Sunday 29 March 2020

அடிக் கிளைப் பூ.











இப்போது இருக்கும் இந்த வீட்டில் மட்டும் அல்ல, எங்களுடைய பூர்வீக சுடலைமாடன் கோவில் தெரு வீட்டிலும் ஒரு மா மரமோ, தென்னை மரமோ, நெல்லி மரமோ, சப்போட்டா, கொய்யா எதுவுமே  கிடையாது.

நான்கு பங்காளிகளுக்கும் பாகப் பிரிவினை செய்வதற்கு முந்திய காலத்தில் இருந்தே , இந்தக் கதை தான். இத்தனைக்கும் இவ்வளவு சொத்தையும் பாடு பட்டுச் சம்பாதித்த மூத்த சிவசங்கரன் பிள்ளைக்குக் கிட்டத்தட்ட, கருவ நல்லூர் கிராமத்தில் முக்கால் வாசி நிலம் இருந்தது. நஞ்சை, புஞ்சை, ஏகப்பட்ட பனைகள். நான் சின்னப் பையனாக இருக்கும் போது, லாரிகளில் இருந்து மூடை மூடையாக  நெல்லை மச்சுக்கு ஏற்றியிருக்கிறார்கள். குடம் குடமாகப் பதினியும், கூப்பதினியும் வரும். தோசைக்குக் கூப்பதினி விட்டுத் தொட்டுச்  சாப்பிட்ட கடைசிப் பரம்பரை எங்களோடு முடிந்து போயிற்று. வெட்டித் தின்பார் இல்லாமல் குலை குலையாய் நுங்கு கிடக்கும். நுங்குவண்டி தள்ளி விளையாடின காலம் எல்லாம் வெறும் கதை இப்போது. தவண், பனங்
கிழங்கு எல்லாவற்றையும் விளையாட வருகிற பிள்ளைகள்  எல்லோருக்கும்
கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தது உண்டு.

பனை ஓலை மட்டையோடு வண்டி வண்டியாக வந்து இறங்கும். பச்சை ஓலை, நல்ல அகலமான கருக்கோடு இருக்கிற பச்சை மட்டை. ‘பயிர் வைக்கிறவர்கள்’  யாராவது அதற்கென்று  வந்து ஓலை வேறு மட்டை வேறு தனியாகத் தறித்துப் போடுவார்கள். பச்சை மட்டையில், அப்படிச் சாய்வாக அரிவாள் சவுக்கென்று இறங்கி, முக்கால் வாசி  வெட்டியிருப்பதைப் பிடுங்கி மறுபடி வெட்டிப் போடுவார்கள். சில சமயம் சின்ன ஓலை என்றால், இடது கையில் தூக்கிப் பிடித்து, ஒரே போடாகப் போட்டால், ஓலை ஒரு பக்கம் மட்டை ஒருபக்கம் துண்டாக விழும்.

மிளகாயப் பழத்தை எல்லாம் தட்டோட்டியில் பரத்திக் காயப் போடுவோம். அதற்குக் காவல் இருக்கும் போதுதான் ஏழெட்டு வீடுகளுக்கு அந்தப் புறம் இருந்த சாவடிப் பிள்ளை வீட்டுப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். அதன் பின் என் மேல் அமர்ந்த சாம்பல் புறாக்கள் என்னைவிட்டு அகலவே இல்லை.

மிளகு செடி மாரும், பருத்தி மாரும், எள்ளு மாரும் அந்தந்தப் பருவத்தில் தோட்டத்தில் அடைந்துவைத்திருப்பார்கள். அதிலிருந்து சூவைப் பாம்பு வெளியே வந்திருக்கிறது. எங்களுடையது தோட்டத்தை ஒட்டிய வீடு. எங்கள் வீட்டுப் பட்டாசல்  விளக்கு மாடத்தில் கன்னங்கரேர் என்று ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது  உண்டு. அது அப்படி வந்ததாகத் தான் இருக்கும். எள் விளைச்சல் நன்றாக இருந்தால், மாடசாமியோடு எண்ணெய் ஆட்டச் செக்கடிக்குப் போயிருக்கிறேன். எண்ணெய் ஆட்டி முடிக்கிற சமயத்தில் செக்கில் சதசத என்று அப்பியிருக்கிற ஈரப் பிண்ணாக்கின் ருசி, அதை  ஒரு துண்டுக் கருப்பட்டியோடு சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். செக்குச் சுத்தும் போது, ஞீ.. ஞீஈ.. என்று செக்குப் பாடின பாட்டு இன்னும் மறக்கவே இல்லை

நெல், கேப்பை, காணம், எள், பருத்தி, பிரண்டை என்று எல்லா அருமையும் தெரிந்த , விவசாயத்தை அப்படிப் பார்த்த பெரியதாத்தாவுக்குத் தன்னுடைய அவ்வளவு பெரிய வீட்டில் ஏன் இரண்டு தென்னையையோ, மா மரத்தையோ, அல்லது வீட்டு உபயோகத்திற்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்குக் காய்க்கும் ஒரு ‘பயன் மர’த்தையோ வைத்து வளர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை? அது இன்னும் ஒரு அதிசயமான கேள்விதான் எனக்கு.

தோட்டத்தில் ஒரேஒரு மிகப் பெரிய வேப்ப மரம் இருந்தது. இந்த உலகத்தில் உள்ள அத்தனை பறவைகளும் வந்து அடைந்த மரம் அது. நான் இன்று  ஒரு கிறுக்கனைப் போல் உதிர் இறகு  பொறுக்கித் திரியும் பழக்கத்தின் வேரை அந்த வேப்ப மரமே விட்டிருந்தது. எவ்வளவு அழகழகான, புள்ளிகள் இட்ட, பெரிய பெரிய இறகுகளை எல்லாம் அந்த வேப்ப மரத்தடியிலும் அதன் கீழிருந்த வைக்கோல் போரிலிருந்தும் நான் சேகரித்திருக்கிறேன். அடர் பச்சை நிறத்தில் முட்டைகள் இருக்க முடியும் என்பதை ஏழு எட்டு வயதில் ஒரு பறவைக் கூட்டிலிருந்து அறியத் தந்த கிளையை அந்த வேப்ப மரமே வைத்திருந்தது.

