Friday 31 August 2012

முதற்றே உலகு.







இப்போதெல்லாம் கனவுகள் அதிகம் வருவதில்லை.
நனவுகள் இப்படித்தான் இருக்கும் என கிட்டத்தட்ட யூகித்து விட முடியும் தினங்களில், கனவுகள் தன் கண்ணாம்பூச்சி விளையாட்டை நிறுத்திவிடும் போல.

சமீபத்தில், ஆகஸ்ட் 22 இரவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்தக் கனவு வந்தது. அதுதான் முன்பு அடிக்கடி வருகிற யானைக் கனவு. இந்த முறை, வழக்கமாகச் செய்கிறது போல அது விரட்டி விரட்டித் துரத்தவெல்லாம் இல்லை.  சாதுவாக நின்றது. எனக்கு அறுபத்து ஏழு வயதாகும் போது, என் கனவு யானைக்கும் ஒப்பீட்டு அளவில் அதே வயது ஆகியிருக்கும் தானே.
ஆனால் அது முன்னிலும் அழகடைந்திருந்தது. வயதின் முதிர்வு அல்ல வயதின் கனிவு ஒரு அழகைத் தரும் என்றுதான் தோன்றுகிறது.  எங்கள் அப்பாவைப் பார்க்கையில், முன் எப்போதையும் விட அழகாகி இருப்பதை உணர்கிறேன்.  காம்பு பழுக்கையில் கனியழகு தனிதான்.

அழகு மட்டும் அல்ல, அந்த யானையின் உருவமும் அதிகரித்து இருந்தது.
சுடலைமாடன் கோவில் தெரு நடுவீட்டு வாசலில் நடைப்பக்கம் நிற்கிற அதன் உயரம் மச்சு ஜன்னல் வரை இருந்தது. இந்த ‘அகவெளி’ கார்த்திகேயன் வரைந்த யானையைப் பார்க்கையில் எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. ஒருத்தர் கனவில் வருகிற யானையை எல்லாம் இன்னொருத்தரும் பார்க்க முடியும் போலும்.  முட்டுக்காட்டிலிருந்து பைய நடந்து ஒரே ராத்திரியில் பெருமாள்புரத்திற்கு இடம்பெயர்ந்துவிடும் நெடு வனம் ஒன்று கனவுத் தொடர்ச்சி மலைகளில் இருக்கக் கூடும்.  பிறந்த நாளன்றைக்கு வந்ததுதான் வந்தது, தும்பிக்கையை என் சிரசின் மேல் வைத்து ஆசியளித்திருக்கலாம்.  எனக்குத் தும்பிக்கைச் சுருக்கங்களும் அதன் செவ்வெள்ளைச் சுட்டியும், பயத்துடன் பிடிக்கும் என்பதை அந்த
யானை அறியுமே ரொம்ப காலமாக.

நேற்றுக் கண்ட கனவில் யானை வரவில்லை. அது அதிகாலைக் கனவும் அல்ல. முன்னிரவுக் கனவு. இளைய ராஜாவின் ‘யாருக்கு யார் எழுதுவது’, தங்கராஜ் தந்ததை வாசித்துக் கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் வைத்யா குறுந்தகடும் அவனுடையதுதான்.  என்னையறியாமல் தூங்கியிருக்க வேண்டும்.  படித்துக் கொண்டிருக்கும் போதே ‘இசையில் துவங்குதம்மா” என்ற அஜய் சக்ரவர்த்தி பாடலை,   வேறெங்கிருந்தோ ஒரு
அருவி வழிவது போலத் திரும்பத் திரும்பக் கேட்கமுயன்றுகொண்டே இருந்ததும்,அந்த வித்தியாசமான குரலில் பாடலின் முதல் இரு வரிகள் மட்டும் சுழன்று சுழன்று கல் தூண்களில் சிற்பம் செதுக்கிக் காணாமல் போனதுமாக இருந்தது.

மறுபடியும் அந்தக் கனவின் நிகழிடம் 21.இ. சுடலைமாடன் கோவில் தெரு வீட்டு மாடிதான். நான் வழக்கமான என்னுடைய இடத்தில் இடது ஓரச் சன்னல் பக்கம் படுத்திருக்கிறேன். இருட்டாக இருக்கிறது.  ராத்திரி இருட்டு அல்ல. சரஸ்வதி பூஜையை ஒட்டி, தீபாவளியை ஒட்டி எல்லாம், மழை கொட்டு கொட்டு என்று கொட்டுவதற்கு முன் வாசல் முழுவதும் தட்டுப்பந்தல் போட்டது மாதிரி இருட்டுமே அந்த ஐப்பசி கார்த்திகை அடைமழை இருட்டு. யாரோ வருகிற சப்தம்.  வருவது பெரிய ஆளாகத் தெரியவில்லை. சின்னக் குழந்தையுடைய வருகையில் தளம் பூப்போல அதிருமே அப்படி. ஊஞ்சல் சங்கிலி குலுங்கியதா என ஞாபகம் இல்லை. இதை எழுதும் போது ஊஞ்சல் பலகையைக் கனவில் உந்தி அசைத்து ஆடவிடுகிறேன்.  கனவில் ஆடாத ஊஞ்சலை இப்படி இரு தினங்களுக்குப் பின்னால், வெறும் நுனிவிரல்களால் ஆட்டிவிடுவது கூட இன்னொரு கனவு போலத்தான் இருக்கிறது. எங்கேயோ பறந்த கிளிகளை, எந்தக் கோவிலின்
பிரஹாரத்திலோ பறக்கவிடாமலா இருக்கிறோம்?  அய்யப்ப மாதவன் எந்த நூற்றாண்டுச்  சீனச் சித்திர மூங்கில் இலையிலோ இன்றும் நேற்றும் கவிதையெழுதாமலா இருக்கிறார்?  அந்த ஊஞ்சலை அசைக்க கனவின் அனுமதி உண்டு. கனவே, அப்படி அந்தரத்தில் அசையும் ஒரு ஆளற்ற ஊஞ்சல்தான்.

நான் வருவது யாரென யூகிக்கும் பதற்றத்தில் எழுந்து உட்கார்கிறேன்.
‘கல்யாணித் தாத்தா” என்ற குரல் ஒரு மின்னல் போலக் கீறிக்கொண்டு அந்த இருட்டில் கேட்கிறது. குரலோடு குரலாக, அந்தக் குரலைச் சுளையாக அதிலிருந்துதான் உரித்து எடுத்தது போல ஒரு சிரிப்பு.  அடுக்கடுக்கான சிரிப்பு. சின்னஞ்சிறு பெண்குழந்தையின் சிரிப்பு. அப்படிச் சிரிப்பையெல்லாம் தொலைக்காட்சி நெடுந்தொடரில் வருகிற குழந்தைகள் மட்டுமே சிரிக்கும்.
திரும்பத் திரும்ப சிரிப்பு. மறுபடி மறுபடி,’கல்யாணித் தாத்தா’. மூன்று வயது கூட இராத முளையானுக்குப் பாவாடை.  ‘யாரு கூட வந்தே நீ?’ என்கிறேன். ‘எங்க அப்பாவும் நானும் வந்தோம். இங்கே தான் இருந்தோம்’ என்று ஓடிப் போய் அது நிற்கிற இடம், நாங்கள் எப்போதும் புழங்குகிற, நான் படிக்கிற, எழுதுகிற, வரைகிற முன் கூடம் முடிந்து (அதை எங்கள் அம்மா ‘புல் பங்களா’ என்பாள்) மச்சுப்படி இறங்குகிறதற்கு நடுவில் உள்ள
பாத்தி போன்ற இடம். அதில் யாரோ இதுவரை படுத்திருந்தது போல ஒரு கசங்கல் துணியும் பழந்தலையணை ஒன்றும் கிடக்கிறது.  இப்போதும்  அந்தக் குழந்தை  சிரிக்கிறது. ‘கல்யாணித் தாத்தா’ என்று சொல்கிறது. கனவில் கேட்ட அந்தச் சிரிப்பும் குரலும் அதிர்ந்து என்னைத் தூக்கிப் போடுகிறது. நான் விழித்து விடுகிறேன்.

அந்தக் குழந்தை யார் ஜாடையில் இருந்தது? எங்கள் அம்மா ஜாடையிலா? அது எங்கள் அம்மா எனில், ‘எங்க அப்பா’ என்று அந்தக் குழந்தை சொன்னது யாரை? எனக்குப் பெயர் இட்டிருக்கிற எங்கள் தாத்தாவையா?
அது எங்கள் அம்மாவும் தாத்தாவும் எனில், எங்கள் அம்மாச்சி எங்கே போனாள்/ ‘தெய்வத்துக்குப் படைக்கச் சொல்லி’ கேட்பதற்கு இப்படித்தான் நீத்தார் வருவார்கள் எனில், அந்தச் சிரிப்பு எதற்கு?    அந்த ‘கல்யாணித் தாத்தா” என்ற அற்புத விளிப்பு எதற்கு?

இதோ, இதை எழுதும் இந்தக் கணத்திலும் அந்தச் சிரிப்புக் கேட்கிறது.
மீண்டும் ஒரு ஒலிநாடாவை ஓடவிட்டது போல, ‘கல்யாணித் தாத்தா”  என்ற குழந்தைக் குரல் அழைக்கிறது. அது யாராகவும் இருக்கட்டும். என் முன்னோரின் முன்னோராக, உங்கள் முன்னோரின் முன்னோராக, முதற்றே உலகு எனச் சொலும் மூலமாக இருக்கட்டும்.

அந்த ‘சின்னஞ் சிறு பெண்ணை’ வணங்குகிறேன்
 அவள் என் அன்னையெனில் அவள் வயிற்றில் நான் பிறந்தேன் என இருக்கட்டும். அவள் என் பெயர்த்தி எனில், எங்கள் மகனுக்கு அவள் மகளாகப் பிறக்கட்டும்.

%


Tuesday 28 August 2012

ஒரு முழுமையான உச்சரிப்பு.





