Friday, 18 May 2012

காந்தியைப் போல் ஒரு...


காந்திமதியை நான் இதுவரை பார்த்ததில்லை.
சங்கரியம்மாதான் பார்த்திருக்கிறாள். யார் யாரிடமோ எல்லாம் விசாரித்து, இந்த மாதிரி வீடு பெருக்கித் துப்புரவாக வைக்க வேண்டும், குடிப்பதற்கு ஆற்றுத்தண்ணீர் இரண்டு குடம் பிடித்துவைக்க வேண்டும், சாப்பிட்ட ஏனம், தட்டு, தம்ளர், டிஃபன் கேரியர் கழுவிக் கவிழ்த்த வேண்டும். ஆத்திர அவசரத்துக்கு ஒரு மடக்கு வென்னீர் தேவை என்றால் வைத்துக் கொடுக்க வேண்டும். ‘ஒண்ர வாடத்துக்கு ஒருக்கதுணி துவைத்துப் போட வேண்டும்.
இதைவிட முக்கியமானது. குளியலறையைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வயசாளி நடமாடுகிற இடம். ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடக் கூடாது ‘  என்று நல்ல  விதமாக எடுத்துச் சொல்லி அமர்த்திவிட, எல்லாவற்றையும் சரி சரி என்று
‘ஏத்துக்கொண்டு ‘  வேலையை ஒப்புக் கொண்டவள்தான் காந்திமதி.
காந்திமதியை இனி, காந்தி என்றே சொல்லுவோம். எப்படி எல்லோரும் கூப்பிடுகிறார்களோ அப்படிச் சொன்னால் தப்பு இல்லையே. அதுதானே நன்றாகவும் இருக்கிறது. காந்திக்கு
என்ன வயதிருக்கும், எத்தனை பிள்ளைகள், வீட்டுக்காரர்
என்ன வேலை பார்க்கிறார், முன்னே பின்னே ஆள் எப்படி,
அப்படி இப்படி பேச்சு ஒன்றும் இல்லையே. இதுக்கு முந்தி வேலை பாத்த வீட்டில இருந்து அவ ஏன்
நாம கூப்பிட்ட உடனே டக்குண்ணு நிண்ணுட்டா. வாய்
நீண்டுட்டாக்கூட பரவா இல்ல. கை நீண்ட்ரப் பிடாதுல்லா..
இப்படி ஏகப் பட்ட விசாரணைக்கு அப்புறம்தான் , “ அப்போ
வார ஒண்ணாந்தேதியில இருந்து வேலைக்கு வந்திரு. நாளும் கிழமையுமா இருக்கு. இன்ணைக்கே தூத்துப் பெருக்கி, வாசல்ல தண்ணி தெளிச்சு விட்டுப் போயிரு, என்ன காந்தி? “ என்ற வார்த்தையே வந்திருக்கும்.
இவ்வளவும் அப்பா இருக்கிற 21.இ. சுடலைமாடன் கோவில்
தெரு வீட்டைப் பராமரிக்கவும், ‘ பத்து நாளைக்கு ஒருக்க, ஒட்டரை அடிச்சு நூலாம்படை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் தான். காந்தி வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேல் இருக்கும். அப்பாவைப் பார்க்கப் போகிற ஒரு தடவை கூட நான் காந்தியைப் பார்த்ததில்லை. அதைப் பற்றி அப்பாவிடம் பேச்சு
எடுத்ததும் கிடையாது. பேச்சு வாக்கில் அப்பாவோ, வள்ளிநாயகமோ காந்தி சத்துணவுக் கூடத்தில் ஆயாவாக இருப்பதாகச் சொன்ன ஞாபகம். சங்கரியம்மா கூடக் கேட்பாள்.
“ வேலைக்காரி ஒழுங்கா வாராளாமா. வீடு பாக்கிறதுக்குத் துப்புரவா இருக்கா? பாத் ரூம்லாம் கழுவிடுதாளா. அப்படியே வழு
வழுண்ணு வழுக்கிவிழுத மாதிரிக் கிடக்கா? “ . பொதுவாகவே இந்த ஒழுங்கு, துப்புரவு குறித்து எல்லாம் அதிக அக்கறை இல்லாத நான் அதற்கான பதிலை வேறு மாதிரி சொல்வேன்.
