Sunday 30 December 2012

கூடுவிட்டு...






“கூறல்கதையை 1971ல் எழுதியிருக்கிறேன். நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முன் ஜோதிவினாயகம் சிறிது காலம் நடத்திய ‘உள்களும் வெளிகளும் சிற்றிதழில் வெளிவந்தது.
போனவாரம் அந்தக் கதையை மீண்டும் நடப்பில் எழுதுகிற நிலைமை. ‘கூறல்கதையில் தாத்தா இருந்த இடத்தில் எங்கள் அப்பா. கிருஷ்ணன் இருந்த இடத்தில் நான். கிருஷ்ணனுக்கு  கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் அதே பெயர்தான். நான் அறிந்த முதல்முதல் சவரத் தொழிலாளி. அவருக்குத் தெரிந்த வாழ்வும், அவர் பேசிய நுண் அரசியலும் இன்றுவரைக்கும் எனக்குப்  பிடிபடாதவை. அந்தக் கதையின் இன்னொரு முக்கிய பாத்திரமான வெயிலை, மார்கழிப் பனி இடம் பெயர்த்திருந்தது. வெயிலின் இடத்தில் பனி இருந்ததே தவிர, வெயிலின் காரியத்தை ஒருபோதும் பனியால் செய்யமுடியாது.
அப்பாவுக்கு சவரம் செய்துவிடுவது இது முதல் முறையல்ல.அவருடைய மிக மோசமான இருதயவலிக்குப் பிந்திய தீவிர சிகிச்சையில், கோடம்பாக்கம் (பவர்ஹவுஸ் ஸ்டாப் என்பது 92ம் வருடத்திய அடையாளம். இப்போது ஏதாவது மால் அல்லது பெருவணிக வளாகங்கள் அந்த அடையாளத்தைப் பிடுங்கியிருக்கும்.) ‘பெஸ்ட் ஹாஸ்பிடலில் இருந்த சமயமே, அவருடைய இந்த, மற்றும் குளியலறை, கழிவறைப் பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன். அப்போது அப்பாவுக்கும் சற்று வயது குறைவு. இவ்வளவு முதுமையில்லை. பொய்ப் பற்கள் கிடையாது. கன்ன எலும்போடு தோல் ஒட்டிக்கொள்ளாது. கேட்புத் திறன் பழுதில்லை. எழுபதை நெருங்கும் வயதுக்கும் தொண்ணூறை நெருங்கும் வயதுக்கும் வெவ்வேறு வாடைகளை திரேகம் வைத்திருக்கிறது.
எனக்கும் அப்போது நரைத்திருக்கவில்லை. பிந்திய நாற்பதுகளில் ஒருவன் அடைகிற தற்காலிக நிறைவும் நிதானமும் என்னிடம் இருந்தன.  நான் வெற்றிகரமான என்பதைவிட மனோகரமான என்னுடைய பருவத்தில் இருந்தேன். அந்த தினங்களில் நான் அப்பாவுக்குச் செய்த சவரம் மிக நேர்த்தியான ஒன்றாக இருந்த்து. ‘கூறல்கதையில் வரும் கிருஷ்ணனின் தொழில் சுத்தத்திற்கு என்னுடையது ஒன்றும் அப்போது குறைந்ததல்ல. இப்போது அப்படி எந்தச் சவாலையும் விட என் விரல்கள் தயாராக இல்லை. இன்றைய அன்றாடமும் அப்படி எந்த உத்தரவாதங்களையும் தந்து விடாது.  ஆனால் மனம் முன்னை விடக் கனிந்திருக்கிறது. அப்பாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மூன்றாவது முதியவருக்கும், அல்லது ஒரு சிகிச்சைப் படுக்கையில் இருக்கிறவருக்கும் அதே ஒருமையுடன் இந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது.