அந்த வைக்கோல் படப்பு, வேப்ப மரம், இன்னொரு வாதமுடக்கி மரம் மூன்றும் இல்லாவிட்டால் நான் இத்தனை சரியான மனிதனாக வளர்ந்திருக்கவே வாய்ப்பில்லை. இதை ஒரு சத்தியப் பிரமாணமாகவே நான் எழுதிவைக்கலாம்.

வீட்டில் இருக்கிறவர்கள் உபயோகிக்கும் படி இரண்டே இரண்டு முருங்கை மரங்கள் மட்டும் இருந்தன.  ஒன்று இந்த வைக்கோல் படப்புக்குப் பின்னால், கக்கூஸிற்குப் போகிற வழிக்கு முன்னால். இன்னொன்று புறவாசலில் இருந்த பெரிய உரக் குழிக்குப் பக்கத்தில். அந்த முருங்கைப் பூக்களும் கருவண்டுகளும் அணில் கொறிப்புகளும் இன்னொரு தனிக் கண்காட்சி வைப்பதற்குரிய சித்திரங்கள்.

எதைச் சொல்லவோ வந்து, எதை எதையோ சம்பந்தத்தோடும் சம்பந்தம் இல்லாமலும்  சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறேன். இந்த வரியைக் கூடப் பழக்கத்தில் எழுதிவிட்டேனே தவிர, இந்த வாழ்வில் சம்பந்தம் இல்லாதது என அப்படி ஒன்று உண்டா என்ன? எல்லாவற்றோடும், எல்லோரோடும் ஒரு சம்பந்தத்தை இந்த வாழ்வு உண்டாக்கித்தான் வைக்கிறது. வாழ்வின் காரியமே நோக்கமே கூட அதுதான்.

எனக்கும் அந்த மயிலாடுதுறை மருதசாமிக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் சம்பந்தம் உடையவராகவே நாங்கள் இருந்திருக்கிறோம். இப்போது அல்ல, மீரா அன்னம் பதிப்பகத்தின் நவகவிதை வரிசையில் என்னுடைய ‘புலரி’ தொகுப்பை வெளியிட்ட காலத்தில் இருந்தே அது தொடங்கியிருக்கிறது. அதன் இரண்டாவது பதிப்பை வெளியிடலாம் என, சந்தியா பதிப்பகம் நடராஜன் சார் தேட, என்னிடம் இல்லாத ‘புலரி’ முதல் பதிப்பின் பிரதியை ,மயிலாடுதுறை மருதசாமி அனுப்பிவைக்கிறார். 1981-82ல் பார்த்திருக்க வேண்டிய நபரை, 2019 வரை காத்திருந்து பார்க்கவைக்கிறது வாழ்வு. ஆ.சிவசுப்ரமணியம் ஐயாவுக்கும் எனக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கிற நாளில் மருதசாமியின் கனிந்த சிரிப்பையும் உறுதியான கைகளையும் நான் முதன் முதலாக அறிகிறேன்.

அந்த தினத்தில் இருந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். சந்தியா நடராஜன், அக்கலூர் ரவி, மருத சாமி எல்லோரும் மயிலாடுதுறைக் காரர்கள். என்னை எப்படியோ நடுவில் வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் பேச்சில் வந்துவிடுகிறோம். இதில் மருதசாமி தினம் தோறும்  ‘காலை வணக்கம்’ சொல்கிற செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்கிறவரானார். நான் என் அதிகாலை உற்சாகங்களுக்கு உகந்த படி, அவர் அனுப்பிய காலை வணக்கப் படங்கள் சார்ந்து அவ்வப் போது மரபில் கவிதைகள் எழுதி அனுப்பி வருகிறதாகிவிட்டது.  நண்பர் மருதசாமிக்கு நான் வண்ணதாசன் இல்லை. கல்யாண்ஜி இல்லை. ‘கவிஞர் ஐயா’.   

மருதசாமிதான் பத்து தினங்களுக்கு முன் அந்த -- மேலே பதிவிட்டிருக்கும் - பூத்திருக்கும் மாமரத்தின் படத்தை அனுப்பியிருந்தார். அது அவருடைய மயிலாடு துறை வீட்டில் இருக்கிற மா மரம். பார்த்தால் ரொம்ப வருடங்களாக நின்று பூத்துக் காய்த்தபடி நிற்கிற ஒன்றுதான்.புதிதாக ஒரு வீட்டுக்குப் போகும் சமயம், நம் வருகையை எதிர்பாராமல் உட்கார்ந்திருக்கும் அந்த வீட்டு மூத்த மனுஷியைச் சந்திப்பது போல அது இருக்கிறது.

இந்த முறைதான் அது ‘மேல் கிளைகளில்’ இவ்வளவு பூத்திருக்கிறதாம். இதற்கு முன் அந்த மரம் அதன் மேல் கிளைகளில் இப்படிப் பூத்ததே இல்லையாம். மருதசாமி அதை அப்படியே படம் எடுத்து, ‘கவிஞர் ஐயா, எங்கள் வீட்டு மாமரம் அப்படிப் பூத்திருக்கிறது. இதுவரைக்கும் இப்படி அது மேல் கிளைகளில் இவ்வளவு பூத்ததே இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று வாட்ஸாப் செய்தியாக அனுப்பிவைத்திருந்தார்.

என்னிடம்  இது வரைக்கும் அப்படி யாரும்,  ‘எங்களுடைய வீட்டுச் செடி பூத்திருக்கிறது, எங்களுடைய வீட்டு மரம் காய்த்திருக்கிறது, எங்கள் வீட்டுப் பசு ஈன்றிருக்கிறது’ என்று வாய் வார்த்தையாகக் கூடச் சொன்னதில்லை. இதை மருதசாமி மட்டுமே சொன்னார். அது ஒரு விவசாயியின் மனமாக இருக்கலாம். ஒரு தஞ்சாவூர்க் காரனின் மனமாக இருக்கலாம்.

எனக்கு அதை எல்லாம் விட இப்படித் தோன்றுகிறது. அது அப்பழுக்கில்லாத,  தன்  வாழ்வைத் தானே கண்டடைந்து  கொண்டாடும்  ஒரு மனுஷனின் மனம்.
நிச்சயம் அந்த  மாங்கன்று  மருதசாமியால் தான் நடப்பட்டிருக்கவேண்டும். அதற்கு அவர்தான் தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்க வேண்டும்.  அவருடைய மகளையோ மகனையோ, ஒரு செம்புத் தண்ணீரைக் கோதிக் கொடுத்து அந்தச் செடியின் மூட்டில் ஊற்றச் சொல்லியிருக்க வேண்டும்.ஒரு அணிலும் அவரும் சேர்ந்துதான் அதன் அடிக்கிளையில் காய்த்த மாம்பழத்தை முதலில் கடித்திருக்க வேண்டும்.

