” என்று கேட்கிறோம்.  அவள் ஒரு சொட்டு மாதிரி லேசாக சிரிக்கிறாள்.
ஒரு எணபது, இரண்டு அறுபத்தைந்துகள், இரண்டு அறுபதை இப்போதுதான் நிரம்பினவர்கள், இவனைப் பெற்றிருக்கிற அந்த இருபத்தைந்து, இஷான் என்கிற இந்த நான்கு மாத நல்வரவு இத்தனை பேரும் இந்த ஒரே அறைக்குள். மிஞ்சிப் போனால் பதினாலுக்கு பன்னிரெண்டு இருக்கும். அதற்குள் இரண்டு கட்டில்கள், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு நாற்காலிகள், இரண்டு ஸ்டூல்கள் அப்புறம் இந்த அனைவரும்.
உலகம் எவ்வளவு பெரியது. அல்லது எவ்வளவு சிறியது. ஒரு வீட்டின் நான்கு சுவர்கள் சில சமயம் எவ்வளவு அழகாகி விடுகிறது இப்படிச் சிலர் உள்ளிருக்கும் போது.
நீண்ட இடைவெளிக்குப் பின், நான் நான்கு தலைமுறைகளை ஒரே இடத்தில் பார்க்கிறேன். ஒவ்வொரு முகமாக, ஒரு சுற்று வருவது போல. எல்லா முகமும் அழகாக, பேரழகாக் இருக்கின்றன.
எல்லோர் கையையும் தோளையும் பிடிக்கவும் தொடவும் ஏன் முத்தமிடவும் கூட எனக்குத் தோன்றுகிறது.
இஷானின் பாதத்தை மட்டும் தொடுகிறேன். வருடுகிறேன். முத்தம் இடுகிறேன்.  நிரம்பி விட்டது போல இருக்கிறது. அதற்கு மேல் அந்த இடத்தில் இருக்கமுடியாது, வெடித்துவிடுவேன் என்று தெரிகிறது. 
‘உடம்பைப் பார்த்துக் கிடுங்க’ என்று அந்த மனுஷியிடம் சொல்கிறேன்.
வரட்டுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை.
வாரோம் என்று பின்னால் சங்கரியம்மா சொல்வது கேட்கிறது.
‘ஜு..ஜு.ஜூ.ஜ்ஜுஜு ச்சூ’  என்று ஒரு சத்தம் . அது யாருடையது எனக்குத் தெரியும் .
ஆதிக் குழந்தையைக் கொஞ்சுகிற ஒரு ஆதித் தாயினுடையது. தகப்பனுடையது. என்னுடையது. உங்களுடையது.