அப்பாவுக்கு நோய் ஒன்றும் இல்லை. இந்தப் பத்தாம் தேதி இரவு, தூக்கத்திற்கு இடையில் எழுந்திருந்திருக்கிறார். எண்பத்தெட்டு வயதில் இரண்டு தடவைகளாவது அப்படியான அவசியம் இருக்குமே.  வழக்கம் போல எழுந்து, வழக்கமான இடத்திற்குத்தான் போயிருக்கிறார். முதுமை பகலிலும் இரவிலும் அதற்குத் தோதுவான இடத்தை அதுவாகவே தேர்ந்து கொடுத்துவிடுகிறது. மீறமுடிவதில்லை.  தலை சுற்றியிருக்கிறது. பிடித்திருந்த டார்ச் லைட்டோடு விழுந்துவிட்டார். கையை ஊன்றியதில், வலது மேற்கை எலும்பு, தோள்ப்  பட்டை மூட்டோடு சேரும் இடத்தில் உடைந்துவிட்ட்து. நுட்பமான இடம். முறிவும் கூடுதல். அசையாமல் இருக்க, கட்டுப் போட்டிருக்கிறார்கள். இப்போது மாவுக்கட்டு எல்லாம் கிடையாது. ஒரு ஆயத்தத் தொட்டில். மணிக் கட்டை, மேற்கையை, கீழ் நெஞ்சைச் சுற்றி அசையாமல் பிடித்துக்கொண்டு, வெல்க்ரோ முணுமுணுக்கிறது. எல்லாம் இடது கையால்தான். சாப்பாடு ஒரு கரண்டியின் உதவியுடன்.
அப்பா தினசரி முகம் திருத்துகிறவர். அவரை சவரம் செய்யாத இரண்டாவது நாள் முகத்துடன் பார்த்த்து இல்லை. அம்மா இறந்த சூழ்நிலையில் கூட. இப்போது பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. முடிவெட்டிக்கொள்கிற தவணையும் தாண்டி அதிகவாரங்கள் இருக்கும். பிடரியில் முடி அப்படி மடங்கிக் கிடப்பது எனக்குப் பிடித்திருந்த்து. ஒரு, நெடுந்தூரம் பயணித்த, ஓவியனின் களையை அப்பாவுக்கு அது தந்திருந்தது. அந்த பத்து நாள் தாடி அப்படியில்லை. நோயாளித் தோற்றத்தைக் கொடுத்து அப்பாவை வேறு மாதிரியாக வரைந்துவருவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் நடமாடாத சமயங்களில் பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு அப்பா தனியாக நிற்கிற வேளைகளை அனேகமாக நாங்கள் எல்லோரும் பார்த்துவிட்டோம்.  கழுத்தை இடவலமாக அசைத்து , தன்னுடைய அதுவரையிலான தாடியைத் துல்லியமாகக் கணக்கெடுத்தபடி இருப்பதைப் பார்த்ததும் அவருக்கு முடியை வெட்டி, சவரம் செய்துவிடுவது எனத் தீர்மானித்தேன். தீர்மானத்தின் முக்கியமான ஷரத்து அதை நானே செய்து விடுவது என்பது.
மறுநாள் அப்பாவிடம் சொன்னேன். அப்பா மறுக்கவில்லை. ‘எதுக்குப் பா?என்று ஒரு பேச்சுக்குக் கூடச் சொல்லவில்லை. ஒரு முடிதிருத்தகத்தில் அமர்வது போல, உடனடியாக்க் கண்ணாடி முன் அமர்ந்துகொண்டார். அவருடைய சவர உபகரணங்கள் இருக்கும், வெள்ளை மூடியிட்ட சிவப்பு டப்பாவை எடுக்கச் சொன்னார். அந்த டப்பாவுக்கு ஒரு வாசம் உண்டு. காத்ரெஜ் சோப்பு வட்டத்தின் வாடை அது. இந்த வாசத்தை, பிறவியில் இருந்தே, அப்பா இருக்கிற எல்லா இடங்களிலும் உணர்ந்திருக்கிறேன். சோப்பைக் குழைக்கிற அந்த பிரஷ் என்னுடன் ஒரு பால்யகால சகி அளவுக்கு சினேகிதம் உடையது.  பூத்த தென்னம்பாளைக் குலையைப் பார்க்கிறபோது கூட ஒரு தடவை அதன் ஞாபகம் வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அது ஒரு ஆழ்ந்த ஞாபகம்.
அந்த டப்பாவைத் திறந்து வரிசையாக எல்லாவற்றையும் எடுத்துவைத்த நொடியிலிருந்து நான், ‘கிருஷ்ணன்ஆகிவிட்டேன். கிருஷ்ணன் அணியும் வி கழுத்து மல்சட்டையை நான் எப்போது அணிந்துகொண்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் மட்டும் பார்க்கும் படி என் பெருவிரலிலும் மேல் கைப் பக்கமும் பச்சைகுத்தியிருந்தது. பாரம்பரியமாக என்னுடைய விரல்களுக்கு இடையில் அருவமாக இருந்துவரும் சவரக்கத்திக்கு, அந்த நொடியில் உருவ விமோசனம் கிடைத்துவிட்டிருந்தது. அப்பா உட்கார்ந்திருந்த நாற்காலி அரக்குக் கலரில் இப்போது தயாரிக்கப்படுகிற பிளாஸ்டிக் நாற்காலி. இணைப்புச் சக்கைகள் விலகின ஒரு மர நாற்காலி போல அது இறந்த காலத்தின் பாஷையில் முனகுவது கேட்ட்து. அப்பா நாற்காலி முதுகோடு தலையைச் சாய்த்துக் கொண்டார்,