நல்லது மருதசாமி.  உங்கள்வீட்டு மா மரம் இந்த வருஷம்  மேல்கிளையில்
பூத்திருக்கிறது.  நீங்கள் எப்போதும் எல்லா வருஷமும் உங்கள் அடிக்கிளையில் பூத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இந்தப் படத்தை நீங்கள் உங்கள் கை பேசியில் எடுத்த போது, உங்களையும் நீங்கள் ஒரு ‘செல்ஃபி’ எடுத்திருக்கவேண்டும்.

நீங்களும் அந்த மா மரம் போல்தான் இருந்திருப்பீர்கள். ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது.

Thursday 12 March 2020

அக்காக் குருவி.







ஒரு கட்டத்தில் நம்முடைய காதுகள் அன்றாடங்களில் இருந்து விலகிய ஒரு குரலுக்கு, ஒரு ஒலிக்குக் காத்திருக்கின்றன. மற்றெல்லா இரைச்சலுக்கான வாசல்களையெல்லாம் அடைத்துவிட்டு, ஏதோ ஒரு அது விரும்பும், அது தவிக்கும் ஒரு ஒலி இழைக்கு, ஒலியின் கீற்றுக்கு மட்டும் காதுகள் தன்னைத் திறந்து வைத்திருகின்றன. குருத்தெலும்புகளால் ஒரு மடல் போல் புறத்தே மடிந்து விரிந்திருக்கும் அவையூடே ஒரு காத்திருப்பின் வெயில் ஊடுருவிச் சிவந்து அப்பால் போவதைப் பார்க்க முடியும். வனத்தில் எங்கோ வரும் பெரு மிருகத்தின் காலடி அதிர்வை மண்ணில் உணரும் புழுப்போல், எங்கோ சருகடியில் ஊரும் ஒரு புழுவின் அசைவை நுண்ணுணரும் ஒரு பெரு மிருகமாகக் காதுகள் காத்திருக்கின்றன.

கோபாலுடைய  காதுகள், என்னுடைய காதுகள் எல்லாம், பிப்ரவரி முடிந்து மார்ச் ஆரம்பிக்கும் போதே ‘அக்காக் குருவி’யின் குரலுக்கு ஏங்க ஆரம்பித்து விடும். முதல் அக்காக் குருவியின் குரலைக் கேட்பதற்காக, அவனும் நானும் எங்கள் வாழ்வின் அனைத்து ஓசைகளையும் அதன் சிதறிக்கிடத்தலில் இருந்து  ‘ ஒதுங்க வைக்க’ ஆரம்பித்துவிடுகிறோம்.

இன்றைக்கு ஒரு யூ ட்யூபைப் பார்க்கிறேன். எல். சுப்ரமணியன் என்ற பெயரைப் பார்த்தாலே கேட்க ஆரம்பித்துவிடும் கிறுக்கு இருக்கும் எனக்கு, அவரும் அவருடைய மகன் அம்பி சுப்ரமணியனும் பஹுதாரி ராகத்தில் வாசிக்கும் ப்ரோவ  பாரமா  ஓடுவதைத் தாண்டமுடியவில்லை. இத்தனைக்கும் எனக்கு பஹுதாரி ராகம், ப்ரோவ பாரமா இரண்டின்  திசையே  தெரியாது. அவற்றுக்கும் அப்பால் அந்த இருவரின்  வயலின்  வில் மற்றும் நரம்புகளில் இருந்து பெருகும் ஏதோ, வழியும் ஏதோ ஒன்று என்னைத் தொடுகிறது. நான் அதைத் தொட முயல்கிறேன். தழுவிக்கொள்ள முடியாதைத் தொட விரும்பும் தொடல் அது.

அக்காக் குருவிக் குரலிலும் அப்படி ஒரு மாயம் இருக்கிறது. எவ்வி எவ்வி, எக்கி எக்கி உயர்த்தும் அந்தக் குரலில் இருக்கிற ஒரு தாபம்,  ஒரு ஏக்கம் எனக்கு கோபாலுக்கு எல்லாம் வேண்டியது இருக்கிறது. அக்காக் குருவியின் முதல் கூவல் கேட்டவுடன் எங்கள் வேனில் துவங்கிவிடுகிறது. எங்கள் வசந்தம் வந்து விடுகிறது. எங்கள் தெரு வேப்பம் பூக்கள் பூத்துவிடுகின்றன.

இன்று அதிகாலை எங்கள் வீட்டுச் சன்னல் கம்பிகள் வழியாக அந்த வேனில் வந்தது. இந்த வெள்ளிக்கிழமையின் முதல் குரலை  அந்த அக்காக் குருவி தந்தது. சென்ற கோடையின் அதனுடைய கடைசிக் கூவலில் இருந்து அதன் நீட்சியாகத் துவங்கி  இந்தக் கூவலில் அது சிதம்பரம் நகர் தெருவுக்கு ஒரு புதிய கோடையை விநியோகிக்கத்தொடங்கியிருந்தது.

அந்த அக்காக் குருவித் தொன்மக் கதையில் அக்காக்காரியை  வெள்ளத்தோடு அடித்துக்கொண்டு போன ஆறு எனக்குள் ஓடத் துவங்கியிருந்தது. ‘அக்கோவ், அக்கோவ்’ என்ற இந்தச் சத்தம் என்னை ஒரு தங்கச்சியாக ஜோஸ் சார் வீட்டு மாமரக் கிளையில் உட்கார்த்திவைக்கிறது. இன்னொரு வகையில் சுழியும் கசமுமாக நுரைத்தோடும் இந்த வாழ்வில் அடித்துச் செல்லப்படும் அக்காக் குருவியாக என்னைப் பதறச் செய்கிறது.

நான் அடித்துச் செல்லப்படுகிறேன். ’அக்கோவ், அக்கோவ்’ என்கிற குரலைப் பார்த்தால் கோபாலுடையது போலவே இருக்கிறது.

அப்படித்தானே அந்தக் குரல் இருக்கவும் முடியும்.


Tuesday 3 March 2020

ஒரே ஒரு சிறிய மஞ்சள் வண்ணத்துப் பூச்சி.