Tuesday 24 April 2012

பரண் பொருள்


அந்த ட்ரங்க் பெட்டியை ரொம்பத் தேடுகிறது.
ட்ரங்க் பெட்டி என்றால் ரொம்பப் பெருசு எல்லாம் இல்லை.
கல்யாணப் பெண்ணுக்கு எல்லாம் அந்தக் காலத்தில்
வாங்கிக் கொடுப்பார்களே அந்த அளவு பெரியதில்லை.
இந்த வேப்பம் பூ வாசனை அடிக்கிற, பொசு பொசு என்று
தூறல் விழுந்திருக்கிற சித்திரை மாத செவ்வாய்க் கிழமை
இரவில், என்னைப் போல அறுபத்தைந்து, அறுபத்தாறு வயது
நடக்கிற ஒருத்தர், முக்கியமாக சீப்பிலிருந்து நரைமுடியை
விரலில் சுற்றியெடுத்துக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு
ஜன்னல் வெளியே வீசுவதற்குத் தயங்கி  நிற்கிற ஒருத்தி, 
அப்படி ஒரு பெட்டியை அவருடைய பரணிலிருந்து இறக்கி
வைக்க நினைத்துக் கொண்டிருப்பார்.
அவரவர் அம்மா வீட்டுப் பரணில் அந்த ட்ரங்க் பெட்டியும்,
சோழிகளும் தவழும் வெங்கல கிருஷ்ணரும் இருக்கும்
‘போளப் பெட்டி’யும், இன்னும் பத்திரமாக இருக்கும் என
தங்கமோ தென்றலோ இடையிடையே பார்த்துக் கொண்டு
அவர்கள் நம்புகிறார்கள்.
எனக்கும் பரண்பொருள்களின் மீதான நம்பிக்கைக்குக்
குறைவில்லை. முக்கியமாக, புகையடித்தது போல நெளிவுகள்
வரையப் பட்ட, அந்த சிமெண்ட் கலர் ட்ரங்க் பெட்டி மேல்.
அதில் தான் என்னுடைய முதல் கதை, இரண்டாம் கதை,
மூன்றாம் கதை எல்லாம் ஆண்டுக்கொன்றாக் வெளிவந்த
‘புதுமை” இதழ்கள் இருக்கின்றன. குறிஞ்சி நெடுமாறன் என
அப்போது அறியப்பட்ட, மரியாதைக்குரிய திரு.ப.நெடுமாறனின்
குறிஞ்சியில் வெளிவந்த ‘மூட்டை தூக்கி” என்ற கதை இருக்கும்.
மாலை முரசில் வெளிவந்த, ‘தீப் பிடித்த நோட்டுக்கள், கூட
இருக்கலாம். கண்ணதாசனில் வெளிவந்த ‘கங்கா”, சிவ.கல்யாண
சுந்தரம் என்ற பெயரில் நான் எழுதிய(கவிஞர் நா.காமராசனுக்குப்
பிடித்த) அந்தக் கவிதை இருக்கும். ‘கொடிமலரில் எரிமலைகள்’
என்ற கவிதையை, அந்தக் ’கடிதம்’ இதழ் வெளிவந்து எத்தனையோ
ஆண்டுகளுக்குப் பின், மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில்
வைத்து மருத்துவர். அருணகீதாயன் ஒப்பித்ததன் பிறழாத அடிகள்
 உட்பக்கம் மட்டிக் காவிக்கலர் அடிக்கப்பட்ட அந்த பெட்டிக்குள்,
வெயில் படாமல் வெளிறின முளைப்பாரி ஈர்ப்புடன் அசையலாம்.
தாமரையில் வெளிவந்த, ‘இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிறாள்’,
’பாதியில் நிற்கும் பாடல்களுக்காய்’, ’கொஞ்சம் இந்நாட்டைக் குலுக்குங்கள்’ எல்லாம் அக் பரந்தாமனின் அழகான கோலங்கள் நிறைந்த பக்கங்களில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கலாம்.
இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக, அம்மாவின் மறைவிற்குப் பின்
வீட்டை எல்லாம் ஒதுங்க வைத்த சமயத்தில்,  அந்தப் பெட்டியும்
ஒதுங்கவைக்கப் பட்டிருக்கலாம்.
தங்கராஜ் குர்த்தாவை இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டு, தங்கராஜ்
வீட்டில் தொங்குகிற ரவி வர்மா ஓவிய நகல்களைப் பின்னணியாக்கி
எடுக்கப் பட்ட நரைத்த தாடிப் படங்கள் தொலைந்து போவதில் கூடப்
பெரிய வருத்தம் இல்லை.  சபாபதி சார்வா கையோடு கூட்டிப் போய், மாரார் ஸ்டுடியோவில் என் எட்டாவது வயதில் எடுக்கப்பட்ட குடும்பப்
புகைப்படம், மாட்டுத் தொழுவத்தில் செல்லரித்துக் கிடப்பதைப் பார்க்க
நேர்ந்தவனுக்கு, அந்த ட்ரங்க் பெட்டி தொலைந்து போகாமல் பரணில்
இருக்கும் என்பதை நம்புவதில் எவ்வளவு கேள்விகள் இருக்கும்?

நன்றாகத் தெரியும் அந்தப் பெட்டியை நான் ஒருபோதும் பூட்டி வைத்ததே
இல்லை. ஒருவேளை, என்னைத் தவிர யாராவது அதில் என்ன இருக்கிறது
எனத் திறந்து பார்த்திருந்தால், அந்த அத்தனை வரிகளில் சிலவற்றை வாசித்திருந்தால், நிச்சயம் அவர்கள் அந்தப் பெட்டியைப் பூட்டி, பத்திரமாக
பரணில் வைத்திருப்பார்கள்,
ஒரு தொய்ந்த பிரம்புத் தொட்டிலோடு, ஒரு கால் உடைந்த மரக் குதிரையோடு, இரண்டு நடை வண்டிகளோடு என்னுடைய அந்த ட்ரங்க்
பெட்டியும் இருக்கும் எனில் எனக்கு சந்தோஷம்தான்.