முதலில் முடிவெட்டிவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். முடி வெட்டிக் கொள்வதைவிட, முடி வெட்டிவிடுவது எனக்குப் பிடிக்கும். அம்பா சமுத்திரம் நாட்களில், ராஜுவுக்கு நானே வெட்டிவிட்டிருக்கிறேன். யாருக்கும் அது என்னால், வீட்டுக் கத்திரியால் செய்யப்பட்ட்து எனத் தெரியாத அளவில் இருக்கும். சமீபத்திய சுபாஷ் வரை, நேர்த்தியாக முடிதிருத்திவிடுகிற எல்லோருமே என்னால் கைகுலுக்கப்பட்டவர்கள். ஒரு வாடிக்கையாளனை விட அதிக நெருக்கமுடையது அந்த உறவு. அவர்கள் அறியாமலேயே அவர்களிடமிருந்து ஒரு சீப்பையும் கத்திரியையும் சரியாக உபயோகிப்பதற்கு நான் கற்றிருக்கிறேன்.
அப்பாவுக்கு முடிதிருத்துகையில், நான் என்னை கிருஷ்ணனாக அல்ல, சுபாஷாக நினைத்துக் கொண்டேன். ஒரு ரோமக் கற்றையில் கத்திரியின் இரண்டு விளிம்புகளும் பதிந்து நறுக்கும் போது உண்டாகும் நுட்பமான சத்தத்தை நான் எளிதாக, என் முதல் சில கத்தரிப்பிலேயே அடைந்து இருந்தேன். பக்கவாட்டில், உச்சியில், பின்கழுத்தில் என்று எல்லா இடங்களிலும் பிசிறே இல்லாமல் முடி திருத்திவிட எனக்கு முடிந்தது. முடித்த பின், அப்பாவிடம், ‘நல்லா இருக்குப் பாஎன்றேன். ‘முடிவெட்டுதது படம் போடுத்து மாதிரித்தானே. உனக்குத்தான் நல்லா படம்போடத் தெரியுமேஎன்றார். அப்பா அதை இவ்வளவு அழகாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்த்து. நான் சவரத்திற்குத் தயாரானேன்.
வெதுவெதுப்பான  வென்னீரால் அப்பாவின் முகத்தை நனைக்கையில் அவர் கண்கள் மூடியிருந்தன. ஒரு குழந்தை போல இருந்தார். சோப்பைக் கரைத்து முகத்தில் நுரையை அப்பிக் கலைத்துவிடும்போது அப்பாவுக்கு ஒரு சுகமான கிறக்கம் வந்திருந்த்து. நான் புதிய பிளேடை ரேஸரில் பொருத்துகையில், லேசாக அரைக்கண் திறந்து, ‘எதிர் போடவேண்டாம்என்றார்.  அதாவது கீழிருந்து மேல் பக்கம் இழுக்கக் கூடாதாம். வெட்டுக் காயம் படாமல் இங்கே, ‘நேர்போடவே  கை நடுங்குகிறது. இதில் எதிர் எங்கே போட? ‘சரிஎன்றேன். ‘சரி அப்பாஎன்று சொல்லவில்லை.
அவர் அப்பா இல்லை. நான் கல்யாணி இல்லை. அவர் சவரம் செய்து கொள்கிறவர். நான் செய்கிறவன்.  அந்த இடத்தை நாங்கள் இருவருமே அடைந்திருந்தோம். முகத்தைத் திருப்பவேண்டிய இடங்களில் திருப்பி. முகவாயை உயர்த்த வேண்டிய சமயங்களில் உயர்த்தி, உதட்டை மடிக்க வேண்டிய நேரம் வாகாக மடித்துக் கொடுத்தார். நோயாளியின் ஒத்துழைப்பை ஆங்கிலத்தில் பாராட்டி, தோளில் தட்டிக்கொடுக்கிற ஒரு அறுவை மருத்துவர் மனநிலையை நான் எய்தி இருந்தேன். இரண்டாவது முறை சோப்பைக் குழைத்துப் பூசுகையில், அப்பா அதே சாய்ந்த தலையுடன், கிறக்கத்துடன், மூடின கண்களைத் திறக்காமல், ‘விரலை வச்சுத் தடவிப் பார்த்துக்கோ. தெரியும்என்றார்.  அப்படியே செய்தேன்.