பார்க்கதுக்கு அப்பா நல்லா இருக்கா “. யார் நன்றாக இருக்க வேண்டுமோ அவர்கள் நன்றாக இருந்தால் போதாதா? இடங்களை விட மனிதர்கள் அல்லவா முக்கியம். எப்பவாவது ஒரு தடவைதான் அப்பாவையே பார்க்கிறேன். அந்த நேரத்தில் அப்பாவையே பார்த்துவிட்டுப் போகிறேன். அதை விட்டுவிட்டு, கதவுக்குப் பின்னால் ஒட்டரை தொங்குகிறதா, புறவாசல் கதவை ஒழுங்காக தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்களா? வாசல் கல்லில் இரண்டு மூன்று நாய் படுத்திருக்குமே. குடம் செப்(பு)பானை எல்லாம் களிம்பு இல்லாமல் விளக்கியிருக்கிறதா? இதையெல்லாம் பார்த்து அந்த நேரத்தை வம்பாக்க முடியுமா?
மேலும் வாசல் கல்லில் இரண்டு நாய் படுத்திருப்பது, ஒருவகையில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வாசலில் நன்றாகத்தானே இருக்கிறது.  ஒரு முதுமையும் முதிர்ச்சியும் நிறைந்த மனிதர் தனியாக இருக்கும் வீட்டின் சித்திரத்தை அவை 
அப்படிப் படுத்திருப்பதன் மூலம் முழுமைப் படுத்துகின்றன என்பதுதானே நிஜம்.  செப்புப் பானை, ஆற்றுக்குள் கிடக்கிற
வட்டப் பாறை மாதிரி எப்படிப் பார்த்தாலும் அழகாகத்தானே இருக்கும்.

காந்தி என்கிற மனுஷி, அந்தச் செப்புப் பானையை விட, கல்நாய்களை விட ஒருபோதும் குறைந்தவளாக இருக்க முடியாது அல்லவா. அவளைப் பார்க்க அவசியம் இல்லை.
அவள் ஒழுங்காக, அவளுடைய சத்துணவு வேலை போக ஒழிந்த நேரங்களில், நிச்சயம் அப்பா இருக்கிற வீட்டை சுத்தமாகவே வைத்துக் கொள்வாள். நிச்சயம் குடிக்க தண்ணீர் இல்லாமல்
வெற்றுப் பானையாக இருக்க விட்டிருக்க மாட்டாள். கண்டிப்பாக
‘என்ன ய்யா. இந்த நேரத்துல படுத்துக் கிடக்க மாட்டியளே. ஒடம்புக்குக் கிடம்பு சரியில்லையா. சுடுதண்ணி வச்சுத் தரட்டுமா.  சாப்பிட்டேளா இல்லயா. சந்திப்பிள்ளையார் முக்குக் கடையில சுக்குவென்னி வாங்கியாரவா?’  என ஒரு நாளாவது அப்பாவைப் பார்த்துக் கேட்டிருப்பாள்.  எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
அப்பாவிடம், எந்த மனிதரும் மனுஷியும், அப்பாவைப் போலவே உண்மையாக மட்டுமே இருக்க முடியும்.  அப்பா அப்படி.
அப்பா அப்படி எனபது அப்பாவைப் பார்த்த நிமிடமே யாருக்கும் தெரிந்துவிடும். காந்திக்கு மட்டும் தெரிந்திருக்காதா என்ன?
கொஞ்சம் அல்ல, ரொம்பவே தெரிந்திருந்தது.  
வே.முத்துகுமார் நடத்துகிற ‘தி.க.சிவலைப்பூவை சமீபத்தில்,
அப்பாவின் புகைப்படங்கள் தேவைப்பட்ட ஒரு அவசரமான
மாலையில், திரும்பவும் திருப்பிக் கொண்டிருந்தேன். அதில் இருக்கிற சமீபத்திய அப்பாவின் புகைப் படங்கள் மிக அழகானவை. எது அழகு? கனிவுதான் அழகு. அப்பா அவ்வளவுகனிந்து இருக்கிறார்கள். கனிவின் ஆனந்தம் சதா மினுங்கும் உடல் மொழியை காலம் அப்பாவின் மடியில் வைத்திருக்கிறது.