கொஞ்ச நாட்களாகவே ஏர்வாடி.S.I.சுல்தானைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. சரி. நாஞ்சில் நாடன் வெளியூர் போய்த் திரும்பட்டுமே என்று இருந்தேன்.  என் புத்தி என்னோடு. அவர் வெளியூரா போயிருந்தார். வெளிநாட்டுக்கல்லவா.

அவர் எப்போது போனார் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தாக்கல் கிடையாது.  வந்துவிட்டாரா என்றும் உறுதியாக அப்போது தெரியாத நிலை.
வருவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, ரவீந்திரனிடம் கேட்டேன். ‘இன்னும் வரவில்லை ஸார்’ என்றார்.  அதற்கடுத்த வாரம் மரபின்மைந்தன் முத்தையாவிடம் கேட்டேன். வந்துவிட்டதாகச் சொன்னார்.  பொதுவாக, ‘எப்ப நாஞ்சில் வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்க யோசிக்காதவன் தான் நான். போகும்போதும் ஒருவார்த்தை நம்மிடம் சொல்ல்வில்லை. வந்த பிறகும், வந்துட்டேன் கல்யாணி’ என்று சத்தம் காட்டவில்லை. குறிப்பிட்டாற் போல பத்துப் பதினைந்து பேர்களிடமாவது அவர் போகும் போதும், வந்த பிறகும் சொல்லியிருக்கத்தான் செய்வார். அந்தப் பத்துப் பதினைந்து பேர் பட்டியலில் ‘நம்ம பேரு விட்டுப் போச்சே’ என்ற தாங்கல் எனக்கு இருக்கும் இல்லையா. இன்றைக்கு நேற்றைக்கா பழக்கம்? நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட தீபம் கால வரவுசெலவு அல்லவா இது. 

உழவர் சந்தைக்குப் போனால், கத்திரிக்காய் சீனியவரைக்காய் நிறுக்கிற தராசும் அதுதான். கேரட் பட்டர்பீன்ஸ் நிறுக்கிற தராசும் அதேதான். அவ்வளவு எதற்கு?  சொத்தை சொள்ளை என்றாலும் கூட அதே தராசுதான். நாஞ்சில் அவருடைய தராசுப் பக்கம் என்னை அண்டவிடவே இல்லை. அவரைத் தப்புச் சொல்லவே முடியாது. யாரும் வாங்குவதற்கு வந்தால் அல்லவா, அவர் நிறுத்துப் போடுவார். அமாவாசை அன்றைக்கு நுனிச் சீப்பு வாழைக்காய்க்கு இருக்கிற அந்தஸ்து கூட நமக்கு இல்லாவிட்டால் அவர்தான் என்ன பண்ணுவார்?

சுல்தானைப் பற்றி எழுத ஆசைப்பட்டுவிட்டு, நாஞ்சில் மேல் பிராது கொடுக்கிற மாதிரி இருக்கிறது இல்லையா. இது பிராது இல்லை. ஆவலாதி.  ஆவலாதி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. தமிழாகத்தான் இருக்கவேண்டும். திருநெல்வேலி பக்கம் ஆதி காலத்திலிருந்தே புழக்கத்தில் இருக்கிற இந்த ‘ஆவலாதி’யின் வேர்ச் சொல் என்ன என்பதையாராவது தெரிவித்தால் நல்லது.

இந்த ஆவலாதியைச் சொல்லிவிட்டு S.I.சுல்தானைப் பற்றி மேற்கொண்டு எழுதினால்தான் சரியாக இருக்கும்.  இருக்கிற கொஞ்ச நஞ்ச பாரத்தை இறக்கி வைத்துவிட்டோம் என்றால், மனம் லேசாகிவிடும். துப்புரவான ஒரு மனதோடுதானே சுல்தான் மாதிரி ஒரு அருமையான மனிதரைப் பற்றி நான் பேசவும் வேண்டும். அதுதானே நிறைவான காரியம்.

நாஞ்சில் நாடனையோ என்னையோ போல சுல்தான் எழுதுகிறவர் அல்ல.
அப்படி அடித்துச் சொல்லவும் முடியாது. அவர் ஏதாவது எழுதியிருக்கவும் கூடும். இவ்வளவு வாசிப்பு உடைய அவர், அத்தனை இறுக்கமாகத் தன் விரல்களைப் பூட்டிவைத்திருந்திருப்பார் என ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்?   ஒன்று நிஜம்.  S. I.சுல்தான் நாஞ்சில்நாடன் படைப்புக்களை, ஒரு இடையறாத நிழல் என,நீண்ட காலமாக வாசித்துப் பின் தொடர்பவராகவே
இருக்கவேண்டும்.  நடந்தாய் வாழி  என சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும்
காவேரியோடு மூலம் தொட்டு முங்கிக் குளித்தது போல,  நாஞ்சிலின்
அத்தனை படைப்போடும் நடந்திருந்தால் மட்டுமே, இப்படி nanjilnadan wordpress.com   என்று ஒரு வலைத்தளம் துவங்கத் தோன்றும்.  தொடர்ந்து இப்படிப் பதிவேற்றிவரவும் முடியும்.

நாஞ்சில்நாடன் என்கிற படைப்பாளியாக அவருடைய ஒவ்வொரு வரியையும்,  ஒரு மனிதனாக அவருடைய ஒவ்வொரு அசைவையும் அவர்
பதிவேற்றுகிற விதம் முழுமையானது. நாஞ்சில் மகளின் திருமணத்திற்கு நாகர்கோவிலுக்கு  வரமுடியாதவர்கள் கூட, நேரில் கலந்துகொண்டது போன்ற சந்தோஷத்தைத் தருமளவுக்கு எத்தனை கல்யாணவீட்டுத் தகவல்கள், புகைப்படங்கள் சுல்தானின் தளத்தில்.  நாஞ்சில் நாடனைத்தான்
அன்றைக்குப் பார்க்க எவ்வளவு அருமையாக இருந்தது.   தன் பெண் பிள்ளையை நல்லபடியாகக் கரையேற்றின ஒரு தெற்கத்தி அப்பனின்
நிறைவுடன் முகமெல்லாம் பூரித்துப் போய் அல்லவா அவர் இருந்தார். சுல்தானும் நானும் பேசிக்கொண்டோம், ‘போன டிசம்பரில் இருந்தே அவருக்கு நல்ல பீரியட் ஆரம்பிச்சுட்டு. முகத்தைப் பாருங்களேன். எப்படி இருக்குண்ணு’ என்று.

S,I. சுல்தான் நாஞ்சிலுக்குக் கிடைத்தது போல வேறு யாருக்கும் யாரும் கிடைக்கவில்லை.அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயும் அவ்வளவு ஒத்துப் போய்விட்டது. எழுத்து இயல்பும் எழுதுகிறவன் இயல்பும் ஒரு வாசக மனதிற்கு இவ்வளவு தூரம் பிடித்துப் போனாலன்றி இதுவெல்லாம் ஒரு
போதும் சாத்தியமில்லை. ஜெயமோகன் தளத்திலும் நாஞ்சில் நாடனின் அமெரிக்கப் பயணம் பற்றிய குறிப்புகள் வந்தன எனினும், சுல்தான் கிட்டத்தட்ட ஒரு நேரடி வர்ணனை போலச் செய்துகொண்டிருந்ததற்கு அந்தத் தனிப்பட்ட காதலே காரணம்.

சுல்தானை சலாகுதீன் ஸார் மகள் கல்யாணத்தில் வைத்துதான் ஏர்வாடியில் முதல்முதல் சந்தித்தேன். என்னுடைய ‘அகம் புறம்’ தொடர் விகடனில் முடிந்திருந்த நேரம். நாஞ்சிலின்  ‘தீதும் நன்றும்” வந்துகொண்டு இருந்தது. எனக்குப் பிந்திய வரிசையில் சுல்தான் இருந்தார். அகம்புறம் தொடரில் சலாகுதீன் ஸார் வீட்டுக்குக்கு, அவருடைய அம்மா இறந்த துக்கம் கேட்கப் போனது பற்றியும். தன்னுடைய அம்மாவின் விசிறி பற்றி சலாகுதீன் ஸார் சொன்னதும் ஒரு பகுதி இருக்கும்.  அந்தப் பகுதியை சிலாகித்து, சலாகுதீன் சின்னாப்பாவுக்கும் அவருக்குமான நெருக்கத்தின் புள்ளியில் இருந்து சுல்தான் அந்த அறிமுக உரையாடலைத் துவங்கினார்.
அத்துடன் சரி. அப்புறம் எந்தத் தொடர்பும் கிடையாது.

திடீரென்று நாஞ்சில் நாடனுக்கு ஆரம்பித்து இருந்ததைப் போலவே, எனக்கும் ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். பழையது, புதியது என அவ்வப்போது நிறையப் பதிவேற்றினார். எங்கே இருந்துதான் சேகரிப்பாரோ, கிறக்கம் வருகிற அள்வுக்கு என் புகைப்படங்களை, என்னைப் பற்றிய, என் எழுத்து மீதான செய்திகளை அதில் குவித்தார். அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது என வைராக்கியமாக இருந்த என்னை. தினசரி மூன்று தடவைகளாவது அந்தப் பக்கங்களைப் பார்க்கும்படி செய்தார். என்ன பின்னூட்டங்கள் எத்தனை பேர் எதற்கெல்லாம் எழுதுவார்கள் என்ற ஏக்கம் கூட ஒரு கட்டத்தில் வர ஆரம்பித்துவிட்டது. நல்லவேளை தூக்கத்திற்கு எந்தப் பழுதும் இல்லை.

இதே சமயத்தில் சக்தி ஜோதிக்கு, வண்ணநிலவனுக்கு, தோப்பில் மீரானுக்கு, ச.விஜயலட்சுமிக்கு எல்லாம் இணைய தளங்களை  வரிசையாய் ஆரம்பித்தார். வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், தோப்பில் மீரானுக்கு எல்லாம் அத்திபூத்தாற் போல புகைப்படங்கள். கலாப்ரியா மற்றும் தங்கராஜ் புண்ணியத்திலெனக்குக் கொஞ்சம் ஜாஸ்தி. காணும் காணாததற்கு என்னை சுல்தான் அவ்வப்போது எடுத்துக்கொண்டதும் உண்டு. சக்தி ஜோதி பற்றிக் கேட்கவே வேண்டாம். புகைப்படங்களுக்கும் கவிதைகளுக்கும் தட்டுப்பாடே கிடையாது அவரிடம்.