மணி இப்போது என்ன?
11.06. இதற்கு  உத்தேசமாக ஒரு அரை மணி நேரம் பிந்தி, நேற்று  ‘மேலும்’ சிவசு சார் வீட்டிற்கு வந்திருந்தார்.  ’மேலும்’ சிவசு சார் தான்  முதன் முதலாக வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ தொகுப்பை வெளியிட்டவர், சுரேஷ் குமார இந்திரஜித்தின் ‘ அலையும் சிறகுகள்; தொகுப்பை வெளிட்டவர் என்று சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியும். அல்லது  இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

இது வல்லிக்கண்ணன் நூற்றாண்டு இல்லையா. அதைச் சார்ந்து என்னிடம் வல்லிக்கண்ணன் எழுதிய,ஆனால் இன்னும் தொகுக்கப் படாத கதைகள் அல்லது அதைப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் நல்லது என்று சார் நினைத்திருக்கிறார். அப்பாவின் அலமாரியில் அடுக்கடுக்காக இருந்த கிராம ஊழியன்’ இதழ்கள், அப்பாவுக்கு அவர் எழுதிய கடிதங்கள்  எல்லாம் ‘தவறிப் போன’ வருத்தத்தைச் சொல்லிக் கொண்டது தவிர, என்னால் உருப்படியாக எதையும் அவருக்குத் தர இயலவில்லை.

வந்த காரியம் இதுதான் என்று பேசி முடித்த பின் , அதற்குப் பிறகு பேச்சு வேறு எங்கெங்கு எல்லாமோ போகும் அல்லவா?  அவர் சமீபத்திய மேலும் மாதந்திரக் கூட்டத்தில்  வெளியிட்டிருக்கும் ‘பித்தனில் வாசித்த பத்து’ தொகுப்பில் இருந்து சிவசு சார் முதலில் புதுமைப்பித்தனின் பேசப்படாத கதைகளுக்குள் போனார். அதே இழையில்  வண்ணநிலவனின்  கவனிக்கப்படாத நல்ல கதைகள் என்று அவர் நினைக்கிற ‘வெளிச்சம்’, ‘ஆதி ஆகமம்’ கதைகளின் மேல் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போலப் பறந்துகொண்டு இருந்தார்.

இந்த வண்ணத்துப் பூச்சி உதாரணம் அவருக்குள்ளும் தோன்றியிருக்குமோ என்னவோ , முற்றிலும் வேறு இடத்திற்கு நகர்ந்து அவர் ‘ இந்த  வண்ணாத்திப் பூச்சி எல்லாம் பூ மேலதான் பறக்குமா? புல்லிலே எல்லாம் உக்காந்திருக்குமா?’ என்றார். இதைக் கேட்குப் போது சிவசு சாரின் முகம் ஒரு சிறுமியுடையதாகி இருந்தது. உடனே நானும் இன்னொரு சிறுமியாகும் மாயம் நிகழ்ந்தது.

நான் என்னுடைய வண்ணாத்திப் பூச்சிகளின் உலகத்திற்குள் போயிருந்தேன். ஒரு சிமிட்டலுக்குள் அறுபது வருடங்கள் பின்னால் போய் நான் தண்டவாளங்களின் அருகில் இருந்த எருக்கலஞ்செடி இலைகளின் கீழ் ஒரு கூட்டுப் புழுவாகத் தொங்கிக் கொண்டு இருந்தேன். என் எல்.ஜி பெருங்காய டப்பாவில் லார்வாக்கள்  அசுர வேகத்தில் சாப்பிட்டு, அசுர வேகத்தில் புழுக்கைகள் இட்டுக்கொண்டு இருந்தன. எனக்கு ஒரு வண்ணத்துப் பூச்சியின் கழிவு வாடையையும் முயல் குட்டிகளின் கழிவு வாடையையும் இன்றைக்கும் மிகச் சரியாக உணரவும் சொல்லவும்  முடியும். என் உலகத்தின் ஒரு தகர டப்பாவிலும், ஒரு காரை வீட்டுச் சுவர் ஓரத்திலும் இன்னும் அந்த வாடை வளைந்தும் குதித்தும் போகின்றன.

நான்  சிவசு சாரை அதிசயிக்க வைக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மேஜிக் ஷோ நடத்துகிறவன் ஆகியிருந்தேன். நான் மழைக்காலம் முடிந்தவுடன் தரையோரச் செடிகளில் பூக்கும் சின்னஞ் சிறு மஞ்சட் பூக்களைப் பற்றிச் சொல்லும் போது, எங்கள் வீட்டு முன் அறையில் கோடிக்கணக்கில் மஞ்சட் குறும் பூக்கள் பூத்திருந்தன.  சிவசு சார் அவரைச் சுற்றி வளைத்து  விட்ட மஞ்சட் பூக்களுக்குள்,  வாய்க்கால் தண்ணீரை இரண்டு கைகளாலும் அரைவட்டமாக விலக்கிவிட்டு முங்கு போடுவது போல, இருந்தார்.

என்னை அறியாமல் நான் அடுத்து மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். ‘சார் எல்லாம் சித்துப் போல இருக்கும். பெருசா இருக்காது. மிஞ்சி மிஞ்சிப் போனா பழுத்த முருங்கை இலையை விடக் கொஞ்சம் சைஸ் கூடுதல். கோடு, புள்ளி டிஸைன்  ஒண்ணுங் கிடையாது. கரைச்ச மஞ்சப் பொடியில ரெண்டு சொட்டு விட்டா எப்படி இருக்குமோ , அப்படி இருக்கும்’. வரவர என் பேச்சில் இப்போது அபிநயமும் கூடியிருந்தது. இரண்டு சொட்டுக்களை அந்தரத்தில் விடுவது போலவும், அது அப்படியே பறந்து போவது போலவும் சிவசு சார் முகத்துக்கு நேராக வலது கையால் அலையடித்தேன்.