மனிதர்கள் வாழ்வாலும் அனுபவத்தாலும், அப்படி அனுபவித்து  அனுபவித்து இந்த வாழ்வைப் புரிந்துகொள்வதாலும் இப்படி
அழகுற்றுக் கொண்டேதானே வருகிறார்கள். அவர்கள் அழகாக
இல்லாதவர்கள் போல இருந்த இளம் வயதை விடவும், அத்தனை தாத்தாக்களும் பாட்டிகளும், தோலில் ஆயிரம் சுருக்கங்களோடு பொக்கை வாயோடு இடுங்கின கண்களில்
சுடரும் அபூர்வ ஒளியோடு இப்போது அழகாகத்தானே இருக்கிறார்கள். ஒன்று நமக்கு அவர்கள் கையைப் பிடித்துக்
கொள்ளத் தோன்றுகிறது. அல்லது அவர்கள் நம்முடைய கையைப் பிடித்து அவர்கள் கைக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
அப்பாவுக்கு அப்படிச் சுருக்கம் எல்லாம் விழுந்து விடவில்லை.
அப்பாவைப் பார்க்கும் போது, ஒரு சாயலில் தற்சமயம் அவர்
ஆர்.கே.நாராயண் போலவும், ஆர்.கே.லக்‌ஷ்மண் போலவும்
எல்லாம் எனக்குத் தோன்றுகிறது. அப்பாவின் மூக்கு நுனி
தன்னிச்சையாக ஒரு வாதமுடக்கி நெற்றைக் கடிக்கிற
பச்சைக்கிளியின் அலகு போல இருக்கிறது. அப்பாவைப் பார்க்கிற போது ஒரு பறக்கும் கிளிச்சத்தம் கேட்கிறது என்று கூடச் சொல்வேன்.
அப்படியான புகைப்படத்துக்கான தேடலில்தான், அப்பாவின்
88 வது பிறந்த தினத்தை அப்பா தன் நண்பர்கள் சிலரோடு எங்கள் வளவுக்குள்ளேயே கொண்டாடியிருப்பதைப் பற்றிய
பதிவு இருந்தது. அறிவரசன், சுபாஷிணி, கழனியூரன், திவான், பொன்.வள்ளி நாயகம், கிருஷி, இன்னும் ஏகப்பட்ட பேர்
அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் வார்னிஷ்
அடிக்காமல்,வெயிலிலும் மழையிலும் ‘அலரிப்போனநாலைந்து
மரத் தூண்கள் ஒருபக்கமும். வெள்ளையடிக்கப்பட்ட சதுரக்

கல் தூண்கள் மறுபக்கத்திலும் இருக்கும் அந்த வாசலில்,ஒரு
பத்துப் பதினைந்து பேர் பிளாஸ்டிக் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து, பேசுகிறவர்களின் முகத்தை மிகக் கவனமாக உற்றுப் பார்த்திருக்கும் படங்கள் அவ்வளவு அழகாக இருந்தன. அங்கேயே பந்தல் போட்டு, ‘மணவடை கட்டி மூன்று தலைமுறைக் கல்யாணங்கள் நடந்த போதெல்லாம் கூட அந்த வாசல் இவ்வளவு அழகாக இருந்திருக்காது. நாங்கள் டில்லி சாய்பு என்று அழைக்கிற யுனானி மருத்துவரின் நரைத்த தாடியுடனான அன்றைய முகம் போலப் பேரழகுடைய ஒரு முகத்தை நான் அதுவரை பார்த்ததே இல்லை என்றே சொல்லவேண்டும்.
இப்படி எல்லோரையும், எல்லாவற்றையும் அழகாக்குகிற பொழுதாக அது இருந்திருக்கிறது.. அதனால்தான் ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். எல்லோரும் பேசினது கூடப் பெரிதில்லை.
அந்தப் பதிவு இப்படி முடிகிறது.