கன்னம் ஒட்டிய, தோல் தளர்ந்துவிட்ட இன்னொருவரின் முகத்தில் எந்த வெட்டுக் காயமும் இல்லாமல், அதிகபட்ச சதவிகித நேர்த்தியுடன் சவரத்தை முடித்த்தே எனக்குப் போதுமானதாக இருந்த்து. அப்பா இப்படி அப்படி முகத்தைத் திருப்பிப் பார்த்தார். அண்ணாந்து, வழக்கமாக அவருடைய தாடையில் கத்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரதேசங்களைத் தடவிப் பார்த்தார். அப்படியொன்றும் அவருக்குத் திருப்தியில்லை என்று தெரிந்தது. நான் ஒவ்வொன்றாகக் கழுவித் துடைத்து, அதனதன் இடத்தில் வைத்து சவர டப்பாவை மூடினேன். அதையெல்லாம் அள்ளிப் போட்டிரு’ என்று அப்பா முக அசைவால் தரைப் பக்கம் காட்டினார். நாற்காலியைச் சுற்றிச் சிதறிக்கிடந்த நரைமுடியை எல்லாம் குனிந்து ஒன்றுசேர்த்துச் சேகரித்தேன். எழுந்துபோய் தூரப்போட்டுவிட்டு வந்தேன்.
கிருஷ்ணனாக இருந்து கல்யாணியாக மீளும் நேரம் சமீபித்துக் கொண்டிருந்த்தை உணர முடிந்தது. கூடு விட்டுக் கூடு பாய்வதில், ஆதிக் கூட்டுக்குத் திரும்புகிற நேரம் பதற்றம் நிரம்பியது. பாய்ந்திருக்கிற கூட்டில் இருந்து மீளமுடியாமல் போகும் அபாயம் நம்மைத் துரத்தத் தொடங்கி விடுகிறது.
அப்பா இருந்த நாற்காலியில் இருந்து இரண்டு அடி தள்ளி நின்று பார்க்கிறேன். கச்சிதமாக ஒழுங்கு செய்யப்பட்ட தலைமுடியுடன், மழமழப்பாகத் திருத்தப்பட்ட முகத்துடன் அப்பா இருந்தார். அன்றைக்குச் சாயந்திரம் நடக்கவிருக்கும் த.மு.எ.க.ச புத்தக வெளியீடு ஒன்றிற்குத் தலைமையேற்கத் தயாராகிவிட்ட உற்சாகமான களை வந்துவிட்டிருந்தது. செய்வன் திருந்தச் செய்துவிட்ட சந்தோஷம் எனக்கு. கொஞ்சம் கூடுதலாக முயன்றிருந்தால், இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று தோன்றியது.  எதையாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. அப்பாவைப் பார்த்து, “ ஜோரா இருக்கு ப்பாஎன்றேன். அப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை.
திரும்பாத பார்வை இன்னும் எதிரே இருக்கும் கண்ணாடியிலேயே இருந்த்து. இவ்வளவு சிரத்தையாக, ஒரு மணி நேரம் செலவழித்து, நான் செய்திருக்கும் இந்தக் காரியத்தின்  நிறைவில், அப்பா சொல்லப் போகும் வார்த்தைகளுக்குக் காத்திருந்தேன். வலது காதின் கீழ் துடைக்கப்படாமல் விடப்பட்ட சோப்பு நுரையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டே சொன்னார்,
‘அப்படியே விட்டுட்டு, நல்லா வளர்ந்த பிறகு வள்ளிநாயகத்துக் கிட்டே சொல்லி தாடியோடு ஒரு ஃபோட்டொ எடுத்துக்கிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்
அப்பா சொல்லி முடிப்பதற்குள், ‘கூறல்கதையின் பக்கங்களில் இருந்து ஒரு பறவையின் எச்சம் போல் அந்த இடத்தில் நான் சொத்தென்று விழுகிறது போல இருந்த்து.
எல்லோரும் தாத்தாவும் கிருஷ்ணனுமாக ஆகிவிடமுடியாது. முக்கியமாக, அப்பாவும் நானும்.

