Tuesday 3 March 2020

ஒரே ஒரு சிறிய மஞ்சள் வண்ணத்துப் பூச்சி.









மணி இப்போது என்ன?
11.06. இதற்கு  உத்தேசமாக ஒரு அரை மணி நேரம் பிந்தி, நேற்று  ‘மேலும்’ சிவசு சார் வீட்டிற்கு வந்திருந்தார்.  ’மேலும்’ சிவசு சார் தான்  முதன் முதலாக வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ தொகுப்பை வெளியிட்டவர், சுரேஷ் குமார இந்திரஜித்தின் ‘ அலையும் சிறகுகள்; தொகுப்பை வெளிட்டவர் என்று சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியும். அல்லது  இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

இது வல்லிக்கண்ணன் நூற்றாண்டு இல்லையா. அதைச் சார்ந்து என்னிடம் வல்லிக்கண்ணன் எழுதிய,ஆனால் இன்னும் தொகுக்கப் படாத கதைகள் அல்லது அதைப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் நல்லது என்று சார் நினைத்திருக்கிறார். அப்பாவின் அலமாரியில் அடுக்கடுக்காக இருந்த கிராம ஊழியன்’ இதழ்கள், அப்பாவுக்கு அவர் எழுதிய கடிதங்கள்  எல்லாம் ‘தவறிப் போன’ வருத்தத்தைச் சொல்லிக் கொண்டது தவிர, என்னால் உருப்படியாக எதையும் அவருக்குத் தர இயலவில்லை.

வந்த காரியம் இதுதான் என்று பேசி முடித்த பின் , அதற்குப் பிறகு பேச்சு வேறு எங்கெங்கு எல்லாமோ போகும் அல்லவா?  அவர் சமீபத்திய மேலும் மாதந்திரக் கூட்டத்தில்  வெளியிட்டிருக்கும் ‘பித்தனில் வாசித்த பத்து’ தொகுப்பில் இருந்து சிவசு சார் முதலில் புதுமைப்பித்தனின் பேசப்படாத கதைகளுக்குள் போனார். அதே இழையில்  வண்ணநிலவனின்  கவனிக்கப்படாத நல்ல கதைகள் என்று அவர் நினைக்கிற ‘வெளிச்சம்’, ‘ஆதி ஆகமம்’ கதைகளின் மேல் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போலப் பறந்துகொண்டு இருந்தார்.

இந்த வண்ணத்துப் பூச்சி உதாரணம் அவருக்குள்ளும் தோன்றியிருக்குமோ என்னவோ , முற்றிலும் வேறு இடத்திற்கு நகர்ந்து அவர் ‘ இந்த  வண்ணாத்திப் பூச்சி எல்லாம் பூ மேலதான் பறக்குமா? புல்லிலே எல்லாம் உக்காந்திருக்குமா?’ என்றார். இதைக் கேட்குப் போது சிவசு சாரின் முகம் ஒரு சிறுமியுடையதாகி இருந்தது. உடனே நானும் இன்னொரு சிறுமியாகும் மாயம் நிகழ்ந்தது.

நான் என்னுடைய வண்ணாத்திப் பூச்சிகளின் உலகத்திற்குள் போயிருந்தேன். ஒரு சிமிட்டலுக்குள் அறுபது வருடங்கள் பின்னால் போய் நான் தண்டவாளங்களின் அருகில் இருந்த எருக்கலஞ்செடி இலைகளின் கீழ் ஒரு கூட்டுப் புழுவாகத் தொங்கிக் கொண்டு இருந்தேன். என் எல்.ஜி பெருங்காய டப்பாவில் லார்வாக்கள்  அசுர வேகத்தில் சாப்பிட்டு, அசுர வேகத்தில் புழுக்கைகள் இட்டுக்கொண்டு இருந்தன. எனக்கு ஒரு வண்ணத்துப் பூச்சியின் கழிவு வாடையையும் முயல் குட்டிகளின் கழிவு வாடையையும் இன்றைக்கும் மிகச் சரியாக உணரவும் சொல்லவும்  முடியும். என் உலகத்தின் ஒரு தகர டப்பாவிலும், ஒரு காரை வீட்டுச் சுவர் ஓரத்திலும் இன்னும் அந்த வாடை வளைந்தும் குதித்தும் போகின்றன.

நான்  சிவசு சாரை அதிசயிக்க வைக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மேஜிக் ஷோ நடத்துகிறவன் ஆகியிருந்தேன். நான் மழைக்காலம் முடிந்தவுடன் தரையோரச் செடிகளில் பூக்கும் சின்னஞ் சிறு மஞ்சட் பூக்களைப் பற்றிச் சொல்லும் போது, எங்கள் வீட்டு முன் அறையில் கோடிக்கணக்கில் மஞ்சட் குறும் பூக்கள் பூத்திருந்தன.  சிவசு சார் அவரைச் சுற்றி வளைத்து  விட்ட மஞ்சட் பூக்களுக்குள்,  வாய்க்கால் தண்ணீரை இரண்டு கைகளாலும் அரைவட்டமாக விலக்கிவிட்டு முங்கு போடுவது போல, இருந்தார்.

என்னை அறியாமல் நான் அடுத்து மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். ‘சார் எல்லாம் சித்துப் போல இருக்கும். பெருசா இருக்காது. மிஞ்சி மிஞ்சிப் போனா பழுத்த முருங்கை இலையை விடக் கொஞ்சம் சைஸ் கூடுதல். கோடு, புள்ளி டிஸைன்  ஒண்ணுங் கிடையாது. கரைச்ச மஞ்சப் பொடியில ரெண்டு சொட்டு விட்டா எப்படி இருக்குமோ , அப்படி இருக்கும்’. வரவர என் பேச்சில் இப்போது அபிநயமும் கூடியிருந்தது. இரண்டு சொட்டுக்களை அந்தரத்தில் விடுவது போலவும், அது அப்படியே பறந்து போவது போலவும் சிவசு சார் முகத்துக்கு நேராக வலது கையால் அலையடித்தேன்.

சிவசு சார்  சொல்ல ஆரம்பித்தார்  , ‘ரெண்டு நாளைக்கு முந்தி எங்க வீட்டு வாசலில் சேரைப் போட்டு உக்காந்திருந்தேன். நீங்க சொல்லுத அதே மஞ்சள் வண்ணாத்திப் பூச்சி,  வேற புள்ளி கோடு எதுவும் கிடையாது.  முன் வாசல்ல வளர்ந்து கிடக்கிற புல்லு நுனியில் தொங்குத தண்ணியக் குடிக்கப் போகிறது போல, அப்படியே ஆடாம அசங்காம உக்காந்திருந்துது. நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். ரொம்ப நேரம் இருக்கும். எவ்வளவு நேரம்ணு சொல்லக் கூட முடியாது. அதுவும் அப்படியே  ஒட்டவச்சது மாதிரி அங்கியே இருந்தது’ . நான் யோசித்தேன்,  வண்ணத்துப் பூச்சி நாற்காலியிலும் சிவசு சார் புல் மேலும் இருந்தால் எப்படி இருக்கும்

‘நான் தட்டான் புல்லுல, தும்பைச் செடியில உக்காந்து பார்த்திருக்கேன். வண்ணாத்திப் பூச்சி    அப்படி  உக்காந்து இதுவரைக்கும் பார்த்ததில்ல சார்’

சார் காதில் நான் சொன்னது விழவே இல்லை. அவருடைய பெரிய மீசைக்கு ஊடாக ஒரு மதுரமான புன்னகை கீற்றிட இன்னும் அந்த மஞ்சள் வண்ணத்துப் பூச்சியோடே இருந்திருக்க வேண்டும். இதிலிருந்து இரண்டு கண்ணிகள் தாண்டி இன்னொரு கண்ணிக்குப் போனார்.  இன்று அப்படித் தாவிச் செல்வது அவரது சிந்தனை வகையாக இருந்தது.

‘அடுத்த கூட்டத்தில, சுரேஷ் குமாரோட ‘கடலும் வண்ணத்துப் பூச்சிகளும் பத்திப் பேசப் போறோம்’ என்று அவரைத் தவிர இன்னொருவர் பெயரைச் சொன்னார்.