தி.க.சி.வீட்டு இல்லப் பணியாளர் தோழி.காந்திமதி, வளவு வீட்டு சகோதரி திருமதி. சுந்தரி ஆகியோர் தி.க.சி அவர்களின் பண்பு நலன் குறித்துப் பேசியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது
அப்பாவை தி.க.சி என்று அறியாத. நடு வீட்டுத் தாத்தா என்று
மட்டும் அறிந்த அந்த சுந்தரியும், ஒரு ஐயாவாக ஒரு வயசாளியாக, ஒரு மனிதராக மட்டும் அறிந்த காந்திமதியும் அந்தப் பொழுதில்
பேசிய பேச்சு எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்.  சுந்தரி என்கிற வளவு வீட்டுப் பெண் சேர்ந்தாற்போல நான்கு வார்த்தைகள் ‘ஆம்பிளைகள் முன்னால’ இதற்கு முன்பு பேசியிருக்கவே மாட்டார்கள்.
காந்தி மட்டும் என்ன, தினசரி சாயுங்காலம் மைக்கைப் பிடித்துப் பேசிவிட்டு இறங்கிக் கொண்டிருப்பவரா என்ன? அவர்கள் இருவரும் என்ன
பேசியிருப்பார்கள்? அவர்களைப் பேசத் தூண்டின அப்பாவின் அம்சம் எது?
ஒரு வயதில், ஒரு கட்டத்தில், அப்படிப் பிரித்துப் பார்க்கவும் பிரித்துச் சொல்லவும் தனித் தனி அம்சங்கள் இன்றி, அந்த மனிதனே ஒரு பேரம்சம் ஆகிவிடுவார் போல.
அப்பா அப்படித்தான் அன்றைக்கு ஆகி இருந்திருக்க வேண்டும்.
அன்றைக்குக் காலை அப்பாவைப் போய் பார்த்துப் பேசிவிட்டுவந்தேன்.
ஆனால் அந்த சாயுங்காலத்தை நான் இழந்துதான் போனேன். முக்கியமாக, சுந்தரியின் பேச்சை, காந்தியின் பேச்சை எல்லாம்.
எனக்கு இப்போது அப்பாவைப் பார்க்கத் தோன்றுகிறது.
அப்பாவை விட காந்தி என்கிற, இதுவரை நான் பார்க்கவே பார்க்காத அந்த காந்திமதியை.





Tuesday, 15 May 2012

ஒரு ஒற்றையடிப்பாதை, ஒரு மரம்.

நான் நேற்றுக் காலையில் இருந்து மிகுந்த துக்கத்துடன் இருக்கிறேன்.
இந்த வாழ்வில் நான் என்னளவில் அடைந்த துக்கங்களை விடக் கூடுதலாகவே இது இன்னும் இருக்கிறது. இது என் எழுத்து சார்ந்தது. எழுதியும் எழுதாமல் போனது குறித்தது.
சில் தினங்களுக்கு முன்னால் குருதேவையும் ஹெலென் கெல்லரையும்
பற்றி எழுதும் போது எனக்கிருந்த மன நிலையின் தீவிரம் நேற்றும் இருந்தது. விளையாட்டுப் போல, இன்றைக்கு ஏதாவது பதிவேற்றுவோமே
என்றுதான் துவங்கினேன். ஐம்பது வருடங்களாக எழுதுகிற ஒருவனுக்கு எங்கிருந்தாவது துவங்கி எங்காவது போய்விடத் தெரியாதா என்ன?
எழுத ஆரம்பித்தது என்னவோ, முழுப் பரீட்சை லீவுக்குத் தாத்தா வீட்டுக்கு வந்திருக்கிற என் பேத்தி அர்ச்சனா பற்றியும் பேரன் ஆதி பற்றியும் தான்.