%






10 comments:

  1. ஒரு தேசிய விருது பெற்ற திரைப் படம் பார்த்த உணர்வு சார்.
    கூடு விட்டு கூடு பாய்ந்தது நீங்கள் இருவர் மட்டும் அல்ல, இந்தப் பதிவை வாசிக்கும் வாசகர் அனைவரும், சுடலை மாடன் தெருவிற்குள் கூடு பாய்ந்து இருப்பர்

    ReplyDelete
  2. நெடுந்தூரம் பயணித்த, ஓவியனின் களை// ஆஹா..!

    ReplyDelete
  3. எனது தந்தையாருடன்
    கீழப் புதுத் தெருவில் (பாரதியார் தெருவில்) இருக்கும்
    சரஸ்வதி, முத்து சலூன் களுக்குச் சென்ற அனுபவம் உண்டு.
    அதன்லாதானோ, கூடுதலாகவே இந்தப் பதிவு நெருக்கத்தை உண்டு பண்ணி விட்டதோ

    ReplyDelete
  4. என்னை சிலிர்க்கவைத்த பதிவு சார் இது.

    எத்தனை பேருக்கு இது வாய்க்கும், என்று தான் எனக்கு உடனே தோன்றியது. நமக்கு இந்த அனுபவம் கிடைக்க வில்லையே என்று மனம் அங்கலாய்த்தது.

    சிறு வயதில் , அப்பாவின் ரேசரை திறந்து, பிளடை எடுத்து பென்சில் சீவிவிட்டு, பின்னர் அவர் கண்டுபிடித்து அதட்டியது, எப்படி கண்டுபிடித்தார் என்று வியந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.

    பெற்றதைவிட இழந்தது அதிகம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  5. அற்புதமான அனுபவங்கள் அருமையான எழுத்தாக்கம் நன்றி ஐயா.

    ReplyDelete
  6. ''அந்த டப்பாவுக்கு ஒரு வாசம் உண்டு. காத்ரெஜ் சோப்பு வட்டத்தின் வாடை அது. இந்த வாசத்தை, பிறவியில் இருந்தே, அப்பா இருக்கிற எல்லா இடங்களிலும் உணர்ந்திருக்கிறேன். சோப்பைக் குழைக்கிற அந்த பிரஷ் என்னுடன் ஒரு பால்யகால சகி அளவுக்கு சினேகிதம் உடையது. பூத்த தென்னம்பாளைக் குலையைப் பார்க்கிறபோது கூட ஒரு தடவை அதன் ஞாபகம் வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அது ஒரு ஆழ்ந்த ஞாபகம்.''

    இந்த அனுபவம் ஒவ்வொரு மகனுக்கும் உண்டு. தாத்தாவான அப்பாவும், அப்பாவான மகனும்... நெருக்கமும், தோழமையும்...
    இந்த பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  7. ''அந்த டப்பாவுக்கு ஒரு வாசம் உண்டு. காத்ரெஜ் சோப்பு வட்டத்தின் வாடை அது. இந்த வாசத்தை, பிறவியில் இருந்தே, அப்பா இருக்கிற எல்லா இடங்களிலும் உணர்ந்திருக்கிறேன். சோப்பைக் குழைக்கிற அந்த பிரஷ் என்னுடன் ஒரு பால்யகால சகி அளவுக்கு சினேகிதம் உடையது. பூத்த தென்னம்பாளைக் குலையைப் பார்க்கிறபோது கூட ஒரு தடவை அதன் ஞாபகம் வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அது ஒரு ஆழ்ந்த ஞாபகம்.''

