Thursday, 13 September 2012

லகுவான கனமும் நகரும் ஜன்னல்களும்.







கருங்குருவி அளவுக்கு.

அது மக்காச் சோள அறுவடைக் காலம்.
வாகனங்கள் மேலேறிச் செல்ல
நீ உன் தானியங்களுடன்
சாலையில் காத்திருந்தாய்.
உன்னுடைய இடுப்பில் இருந்தது
உன்னுடைய மூன்றாவது குழந்தையாகக் கூட
இருக்கலாம்.
அதனால் என்ன?
உன்னிடம் எதையோ சொல்லிக்கொண்டு
இன்னொருவரின் சைக்கிள் பின்னால்
ஏறிப்போனவர் உன் கணவராக இருக்கலாம்.
அதனால் என்ன?
நீ அணிந்திருந்த மூக்குத்திப் பொட்டுதான்
உன்னுடைய ஒரே ஆபரணமாக இருக்கலாம்.
அதனால் என்ன?
என்னுடைய இருசக்கர வாகனம் தாண்டுகையில்
நான் பெற்றுக்கொண்ட சிரிப்பு,
எப்போதும் இதுபோன்ற அறுவடைக்காலங்களில்
நீ வழங்குகிற சிரிப்பாக இருக்கலாம்.
அதனால் என்ன?
உன்னிடம், உனக்குத் தெரியவே தெரியாத
ஒரு மறக்க முடியாத அழகு இருந்தது,
இத்தனை வருடங்களின் பின்பும்
இந்தப் பேனா முனையில்
மக்காச் சோளக் கொண்டையில் வந்தமரும்
கருங்குருவி அளவுக்கு.
அவ்வளவுதான்.


நகர்தல்.

வந்து நிற்கிறது
நான் ஏறவேண்டிய தொடர்வண்டி.
பெரும் சுமைகளுடன்
அந்தப் பெண் இறங்கிக்கொண்டிருந்தாள்.
நீலப்பையை வாங்கி வைத்தேன்.
அந்தப் பை என்னுடையதே போல
லகுவாகக் கனத்தது.
இடுப்பில் இருந்த குழந்தையை
ஏந்தி வாங்கிக்கொண்டேன்.
அந்தக் குழந்தை என்னுடையது போல
சிரித்தது, சட்டைப் பேனா உருவி.
குழந்தையைத் தோளில் இட்டு
சுருட்டை முடியை ஒதுக்கி
நன்றி சொல்லிச் சிரித்து
நகர்கிற பெண்ணும்
என்னுடையவள் போலவே ஆக்குகிறது
நடைமேடையிலிருந்து
விடைபெறத் துவங்கும் சன்னல்கள்.

%

கல்யாண்ஜி

Monday, 10 September 2012

சின்ன விஷயங்களின் மனிதன்








அந்த 407ம் அறையின் முதல் நாற்காலியில் சச்சி இருந்தார். அவருக்கு இடப் புறம் நான். எனக்கு அடுத்து தங்கராஜ். சந்தியாநடராஜன், பெரியசாமி,  கோபால், செந்தில், செந்தி,  ஆண்டிபட்டி முருகன், இசை, லிபி ஆரண்யா,விஜி, அருணாசாயிராம் இசைகேட்க அமர்ந்திருக்கும் ஒருமையுடனிருந்த கோவை ரவீந்திரன், சாதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இடைகால் முருகன், காந்தி மற்றும் கடைசி வரை சன்னதம் குறையாத சாம்ராஜ்  ....

அமெரிக்கன் கல்லூரியின் நூற்று இருபது ஆண்டுச் சிவப்புச் செங்கல் நிறம் நனைத்து ஓடிக்கொண்டிருந்த அன்னியமற்ற நதி, சாரதா ராஜன்
விடுதி அறைக்குள் திசை திரும்பி ஓடிக் கொண்டிருந்தது.  ஏற்கனவே பழகிய கரைகளுக்குள் ஓடி வந்தது போலவும். இப்போதுதான் புதிதாகப் பாயப் புறப்பட்டு, பாயப் பாய புதிய கரைகளை உண்டாக்குவதாகவும் அது நகர்ந்து கொண்டிருந்தது.

இப்போது நினைத்துப் பார்க்கையில், அந்த ஏழாம் தேதிப் பிற்பகலும், அமெரிக்கன் கல்லூரி மாலையும், இரவும் இதுவரை நான் வாழாத ஒரு பிற்பகலாகவும், மாலையாகவும், இரவாகவும் இருந்தன.

அன்று காலையில், ஃபாத்திமா கல்லூரியில். எம்.ஏ. சுசிலா அறக்கட்டளை
நிகழ்வாக அந்த ஜூபிலி அரங்கத்தில்,  வழக்கமான என்னுடைய எந்தப்
பதற்றமான முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய பேச்சு சரியாக அமைந்து
விட்டது என்றே நினைக்கிறேன்.முன்னால் அமர்ந்து கேட்ட மாணவிகளின், மேலே சுழலும் மின்விசிறிச் சத்தம் கேட்கும் அளவுக்கான, அமைதியை
ஒரு அலகாக வைத்துக் கொண்டால், அப்படித்தான் கொள்ளவேண்டும்.