ஆதியைப் பற்றிய முதல் வரியோடு துவங்கினதாகத்தான் ஞாபகம். ஆனால் அது எங்கெங்கோ என்னை இழுத்துக் கொண்டு போயிற்று. கவிதை குறித்தும், இந்த வாழ்வு குறித்தும் என அது அழகாக ,   பாறைக்காக விலகி, பாறைக்கு அப்புறம் இணைகிற நதியின் த்டம் என மிக அழகான சொற்களிலும் வரிகளிலும், அந்தந்த நேரத்தில் தோன்றிய இடங்களில் தன்னிச்சையாக முத்தமிட்டுக் கொண்டு, அந்தந்தக் கணத்தில்
தோன்றிய பாடல்களை இசைத்துக் கொண்டு, இக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாறிக் கொண்டு, ஒரு பூ உதிர்த்து, ஒரு கனி கடித்துஅது வெயிலெனில் என் தெருக்கடைசி வரை பளீரிட்டு, அது மழையெனில் எங்களின் பூர்வீக வீட்டுப் புறவாசலில் கிடக்கிற கல்லுரலின்
நடுக்குழி நிரப்பி, பொருக்காடிய என் புண்களைத் தோண்டி,  தன் ரத்தம் பார்க்கும் தருணத்தின் தவம் பெருக்கி, அறியாதோர் வாத்தியம் இசைத்து.   டையாதோர்  தீச்சுகம் மிகுத்து, சுட்ட பழம் ஒதுக்கி, கெட்ட பழம் ருசித்து,
வேரோடி,  தேரோடி  விரிந்துகொண்டே போயிற்று.
ஆதியை முன்வைத்தும் அர்ச்சனாவை முன்வைத்தும் என்னை இடவலம்
அற்றுப் பார்த்துக் கொள்கிற பளிங்குப்பலகையாக அந்த ஏழரை மணி
வெளிச்சம் இருந்தது.  என் விலாப்புறங்களில் இவ்வளவு பெரிய சிறகுகளை நான் சமீபத்தில் உணர்ந்தது கிடையாது.. வரைந்துகொண்டிருக்கும் போதே ஒருபோதும் வரையும் ஓவியம் புலப்படுவதே இல்லை.  கடைசி வரி எது என அறியாக் கடலில் தான்
முதல் வரியின் கல் துணை பூட்டிப் பாய்ச்சப் படுகிறோம்.  அதுதான் வழக்கம்.  நேற்று அப்படி இல்லை. கடைசி வரியை என்னால் வாசிக்க முடிந்தது.  தக்கை அமிழ்வது தெரிந்தே தூண்டில் கடித்தேன்.
எப்போது என் காலடிப் பலகையை உருவினார்கள் என்று தெரியவில்லை.
என் மொத்த வரிகளும் ஒற்றைச் சொடுக்கில் தூக்கில் இடப் பட்டுவிட்டன.
ஒரு கால் உதறல் இல்லை. ஒரு தொடைப் பிறாண்டல் இல்லை.  மலம்
இளகவில்லை. விந்தொழுகவில்லை. ஆனால் முடிந்தது எல்லாம்.
எனக்கென்ன தெரியும்? இந்த நாலைந்து வருட மடிக்கணினிப் புழக்கத்தில்
தமிழில் தட்டெழுதத் தெரியும்.  ஒரு மென்பொருள், வன்பொருள் அறியாமல் என்னைப் போல் எத்தனை கோடிப் பேர் இருப்பார்கள் கணினிப் பயனீட்டிக்கொண்டு. அவர்களில் ஒரு சிலர் இந்த என்னுடைய திங்கட் கிழமைக் காலைத் துக்கத்தை உணரமுடிகிறவர்களாக இருப்பார்கள் என
நினைக்கிறேன்.
எத்தனை கடிதங்கள், எத்தனை கதைகள், எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன் இதுவரை. அவற்றில் ஒன்றைக்கூட என்னால் மீண்டும் ஞாபகத்தில் இருந்து சொல்லவே இயலாது எனக்கு.  முந்தின வரியாக
எழுதியதை அடுத்தவரியில் நினைவில் இருத்தமுடியாதவனாகவே தொடர்ந்து இருக்கிறேன்.
முதன் முறையாக, கணினியில் நேரடியாக எழுதத் துவங்கியிருக்கும் இந்த சமீபத்திய பயிற்சிக்காக வருத்தப் படுகிறேன்.  என் நண்பர்கள், என் உறவினர்கள் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே விபத்துக்குள்ளாகி
இழந்து துடித்திருக்கிறார்கள்.  அவர்களின் அத்தனை துயரமும் விம்மலும்  நேற்றிலிருந்து என்னிடம் உண்டு.