சிவசு சார்  சொல்ல ஆரம்பித்தார்  , ‘ரெண்டு நாளைக்கு முந்தி எங்க வீட்டு வாசலில் சேரைப் போட்டு உக்காந்திருந்தேன். நீங்க சொல்லுத அதே மஞ்சள் வண்ணாத்திப் பூச்சி,  வேற புள்ளி கோடு எதுவும் கிடையாது.  முன் வாசல்ல வளர்ந்து கிடக்கிற புல்லு நுனியில் தொங்குத தண்ணியக் குடிக்கப் போகிறது போல, அப்படியே ஆடாம அசங்காம உக்காந்திருந்துது. நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். ரொம்ப நேரம் இருக்கும். எவ்வளவு நேரம்ணு சொல்லக் கூட முடியாது. அதுவும் அப்படியே  ஒட்டவச்சது மாதிரி அங்கியே இருந்தது’ . நான் யோசித்தேன்,  வண்ணத்துப் பூச்சி நாற்காலியிலும் சிவசு சார் புல் மேலும் இருந்தால் எப்படி இருக்கும்

‘நான் தட்டான் புல்லுல, தும்பைச் செடியில உக்காந்து பார்த்திருக்கேன். வண்ணாத்திப் பூச்சி    அப்படி  உக்காந்து இதுவரைக்கும் பார்த்ததில்ல சார்’

சார் காதில் நான் சொன்னது விழவே இல்லை. அவருடைய பெரிய மீசைக்கு ஊடாக ஒரு மதுரமான புன்னகை கீற்றிட இன்னும் அந்த மஞ்சள் வண்ணத்துப் பூச்சியோடே இருந்திருக்க வேண்டும். இதிலிருந்து இரண்டு கண்ணிகள் தாண்டி இன்னொரு கண்ணிக்குப் போனார்.  இன்று அப்படித் தாவிச் செல்வது அவரது சிந்தனை வகையாக இருந்தது.

‘அடுத்த கூட்டத்தில, சுரேஷ் குமாரோட ‘கடலும் வண்ணத்துப் பூச்சிகளும் பத்திப் பேசப் போறோம்’ என்று அவரைத் தவிர இன்னொருவர் பெயரைச் சொன்னார்.

‘அய்யோ. எனக்கும் சுரேஷ் குமார் கதை எல்லாம் பிடிக்கும் சார். அவருக்கு எங் கதை எல்லாம் பிடிக்காது. அதனால் என்ன? நான் அவர் கதையைப் படிச்சிட்டு உடனுக்குடனே அவர்கிட்டே சொல்லீருவேன். கடலும் வண்ணத்துப் பூச்சிகளும் புஸ்தகத்தைக் கூட சுரேஷ்தான் கையெழுத்துப் போட்டு எனக்கு அனுப்பியிருந்தாரு. எனக்குப் பிடிச்சிருந்தது. இன்னும் கொஞ்சம் பெருசா எழுதியிருக்கலாம். அவருக்கு இப்படி எழுதினாத்தான் சரியா இருக்கும்னு தோணியிருக்கும் போல’ என்றேன்.

நோபல் பரிசு உரையில் ஆரம்பித்து ஐந்து குறுநாவல் பகுதிகளாக விரிந்து செல்லும் அதன் வடிவம் பற்றி சிவசு சார் சொல்ல ஆரம்பித்தார். இதற்கு முந்தி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள், அவை புல்லில் உட்காருமா என்று சிவசு சார் கேட்டது எல்லாம் என மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது..

நான்  எனக்குள் நிறைய வைத்திருப்பவற்றுள் இருந்து ஒரே ஒரு துணுக்கை எடுத்து வீசுவது போல, ‘நான் புல்லுல உட்காருத வண்ணாத்திப் பூச்சியும் பார்த்ததில்லை. இதுவரைக்கும் கடற்கரையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சியையும் பார்த்ததில்ல’ என்று சொன்னேன். ‘பார்த்ததை எழுதுகிறதுல என்ன இருக்கு? பார்க்காததை எழுதுகிறது , அல்லது பார்க்காதையும் பார்த்த மாதிரி எழுதுகிறதும் நல்லாத் தானே இருக்கு’ மேலும் சொன்னேன். எனக்கு எதிரே சிவசு சார் முகத்திற்குப் பதிலாக சுரேஷ் குமார இந்திரஜித் முகம் சிரித்துக்கொண்டு இருந்தது.

இதை எழுதும் போது மீண்டும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளை நினைத்துக் கொள்கிறேன்.’ நூற்றாண்டுத் தனிமை’  கதையில், சவப்பெட்டி செய்வதற்கு அளவு எடுக்கிற அந்தத் தச்சாசாரி ஜன்னல் வழியாக , ஒரு வினோத மழை போல உதிர்கிற மஞ்சள்பூக்களைப் பார்க்கிறார். மறு நாள் காலை தெருவெல்லாம் மஞ்சள் பூ மெத்தை இட்டது போல் கிடக்கிறது. இறுதி ஊர்வலம் போவதற்கு முன் , பனிக்கட்டியை அப்புறப் படுத்துவது போல் பெரிய பெரிய வாரிக் கரண்டிகளால்  அதை அள்ளிப் போட வேண்டியது ஆகிறது.

உண்மையோ , ஒரு கலைஞனுக்கு மகத்துவம் சேர்ப்பதற்கான கற்பனையோ. நூற்றாண்டுத் தனிமையை எழுதிய  மார்க்வெஸின் சாம்பல் புதைக்கப் பட்ட போது அவர் வளர்ந்த கொலம்பிய கிராமத்தின் மரங்களில் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய மஞ்சள் பட்டாம் பூச்சிகள் மொய்த்துக்கொண்டு இருந்ததாம்.

இந்த 19 சிதம்பரம் நகர் வீட்டில் நாங்கள் வைத்து வளர்த்த ஒரு வேப்ப மரம், ஒரு பெருங்கொன்றை மரம், ஒரு புங்கை மரம், இன்னும் தயக்கமாகவே பூத்துக்கொண்டு இருக்கும் ஒரு மர மல்லிகை மரம் இவ்வளவுதான் உண்டு. இந்த மரங்களின் ஏதோ ஒரு கிளையில், பெரிய பெரிய மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் அல்ல, நூற்றுக் கணக்கில் அல்ல, ஒரே ஒரு சின்னஞ் சிறிய, பழுத்த முருங்கையிலையை விடச் சற்றே பெரிதாக இருக்கிற ,மஞ்சள் நிற  வண்ணத்துப் பூச்சி  உட்கார்ந்தால் போதும்.

என்னுடைய நாளுக்கு அது சரியாக இருக்கும்.

%



Monday 2 March 2020

பின்னிரவில் திறந்திருக்கும் ஜன்னல்கள்.