ஆனால், அந்தப் பிற்பகல் மிக மிக மோசமானது.  என் ஐம்பதாண்டுப் படைப்புக் காலத்தை, ‘கொண்டாடுகிற’ விதமாக சந்தியா பதிப்பகம் மிகுந்த விருப்புடன், அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து நின்று ஒழுங்கு செய்திருக்கிற இந்த மாலை நிகழ்வில் என்னுடைய ‘ஏற்புரை’ நன்றாக அமையவேண்டுமென நானே விரும்பினேன்.  ‘சாரல் விருது’  ஏற்புரை, எல்லோர்க்கும் அதைத் தாண்டி நான் செல்வதைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் என நானே நினைத்துக் கொண்டேன். அதனால்   என்னிடம் ஏற்கனவே ஒரு உளவியல் சுழற்சி உண்டாக்கிய பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

நான் இதுவரை அறிந்த, புழங்கிய சொற்கள் அனைத்தும் என்னைக் கைவிட்டு நகர்ந்து பெரும் தொலைவுக்கு அப்பால் போயிருந்தன. நான் என் பேச்சைத் துவங்குவதற்கான ஒற்றையடித் தடம் விழவே இல்லை. நான் இதுவரை எழுதியிருந்த எந்தக் கதைகளின் தலைப்பும் கூட நினைவுக்கு வரவேயில்லை.  மூளை மடிப்புகள் எனக்கெதிரான ஒரு சாம்பல் நடனத்தைத் தீவிரமாக ஆடுவது தெரிந்தது.  நான் இந்த 50 நிகழ்வை முதலில் இருந்தே விரும்பாததால், என் மனம் முற்றிலும் எதிர்த் திசையில் தொலைந்து போய் இருந்தது. என்னுடைய  சமீபத்திய சிறுகதையான, ‘பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்’  கதையில் வரும் தாயம்மா அத்தையின் கணவர் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சக்திஜோதிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அது சூரி மாமா எனப்படும் சூரியநாராயணன் என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த மறதித் தீவு இருந்தது.

நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கலாப்ரியாவை, செந்திலை, ரவீந்திரனை, தங்கராஜை எல்லாம் தவிர்த்திருந்தேன். சமயவேல் தொலை பேச்சைச் சுருக்கிக் கொண்டேன்.  அந்த விசாலமான தனிமைக்குள் நான்
மூழ்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இனி பேசுகிறதற்கான எல்லா
இழைகளும் அறுந்து போய்விட்டதை உணர்ந்த ஒரு கசந்த புள்ளியில்
ஒரு நான்கு பக்க உரையை நான் எழுத ஆரம்பித்தேன்.  எழுதிய வரையில், சற்றுத் தொய்வான, எதிர்மறையான குரலில் இருந்தாலும், அது சரியாகவே இருந்தது. வாசித்துவிடவேண்டியதுதான் என பேனாவை மூடிய போது மணி நாலே கால் ஆகிவிட்டிருந்தது.

இப்படியொரு மோசமான பிற்பகலுக்குப் பின்,  அந்த நல்ல, அமெரிக்கன்
கல்லூரி மாலையை நான் எதிர்பார்க்கவே இல்லை.  அந்த 120 வருட சிவப்புக் கட்டிடம் தன்னிடம் ஏதோ ஒரு மாயத்தை வைத்திருந்தது.  ஒரு மரத்தின் அடியில் பாரதி கிருஷ்ணகுமாரும் ஏழெட்டுப் பேர்கள் நிற்பதைப்
பார்த்ததுமே எனக்கு உயிர் திரும்பிவர ஆரம்பித்துவிட்டது.  கல்லூரிப் பேரவை அரங்கின் வாசல் படியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நின்றார். அவர் உயரம், அவர் தோற்றம் எப்போதுமே நம்மை என்னவோ செய்யும்.  அவரை
அந்த இடத்தில் பார்த்ததும், தமிழ்ச் செல்வன் வந்துவிட்டாரா என்று நான்  அவரிடம் கேட்டதும், ‘எல்லாரும் வந்துட்டாங்க, அங்கங்க நிண்ணு பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று பதில் சொன்னதுமே எனக்கு போதும் என
இருந்தது. நான் அந்த நிமிடம் முதல் பேசுவதற்குத் தயாராகிவிட்டேன் என்பதே நிஜம்.  அன்றைய பேச்சை எஸ்.ஏ.பி தந்தார் என்பதை இப்போது நிச்சயமாகச் சொல்லமுடிகிறது.