சரியான இடத்தை அவன் தேர்ந்தெடுத்திருந்தான்.
அந்த புங்கை மர மூட்டில் இளநீர்க் குலைகளையும்
நுங்குக் குலைகளையும் போட்டுவிடலாம். சைக்கிளை,
கொஞ்சம் ‘ஒஞ்சரிச்ச கதவு’ மாதிரி நிறுத்தினால்
போயிற்று. சைக்கிள் கேரியரில்தான் பதநிப் பானை.
அதைச் சுற்றி செருகின பச்சை ஓலை.
நான் பதநீர் குடிக்கிறதே அந்த பச்சை ஓலை வாசனைக்கும்
சேர்த்துதான். அல்லது அதற்காகத்தான். கரையிலிருந்து
படகைக் கடலுக்குள் தள்ளி உள்ளே குதித்து ஏறுகிற
நேரத்தின் துல்லியமான அழகுக்குக் கொஞ்சமும் குறைந்தது
இல்லை, பச்சைப் பனை ஒலையில் ஒரு பட்டை பிடிப்பது.
லேசாக ஒரு மடக்கு. ஓரத்துக் கீற்று ஒன்றைக்கிழித்து
நுனியில் ஒரு செருகு முடிச்சு. ஒரு ஊதல் ஊதினால்,பனஞ்
சோறு பஞ்சுபோல ஒட்டிக்கிடந்தது தூரப் போகும். இதற்குள்
பட்டை நம் கைக்கு வந்திருக்கும்.  ‘ஒரு செம்பு எவ்வளவு டே”
என்று கேட்போம். ’உங்க கிட்ட துட்டு யாரு கேட்டா?’
என்ற சிரிப்போடு, ‘வலது கையை லேசா உசத்திப் பிடிங்க. சிந்தப்
போது’ என எச்சரிக்கை வரும்., பட்டையின் பச்சைக்குள்
வரி வரியாக ஏறுகிற பதநியின் மட்டத்திற்கு நம் முகம் குனியும்
போது அவன் நுங்கு சீவ அருவாளை எடுத்திருப்பான்.
இரண்டு வருஷத்திற்கு முன், இதே போல ஒரு வேன காலத்தில்
அவனைப் பார்க்கும் போது இதை விடச் சின்னப் பையனாக இருந்தான்.
பூனை முடி மீசை இப்போதைய அளவுக்குக்  கருத்துவிடவில்லை. என்னவோ வாசித்துக் கொண்டிருந்தான்.  பக்கத்தில் போய்ப் பார்த்தால், மடியில் தடியாக ராப்பிடெக்‌ஸ் புத்தகம். ஆங்கிலம் பேசுவது எப்படி? பத்தாம் கிளாஸ் படித்த கையோடு பத நீர் வியாபாரத்திற்கு வந்திருந்தான்.
சொந்தப் பனை. அப்பா இறக்கித் தர, இவன் விற்பனைக்கு.
இன்றைக்குக் காலையும் அவனைப் பார்த்தேன்.
அப்போதுதான் நுங்குக் குலைகளை ‘பனைச் செல்வம்’ மினி லாரியில்
இருந்து எடுத்து வெளியே போட்டுக்கொண்டு இருந்தான்.  என்னை பார்த்தவுடன் சிரித்தான். ‘என்ன ஸார், இந்தப் பக்கம் ஆளையே காணும். ரயில்வே கேட் ரத்னம் அண்ணன்கிட்டேயா இப்ப?’ என்று கேட்கும் போதும்
சிரிப்புத்தான். தினத்தந்தி, தினகரன் இரண்டு பேப்பர் கிடந்தன. இரண்டு
செல் போன் அடுத்தடுத்து.  ‘ ஏ. என்னடே. எல்லாம் ரெட்ட ரெட்டையா இருக்கு?’ என்று கேட்கிறேன். அவன் சிரிப்பில் பாதி எனக்கு வந்திருந்தது.
‘ஆமா. கம்பேனி பெருசாயிட்டுல்லா’ என்று முகம் பூராவும் மலர்ந்து
சொல்கிறான்.
பனை செல்வம் அவனுடைய சொந்த வண்டிதானாம். அவனே தான்
ஊரில் இருந்து எல்லாவற்றையும் ‘ஏத்தின’ பிறகு ஓட்டிக் கொண்டு
வந்தானாம். ‘எல்லாம் இன்னும் அஞ்சு வருசப் பாடு, அப்புறம் அவ்வளவுதான்” என்கிறான். சிரிப்பு இப்போது வேறு மாதிரி ஆகியிருந்தது.
சின்னப் பையன் என்று நினைத்துக் கொண்டிருந்த முகத்தில் இப்போது
வேறொரு ஜாடை வந்திருந்தது.
‘அய்யா காலம் வரைக்குந்தான் இது’ - அவன் முன்பை விடவும் என்
கண்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்திருந்தான். ‘வர வர, குடி ஜாஸ்தியாப்
போச்சு. இந்த ரேட் ல போனா, அதிக நாள் செல்லாது’ -  அம்பு எய்தது மாதிரி என் முகத்தில் குத்தி எனக்கு அப்புறம் பாய்ந்து கொண்டிருந்தது
அவனுடைய ஒவ்வொரு சொல்லும்.  ‘அப்புறம், இந்த மாதிரி மினிலாரி,
டெம்போ எதாவது ஓட்டிக்கிட்டு அலைய வேண்டியது தான். என்ன
சொல்லுதிய?” என்று என்னிடமே கேட்டான்.
நான் என்னத்தைச் சொல்ல?
வேரோடு பிடுங்கி எடுத்த செவக்காட்டுப் பனங்கிழங்கை கட்டுக் கட்டாக்
வைத்துக் கொண்டு,உழவர் சந்தைப் பக்கம் உட்கார்ந்து, போவோர் வருவோரிடம், ‘கட்டு நுப்பது ரூவா தான், வாங்கிக்கிட்டுப் போங்கையா’
எனக் கெஞ்சிக் கொண்டிருந்த வயசாளி முகம் ஞாபகம் வந்தது.
‘உனக்கு தாத்தா யாரும் இருக்காங்களோ டே?’ என்று மட்டும் சம்பந்தமே
இல்லாமல் கேட்டேன்.