இரண்டு மூன்று இரவுகள் மிகவும் பிந்தித்தான் படுக்கைக்குச் செல்கிறேன். அறையின் ஜன்னல் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

இந்தப் பகுதிக்கான இரவுக் காவல்காரரின்  இரண்டாவது  சைக்கிள் சுற்றின்  அழுத்தமான ஊதல் சத்தத்தில் அனேகமாகச் சிதம்பரம் நகர் மரங்களின்  அனைத்து இலைகளும் அதிர்ந்து அடங்கியும் விடுகின்றன. சமீபத்தில் அவர் வர்ணித்த நெடும் பாம்பு எப்படி அவருடைய அந்தப் பிருபிருவென்ற கடுமையான  சத்தத்திலும் சுருண்டு தெருவிளக்குக்கும் எங்கள் வீட்டு வாசலுக்கும் நடுவில் கிடந்தது என்று தெரியவில்லை.  சைக்கிளின் பின்னால் செருகியிருந்த லாட்டியை - அவர் அப்படித்தான் சொன்னார் - உருவுவதற்குள் அது போய்விட்டதாகக் காட்டிய  செடிகளின் திசையில், அவர் சொல்லி முடித்த  இரண்டு நாட்களுக்குப் பின்னும், எனக்கு ஒரு அவசரமாக மறையும் வால் நுனி தெரியத்தான் செய்தது.

நான் நிசி தாண்டிய பிறகு,  பின் வீட்டு மாமரக் கிளையில் இடம் பெயரும் ஒரு பறவைக்காகக் காத்திருப்பதுண்டு. வேனல் காலங்களின் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு சாமத்தின் பொழுதில் ஒரு குளிர்ந்த காற்றுப் பரவ ஆரம்பிக்கும். எனக்கு அந்த நேரம் முக்கியம். அப்போதுதான் பெருமாள் புரம் காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும்/இருந்த இரண்டு  மரங்களின் உச்சியில் ஒரு ஆரஞ்சுத் தகடு வேய்ந்தது போல பூத்திருக்கும் வாதமடக்கி மலர்களின் வாசம்  இந்த  ஜன்னல் வரை வந்து என்னை அடையும். அதற்கு எவ்வளவு தூரம் வரையும் வந்துவிடத் தெரிந்திருந்தது.

வாதமடக்கிப் பூ வாசனை வந்துவிட்டால் வேனல் காலம் வந்துவிட்டதாகவே அர்த்தம்.  செவ்வாய் வெள்ளிகளில் சின்ன வயதில் அம்மாச்சிகள் சொன்ன கதைகளில் வரும் சிறு தெய்வங்கள் நடமாட்டம் போலத்தான் அந்த வாசனை.  எங்கிருந்து எங்கே வேண்டுமானாலும் அடிக்கும். முன்னதன் தலைப்பாகை கட்டிச் சுருட்டுப் பிடிக்கும்  நடமாட்டம் தெரியாவிட்டாலும்  சற்றுப் புளிப்பான, அந்த ஆரஞ்சு நிற வாதமடக்கிப் பூ வாசனை உலவித் திரிவதை என்னால் உணர முடிந்தவனாய் இருக்கிறேன்.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் சுடலைமாடன் கோவில் தெரு வீட்டு மாட்டுத் தொழுவுக்கும் வென்னீர் அறைக்கும் அடுத்து ஒரு பெரிய வாதமடக்கி மரம் இருந்தது. மிக மூத்த மரம். தன்  வாழ்வின் அத்தனை வெயிலையும் மழையையும் பார்த்துவிட்ட நிறைவில், இனிப் பார்க்க எதுவும் இல்லை என்ற பூரணத்தில் கொல்லம் ஓடு வேய்ந்த புறவாசல் பகுதி ஒன்றின் மேல் சாய்ந்து கிடப்பது.

என்னுடைய  ஏழு முதல் பதினோரு வயதின் பக்கங்கள் எல்லாம் அந்தக் கொல்லம் ஓடுகள் மேலும் வாதமடக்கிக் கிளைகளிலும் தான் எழுதப் பட்டிருந்தன. நான் அந்த ஓடுகளில் ஒன்றிரண்டை நொறுக்கியபடி, அந்த வாதமடக்கிப் பூக்களின் வாசத்தை நுரையீரலில் நிரப்பியவனாக  அதனுடைய  நிழல் என் மேல் அசையும் படி கிடப்பேன். நான் சாப்பிட இறங்கி வந்து தட்டின் முன்னால் உட்கார்ந்திருக்கும் போது கூட, வெயிலும் நிழலுமாக என் மேல் அந்த இலைகள் அசைவது போல இருக்கும். அந்த அசையும் நிழலையே முதல் கவளமாக நான் உண்டிருக்கிறேன்.

அது கொத்துக் கொத்தாகப் பூக்கிற வகை. (அதன் மொக்கு ஒரு சிறுவனுடைய இளம் குறி போல இருப்பதாகப் பின்னால் தோன்றியிருக்கிறது. ).நான் அந்தப் பூவைப் பறித்து அதன் புளிப்புச் சுவைக்காக  அவ்வப்போது தின்றுகொள்வேன். யாரும் இல்லாத நேரத்தில் அந்த வயதிலேயே, தொழுப் பக்கத்தில் நின்று, புறவாசல் பைப் அடியில் இருந்து, லீலாச் சின்னம்மை வீட்டுக்கும் குச்சுவீட்டுக்கும் பக்கத்தில் ஒரு ஆட்டுரல் கிடக்கும், அதிலிருந்து எல்லாம் அந்த வாதமடக்கி மரம் பூத்துக்கிடப்பதைப் பார்ப்பேன். நான் பயிரிட்ட நிலம் விளைந்துகிடப்பதைப் பார்ப்பது போல என்ற உதாரணத்தை இந்த வயதில் சொல்ல வருகிறது. அப்போது அதெல்லாம் தெரியாது. ஆனால் அப்படிப் பார்ப்பது பிடித்திருந்தது.