எனக்கு கோபாலைத் தவிர யாரைத் தெரியும். அவனிடம்தான் சொன்னேன். அவன் அவனுடைய மகள் தரணியிடம் சொன்னான். கோபாலுக்கு எப்படி நான் கல்யாணியண்ணனோ அப்படித்தான் அவன் பிள்ளைகளுக்கும். நேற்று என்னவோ தரணி என்னை,’பெரியப்பாஎன்றாள். எப்போது எப்படிக் கூப்பிட
வேண்டும் என்ற நுட்பம் இந்தப் பெண்பிள்ளைகளுக்கு எப்படி வருகிறது என்று தெரியவில்லை.  அவ்வளவு இதமாக இருந்தது அந்தக் குரலும் அழைப்பும்.
அவளாலும் அந்தப் பக்கத்தை மீட்டுத் தரமுடியவில்லை.
அவள் வேறு ஒன்றைச் செய்தாள். அந்த நீல இடைஞ்சலை அப்புறப் படுத்தி விட்டாள். பாலைவெளியின் மணல்வரிகளையும் அந்த குத்துச்
செடியையும் அகற்றி விட்டாள். ஒரே ஒரு மரம் நட்டிருக்கிறாள். ஒரு ஒற்றையடிப் பாதையும் இட்டிருக்கிறாள்.
மீண்டும் நான் நடக்க வேண்டும்.




Friday, 11 May 2012

பெய்தலும் நனைதலும்.

எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே எதையும் எதிர்பார்க்காத மனநிலையில்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.’எதிர்பாராதது’ என்ற ஐம்பது வருடத்திற்கு முந்திய ஒரு திரைப்படத் தலைப்பு அப்போதே எனக்குப் பிடித்திருந்ததற்கு இப்படி ஏதாவது உளவியல் அடிப்படைகள் இருக்கலாம்.
மறுபடியும், நேற்றைய எதிர்பாராத பிற்பகல் பற்றி. அந்த நேரத்தின் கோடை
மழை பற்றி.  கோடையின் பிற்பகல்கள் எப்போதுமே இப்படி மழை வருவது போலமூடாக்குப் போட்டு அழகு காட்டுபவை. தணிந்து வருகிற வெயில் மட்டும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்.  மிகுந்த அவசரமான வேலை ஒன்று முடிக்கவேண்டிய அவசியத்துடன் காத்திருப்பது போல, அது சத்தம் காட்டாமல் நிழலோடு போகும். ஏற்கனவே பிற்பகல்கள் மௌனமானவை. மௌனத்திற்கு ஒரு அழகு உண்டு. அழகுக்குப் பயம் உண்டாக்கும் ஒரு கூரிய விளிம்பு உண்டு.  ஒரு பறவைக் குரல் இருக்காது. அங்கங்கு இருக்கும் அந்தந்த மர இலைகளின் கீழ், பறவையின் குரல்கள் ஒரு கூட்டுப் புழுக் கூடு போல் தொங்கிக் கொண்டிருக்கும்.  ஒரு செருப்புச் சத்தம் கேட்டால் ஆச்சரியம்.
‘இதே ஜோலியா போச்சு இதுக்கு. இப்பதான் அடிச்சுக் கொட்ட போகிறது மாதிரி பாவலா பண்ணும். ஒரு காத்து வந்து அப்படியே மழையக் கொண்டு
போயிரும்’.   இயற்கையின் பாவலாக்கள் அழகானவை.   புலி வருகிறது என்று நான்கு தடவைகள் சொல்லி ஏமாற்றி, வராதென ஏமாந்திருக்கும் ஐந்தாம் தடவை வரும் புலி அழகாகத்தான் இருக்கும். நேற்றைய மழை ஐந்தாம் தடவைப் புலி.
மழை இன்னும் என்னை என்னவோதான் செய்கிறது.
அதற்கு முந்திய நேரம் வரை இருந்தவனாக ஒருபோதும் இருப்பதில்லை. என்னுடைய மேகங்களும் கருத்துவிடுகின்றன. உறுமி அலைகின்றன. காற்றால் அலைக்கழிக்கப் படுகின்றன. தன் பாரம் தனக்கே கனத்து, தன்னை உடைத்துச் சிதறிக் கீழிறங்குகின்றன. பெய்யெனச் சொல்லாதே பெய்கின்றன.