‘அய்யோ. எனக்கும் சுரேஷ் குமார் கதை எல்லாம் பிடிக்கும் சார். அவருக்கு எங் கதை எல்லாம் பிடிக்காது. அதனால் என்ன? நான் அவர் கதையைப் படிச்சிட்டு உடனுக்குடனே அவர்கிட்டே சொல்லீருவேன். கடலும் வண்ணத்துப் பூச்சிகளும் புஸ்தகத்தைக் கூட சுரேஷ்தான் கையெழுத்துப் போட்டு எனக்கு அனுப்பியிருந்தாரு. எனக்குப் பிடிச்சிருந்தது. இன்னும் கொஞ்சம் பெருசா எழுதியிருக்கலாம். அவருக்கு இப்படி எழுதினாத்தான் சரியா இருக்கும்னு தோணியிருக்கும் போல’ என்றேன்.

நோபல் பரிசு உரையில் ஆரம்பித்து ஐந்து குறுநாவல் பகுதிகளாக விரிந்து செல்லும் அதன் வடிவம் பற்றி சிவசு சார் சொல்ல ஆரம்பித்தார். இதற்கு முந்தி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள், அவை புல்லில் உட்காருமா என்று சிவசு சார் கேட்டது எல்லாம் என மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது..

நான்  எனக்குள் நிறைய வைத்திருப்பவற்றுள் இருந்து ஒரே ஒரு துணுக்கை எடுத்து வீசுவது போல, ‘நான் புல்லுல உட்காருத வண்ணாத்திப் பூச்சியும் பார்த்ததில்லை. இதுவரைக்கும் கடற்கரையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சியையும் பார்த்ததில்ல’ என்று சொன்னேன். ‘பார்த்ததை எழுதுகிறதுல என்ன இருக்கு? பார்க்காததை எழுதுகிறது , அல்லது பார்க்காதையும் பார்த்த மாதிரி எழுதுகிறதும் நல்லாத் தானே இருக்கு’ மேலும் சொன்னேன். எனக்கு எதிரே சிவசு சார் முகத்திற்குப் பதிலாக சுரேஷ் குமார இந்திரஜித் முகம் சிரித்துக்கொண்டு இருந்தது.

இதை எழுதும் போது மீண்டும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளை நினைத்துக் கொள்கிறேன்.’ நூற்றாண்டுத் தனிமை’  கதையில், சவப்பெட்டி செய்வதற்கு அளவு எடுக்கிற அந்தத் தச்சாசாரி ஜன்னல் வழியாக , ஒரு வினோத மழை போல உதிர்கிற மஞ்சள்பூக்களைப் பார்க்கிறார். மறு நாள் காலை தெருவெல்லாம் மஞ்சள் பூ மெத்தை இட்டது போல் கிடக்கிறது. இறுதி ஊர்வலம் போவதற்கு முன் , பனிக்கட்டியை அப்புறப் படுத்துவது போல் பெரிய பெரிய வாரிக் கரண்டிகளால்  அதை அள்ளிப் போட வேண்டியது ஆகிறது.

உண்மையோ , ஒரு கலைஞனுக்கு மகத்துவம் சேர்ப்பதற்கான கற்பனையோ. நூற்றாண்டுத் தனிமையை எழுதிய  மார்க்வெஸின் சாம்பல் புதைக்கப் பட்ட போது அவர் வளர்ந்த கொலம்பிய கிராமத்தின் மரங்களில் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய மஞ்சள் பட்டாம் பூச்சிகள் மொய்த்துக்கொண்டு இருந்ததாம்.

இந்த 19 சிதம்பரம் நகர் வீட்டில் நாங்கள் வைத்து வளர்த்த ஒரு வேப்ப மரம், ஒரு பெருங்கொன்றை மரம், ஒரு புங்கை மரம், இன்னும் தயக்கமாகவே பூத்துக்கொண்டு இருக்கும் ஒரு மர மல்லிகை மரம் இவ்வளவுதான் உண்டு. இந்த மரங்களின் ஏதோ ஒரு கிளையில், பெரிய பெரிய மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் அல்ல, நூற்றுக் கணக்கில் அல்ல, ஒரே ஒரு சின்னஞ் சிறிய, பழுத்த முருங்கையிலையை விடச் சற்றே பெரிதாக இருக்கிற ,மஞ்சள் நிற  வண்ணத்துப் பூச்சி  உட்கார்ந்தால் போதும்.

என்னுடைய நாளுக்கு அது சரியாக இருக்கும்.

%



No comments:

Post a Comment