அதற்கப்புறம் காய்ப்புக் காலம் வரும். பெரிய அவரைக்காய் போல, புடைத்துத் தெரிகிற விதைகளோடு  பட்டை பட்டையாய் எல்லாக் கிளைகளிலும் தொங்கும்.  எங்கிருந்து இவ்வளவு கிளி வருமோ தெரியாது. வாதமடக்கி மரத்தில் கிளி மொய்த்துக்கொண்டு இருக்கும். கன்றுக்குட்டிச் சத்தம் எல்லாம் கூடச் சிறிதாக அடங்கி,  ஒரே கிளிச் சத்தமாக இருக்கும். கொல்லம் ஓட்டின் மேல் சாய்ந்து கிடக்கும் கிளைகளில் தலைகீழாக  கிளி ஒவ்வொரு காயாகக் கொத்திக் கொண்டே அடுத்த கிளைக்குத் தவ்வும். இரண்டு பறந்து போனால் இரண்டு வந்து உட்காரும். பந்தைக் கைமாற்றிக் கைமாறிக் கூடைப் பந்து ஆடுவது போல ஒரு கிளி பறக்கும் போது எறிந்த கிளிச் சத்தத்தை இன்னொரு கிளி அப்படியே அந்தரத்தில் கவ்வி வாங்கியபடி வாதமடக்கிக் கிளையில் வந்து உட்காரும்.

அப்படி ஒரு கிளிச் சத்தம் கேட்கும் என்றுதான், அப்படி ஒரு வாதமடக்கிப் பூவாசம் அடிக்கும் என்றுதான் ஒருவேளை , என்னை அறியாமலே ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தபடி இருக்கிறேனோ என்னவோ.  எல்லா வீடுகளிலும் எங்களைப் போலவே மகன் மகள்கள் எல்லாம் வெளியூரில் இருக்க, இரண்டே இரண்டு பேர் இப்படி பின்னிரவுகளில்  விழித்திருக்கும் ஒருவருடன் இருக்கிறார்கள். ஒன்று மாற்றி ஒரு வீட்டிலாவது ஒரு அறையில்  விளக்கு அணைக்கப் படாமல் வெளிச்சம் தெரிகிறது.

ஒரு முதிய பெண் எல்லோர் வீட்டுப் படுக்கையிலும் அயர்ந்து படுத்துக் கிடக்கிறாள். அவர் இதுவரை வாழ்ந்த வாழ்வின் அத்தனை காலத்தின் வெளிச்சமும்  ஒரு கை விளக்குப் போல அவர்களின் மேல் விழுந்திருக்கிறது. பச்சைப் பிள்ளையாகிவிட்டது போல, எலும்புகளை அழுத்தாத படுக்கை விரிப்புகளை அவர்களின் பழைய சேலைகளில் இருந்து அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களை அந்தத் தோற்றத்தில் கும்பிட மட்டுமே தோன்றும்.  கும்பிடக் கூட முடியாது. விதை நெல் இருந்த ஒரு தானியக் குதிரின் முன் அமைதியாக நிற்பது போல நிற்கலாம். நான் இப்போது அப்படித்தான் நிற்கிறேன்.

இப்போது கிளிச் சத்தம் எல்லாம் கேட்க வேண்டாம். திறந்து வைத்திருக்கும் ஜன்னல் வழியாக, அந்த வாதமடக்கிப் பூ வாசனை நிரம்பிய குளிர்ந்த காற்றுக் கொஞ்சம் போல வந்தால் போதும். மழைத் தண்ணீர் தரையில் பெருகிக் கொண்டே நகர்ந்து வருவது போல, அந்தக் காற்றுக்குத் வரத் தெரியாமலா போகும் ?  வரும். நான் நிற்கிற இடம் வரை வந்து, சத்தம் காட்டாமல் , உறங்கும் அந்த முகத்தின் மேல் பெருகும்.

தொட்டில் குழந்தையின் முகத்தில் வரும் நரிவிரட்டும் அற்புதச்  சிரிப்பு, தூக்கத்தில்புரண்டு படுக்கும் ஒரு எழுபது வயது மனுஷியின் முகத்தில் வரும் எனில் அது எவ்வளவு கனிவாக இருக்கும்.!





Sunday 1 March 2020

கொண்டாட்டத்தின் முதல் ஆளாக...














சுகா என்றால்  தான் எல்லோருக்கும் தெரியுமே. அவருடைய முன்னெடுப்பில் ஒரு கூட்டம். திருநெல்வேலி வட்டாரச் சொற்களைச் சேகரிப்பது குறித்து ஒரு பத்துப் பேர் பூர்வாங்கமாக உட்கார்ந்து பேசினோம். உதய சங்கர் எனது இடது பக்கத்து நாற்காலியில் இருந்தார்.

உதய சங்கரின் எழுத்துகளை எனக்குப் பிடிக்கும். என்னைப் பொருத்தவரை, த.மு.எ.க.ச அமைப்பின் இப்போதைய மிக நல்ல புனை கதை எழுத்தாளர் அடையாளம் அவர்தான்.  வழக்கமாக ‘இப்போ என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க சங்கர்? என்று கேட்பேன். வாசலில் ஏறி அறைக்குள் வருவதற்கு நடையேறும் வரை புகைத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். அவரிடம் இருந்த சிகரெட் வாடை பிடித்திருந்தது.  அந்தக் கிறக்கத்தில் இருந்ததால் பேச்சுக் கொடுக்கவில்லை. அவரும் சும்மா இல்லை. ஒரு சீப்பை எடுத்து பஸ் பயணத்தில் கலைந்திருந்த சிகையை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார். சீராகப் படிந்திருக்கிறதா எல்லோரும் விரல்களால் நீவிப் பார்த்துக் கொள்வோம் தானே.

அது முடிந்ததும் , மடியில் வைத்திருந்த  - இல்லை, அது நாற்காலிக் கால் பக்கம் தரையில் இருந்தது -- தோள்ப் பையிலிருந்து  அவருடைய சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான  ‘துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’  புத்தகப் பிரதி ஒன்றை எடுத்து சுகாவிடம் கொடுத்தார். இன்னொன்று நாறும் பூ நாதனுக்கு என நினைக்கிறேன்.  மூன்றாவது பிரதியை என்னிடம் கொடுத்தார். மூன்றுதான் கொண்டுவந்ததாகச் சொன்னார்.  அதைத் தவிர இன்னொரு மிக அழகான புத்தகத்தைக் காட்டினார். கே.கணேஷ்ராம்  மொழிபெயர்த்திருக்கும்  ’காஃப்காவின் நுண்மொழிகள்’.  அதுவும் நூல் வனம் வெளியீடுதான். இவ்வளவு அழகான வடிவமைப்பில், கட்டுமானத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப்  புத்தகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சொல்லப் போனால், திருப்பிக் கொடுக்கவே மனசில்லை/.

