Monday 23 April 2012

இந்த சமவெளியையும்...

சமவெளிக்கு வந்துவிட்டேன்.
ஏற்கனவே சமவெளியில்தானே இருக்கிறேன்.
ஐம்பதுவருஷங்களாக இருக்கிற, நடமாடுகிற, வாழ்கிற சமவெளி.
இதற்கு எல்லைகள் கிடையாதுதான். எல்லைகள் உண்டெனில்
ஒரு அடையாளத்திற்கு, 21.இ.சுடலைமாடன் கோவில் தெருவில்
இருந்து, 19. சிதம்பரம் நகர், பெருமாள்புரம் வரை என இப்போது
சொல்லிக் கொள்ளலாம். என் 16 வயதில் இருந்து இந்த 66 வரை
விரிகிற சமவெளி.
இன்னொரு வகையில் புதுமை, ஏப்ரல்.1962 முதல் உயிர் எழுத்து
மார்ச்.2012 வரை எனச் சொல்லலாம்.
சமவெளியில் மேலும் இருப்பேன். சமவெளியில்தான்  இருக்கவும்
முடியும் என்னால்.
சிகரங்களில், பள்ளத்தாக்குகளில், பீடபூமிகளில், பாலைகளில், பனிப்
பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு, அங்கிருப்பது எவ்வளவு சந்தோஷ
மானதோ, அதே அளவுக்கு இந்த சமவெளியில் இருப்பது எனக்கு
சந்தோஷமானதே.
%
இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்காக, எனக்காகவும் என்பது சரியாக இருக்கும். ஒரு வலைத்தளம்
நடத்திவந்த, வருகிற திரு.S.I. சுல்தான் அவர்களுக்கு.   விகடனில்
வெளிவந்த ‘அகம்புறம்’ தொடரால் சற்று விரிவான வாசகர்களை
அடைந்த என்னை. மேலும் அதிகமானவரிடம் கொண்டு சேர்க்க அவர்
காட்டிய ஆர்வம் என் நன்றிக்குரியது.
அப்புறம், இந்த வலைப்பூவுக்கு, ‘சமவெளி’ எனப் பெயரிட்டு, இதைத் துவங்க
எனக்கு எப்போதும் போல உடனிருக்கும் கோபாலுக்கு.
%
சொல்லவே வேண்டாம்,  இது கணபதி அண்ணனுக்கே சமர்ப்பணம். அவன்
இப்போது இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல அவன் இல்லை என்றால் நானும் என்னுடைய இந்த ஐம்பது வருடச் சமவெளியும் இல்லை என்பதும்.
இந்த ‘சமவெளி’யையும் முதலில் அவனே வாசிக்கட்டும்.

8 comments:

  1. வாழ்த்துகள் கல்யாணி சி

    ReplyDelete
  2. ஆக, ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து, உங்கள் வசம் ஒரு பூ வலையில்.

    மிக்க சந்தோசங்களுடன் வரவேற்கிறோம்.

    அதிகமான பதிவுகளின் எதிர்பார்ப்போடு.

    ReplyDelete
  3. கனிவும் பிரியமும் மிகுந்த உங்கள் வார்த்தைகளால் இந்த நிலம் நிரம்பட்டும் ...

    ReplyDelete
  4. பல வாசகர்களுக்கு, மனிதர்களுக்கு
    சந்தோஷம் அளிக்க இருக்கும் சமவெளிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. சமவெளியில் ஓர் அடர்வனம் பெருக எனது இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சமவெளி, பண்பாட்டின் ஆடுகளம்! யுகம் யுகமாக புதைக்கப்பட்ட ரகசிய அடுக்குகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட உண்மைகளை சமகாலத்துக்கு வழங்கும் வண்ணதாசன் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்...இரா. குமரகுருபரன்

    ReplyDelete
  7. சமவெளி, பண்பாட்டின் ஆடுகளம்! யுகம் யுகமாக புதைக்கப்பட்ட ரகசிய அடுக்குகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட உண்மைகளை சமகாலத்துக்கு வழங்கும் வண்ணதாசன் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்...இரா. குமரகுருபரன்

    ReplyDelete
  8. அன்பு கல்யாணி அண்ணனுக்கு,

    ரொம்பவும் சந்தோஷமான விஷயம் இது... சிந்தனையும், பேச்சும், பேசாத பேச்சும் அப்போதைக்கப்போ எழுதி விடலாம்... உடனே படிக்க கிடைத்து விடும்... உங்கள் சிந்தனையும், பேசாமல் விட்டவையும்... பாக்கியவான்கள் நாங்கள்...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete