Monday 26 August 2013

முக நக - 13.










18.
நான் இன்று ஒரு நாய்க்குடை.
குவிந்துகிடக்கும் கட்டுமான ஜல்லிக்குள்
மழைக்கு ஒதுங்கி நுழையும்
ஒரு கிழட்டுப் பாம்பு.
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மழையில் நனைந்தசையும்
இடுகாட்டு இருக்கலம் பூ.
மழை நிரம்பிய சாக்கடை நீரில்
இழுத்துச் செல்லப்படும்
காலற்ற பிளாஸ்டிக் பொம்மையின்
மாறாத முகச் சிரிப்பு.
நான் இன்று நான் அல்ல,
மழையின் மாறு வேடம்.
%
இதை 25.11.11ல் எழுதியிருக்கிறேன்.
அன்று மழை பெய்திருந்ததா, தெரியவில்லை.
பெய்திருக்கலாம். ஆனால் மழையைப் பற்றி
எழுதுகிற அன்றைக்கு கட்டாயம் மழை பெய்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை .
 
19.
இன்றைக்கான இருவாட்சிப் பூவில்
எவையெல்லாம் நான் பறிக்க முடியாதவை?
இன்றைக்கான முதல் குயில் கூவல்
எந்தத் திசைக் கிளை மறைவிலிருந்து ஒலிக்கும்?
இன்றைக்கான சங்கரியம்மாவின் கோலத்திற்கு
எத்தனை புள்ளி எத்தனை வரிசை?
இன்றைக்கான கவிதைகளை
வாசிக்கத் தரப் போகும் அனார் யார்?
இன்றைக்கான நிழலைத் தரப் போகும்
வெயில் எப்போது வரும்?
இன்றைக்குப் பொறுக்கக் கிடைக்கும்
ஒற்றைச் சிறகு எந்தப் பறவையுடையது?
இன்றைக்கு வாங்கும் கீரைக்கட்டுக்குள்ளிருந்து
வெளிவரப் போகும் ஆனந்தப் புழுவின் நிறம் என்ன?
இன்றைக்கு விரையும் 108ல் உயிர் உருட்டிய
கடைசிப் பகடையாக அசையும் தலை யாருடையது?
இன்றைக்குப் பேருந்து நிழற்குடையில்
அழுது உட்கார்ந்திருப்பாளா அந்த பிழியப்பட்ட பெண்?
இன்றைக்கு மகளிர் கல்லூரி வாசலில்
மல்லிகைப் பூ விற்பவளும்
அன்னாசிக்கீற்றுகள் விற்பவரும்
என்ன உரையாடிக் கொள்வார்கள்?
இன்றைக்குப் போகிற திருச்செந்தூர் ரயிலை
எந்தப் பேத்திக்கு எந்தத் தாத்தா காட்டிக்கொண்டிருப்பார்?
இன்றைக்கான ஹரிபிரசாதின் புல்லாங்குழல் எது?
இன்றைக்கான இளையராஜாவின் இசைக்குறிப்புகள் எவை?
இன்றைக்கான இந்த கேள்விகளுகளுக்கான
விடைகளை
இன்றைக்கே யாராவது சொல்லிவிடுவார்கள் அல்லவா?
%
இதை 04/04/11ல் எழுதியிருக்கிறேன்.
இப்போது எங்கள் வீட்டில் இருவாட்சி பூக்கவில்லை.
இந்தக் கீரைப் புழு பற்றி வேறெங்கோ எழுதிவிட்டேன்.
அந்த ஒற்றைச்சிறகு பற்றிய கவிதை, என் சமீபத்திய தொகுப்பில் வந்துவிட்டது. 

1 comment:

  1. இன்றைக்குப் போகிற திருச்செந்தூர் ரயிலை
    எந்தப் பேத்திக்கு எந்தத் தாத்தா காட்டிக்கொண்டிருப்பா

    ReplyDelete