Monday 23 April 2012

இந்த சமவெளியையும்...

சமவெளிக்கு வந்துவிட்டேன்.
ஏற்கனவே சமவெளியில்தானே இருக்கிறேன்.
ஐம்பதுவருஷங்களாக இருக்கிற, நடமாடுகிற, வாழ்கிற சமவெளி.
இதற்கு எல்லைகள் கிடையாதுதான். எல்லைகள் உண்டெனில்
ஒரு அடையாளத்திற்கு, 21.இ.சுடலைமாடன் கோவில் தெருவில்
இருந்து, 19. சிதம்பரம் நகர், பெருமாள்புரம் வரை என இப்போது
சொல்லிக் கொள்ளலாம். என் 16 வயதில் இருந்து இந்த 66 வரை
விரிகிற சமவெளி.
இன்னொரு வகையில் புதுமை, ஏப்ரல்.1962 முதல் உயிர் எழுத்து
மார்ச்.2012 வரை எனச் சொல்லலாம்.
சமவெளியில் மேலும் இருப்பேன். சமவெளியில்தான்  இருக்கவும்
முடியும் என்னால்.
சிகரங்களில், பள்ளத்தாக்குகளில், பீடபூமிகளில், பாலைகளில், பனிப்
பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு, அங்கிருப்பது எவ்வளவு சந்தோஷ
மானதோ, அதே அளவுக்கு இந்த சமவெளியில் இருப்பது எனக்கு
சந்தோஷமானதே.
%
இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்காக, எனக்காகவும் என்பது சரியாக இருக்கும். ஒரு வலைத்தளம்
நடத்திவந்த, வருகிற திரு.S.I. சுல்தான் அவர்களுக்கு.   விகடனில்
வெளிவந்த ‘அகம்புறம்’ தொடரால் சற்று விரிவான வாசகர்களை
அடைந்த என்னை. மேலும் அதிகமானவரிடம் கொண்டு சேர்க்க அவர்
காட்டிய ஆர்வம் என் நன்றிக்குரியது.
அப்புறம், இந்த வலைப்பூவுக்கு, ‘சமவெளி’ எனப் பெயரிட்டு, இதைத் துவங்க
எனக்கு எப்போதும் போல உடனிருக்கும் கோபாலுக்கு.
%
சொல்லவே வேண்டாம்,  இது கணபதி அண்ணனுக்கே சமர்ப்பணம். அவன்
இப்போது இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல அவன் இல்லை என்றால் நானும் என்னுடைய இந்த ஐம்பது வருடச் சமவெளியும் இல்லை என்பதும்.
இந்த ‘சமவெளி’யையும் முதலில் அவனே வாசிக்கட்டும்.