ஒரு சூதாடியைப் போல, சாயுங்காலம் ஆனாலே. சீட்டுக்கட்டைத் தேடி உள்ளங்கை ஊறல் எடுக்கும் அளவுக்கு, நான் என்னுடைய சுல்தான் தளத்தைத் தவிர்க்க முடியாமல் ரசிக்க ஆரம்பித்தேன். ஆளற்ற வீட்டில் நிலைக் கண்ணாடி பார்க்க அலுக்குமா என்ன?

கதை அப்படித் தானே போகும். இந்தச் சரியான சமயத்தில், சுல்தானுக்கு வேலைப் பளு அதிகரித்து விட்டது.  ஒரு பொறுப்பான உத்தியோகத்தில் வெளியூரில் அவரும், உள்ளூரில் குடும்பமும் இருக்கிற அவருக்கு இப்படியான சந்தர்ப்பங்களும் வரும்தானே. அவரால் நாஞ்சில் நாடன் தளம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எங்களையும் அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. எப்போதாவது, அவருக்கு அல்லது வலைத்தள வாசகனுக்கு மறந்துவிடக் கூடாது என்று,  ஒரு மாதத்திற்கு ஒரு தடவை ஒரு கவிதை, அதற்கு ஒரு அபாரமான கிளிப் படம், அணில் படம், கல்மண்டபப் படம் என்று போட்டுவந்தார். இது எப்படிப் போதும், விடிந்ததும் பல் தேய்க்காமல் ஏதாவது ஒன்று என்னைப் பற்றி தினசரி பார்த்து வந்தவனுக்கு? காணவில்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தது. சிரித்தால் கூட, நெடு நாள் கிடையில் கிடந்த சீக்காளி சிரிக்கிற மாதிரி இருந்தது என் சிரிப்பு.  ‘என்ன சுல்தான். இப்படிப் பண்ணிட்டீங்களே?’ என்று கேட்கவா முடியும்?

ஆனால், இதற்கெல்லாம் சேர்த்துவைத்து, சுல்தான் நாஞ்சில் நாடனை அப்படிக் கொண்டாடிக் கொண்டு இருந்தார். அது ஒரு வகைக் கொண்டாட்டம் தான். ஒன்று இடுப்பில் வைத்திருப்பார், அல்லது தலையில் வைத்திருப்பார். இப்போது முத்திக் கொண்டிருப்பார். கொஞ்ச நேரம் கழித்து, தொட்டிலில் கிடக்கிற பிள்ளை தூங்குவதைப் பார்த்து நிற்கிற தகப்பன் மாதிரிக் கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.  அவர் சொல்லுவார். அல்லது நீங்கள் சொல்லுவதைப் பாட்டுக் கேட்பது மாதிரி ரசித்துத் தலை
ஆட்டிகொண்டிருபார். பூப் போல யாரும் இல்லாத நேரத்தில் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சிக் கொள்வார். அப்படியே யார் இருந்தால் என்ன என்று மடியில் போட்டுத் தாய்ப்பால் கொடுப்பார். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எந்தப் பிரதிபலனும் அவருக்கில்லை. ஆனாலும் கொண்டாட்டம். ஆனாலும் திருவிழா. இலக்கியத்தின், இலக்கியவாதிகளின் இயங்குதளத்துக்குள், இப்படி அடுத்த மனிதரை மனதாரக் கொண்டாடுகிறவர்கள் கண்ணுக்கெட்டின தூரத்திற்கு யாருமே இல்லை.
,
நான் ஏர்வாடி S.I. சுல்தானை  வாழ்த்துகிறேன்.
எல்லோரும் அவரவர் கண்ணாடியில் அவரவர் முகத்தைப் பார்க்கிறோம்.
அவரவர் ஊதுகுழல்களை ஊதுகிறோம். அவரவர் பாடல்களை மட்டும் இசைக்கிறோம்.  சுல்தானின் காரியம் சுல்தான் அல்ல. அவருடைய செயல் நாஞ்சில் நாடனை வரைவது. கொஞ்சம் கூட, அதிகப்படியான கூடுதலான ஒப்பனைகளை அவர் நாஞ்சிலுக்குச் செய்வதில்லை. நாஞ்சில் எந்த அளவுக்கு, எத்தனை பற்கள் தெரியச் சிரிப்பாரோ, அவ்வளவுதான். எத்தனை நரையோ அவ்வளவுதான். நாஞ்சில் எப்படி இருக்கிறாரோ அப்படி. அவர் எழுத்து எப்படி இருக்கிறதோ அப்படி.  ஊதிப் பெருக்கின எந்த அனாவசிய  பிம்பங்களையும் . அவர் கட்டமைப்பதில்லை. மற்றவரின் எந்தக் கேலிச் சித்திரங்களையும் மறந்தும் வரைவதில்லை.

நாஞ்சில் நாடன் எப்படிச் செயல்படுகிறாரோ, அப்படி மட்டுமே சுல்தானின் வலைத் தளமும் செயல் படுகிறது.  நெருடலும் இல்லை. திகட்டலும் இல்லை. அர்ப்பணிப்பு மட்டுமே. வேற்று மொழிகளில், மேலை இலக்கிய வெளிகளில். சுல்தானைப் போன்ற முன் உதாரணங்கள் இருக்கலாம்.  தமிழில் இல்லை. தமிழில் சுல்தான் மட்டுமே.

நான் ஏர்வாடி S. I. சுல்தான் என முழுதாக, மனமார உச்சரிக்கிறேன்.  அது கூட, நாஞ்சில் நாடன் என உச்சரிப்பது போலத்தான் இருக்கிறது.

%


Saturday 25 August 2012

அந்த அறை, இந்த வானம்.








இதற்கு முந்திய வானம்..
_________________________

கிட்டத்தட்ட பின்னிரவுத் துவக்கத்தில்
ஏதோ ஒரு உணவக மேஜையின்’
முட்கரண்டிகள் பீங்கான் உரையாடல்களீன்
மத்தியிலிருந்து
இடதுவிரல்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை
நான் வாசித்துகொண்டிருக்கும்
அயல்கவிதைவரிகளுக்கும்
மலர்களின் மௌனம் பற்றிய
திரைப்பாடல் குரல்களுக்கும் இடையில்
பத்திரப்படுத்துகிறேன்.
தண்ணீருக்கு மத்தியில்
முளைத்த முள்மரக் கூடுகளில்
வரத்துப் பறவைகள் இட்ட
கருப்புப் புள்ளிகளுடைய
பிசிபிசுத்த முட்டைகள் போல
புல்சருகு அடுக்கில் வெதுவெதுத்திருக்கும்
அவற்றின் மேல் அமர்ந்து
அடைகாக்கத் தோன்றுகிறது எனக்கு.
பாதி கேட்கப்பட்ட பாடலுக்கும்
மிச்சமிருக்கும் கவிதை வரிகளுக்கும்
நடுவில் தொங்குகிறது
இதற்கு முன் நான்
மிதந்துகொண்டிருந்த வானம்.

%

யாரோவின் சாயல்கள்.

’யாரோ சொன்னது மாதிரி’
என்று இவரின் முகம் பார்த்து
அவர் துவங்கினார் பேச்சை.
இவரை, அவரை, மேலும்
எவர் எவரையோ தெரிகிறது
அந்த ‘யாரோ’வைத் தவிர.
யாரோவின் சாயல்களை
யாராவது சொன்னால் நல்லது.

%

மழைக்கு முந்திய

இன்னும் கேட்கும்படி இருக்கிறது
தொண்டைச் செருமலுடன் துவங்கும்
அவளுடைய உரையாடல்கள் நிரம்பிய
ஓர் இரவும் இரண்டு பகல்களும்.
அவள் அதிகம் கீழ் நின்ற
மூங்கில்புதரின் வேறுவித இலையசைவு.
கருத்தரங்கக் குறிப்புகளை வாசித்து
தன்னை அடுக்கிக்கொள்வதற்கு முன்
அருந்திய காப்பிக் கோப்பையின் அடியில்
கருத்து நெளிந்து, விபத்து ரத்தம் என
உறைந்து மினுங்கும் மிச்சத் திரவம்.
கடிப்பின் வளைவுடன் ரொட்டித் துண்டுகள்.
ஒரு பிரத்தியேக வாசனைத் தெளிப்பின்
மயக்கம் களையாத் காற்றில்
கண்ணாடிக்குள் பிம்பம் உருட்டி
மேஜை விளிம்பில் புரட்டிக் கொள்ளும்
அடர் மஞ்சள் பென்சில் கூர்.
புதிய விமான நிலையத்திற்கான
போக்குவரத்து தூரத்தைத்
தாமதமாகக் கணக்கிட்ட அவசரத்தில்
குளியலறையில் விடப்பட்டுவிட்ட
பூத்தையலுடைய உள்ளாடைகள்.
மற்றும் இவற்றினிடையே
மலர்ந்துதிர்ந்து மலர்ந்த
இசை நிரம்பிய சில முத்தங்கள்.
இதற்கு மேலும் உயிர்ப்புடன்
ஒருபோதும் இருப்பதற்கில்லை
மழைக்கு முந்திய ஈரப்பதத்துடன்
அந்த அறையும்
அவனைப் போல் ஒருவனும்.

%

கல்யாண்ஜி.

Friday 24 August 2012

வாழ்வெனும் பெரும் பூ







நிரம்புதல்.