‘எல்லாம் இப்போ எழுதினதா சங்கர்?’ என்று கேட்டேன். ‘ஆமா, அண்ணாச்சி. இது போக அஞ்சாறு இன்னம்  இருக்கு. அதை எல்லாம் திருத்தி எழுதணும்’ என்றார். ஏற்கனவே  பத்திரிக்கைகளில் வெளிவந்தது, இன்னும் வராதது எல்லாம் நிரந்து இருக்கிற தொகுப்பு என்று தெரிந்தது. நான் சங்கரிடம் சொன்னேன், ‘நானும் ஒரு ஒண்ணரை வருஷமா கதைண்ணு எதுவும் எழுதவே இல்லை. ஒருவேளை  இதிலே இருக்கிற உங்க கதையை எல்லாம் படிச்சால் ஏதாவது தோணுமே என்னமோ/’ என்றேன். உண்மையாகவே, அப்படி ஏதாவது ஒருத்தருடைய ஒரு கதை, அதிலிருக்கிற ஒரு வரி வந்து கதவைத் திறந்துவிட்டுவிடாதா என்று எனக்கு ஆசைதான்.

ஷோபா சக்தியின்  ’இச்சா’  வாசிப்பில் இருந்தது. 203, 204 பக்கங்கள் வந்திருந்தேன். வீட்டுக்கு வந்ததும் உதய சங்கர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் என்னை மாதிரி ஆள் இல்லை. இரட்டைக் கோடு போட்ட நோட்டில் எழுதமாட்டார்,  கோடு போட்டது போடாதது எல்லாவற்றிலும் எழுதுகிறவர். புதிது புதிதாகச் சோதனை பண்ணிக் கொண்டே இருப்பார். ‘துண்டிக்கப்பட்ட தலையில் தொகுப்பிலும் முதல் ஐந்து கதைகள் அப்படித்தான் இருந்தன.கொஞ்சம் திகட்டி விடுமோ என்று கூட. அப்படி எல்லாம் இல்லை என்று,   ஆறாவதாக ’அப்பாவின் கைத்தடி’   என்று ஒரு கதை வருகிறது.  அதன் கடைசி நான்கைந்து வரிகளையும், ’அப்படியே உறங்கிவிட்டாள் ஈசுவரி அக்கா’ என்று முடிகிற   வரியையும்  படித்த பிறகு  எப்படியோ ஆகிவிட்டது. அந்தக் காலம் என்றால், பஸ் பிடித்து உதய சங்கரைப் பார்க்கக் கோவில் பட்டி கூடப் போயிருப்பேன்.

அடுத்து வந்த ’கானல்’, ‘நொண்டிநகரம்’, ‘மரப்பாச்சிகளின் நிலவறை, கிருஷ்ணனின் அம்மா’  எல்லாம் ஒன்றை விட ஒன்று கூடுதலாகப் போய்க் கொண்டே போய் இன்னொரு உச்சமாக  ‘அன்னக்கொடி’.   கதை ஒருமாதிரி இப்படித்தான் முடியும் என்று தெரிகிறது, ஆனால் அந்த ‘இப்படித்தான் முடியும்’முக்கு முன்னால் அது எழுதப்பட்டிருக்கும் விதம்?.  கருப்பையாவின் வனத்தோடு  நேற்றிரவு வாசிப்பை முடித்துக்கொண்டேன்.

இன்றைக்கு ‘முதல் ஜோலியாக’ மீதி யிருந்த எட்டுக் கதைகளையும் வாசிக்க ஆரம்பித்தாயிற்று. பதிநான்காவது கதையான  ’அறை எண் 24 -மாயா மேன்சன்’  படித்ததும் மீண்டும் அந்த ‘அப்பாவின் கைத்தடி’   இடத்திற்கு மனம் போய்விட்டது. யாரிடமாவது இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றி, நாறும் பூ நாதனுக்கு, உதய சங்கருக்கு, கடலூர் சுவாமி நாதனுக்கு எல்லாம் வாட்ஸாப்பில் கிறுக்குப் பிடித்த மாதிரி எதையோ அனுப்புகிறேன். மேலே இருக்கிற படம் கூட, மாயா மேன்ஷன் படித்தவுடன்  நானே என்னை எடுத்துக்கொண்டது தான். அதில் என் கண்கள் கொஞ்சம் மினுங்குவது மாதிரி இருக்கின்றன என்றால் அந்த மினுக்கத்தின் மாயம் உதயசங்கர்  கதைகள் உண்டாக்கியது.

எல்லோரும் தான் புத்தர் கதை எழுதிப்பார்க்கிறார்கள்.  ‘முதல் காட்சி’  அப்படி ஒரு கபிலவஸ்து, கௌதமன், யசோதா  கதையே. அது எழுதப்பட்டிருக்கும் விதம் ,தடாகம் பற்றி வரும் அந்த நீண்ட பத்தி,தேரோட்டி சன்னா  திறந்து வைக்கிற அந்த முதல் காட்சி.!  ஒரே மாதத்தில் இருபது கதைகள் எழுதினதாக உதயசங்கர் என்னிடம் நேற்றுச் சொன்னார். அதற்கு ‘ நீங்களும் அப்படி எழுதுவீங்க அண்ணாச்சி’ என்று  உற்சாகப்படுத்துகிற அர்த்தம்.  சாமி வந்து தான் வரிசையாக இப்படி எழுதியிருக்க வேண்டும்.

 ’புற்று’, ’’துண்டிக்கப்பட்ட தலையில் சூடியரோஜா மலர்’  ஒரு வகைச் சோதனை எனில், ’அந்தர அறை’, ‘நீலிச் சுனை’  இன்னொரு வகைச் சோதனை. எதுவும் வெற்றுச் சோதனை இல்லை. ஒன்றுமே இல்லாத நடைத் திருகலை வைத்து அந்தரத்தில் நடத்தும் பாவலா கிடையாது.  எல்லாம்  தரையோடு தரையாக, மனிதரோடு மனிதராக, வாழ்வோடு வாழ்வாக, அதனதன் அசலோடும்  புதிரோடும்  புனையப்பட்டவை. இந்த வாழ்வை விடச் சோதனை இருக்கிறதா என்ன?

’துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’  என்ற இந்த சிறுகதைத் தொகுப்புக்காக. , உதய சங்கர்  என்ற  கலைஞன்  கொண்டாடப்பட  வேண்டியவன்.  நான் அந்தக் கொண்டாட்டத்தை முதல் ஆளாகத் துவங்கி வைக்கிறேன்.

சொல்ல முடியாது, இதே கையோடு நான் மறுபடியும் கதை எழுத மாட்டேனா என்ன?