    இந்த அனுபவம் ஒவ்வொரு மகனுக்கும் உண்டு. தாத்தாவான அப்பாவும், அப்பாவான மகனும்... நெருக்கமும், தோழமையும்...
    இந்த பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  8. எளிமையின் சிகரம் கூடிய எழுத்து....இவ்வளவு நேர்த்தியாய் வந்து விழுந்திருக்கிறது...சில நேரத்தில் கதை... சில நேரத்தில் உபகதை...மனதை எங்கோ வலித்துக் கொண்டு போய்விடுகிறது...அப்படி ஒரு உபகதையாக இந்த நினைவுகளில் ஒன்றுண்டு....ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியவில்லை என்னால்...விட்டு வந்த இடத்தின் வலி கொஞ்ச நஞ்சமல்ல...ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கும் போக முடிவது இல்லை...ஒருவரிடம் பேசி முடித்துவிட்டு அப்பால் நகர்வதும் சிரமமாக இருக்கிறது...இதெல்லாம் ஒரு பித்த நிலைதானோ...உங்கள் வரிகள் ஒரு நிரந்தர மின்னலாய்... என் வானத்தில்....

    //கூடு விட்டுக் கூடு பாய்வதில், ஆதிக் கூட்டுக்குத் திரும்புகிற நேரம் பதற்றம் நிரம்பியது. பாய்ந்திருக்கிற கூட்டில் இருந்து மீளமுடியாமல் போகும் அபாயம் நம்மைத் துரத்தத் தொடங்கி விடுகிறது.//

    மனதைப் பிசைந்து விட்டது அண்ணா....

    ReplyDelete
  9. //அப்பா சொல்லி முடிப்பதற்குள், ‘கூறல்’ கதையின் பக்கங்களில் இருந்து ஒரு பறவையின் எச்சம் போல் அந்த இடத்தில் நான் சொத்தென்று விழுகிறது போல இருந்த்து.
    எல்லோரும் தாத்தாவும் கிருஷ்ணனுமாக ஆகிவிடமுடியாது. முக்கியமாக, அப்பாவும் நானும்.//
    என்ன ஒரு நேர்த்தியான முடிப்பு...

    ReplyDelete
  10. ரமணி வரட்டும், அப்புறம் பண்ணிக்கிறேன் என்பார் அப்பா. எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் அமைந்து விடும் எனக்கு. நான் போய் பண்ணி விட்டால்தான் அப்பாவுக்குத் திருப்தி. அவன் வர்ற வரைக்கும் இப்டி சடைநாயாட்டம் உக்காந்திண்டிருக்கணுமா? என்பாள் அம்மா. அப்பா சிரித்துக் கொள்வார். அது அவர்கள் இருவருக்குமான அந்நியோன்யத்தின் அடையாளம். நான் சென்னை சென்று அப்பாவுக்கு மொழு மொழுவென்று ஷேவிங் பண்ணிவிட்டு நாற்காலியிலேயே நகர்த்திக் கொண்டபோய் குளிப்பாட்டித் துடைத்து, விபூதியைப் பட்டை பட்டையாய்ப் பூசி, நடுநெற்றியில் ஒரு பெரிய குங்குமப்பொட்டுடன் அப்பாவைக் கொண்டு வந்து அவர் அறையில் விட்டவுடன், அந்த அறைக்கே ஒரு மணம் வந்து விடும். சபாஷ்....என்பார் அண்ணன். முகச்சவரம், அக்குள் என்று சுத்தமாக எடுத்து, அப்பாவைப் புதியவராக அமர்த்தி விட்டு வந்த நாட்கள் இன்று உங்கள் கட்டுரையைப் படித்தபோது மனதில் வரைபடங்களாய்த் தோன்றி மனதைச் சங்கடப்படுத்திவிட்டன. நான் வந்துதான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று கடைசிவரை அப்பா எனக்காகக் காத்திருந்ததுதான் நான் செய்த புண்ணியம். உஷாதீபன்

    ReplyDelete