நெல்லிக்காய்கள் உதிர்ந்துகிடக்கும்
எதிர்வீட்டுச் சுவரின்
சாய்ந்த நிழலில் அமர்ந்திருந்த
அவள் பக்கம்
அதுவரை பொறுக்கிய குப்பைக் கூடை.
அருகில் இருந்த கிழவனின் கால்களில்
ஆயுட்காலச் செம்மண் புழுதி.
தானியம் பொறுக்கும் பறவையாக நகர்ந்து
வெயிலில் கிடந்த உருட்டுக்கல்லை
மூக்கின் அருகில் வைத்து
நீண்ட நேரம்
முகரத் தொடங்கினான்.
பார்த்துக் கொண்டே நடந்து எனக்குள்
நிரம்பத் துவங்கியது
வாழ்வெனும் பெரும் பூவின்
வாசம்.
%
ஆனால்...

‘எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டீர்களா?’
யாரிடமோ கேட்கிறார்கள் யாரோ.
எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.
எதையும் விட்டுவிடவும் இல்லை.
என் எல்லா நகங்களிலும்
நீல அழுக்கு., ஆனால்.
%
போலவே...

இந்த மாலை வேளை
காலை வேளையைப் போல இருக்கிறது.
எனில், காலை வேளை
மாலையைப் போல இருந்ததா?
இல்லை.
காலை வேளை
காலைவேளையைப் போலவே இருந்தது
ஒரு கலங்கிய நதியென
என்னைக் கடந்து சென்றிருக்கும்
இரவின் ஈரத்துடன்.
%

கல்யாண்ஜி

Tuesday 21 August 2012

நிறமற்ற பறவை



இன்று என்னுடைய அறுபத்து ஏழாவது பிறந்த நாள். இன்னும் நிறைய மனிதர்களை அடைய வேண்டும். நல்ல வண்ணம் மண்ணில் வாழ
வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். கொஞ்சம் எழுதவேண்டும்.

எல்லோர்க்கும் என்னுடைய அன்பும் வணக்கமும் நல் வாழ்த்துகளும்.





நிச்சயம் அது பறவை.
________________________


குனிந்திருந்தேன்
கால பெருவிரல் நகத்தின் வெடிப்புக்குள்.
அது அப்போதுதான் பறந்து சென்றது.
என்ன நிறப் பறவை அது
எனச் சொல்ல முடியாத
சிறகடிப்பின் வேகம்.
நிறமற்ற பறவை என
இப்போது வைத்துக் கொள்வோம்.
நிச்சயம் அது ஒரு பறவை என்பது
போதுமானதாக இருக்கிறது
மீண்டும் நிமிர்ந்து  நான்
உங்களைப் பார்க்க.

%

கல்யாண சுந்தரம்
கல்யாணி
T.S
கல்யாணியண்ணன்
நடுவான்
வள்ளி மாப்பிளை
சங்கரியப்பா
கல்யாணித் தாத்தா
மற்றும்
கல்யாண்ஜி


ஒரு நகரும் சருகு ஒரு ஊர்ந்துசெல்லும் நத்தை,







வெளியேறமுடியாத அவள்.
-------------------------------
அனுமதி கோரவில்லை.
அவனாகத் திறந்துகொண்டுவந்தான்.
வந்ததன் பின் கதவை மூடவும் இல்லை.
ஒரு சருகு தரையுடன் நகர்ந்து
உள்ளே வந்ததைப் பார்த்து
‘படுத்துகிறது அதுஎன்றான்.
பரவிக்கொண்டிருந்த
பீம்சேன் ஜோஷியின் தரவிறக்கம் முடியும்வரை
புதைந்திருந்தான் அவரைப் பை இருக்கையில்.
ஏற்கனவே மது அருந்தியிருக்கவும் இல்லை.
அது குறித்த வேண்டுதல்களும் இல்லை.
ஏப்ரல் மாதத்தில் இருந்த படக் காலண்டரை
நடப்பு மாதத்திற்கு மாற்றினான்.
புத்தக வரிசையில் ஒளித்துவைத்திருந்த
புகைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு
மறுபடியும் வரிசையில் இட்டான்.
இரண்டு சிகரெட்களை மட்டும்
உருவி எடுத்துக் கொண்டான்.
சொல்லிக்கொள்ளவில்லை. புறப்பட்டான்.
போகும்போது நான் கேட்டுக்கொண்டேன்
கதவை மூடச் சொல்லி.
மூடவில்லை.
திறந்தே இருந்த வாசலுக்குத்
திரும்புவதா வேண்டாமா என
யோசிக்கத் துவங்கியிருந்தது
அவனுக்குப் பின்னால் உள்ளே வந்த
ஒற்றைச் சருகு.
வெளியேறமுடியாமல்
புத்தக வரிசைக்குள் துடித்துக்கொண்டு
இருந்திருக்கக் கூடும்
அவளுடைய புகைப்படம்.

%





அசையும் உணர்கொம்புகள்.
-------------------------------------------------
மரணம் கலைத்துபோட்ட
பிளாஸ்டிக் நாற்காலி வரிசையில்
தனித்திருந்தேன்.
அந்தக் குழந்தை என்னிடம் வந்து
‘தாத்தா, எனக்கு நத்தை வேண்டும்
வேப்பமரத்தைக் காட்டிக் கேட்டது.
ஒரு மஞ்சணத்திக்காய் போல
அப்பியிருந்த நத்தையைப்
பிய்த்து எடுத்துக் கொடுத்தேன்.
பிஞ்சு உள்ளங்கையில்
பயணமற்றுக் கிடந்தது நத்தை.
‘வெயிலில் விடுஎன யாரோ சொன்னார்கள்.
புல்லில் விடச் சொன்னேன் நான்.
வெயிலும் புல்லுமற்ற
தண்ணீர் கசியும் ரப்பர்குழாயின்
நெளிவின் மத்தியில் இட்டது அதை.
சற்றுக் காத்திருந்தது.
கையை விரித்து, உதடு பிதுக்கி
நத்தையுடனான அதனுடைய ஒப்பந்தத்தை
ரத்துசெய்து, குழந்தை நகர்ந்தது
வேறோரு உலகம் சிருஷ்டிக்க.
வெடித்துக் கதறியபடி இறங்கி
வாகனக் கதவு திறப்பவரிடம்
தரையில் கிடந்த வெயில் ஓடிப்போகையில்,
காணாமல் போயிருந்த வேப்பமர ஞாபகத்துடன்
ஊர்ந்துசெல்லத் துவங்கியிருந்தது
உணர்கொம்புகள் அசையும் நத்தை.

%

கல்யாண்ஜி

Friday 17 August 2012

செண்பகப் பூவும் சீமை இலந்தைப் பழமும்





'உங்களுக்கு பூ பிடிக்குமா, பழம் பிடிக்குமா?’
ரவீந்திரன் என்னைக் கேட்கும் போது நாஞ்சில்நாடன் தன்னுடைய மிலிட்டரி பச்சை சட்டையைநேர்த்தியாக ‘இன்’ பண்ணி, இடுப்புவாரின் பல்லை அதனுடைய சரியான துளையில் பொருத்திக்கொண்டு இருந்தார். ஏற்கனவே பெர்ஃப்யூம் வாடை அவருடைய தயாரை முன்னறிவித்துப் பரவிக்கொண்டிருந்தது.

“எனக்கு பூ, பழம் எல்லாம் பிடிக்கும்”
“ரெண்டில் எது ரொம்பப் பிடிக்கும்?” - ரவீந்திரன் கேட்டுவிட்டு மறுபடி சிரித்தார். ஆரம்பத்தில் ஒரு சிரிப்பு. முடிவில் ஒரு சிரிப்பு. இரண்டுக்கும் மத்தியில்தான் அவரால் எப்போதும் பேச முடியும்.
“பூ” - நான் சொல்லிக்கூட முடிக்கவில்லை.
“அப்போ நீங்க செண்பகத்தை நடுறீங்க. நாஞ்சில் சீமை இலந்தையை நடுகிறார்” என்று ரவீந்திரன் என் பக்கம் திரும்பி விவரிக்க ஆரம்பித்தார்.

ரவீந்திரனும் நாஞ்சிலும் ஜி.வி. ரெசிடென்ஸியில் குடியிருக்கிறார்கள். கோவை நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட அந்த திங்கட் கிழமைப் போக்கு வரத்தில் இருபத்தைந்து நிமிட தூரத்தில் அடையும்படி இருக்கிற அழகான, அமைதியான குடியிருப்பு அது.
ரவீந்திரனுக்கு, இசை, இலக்கியம்,ஓவியம் என நிறைய ஈடுபாடுகள். எல்லாவற்றையும் விடப் பெரிய ஈடுபாடு மனிதரிடம், மண்ணிடம், மரங்களிடம். சிறுதுளியில் அவருடைய ஈரம் உண்டு. பசுமைக் கோவையில் அவருடைய ஒளிச்சேர்க்கை கணிசமானது. எழுதுகிறவனின் பச்சையத்தில் அவருக்கு அக்கறை அதிகம். நான் ஒரு சிறிய உடல் நலிவிற்கான மருத்துவத்தில் இருந்த சமயம், அவர் எனக்கு அனுப்பி வைத்த புத்தகங்களால் பழுத்து உதிராமல் இருந்தேன். புதிதாகத் துளிர்த்தேன்.  அப்படி அவரால் துளிர்த்த இலைகள், ஏற்கனவே என் கிளையில் இருந்த இலைகளைவிடவும் அழகான கிளிப்பச்சை நிறத்தில் இருந்தன்.

ஜி.வி. குடியிருப்பில் மரம் வளர்ப்பதற்காக ஏழு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். குறைந்தது எழுநூறு மரங்களாவது அதில் நடவேண்டும் என்ற திட்டம். அப்துல் கலாம் அவர்களால் நடப்பட்ட கனவு நாற்றுகள் இப்போது செடியாகி நிற்கின்றன. அந்த வரிசையில் நாஞ்சிலைத் தேர்ந்தெடுத்தது சரி. என்னையும் எதற்கு எனத் தெரியவில்லை. நாங்கள் ஒரு செண்பகம், ஒரு பவழ மல்லி, ஒரு சீமை இலந்தை கன்றுகள் நட வேண்டும் என நினைத்தாராம். பவழ மல்லி நாற்று கிடைக்கவில்லை போல. எனவே மற்ற இரண்டு மட்டும்.