நான் நீண்ட ஒரு காலத்தின் பின் மழைபார்க்க உட்கார்ந்தேன். இரண்டு வெள்ளை ப்ளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு
உட்கார்ந்து இந்த நந்தியாவட்டையில் ஊர்ந்து செல்லும் கடுத்தான் எறும்பு
பிரக்ஞையில் இருக்க, புத்தகங்கள் வாசிக்கும் என்னை சமீபத்தில் யாரும்
பார்த்திருக்கவில்லை. புத்தகங்கள் வாசிப்புப் போலத்தான் மழை வாசிப்பும். நீங்கள் பக்கங்களைத் திருப்ப வேண்டியதில்லை, மழையே தன் பக்கங்களைத் திருப்பித் தரும்.  நீங்கள் வாசிக்க விரும்புகிறவையாக அவை இராமல், மழை வாசிக்கத் தரும் தேர்ந்தெடுத்த பக்கங்கள் அவை.
நான், என் கிட்டப் பார்வையின் எல்லைக் குறைவுடன் ஏழாம் வகுப்பில் இருந்து வாழ்கிறவன் தானே. ஒரு கரும் பலகைக்கும் எனக்கும் உள்ள
தூரத்தின் மங்கிய எழுத்துக்களை, பாட்டு பாடிக் கொண்டே கண்பரிசோதனை  செய்யும் கிருஷ்ணமூர்த்தி டாக்டராலும். ஒரு வினோதமான விருப்ப வாசனை அடிக்கும் ஜெனித் ஆப்டிகல்ஸ் அண்ணாச்சி ஒருவராலும் தெளிவுறப் பெற்றவன் அல்லவா.
‘சிலேட்டில் எழுதி அழித்தது போல’ என்று ஒரு நிரந்தரமான உவமையை என்னிடம் வைத்திருக்கிறேன். அது ஒரு துயரமான இசை எனத் தொடர்ந்து எனக்கு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். நிறைந்து பெருகும் குற்றால அருவி, ஏக பொதிகை உச்சியில் இருந்து நான் பார்த்த பாபநாசமும் அம்பாசமுத்திரமும்,  பிள்ளையைப் போட்டு பலாப் பழம் எடுத்த ஓடைக்குள் பிணைந்துகொண்டிருந்த பாம்புகள், பூனை உண்ட
எச்சமாய் நான்கு நாட்களுக்கு முன், கதவைத் திறக்கையில் விசிறிக் கிடந்த பறவைச் சிறகுகள் ... எல்லாமே எனக்கு இப்படி சிலேட்டில் எழுதி அழித்த காட்சிகள் தான். ஒரு கிளி பறந்துபோவதை நீங்கள் காட்டினால்,
உங்கள் விரல்கள் நீள்கிற திசையில் நான் ஒரு பச்சைப் பறவையை வரைந்து கொள்வேன். நான் பார்க்கிற கிளி, எப்போதும் நீங்கள் காட்டிய
கிளியை விட அழகானது.
நேற்றுப் பார்த்த மழையும் அப்படித்தான் அழகாக இருந்தது.
தூரத்தில் இருப்பவை அடையாளம் அற அழிக்கப் படுவதால்,  அதற்கு முன் மரங்களாக இருந்தவை வெறும் அசைவுகளாகி இருக்கும். அதற்கு அடுத்த கட்டிடங்களின் அழிப்பு, அதைவிடச் சற்றுக் குறைவானது என்று தெளிவடைந்துகொண்டே வரும் என் பார்வையில் ஒரு சீனிக்கல்லின் மேல் தெறிக்கிற மழைத்துளி அற்புதமான துல்லியம் அடைந்துவிடுகிறது.
நான் வாசிக்கிற ஒரு புத்தகவரிகளின் அபாரமான வடிவ அழகு உங்களுக்குக் கிடையாது.  கைத் தயாரிப்புக் காகிதங்களில் இழையோடும்
தாவரத் துரும்பை என்னைப் போல உங்களால் ‘உணர’  முடியாது.  ஒரு செய்தித் தாள், அல்லது பத்திரிக்கைப் பக்கத்தின் மீது நான் கொள்கிற வாசனை மிக்க காதலை நீங்கள் கொள்ளவே முடியாது. அதிகம் வெளித்
தெரியாத ஒரு காகிதத் தழும்பை என்னால் மட்டுமே வருடிக் கொடுக்க முடியும். மழையையும் அப்படித்தான் அதன் வாசனையோடு, தழும்போடு
பார்த்து அமர்ந்திருந்தேன்.
இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கண்டு பிடிப்பு அல்ல. மழையின் போது
மழை மட்டுமே எஞ்சும். மழையைத் தவிர, மழை வேறெதையும் நம்மை நினைக்கவிடாது. மழை ஈரமே எனினும் அது நம்மை பஸ்பமாக்கும்.
அவரவர் சாம்பலின் வெதுவெதுப்பான குவியலில் அவரவ்ரை நிறுத்தி.’உருவாய் அருவாய், உளதாய் இலதாய்’ நம்மை மழை ஆக்கும்.
ஒரு தெருவோரப் பசு மழையில் அசையாது நிற்பதை நாம் நிறைய அவதானித்திருக்கிறோம். இந்த நொடி கல்லூர்ப் பிள்ளை கடையில் குனிந்து எச்சில் இலையைத் தின்றுகொண்டிருக்கிற கிழட்டுப் பசு, மழையில் ஒரு செவலை நிறச் சிலையாகிறது. அதன் கடை வாயில் தொங்கும் நரம்பு தென்னிய முரட்டு வாழையிலை ஒரு பச்சைக் கல் தகடாகச் செதுக்கப் பட்டுவிட்டது. கல்லில் செவலைக் கல் உண்டா, பச்சைக் கல் உண்டா? உண்டு. மழை எல்லா நிறத்தும் சிலை செய்யும். 
மழை உலகத்தின் சொற்களைப் பூராவும் அது பெய்கிறவரை அள்ளி, கடலில் எறிந்துவிடுகிறது. மழையின் போது உரையாட முடிகிறவரை நான் சந்தேகிக்கிறேன். 
எந்தச் சந்தேகமும் இன்றி, எந்த உரையாடலும் இன்றி மழை பார்த்துக் கொண்டே இருந்தேன்.  அல்லது மழை என்னைப் பார்க்கும்படி இருந்தேன்.
எங்கள் வீட்டு இரும்புக் கதவில் தபால்காரர் செருகி வைத்துவிட்டுப் போயிருந்த பத்திரிக்கைகளை மிகுந்த தாமதத்துடன் தான் பார்க்கிறேன்.
நானாகக் கூட அல்ல. பக்கத்துக் கட்டுமானத் தொழிலாளி தன் மஞ்சள்,
ஆரஞ்சுக் குடங்களோடு தண்ணீர் பிடிக்க வருகிறார். நான் ஒன்றும் கேட்கவில்லை. ‘மழை  செத்த வெறிச்சுட்டுல்லா’ என்கிறார். மழை சற்று விட்டுவிட்டது. நான் குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொள்கிறேன் என்று அர்த்தம். அவர் தோளில் தூக்கிவைத்த குடத்தோடு-’என்னமோ பொஸ்தகம் சொருவி வச்சிருக்கு’- சொல்லிவிட்டுக் கதவைச் சாத்துகிறார். இடது கையிலும் குடம் இருக்கிறது. இல்லாவிடில் அவரே எடுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருப்பார். இது போன்ற சிறு செயல்களின் மூலம் நம்மைக் காட்டிக் கொள்ளவிடாமல், இது போன்ற நிரம்பிய குடங்கள்
வழியடைக்கின்றன.
நான் அந்த இரு பத்திரிக்கைகளையும் எடுக்கிறேன்.
ஒன்றின் மீது ஒன்றாக மடித்துச் செருகப்பட்டவை. மேலே இருந்த பத்திரிக்கையில் மழையில் நனைந்த சந்தோஷத்தை உணர முடிந்தது. இரண்டாவது நனையவில்லை.’உயிர் எழுத்து’ நனைய விடாத சுற்றுத்
தாள் உடையது.
நான் அது நனைந்திருக்க விரும்பினேன். அதில் வெளிவந்து கொண்டிருக்கும் என் சமீபத்திய கவிதைகளும் நனைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.