Thursday 29 August 2013

முக நக - 15.









21.
நான் விதைக்கவே இல்லை.
என் மீது முளைத்திருக்கின்றன
எல்லாமும்.
*
நினைவுகளின் டிஸம்பர் பனி.
சொப்பனங்களின் போர்வையால்
மூடமுடியவில்லை
நடுங்கும் காயங்களை.
*
என் கையில் எடுத்தேன் அதை.
எடுப்பதற்கு முன் அது
சௌரஸ்யாவின் புல்லாங்குழலாக இருந்தது.
இசை பூத்திருந்தது
இரண்டுக்குமான இடைவெளியில்.
*
கோரைப்பற்களுடன் பாய்ந்து வந்தது.
கோரைப்பற்களுடன் பாய்ந்துசென்றுவிட்டது.
நான் இங்கேயேதான் நின்றுகொண்டிருக்கிறேன்
எந்தக் கீறலும் இன்றி.
*
அந்த நிலையத்தில் ஏறி
இந்த நிலையத்தில் இறங்கினேன்.
எந்த நிலையத்தை விட்டும்
எங்கோ தூரத்தில்
இருந்தது வீடு.
*
மணலைத் துடைத்துவிட்ட பின்
கடல் ஒட்டிக்கொண்டிருந்தது
அலை நுரைக்கிற
முத்தத்தில்.
*
தோட்டத்தில் பிடித்த வண்ணத்துப் பூச்சி.
என் மேல் பறக்கவிட்டுப் பார்த்தேன்.
செடியின் சிரிப்புச் சத்தம்
வெளியே.
*
மூங்கில் கழி மேல் ஏறிப் போகிறேன்.
பீர்க்கம் பூவில் அவள் படுத்திருக்கிறாள்.
*
ஒற்றைப் புறாச் சிறகு.
குனிந்து எடுத்தேன்.
வானிலிருந்து பார்க்க
அழகாக இருந்தது எங்கள் வீடு.
*
பேரங்காடிக் கண்ணாடிக் கதவுக்கு வெளியே
நிறைய காலணிகள்.
அவளுடையதைப் போலவே இருந்தன
அவளைப் போல இல்லாத ஒருத்தியின்
இரண்டு.
*
இந்த வரிகளை எல்லாம், 24.12.10 ல் எழுதியிருக்கிறேன். இவற்றில் இரண்டோ மூன்றோ கவிஞர் அறிவுமதியின் தைஇதழில் வெளிவந்த நினைவு. நான் எதையும் குறித்துவைக்கிற. கோப்பில் சேர்க்கிற பழக்கம் இல்லாதவன்.
 

%%%%%%%
 

No comments:

Post a Comment