அந்தக் குடியிருப்பு நிழற்சாலைகள் நிரம்பியவை. குழந்தைகளாய்த் திரிவதற்கும், முதியோராய் அமிழ்வதற்கும் அந்த நிழல்முற்றம் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தது.  கட்டிடங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி, நான் நிழலின் நதியோரம் நிற்கவிரும்பினேன். எனக்கும் மற்ற இருவர்க்கும் இடையிலான உரையாடலை நான் தொலைத்துவிட்டிருந்த நேரம் அது. எங்கள் வாகனம் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றது. காரின் கதவை மூடிவிட்டு அந்த உத்தேச எதிர்காலச் சோலையைப் பார்த்த சமயம் எனக்கு முதுகு சொடுக்கியது. யோகாவை அல்லது தியானத்தை குவிந்து ஒன்றிச் செய்கிற போதெல்லாம் எனக்கு இப்படி முதுகு சொடுக்கும். இரண்டு தோள்ப்பட்டைகளும் உலுக்கப்பட்டு அதிர்ந்து அடங்கும். அந்த மண்ணை, வளர்செடிகளைப் பார்க்கும் போது அப்படியிருந்தது.

சற்று முன் யாரோ அவர்களை நட்டுவிட்டுப் போயிருந்தது போல, அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கிற இரண்டு ஊழியர்களும் எங்களை எதிர்பார்த்து அந்த மண்ணிலேயே உட்கார்ந்திருந்தனர்.  அவர்களின் உடல் மொழியில் காற்றில் அசையும் தாவரங்களின் மொழியிருந்தது. அவர்களில் மூத்தவர் என, காக்கிச் சட்டையில்  இருந்த ஒருவருக்கு, நரை முடி, நரை மீசைதாடி. நரையை விட வெள்ளையான சிரிப்பு முகத்தில்.  இன்னொருவர் சற்று இளையவர். சதா வெயில் கிடந்த பாறை மாதிரி, மலையில் எரிகிற தீ மாதிரி இருந்தது அவர் தோற்றமும் கண்களும். பக்கத்தில் நாங்கள் நட வேண்டிய நாற்றுக்கள்.

எங்களுடைய அம்மாவைப் பெற்ற ஆச்சிதான் எங்களுக்கு ஆடிப் பட்டம் தேடி விதைக்கச் சொல்லிக்கொடுத்தாள். தாத்தா ‘படவரைக் குழி’களை வெட்டிப் போட்டிருப்பார். ஆச்சி எங்கள் எல்லோர் கையிலும் விதைகளைக் கொடுப்பார்.  அவரை, பீர்க்கு, பாகல், புடலை இந்த நான்கும் தான்.  அவற்றை வாங்கியிருந்த உள்ளங்கைகளையும் விதைகளையும் இப்போது என்னால் பார்க்க முடிகிறது. யாரேனும் ஒருவன், அவன் பார்த்த முதல் விதையை, முதல் குழந்தையின் முகத்தை மறப்பான் எனில்,  அவனிடம் இருப்பதாகக் கொண்டாடப் படும் வேறெந்த ஞாபகங்களிலும் எந்த அர்த்தமும்  இல்லை எனக்கு.
“யார் ஊணுகிற விதைமுதல்’ல முளைக்கிறதுண்ணு பார்க்கலாம்” - இதுதான் ஆச்சியின் மந்திரம். இதைச் சொல்லிக்கொண்டே ஆச்சி, நாங்கள்
விதைகளை ஊன்றிய குழிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவாள். உற்றுக் கேட்டால் சிறுசிறு குமிழிகளோடு அந்தந்தக் குழிகளுக்குள்ளே உள்ள மண் எதையோ பாடுவதைக் கேட்கமுடியும்.
நாங்கள் அன்றைக்கு ராத்திரி தூங்கவே மாட்டோம்.  அந்த ஒரு இரவின் சொப்பனங்க்ளில் அவரவர் விதைத்த விதை ‘மானம் வரைக்கும்’ வளர்ந்து படர்ந்துவிட்டிருக்கும். மறு நாட் காலை பல்தேய்க்காமல் தோட்டத்துக்கு ஓடுவோம்.

எங்கேயோ இருக்கிற எங்கள் வீட்டின் சிதிலமான இறந்தகாலத்திலிருந்து
தன் எண்பது வயது பித்தவெடிப்பு நிறைந்த கால்களுடன், இந்த ஜி.வி. குடியிருப்பின் மண்ணில் அம்மாச்சி நடந்து போயிருக்கும் தடம் எனக்குத் தெரிந்தது. இந்த சாயுங்கால வெயிலில் புரண்டு கிடக்கும் மண்ணுக்கும், எழுபத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்த ஆடிப்பருவ மண்ணுக்கும் ஒரே நிறம்தான், ஒரே வாசம் தான். எந்த கன்னி நிலத்தைக் கிள்ளி வாயில் போட்டாலும் மண்ணின் ருசி ஒன்றாகத்தான் இருக்கும்.

“இந்தாங்க ஸார். வையுங்க” - ரவீந்திரன் என்னிடம் செண்பக நாற்றை நீட்டினார். ஒரு மின்னல் கணம் எனக்கு, பூமா ஈஸ்வரமூர்த்தியின் ‘செண்பக மரமும் நாங்களும்’ என்ற கவிதையும் தொகுப்பும் ஞாபகம் வந்தது. எல்லாக் கவிதைகளும் இப்படி ஒரே ஒரு சிறு கணமாவது ஒரு மரத்தின் கிளையாகவோ, இலையாகவோ, பூவாகவோ கனியாகவோ இருந்திருக்கவே முடியும். ஒரு நல்ல கவிதையின் கண்ணுக்குத் தெரியாத காம்பு அந்தக் கவிதையை எழுதியவனின் மண்ணிலிருக்கும் ஒரு தாவரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

நான் ரவீந்திரன் நீட்டிய அந்தசெண்பகச் செடியை அறிய முனைந்தேன். ஒரு விதையை அறிவதும், செடியை அறிவதும் மரத்தை அறிவதும் எப்போதும் என் காரியமாகவே இருக்கிறது.  அதே போல ஒரு பெயர் தெரியாத பறவையை அறிவது கூட.

நான் செண்பக நாற்றை நாஞ்சிலிடம் கொடுத்தேன். இதற்கு முந்திய பிற்பகலில் அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் அசைவிலும்  பொங்கிய சந்தோஷம் அவர் கைகளின் வழி அந்த செண்பக நாற்றினூடாக மண்ணில் இறங்கும் என நான் நம்பினேன்.  இரண்டு பேருமாக ஏந்திப் பிடித்து செண்பக நாற்றை, அந்த இரண்டு மனிதரின் உதவியோடு நட்டோம்.  நாற்று காற்றில் சாயாமல் இருக்க ஒரு குச்சியையும் ஊன்றி, மண்ணைத் தள்ளினோம்.  சம்பந்தமே இல்லாதபடி, அந்த ஈரமண், வேறொரு துயர நேரத்தின் மண் தள்ளலை எனக்குள் உருட்டுவது போல ஒரு மண்கட்டியாக உள்ளே விழுந்தது. தண்ணீர் விட்டோம்.

பேசிக்கொண்டே நகர்கையில், ரவீந்திரன் சொன்னது சரி. இந்த ஏழு ஏக்கர் நிலத்திலும் எந்த அலங்காரமான, அயல் மர நடுகையும் கிடையாது. எல்லாம் உள்ளூர் மரங்கள். நாட்டு மரங்கள்.  வேம்பு, புங்கை, மா, ஆல், அரசு, பவழமல்லி, செண்பகம், பன்னீர், வாதாம்,இலந்தை இப்படி.

இரண்டாவது நடுகைக்கான குழி தோட்டத்தின் ஓர விளிம்பில் வெட்டப் பட்டிருந்தது.  ஒரு மரம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. அதே அளவு பறவைகளுக்குமானது என்ற புரிதலுடன் பழ மரங்களும் தேர்வு செய்யப் பட்டிருப்பது அருமையானது.  மனிதர்கள் பறவைகளாக இருக்கவும் விரும்புகிறவர்கள் தானே. ஒரு சீமை இலந்தை நாற்றை அங்கே நட்டோம்.
ஆழமான குழியில் அதை நடுவதற்குச் சிரமமாக இருந்தது எங்களுக்கு. அந்த இரண்டாவது மனிதர் மண்ணோடு மண்ணாகக் குப்புறப் படுத்தார்.  ஒரு மழைக்காலச் செம்மண் துளைக்குள்ளிருந்து வெளிவரும் மண் புழு
போல, அவ்வளவு உயிர்ப்பான அழகுடன் அவருடைய தோற்றம் இருந்தது.நான் நாற்றை விட அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்தச் சீமை இலந்தை வளர்ந்து மரமாகிப் பழுக்கிற முதல் முதல் இலந்தைப் பழம் அவருக்கே உரியது. அந்தப் பழம் உண்ணவரும் சிறுபறவையின் சிறகுகள் இதோ இப்போது விரிந்திருக்கும் அவருடைய கைகளைப் போலவே விரிந்திருக்கும்.

மூன்றாவதாக ஏற்கனவே நட்டு, செழிப்பாக வளர்ந்துகொண்டிருந்த ஒரு ஆலஞ்செடிக்கும் நாங்கள் தண்ணீர் வார்த்தோம். அந்த ஆல் ஒரு அற்புத அழகுடன் இருந்தது. குலுங்கும் செம்பழங்களுக்கும் அசையும் விழுதுகளுக்குமான வீரியமான அடையாளங்களுடன் அதன் இலைகள் ‘தட்டுவிட்டு’ அடர்ந்திருந்தன. ’ஒரு போதும் வீழ்வதற்கு இல்லை’ என்ற தாவரப் பிரகடனம் அந்த ஆலம் இலைகளில் எழுதப்பட்டிருந்தன.




நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ரவீந்திரனின் அதி நவீன ‘ஐ பேட்’ மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் நேர்த்தி மிகவும் துல்லியமாக இருந்தது.
நான் ஆலஞ்செடிப் பக்கம் நின்ற அவர்கள் இருவரையும் பார்த்தேன். “வாங்க ரெண்டு பேரும். போட்டோ எடுத்துக்கிடுவோம்’ என்று அவர்களைக் கூப்பிட்டேன். தயங்கிய இருவரின் கைகளைப் பிடித்து என் பக்கம் இழுத்தேன். என் வலப்புறம் அந்த நரைத்த மீசைக்காரர். என் இடப்புறம் தீ மாதிரி, பாறை மாதிரி இருந்த இரண்டாமவர்.  ‘அங்கே பாருங்க. சும்மா சிரிங்க’ என்று ரவீந்திரன் பக்கம் காட்டினேன். வலது பக்கம் இருந்த மூத்தவர் சிரித்தார். இடது பக்கம் இருந்தவர் இருகைகளையும் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டு நின்றார்.  ‘கும்பிட வேண்டாம்’ என்றேன்.  செதுக்கப் பட்ட சிலை மாதிரி, அவருடைய கும்பிடுகிற தோற்றம் மாறவே இல்லை

மின்னஞ்சலில் ரவீந்திரன் அனுப்பியிருக்கிற புகைப்படங்களில், நாஞ்சிலும் நானும் நாற்று நடுகிற, தண்ணீர் வார்க்கிற படங்களை விட,  எனக்குப் பிடித்தது கடைசியாக எடுத்த அந்தப் படம்தான்.

இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில் நான் எழுபத்தைந்து வயதைத் தாண்டியிருப்பேன். ஒருவேளை நடப்பதற்குச் சிரமப்படக் கூடும். ரவீந்திரன் தோளைப் பிடித்துக் கொண்டு நிற்பேன்.  இந்த இடம் பசுஞ்சோலையாக மாறியிருக்கும். நாங்கள் நட்ட செண்பகமரம் பூக்கத் துவங்கியிருக்கும். பழம் கடிக்கவந்த பறவைகள் சீமை இலந்தை மரத்தின் கிளைகளில் சிறகடித்து இடம் மாறும். இப்போது நடுத்தர வயதில் இருக்கும் அந்த இரண்டாவது மனிதருக்கு சற்று நரைத்திருக்கும்.

நான் அந்த மரங்களைக் கும்பிடுவதற்கு முன்பு, முதலில் அந்த நரைத்த மனிதனைக் கும்பிடுவேன். கிட்டத்தட்ட, அந்தப் பழைய புகைப்படத்தில் இருகை கூப்பி அவர் கும்பிட்டு நின்ற, அதே பரவசத்தோடு.


%

புகைப்படத்தில் எனக்கு வலப்புறம் திரு. ராமசாமி.     இடப்புறம் திரு.பழனி. ரவீந்திரனின் மின்னஞ்சல் மூலம் அவர்களின் பெயர்களை அறிந்துகொள்ள வாய்த்தது.

Wednesday 15 August 2012

பழைய துக்கமும் புதிய வெயிலும்.


இன்று வெயில் ஜாஸ்தி. அப்படியெல்லாம் வெயிலை அலுத்துக் கொள்கிறவன் இல்லை நான். எனக்கு வெயில் பிடிக்கும். மழையைப் பிடிக்கிறவனுக்கு வெயிலும் பிடிக்காமல் போகாது. ஆனால் பருவம் தப்பிய வெயில் எதையோ உரக்கச் சொல்கிறது. புரிந்துகொள்ளமுடியாத லிபியில் எழுதப்பட்டிருக்கும் அதன் வெள்ளை வரிகளை வாசிக்க இயலாதவனாக இருக்கிறேன்.

ஆடி மாதம் முடியப் போகிறது. காற்றே இல்லை. ஏதோ ஒரு வித துக்கம்
வெயிலாக, அல்லது வெயிலில் படர்ந்து கிடக்கிறது. ஒரு பறவையின் குரலும் அற்ற இந்த பிற்பகலை என்ன செய்வது எனத் தெரியவில்லை. செடிகொடி எல்லாம் அசையாது உறைந்துவிட்டன. போய் சாமி வந்தது போல, உலுக்கிவிட்டு வரலாமா என நினைக்கிறேன்.  ஒரு மரத்தை அசைக்காவிடினும், ஒரு செடியையாவது அசைத்துவிட முடியாதா போகும்? ஒரு இலை அசைந்தால் கூடப் போகும். அப்படி அசையும் இலையில் இருந்து திரவம் போல் வழியும் வெயிலை, வெயிலின் சொட்டை என் உள்ளங்கையில் இப்போது ஏந்தி நிற்க விரும்புகிறேன். வெயிலை ஒரு அகலைப் போல ஏந்தும் என்னை யாராவது செதுக்கி, அவருடைய தெருவாசலில் நட்டுவைத்தால் அப்படியே நின்றுவிடச் சம்மதம் எனக்கு.

%

இதற்கிடையில் எனக்கு வே. முத்து குமார், தேடி எடுத்து அனுப்பியிருக்கிற
இந்தக் கதையின் பெயரும், ‘துக்கம்’  என இருக்கிறது. பிரக்ஞை அல்லது கசடதபற இதழ்கள் ஒன்றில் எப்போதோ வெளிவந்த கதை இது. எழுபதுகளின் மத்தி அல்லது கடைசியில் அச்சான இக்கதையை, பிரபஞ்சன் எதிர்மறையாக விமர்சித்து, அடுத்த இதழில் எழுதியிருந்தார். போகப் போக நேர்மறை எதிர்மறை எல்லாம் பழகிப் போயிற்று. எழுதுகிறவனுக்கு அந்தக் கணக்கெல்லாம் அவசியமில்லை என்பதுதான் நிஜம்.

 இதை திருநெல்வேலி வானொலியில் வாசித்திருக்கிறேன் என ஞாபகம்.
ஒலி காற்றில் பரவும் ஒன்றுதானே.  விதையும் காற்றில் பரவும். இந்த முற்றிய வெயிலில், எருக்கல விதை போல மினுங்கி இந்த ‘துக்கம்’
கதை பரவிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.  இந்த அணுவைப் பிளந்த நொடியில், உங்களில் யாரேனும் ஒரு இறகு, ஒரு சருகு அல்லது எருக்கலவிதை அந்தரத்தில் பறந்து நகர்ந்துகொண்டு
இருப்பதைப் பார்ப்பீர் எனில், ஒருவேளை அப்படி நீங்கள் பார்ப்பது இந்தக் கதையாகவும் இருக்கக் கூடும்.

%



துக்கம்.
_________


அவன் காலையில் வந்துவிட்டானாம்.

நேற்றிலிருந்து அவன் வரவேண்டும் என்று காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் கரைந்து ஒரு மெளனத்திற்கு வந்திருந்த சோகம் அவன் வந்த போது மறுபடி வெடித்திருக்கும். தந்தி கிடைத்து, கிடைத்த நேரத்திலிருந்து பஸ்கள் மாறி, ஒரு பஸ்ஸிலிருந்து இன்னொரு பஸ்ஸிற்குக் காத்திருக்கிற கணங்கள் சகிக்க முடியாததாகி, இறந்து போன அப்பாவின் முகம் மனதுக்குள் புரள அவன் வந்த இருட்டு எவ்வளவு கனமாக இருந்திருக்கும்.

வந்த நடுராத்திரியில் இரண்டாவது ஷோ கூட முடிந்துவிட்ட நேரத்தில் டவுண் பஸ் நிச்சயம் இருந்திராது. நடந்து தான் வந்திருப்பான். இன்னும் மிச்சமிருக்கிற ஹைரோடின் மரங்கள் நிழல்களை லேசாகச் சிந்தியிருக்கும். நிலா பூசியிருக்கும். ஒர்க் ஷாப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருக்கிற கையில் மத்தாப்புச் சிரிக்கும். பெரிய ட்ரக் ஒன்றுடன் அலுமினிய லாரி வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும். பெட்டிக்கடைக்குப் பக்கத்துப் பெஞ்சில் ஒரு உடம்பு குறட்டை விடும். பிய்ந்து தொங்குகிற சினிமா போஸ்டரை விலக்கி விலக்கிக் களகளவென்று சாக்கடைத் தண்ணீர் ஒடும். ட்ராபிக் கான்ஸ்டபிள் இல்லாத குடை பீட் நடந்து வருகிற இவனைப் பார்க்காமல் நிற்கும். தெப்பக்குளத்தில் இப்போதும் கூட யாராவது துவைத்திருப்பார்கள். கோபுரமும் நியான் விளக்கும் பக்கத்தில் வரும். ரஸ்தாவில் பச்சைச் சவுக்கங்களை விட்டுவிட்டு ஏணியும் பசை வாளியுமாக நோட்டீஸ்கள் சுவர்களில் ஏறும். மார்க்கெட்டில் லோட் இறக்குகிற லாரிகளில் ஒரு மூட்டையின் சிழிசலில் கத்திரிக்காய்க் காம்பின் வளைசல் எட்டிப் பார்க்கும். போலீஸ் ஸ்டேஷனின் நடையில், இருளில் புதைந்துவிட்ட அந்த நாளின் பேப்பரை ஒரு காக்கி உடை தொப்பியில்லாமல் படித்துக் கொண்டிருக்கும்.

அப்புறம் தெருவை பார்க்கத் திரும்பினதும் ரொம்பவும் அழுகை கனத்துக் கொண்டே வந்து, லாண்டிரியில் பறக்கிற கங்குச் சிவப்பை, மரக்கடை முன்னால் காத்துக் கிடக்கிற கல்லுரல்களை, குறுக்கே ஒடுகிற நாயை, தெருப் பைப்பில் கால் கழுவி விட்டுப் போகிற ஒருத்தரை எல்லாம் கடந்து, வீட்டிற்கு வந்ததும் “அப்பா” என்று வெளிச் சிதறியிருக்கும். இவனைப் பார்த்த கனத்தில் மற்றவர்கள் தான் ஹோவென்று அழுதிருப்பார்கள். முக்கியமாக அம்மா.

அவன் எப்படி அழுதிருப்பான் என்று தெரியவில்லை. உள்ளே வாசலில் போய் உட்கார்கையில் அவன் முகத்தில் அழுகையில்லை. அவன் மாத்திரமில்லை. அவனுக்கு மேல் உள்ள ரெண்டு அண்ணன்களிடம் கூட அவ்வளவு வருத்தமில்லை. நண்பர்களாக உள்ளே போன போது அவன் ஏறிட்டுப் பார்த்து விட்டுக் குனிந்து கொண்டான். ஏறிட்டுக் குனிந்து கொள்கிறது தான் இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தும் போலிருக்கிறது. கூட்டமாக வந்து வந்து போகிறவர்களிடம் பேச முடியாது. அழ முடியாது. வயது குறைந்த அவனிடம் பெரியவர்கள் வந்து துக்கம் விசாரிக்கவும் போவதில்லை. அப்படியிருக்கும் போது நண்பர்களிடமும் அவன் பேசாமல் குனிந்து, அப்படிப் பேசாமல் இருந்தால் தான் சோகம் என்றாக நினைத்து, எதிரே உட்கார வேண்டியதாயிற்று.

வாசல் ரொம்ப சுருக்கம் . ஒரு பக்கத்தில், பெஞ்சில், இறந்து போன அப்பாவுக்காக வந்திருந்தவர்கள் இரண்டு, மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். எதிர்த்த வீட்டு ஒட்டுத் திண்ணையில் நாங்கள் நான்கு பேர் உட்கார்ந்திருந்தோம். காலை முழுதாகக் தொங்கப் போட முடியவில்லை. ரொம்பத் தணிவு. அவனுடன் பேச முடியாமல் வெறுமனே என்ன நடக்கிறது என்று பார்க்க மட்டுமே இனி முடியும்.

அவன் இன்னும் அங்கே தான் உட்கார்ந்திருந்தான். ரொம்பவும் சின்னப் பையன் போலிருந்தான். நிறைய வளர்ந்திருந்த முடி சரிந்து கிடந்தது. சட்டையில்லாத உடம்புடன் அவன் மடிந்து உட்கார்ந்திருந்ததில் ஒரு லேசான அழகு இருந்தது. சோகத்தின் அழகு. பக்கத்தில் குருக்களையா வந்து ஏற்பாடுகளைப் பண்ணிக் கொண்டிருந்தார். குடங்கள், செம்புகள் என்று இறங்கு வரிசையில் இரண்டு, மூன்று பாத்திரங்களில் நூல் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு பக்கத்தில் கொப்புடன் பறித்து வந்திருந்த மாவிலை.பூவும், மாலையுமாக முரட்டு இலை கீறின பொட்டலம் இருந்தது. தாம்பாளம் இருந்தது. வெங்கல மணி இருந்தது. அத்தானாக இருக்கலாம். அவர் தான் மேல் துண்டுடன் நின்று வேண்டியதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் எல்லோரும் வேடிக்கை பார்க்க குருக்களையா பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டன. இந்த துக்கத்திற்கு சம்பந்தமே இல்லாத முகங்களுடன் அவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இப்படி நேரத்திலும், கல்யாண நேரத்திலும் குழந்தைகளுக்குக் குருக்களையா செய்கிற காரியங்கள் சுவாரசியமானதாகி விடுகின்றன. அது அவற்றின் சத்தமான பேச்சில் தெரிந்தது. இட்லி சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லிக் கொண்டது ஒன்று. சூடனோ பத்தியோ தேவைப்பட்டபோது நான் கொண்டாரேன் என்று முந்திக் கொண்டு ஓடின. ஓடமுடியாமல் தள்ளப்பட்ட ஒன்று அழுதது.

மறுபடியும் அந்த மேல் துண்டு போட்ட மனிதர் தேவைப்பட்ட பொருளுடன் வந்தார். குழந்தைகளை மெதுவாகச் சத்தம் போட்டார். உள்ளே போய் உட்காரச் சொன்னார்.முடியாது என்ற குழந்தைகளை வாயைப் பொத்தி விரலை வைத்து உஷார் பண்ணினார். யாரிடமோ இருந்து துண்டுச் சீட்டையும் சில்லறையையும் வாங்கி மடியில் கட்டிக் கொண்டார். “’பையை உள்ளே கொடுத்திட்டியா’ என்றார். தோளில் சங்குகளைப் போட்டுக் கொண்டு வந்தவனின் தாமதத்திற்குச் சத்தம் போட்டார். வேட்டியை மடித்துக் கொண்டு அவன் உட்காரப்போகையில் ‘இரு இரு’ என்று அவனைக் கூட்டித் தனியாகப் போய் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு வந்தார். தலைப்பாகையைச் சுருணையாக மடித்து அதன் மேல் சங்கை வைத்தபடி உட்கார்ந்தவன் முகத்தில் இப்போது சின்னதாக ஒரு சிரிப்பிருந்தது.

வந்திருந்த எங்களுக்குள்ளேயும் ஒன்றும் பேச இல்லாதது போல் ஒரு மெளனம் இறங்கியது. காற்றும் சாரலுமாக பொசு பொசுவென்று ஒருதடவை வீசினது. சுவரை ஒட்டிப் பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த தென்னை சலார் என்று தோகையும் கீற்றுமாக விசிறிக் கொண்டது. இந்த வீட்டில் நடப்பதை எட்டிப் பார்ப்பது போல் கொஞ்சம் குனிந்திருந்த தென்னையில் பாளை வெடித்து உட்பக்கம் பல் பல்லாக உதிர்ந்து கிடந்தது. அழுகை வெளியில் கேட்காத, குழந்தைகள் இரைந்து கொண்டிருக்கிற, சாரல் அடிக்கிற இந்தக் காலையில் ஒரு சோகமற்ற தன்மையிருந்தது. நாட்பட்ட நோயாளியாக இருந்ததால் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறி இன்றைய நிறத்திற்கு வந்திருக்கும். எழுந்திருந்து போய்விடலாம் என்று தோன்றியது. இன்னும் நாலைந்து பேர் யாராவது உள்ளே வந்தால் நாங்கள் எழுந்திருப்பது இயல்பாக இருக்கும். குனிந்து கொண்டிருக்கிற அவன் நிமிர்ந்தாலாவது தலையை அசைத்து விட்டுப் போய்விடலாம்.

அவன் நிமிராமலே இருந்தான். ஆற்று மணலில் விரலால் கிண்டுவது போல் வெறும் தரையில் கீறிக் கொண்டிருந்தான் . திடீரென்று அவன் என்ன எழுதியிருப்பான் என்று தோன்றியது. எல்லாக் கவிதைகளிலும் அவன் இடையறாது உச்சரிக்கிற அவளுடைய பெயரைத் தான் அப்போதும் எழுதியிருப்பான் என்று தோன்றியது. இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு அந்தப் பெயர் எழுதத் தோன்றுமா ? அல்லது வந்திருக்கிற என் பெயரை, கிட்டுவை, கணபதியை, ராஜுவை எழுதிப் பார்ப்பானா? இல்லை இறந்துவிட்ட அப்பா பெயரையா ? கொஞ்சம் கொஞ்சமாக மனம் விலகி விலகி ஒரு நிசப்தத்தில் நின்று கொண்டிருந்தது.

யாருடனாவது பேசினால் தேவலை . யாரும் பேசுவதாக இல்லை. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார்கள். ஏன், இவ்வளவு நேரம் ஆகிறது ? உள்ளே என்ன தான் நடக்கிறது ?

ஏறிட்டுப் பார்க்கும் போது ஒரு பையன் வெளியில் வந்தான் . வெளியில் வந்த பையனை ஒரு வளையல் கை பிடிக்க வந்து, பிடிக்க முடியாமல் நழுவி வெளியே வந்தான். தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்த இவன், பையனை நிமிர்ந்து பாத்துவிட்டுக் குனிந்து கொண்டான். குருக்களையா பக்கம் நின்று கொண்டிருந்த மனிதர் பையனைப் பார்த்ததும் ‘வீட்டுக்குள்ளே போ’என்றார். பையன் போகவில்லை. தூணைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

தூணைப் பிடித்துக் கொண்டு அவன் நின்ற விதம் இரக்கமாக இருந்தது. அழகான அந்த எழு வயது முகத்தில் ஒரு இருட்டு இருந்தது. நெற்றி முழுவதும் கலைந்து கிடந்த முடிக்குக் கீழ் மினுங்கின கண்ணில் ஒரு அலைச்சல் இருந்தது. அலைந்தது போதும் என்று நின்று விட்ட மாதிரியும் இருந்தது. இரண்டு, மூன்று குழந்தைகளின் பெயரைச் சொல்லி, ‘எல்லாரும் அவன் கூடப் போய் விளையாடுங்க. போங்க.. போங்க..’ என்று அவர் விரட்டிக் கொண்டிருந்தார். மேல் துண்டு இடுப்பில் இறங்கியிருந்தது இப்போது. குழந்தைகள் போகவில்லை. இன்னும் நூல் சுற்றப்பட்ட குடங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தப் பையன் தூணைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் . யாரையும் பார்க்காத சிரிப்பு. அருவமான எதிர் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிற சிரிப்பு. காற்றில் முகம் கண்டு சிரிக்கிற சிரிப்பு. கொடியில் தொங்குகிற துணி நிழல் போல் நெளிந்து சுயரூபம் கலைக்கிற சிரிப்பு. சிரித்துக் கொண்டே இருந்தவன் எங்களைப் பார்க்க வந்தான் . தேய்த்துத் தேய்த்து வந்தான்.

உள்ளேயிருந்து யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது.

குனிந்து தரையில் இன்னும் கீறிக் கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். இந்தப் பையனை வீட்டுக்குள் கூட்டி வரும் போது அவனிடம் அவசரமாகச் சொன்னார்கள். எங்களையும் பையனையும் பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் மறுபடி அவன் குனிந்து கொண்டான்.

எங்களிடம் வந்த பையன் சிரிப்பற்றுச் சிரித்தான். சிரித்துக் கொண்டே கேட்டான். கேட்க ஆரம்பிக்கிற வரை சிரிப்பு இருந்தது. “யார் நீ?யாரு வேணும்? அப்பாவா, அப்பா, அப்பா இல்லை. காம்ப் போயிருக்கார்?” ஒவ்வொருத்தரிடமும் இதையே கேட்டான். இதையே சொன்னான். மரத்தில் பண்ணின பொம்மை பேசின மாதிரி உச்சரிப்பில் இயல்பில்லை.

மேல் துண்டை அவிழ்த்துக் கொண்டு ஒடி வந்தார். “’டேய்..டேய்.. மாமாவை எல்லாம் தொந்தரவு பண்ணக்கூடாது’” என்று அவனை இழுத்து உட்பக்கம் போகச் சொன்னார். போகச் சொல்கிற மாதிரித் தள்ளிவிட்டார். “’அப்பா இன்றைக்கு காம்ப் போகலை. ஆபீஸ் லீவு’ என்று எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். வாசலில் வந்த பெரியவர் ஒருவரை வணங்கி உட்காரச் சொன்னார். தானும் உட்கார்ந்தார்.

பையனை எங்கள் பக்கத்தில் இருக்கச் சொன்னோம். இருந்து கொண்டான். பேசாவிட்டாலும் அந்தச் சிரிப்பு இருந்தது. சுவர்ப்பக்கம் திரும்பிக் காரை பெயர்ந்த சுவருடன் கொஞ்சம் சைகைகளால் பேசினான். வீட்டின் பக்கம் மறுபடி அந்த முகம் தெரிந்தது. இந்தப் பையன் வெளியே வரும்போது போகாமல் பிடித்து இழுத்த வளையல் கையின் முகம். இந்தப் பையனை வீட்டிற்குள் கூட்டிவரச் கூசலும் குறுகலுமாகச் சொன்ன குரலின் முகம். அது மறுபடியும் கூப்பிட்டது.

அந்தக் குரலை கேட்டதும் பையன் வழுக்கலில் இறங்கினான். தேய்த்துத் தேய்த்துப் போனான். நடைப்பக்கம் கை எட்டுகிற தூரம் வரும் வரை காத்திருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொள்கிற மாதிரி பையனை உள்ளே இழுத்துக் போட்டுக் கொண்டது அந்தக் கை.

உள்ளே விழுந்த வேகத்தில் பையன் அழுதான் . அடி விழுந்தால் அழுகிற அழுகை. வெளியே போகமாட்டேன் என்று சொல்கிற அழுகை.

கப்பென்று மனதில் கண்டு கண்டாக அடைத்தது. குனிந்து கொண்டிருந்த அவனிடம் போய்க் கைகளைப் பிடித்து வெளியே போய் நிற்கிறதாகச் சொன்னான். தலையை அசைத்தான்.

வெளியில் வந்தபிறகு மேல் துண்டு போட்ட மனிதரிடம் தான் சொல்லிக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

%

பிரக்ஞை - நவம்பர்.1975.

Saturday 11 August 2012

என்னவோ








அமைதியின்  விள்ளல்.


பதற்றம் குறைந்து
அமைதி வரக்கூடுமென
இந்த நகரத்தின் குறுக்கு நெடுக்கைப்
புனரமைக்கும் கால்களுடன்
வெவ்வேறு குடியிருப்புகளிடையே
வியர்த்து நடந்து திரும்பினேன்.
எந்த மாற்றமும் இல்லை
கொந்தளிக்கும் அலைகளின் உயரத்தில்.
மறுபடியும் புறப்பட்டேன்.
பத்தடிக்கும் தூரம் குறைவுள்ள
தெருமுனைப் பெட்டிக்கடையில்
வாங்கிவந்த ரொட்டியை
மேஜையில் வைத்துப் பிரித்தேன்.
அடுக்கடுக்கடுக்காகப் பிளந்துவைத்த
ஒரு வினோதப் பழம் போலக்
குவியத் துவங்கியது அமைதி.
ஒரு விள்ளல் எடுத்துகொண்டேன்.

%

சென்ற முறை மணல்.

வியர்வையின் உப்புக் கறையுடைய
என் கனத்த பருத்திச் சட்டையின்
வாடை நிரம்பிய அறையில்
அங்கங்கே சிந்திக் கிடக்கின்றன
உன்னால் அலட்சியப்படுத்தப்பட்ட முத்தங்கள்.
சமீபத்தில் பூசப்படாத
உன் விரல்களில் உரியும் நகச்சாயம்
எதை எச்சரிக்கிறது என
யூகிக்க முடியவில்லை.
உன்னுடைய வாகனத்தின் தலைக்கவசத்தில்
குப்பைபோலக் கிழிக்கப்பட்ட
என்னுடைய மீசைமுகம் கிடக்கிறது
ஏ.ட்டி.எம். மூலைக் கசங்கல்களாக.
வழமைபோல் நான் தயாரித்துத் தந்த
பீங்கான் கோப்பைத் தேனீரை
ஒரு வாய் கூட அருந்தவில்லை.
என்னவோ நிகழ்ந்துவிட்டது
சூடு பறக்கும் அதன் ஆவிக்கும்
இப்போது படர்ந்திருக்கும் ஏடுக்கும் இடையில்.
எந்த நொடியிலும் நீ எழுந்துபோகும்
சாத்தியத்தின் பேரீச்சைக்கன்று முளைக்கும்
இந்த உலர்ந்த நொடியில்
என் காலணிகளில் மினுங்கும்
சென்றமுறைக் கடற்கரை மணலை
பார்க்கத் துவங்குகிறேன்.

 %

கல்யாண்ஜி
உயிரெழுத்து -  ஆகஸ்ட் 2012.

Tuesday 7 August 2012

தொட்டிப் பூ




முதலில் கோபாலிடம்தான் கேட்டேன். கோபால்தான் கலாப்ரியா என்று எல்லோர்க்கும் தெரியும். அவன் தான் வலைப் பூ துவங்குவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தான். ‘கல்மண்டபம்’ என்று நான் யோசித்து வைத்திருந்த பெயரை விட,  அவன் சொன்ன ‘சமவெளி’ எனக்குப் பிடித்திருந்தது. கல்யாணியண்ணனுக்கு எது பிடிக்கும் என்பது மட்டும் அல்ல, எது சரியாக இருக்கும் என்பதும் அவனுக்கு எப்போதுமே தெரியும். அவன் ரெண்டாவது மகள் தரணிதான் முகப்பை ‘வரைகலை’த்தாள் அல்லது ‘கலைவரை’ந்தாள்.  முதலில் இருந்தது பாலை மணல் , குத்துச் செடி என ஒரு பின் புலம். கொஞ்சம் மாற்ற முடியுமா என்று தரணியிடம் சொன்னேன்.  இப்போது இருக்கிற முகப்பை அப்புறம் கொடுத்தாள். அந்த பக்கவாட்டுப் படம் சேவியர் எடுத்தது. கோபாலின் புகைப் படக் கோப்பில் இருந்திருக்கும் போல.

எனக்கு அதற்கு மேல் இம்மி கூட தெரியாது. தோன்றுவதை, சற்றுப் பிழை இன்றித் தமிழில் தட்டெழுத முடியும் அவ்வளவுதான்.  புகைப்படங்களை இணைப்பதுபற்றி வே.முத்து குமாரிடம் ஏற்கனவே விபரம் கேட்டிருந்தேன். அப்பாவுடைய அருமையான படங்களை ‘தி.க.சி’ வலைப்பக்கத்தில் அவர் பதிவேற்றுவது எனக்குப் பிடித்திருந்தது. அதில் வருகிற அப்பாவின் புகைப்படங்கள் உயிர்ப்பு நிறைந்தவை. அப்பாவைப் போல எனக்கு அழகும் கிடையாது, உயிர்ப்பும் கிடையாது என எனக்கே தெரியும்.
என் புகைப்படங்களை போட்டுக் கொள்வதில் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. தனிப்பட்ட முறையில், எனக்கு நான் மற்றவர்களைப் புகைப்படம்
எடுப்பதும், நான் எடுக்கப்படுவதும் விருப்பமானவை எனினும்.

அவர் நேற்று மாலை திடீர் என்று வந்திருந்தார்.அவருக்கு இருந்த நெரிசல் நேரங்களுக்கு ஊடேஒரு சிறுபொழுதை எனக்காக பிதுக்கியெடுத்து வந்திருந்தார். அவரிடம் எப்படிப் புகைப்படங்களைப் பதிவேற்றுவது, வரிகளை எப்படி சமன்படுத்திப் பதிவேற்றுவது போன்ற சில எளிய பயன்பாடுகளை அறிந்துகொண்டேன்.

இதற்கு முந்தி,  முதன் முதலாகப் பதிவேற்றின சி.கே.கே ஆண்டுவிழா
புகைப்படங்களை சக்தி ஜோதிதான் கொடுத்தார். அவர் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொண்டுதான் ஓரளவு சரியாக அவற்றைப் பதிவேற்றி
விட்டேன். ஒரு புதியதைக் கற்று, அதன் வழி நின்று, அதையே ஒரு மூன்றாம் நபராக சற்றுவிலகி நின்று பார்க்கையில் சந்தோஷமாகத்தான்
இருந்தது.

இந்த பூந்தொட்டிப் புகைப்படமும் அதைச் சார்ந்த என் பழைய கவிதை
ஒன்றும் இங்கே பதிவேற்றப்படுவது, முத்து குமாரிடம் எவ்வளவு சரியாக
நான் கற்றிருக்கிறேன் என மீண்டும் நான் உணர்வதற்காக.

வேறெந்த நோக்கங்களும் நிச்சயம் அதற்கு இல்லை.








                              நீ இருக்கும்
                              திசைக்கு முகம் காட்டி
                              உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல்
                              பூக்காது
                              தொட்டிப் பூ.
                              பூ பூத்தல் அது இஷ்டம்.
                              போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்.


                              %

                              கல்யாண்ஜி