ஒவ்வொருவராக, ஒவ்வொருவராக அப்புறம்.  சாம்ராஜ், லிபி ஆரண்யா, சீனு, முத்துமணி, நோபிள் சார், சௌந்திர ராஜன் சார், ஆகாச முத்து எல்லோரும் நான் நுழைந்த இடது ஓரத்தில்.  என்னுடைய நிலகோட்டை காலத்து அலுவலக சகா சின்ன சாமி. எங்கள் மகள் சங்கரிக்கு பாண்டியராஜபுரம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்த திருநாவுக்கரசு ஸார் எல்லோரும் வந்து கையைப் பிடிக்கிறார்கள். கிருஷ்ணகுமார் வருகிறார். என்னைவிட வளர்த்தியான அவருடைய தோள்களைப் பற்றி உலுக்குகிறேன்.  எஸ்.ஏ.பி உயரம் இரண்டு விதையிலைகளைத் தந்தது எனில், கிருஷ்ணகுமாரின் தோள் மூன்றாவது இலையை. காஃபி அருந்துகையில் ஜயபாஸ்கரன்,  சுரேஷ்குமார் இந்திரஜித், சமயவேல் எல்லோரும்.  சற்றுப் பிந்திச் சந்தித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முன்பு அவர் மனைவி  என் பக்கம் வந்து சிரித்துக் கொண்டே விசாரிக்கிறார். நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது.

இதற்குள் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் வந்துவிட்டதாக, பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் சொல்கிறார். மேடையில் நான் அழைக்கப் படுகிறேன். நிலக்கோட்டை அசோகன் முகத்தைப் பார்க்கையில், ராமகிருஷ்ணனைத் தாண்டி, தமிழ்ச் செல்வனைத் தாண்டி மேடை வந்துவிடுகிறது . வலப் புறமாகவாகவா, இடப் புறமாகவா என்ற தயக்கத்தில் லேசாகக் கால் தடுமாறுகிறது. வேறு எந்த விதப் பரபரப்பும் இல்லை. முற்றிலும் அமைதியாக இருக்கிறது மனம். அடுத்தொரு கணத்தில் மலரவிருக்கும் ஒரு நீர்ப் பூ போல.

சாம்ராஜ் கடிதங்கள் பற்றி, லிபி கவிதைகள் பற்றி, தமிழ் என் கதைகளில் வரும் பெண்கள் பற்றி, கிருஷ்ணகுமார் கிட்டத்தட்ட தமிழ்ச் செல்வன் பேசியவற்றின் இன்னொருகோணத்தில் பேசிக் கொண்டே போக, இடையிடையில் ராமகிருஷ்ணன் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, நான் பூரணமாக நிரம்பிட்டிருந்தேன். குனிந்து எடுத்துத் தண்ணீர் அருந்தும் போது,  ராமகிருஷ்ணன் ஓ ஹென்ரியின் ஒரே இலையில் உயிரைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உதிராத ஒற்றை இலையில் துவங்கிவிட்டது என்னுடைய ஏற்புரை.

நான் எழுதிவைத்திருந்த நான்கு பக்கங்களின் எந்தச் சொல்லும் இன்றி, எந்த வரியும் இன்றி, அந்த மேடையில் துளிர்த்த இலையுடன் துவங்கிய பேச்சு, மிக இயல்பாகவும், மிக அழகாகவும், உணர்வு பூர்வமான சிறு சிறு
இடைவெளிகளுடனும்  நீண்டு கொண்டே போய், இதற்கு மேல் பெருக வேண்டாம் எனத் தீர்மானித்தது போல, ஒரு சிறு மௌனத்திற்குப் பின் அப்படியே பேதமற்ற நிலையில் நிறைந்தது.

பேசிய நேரத்தை விட முக்கியமான நேரம், பேசிய பின், நிகழ்வு முடிந்து நான் மேடையை விட்டு இறங்குகையில் என்னுடன் கை குலுக்கவும் பேசுவதற்கும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சிலர் காத்திருக்கும் நேரம்தான். சொற்களையும் விட விரல்கள் எனக்கு முக்கியம் அல்லவா.

 அந்தச் சிறுபொழுதில் நான் வேறொருவன் ஆகியிருப்பேன். அப்படியொரு கல்யாணியை அனேகமாக வீட்டினர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.  இந்த மனிதர்களையே என் இந்த ஐம்பது வருட எழுத்துக்கள் மூலமாக அடைந்தேன். இந்தச் சிரிப்பு முழுமையும் இப்படி எழுத்தின் மூலமாக அடைந்த மனிதரிடமிருந்து நான் பெற்றதே. நான் இவ்வளவு உரக்கச் சிரிப்பேனா என்பதும். என் முகம் இவ்வளவு மலர மலர விரியும் என்பதும் என் கண்களில் இப்படியொரு சுடர்மிகும் என்பதும் இந்தச் சிரிப்பை,,  இந்த மலர்வை, இந்தச் சுடரை எனக்குத் தந்த அந்த மனிதர்கள்
மட்டுமே அறிவார்கள்.

அந்த 407 அறையும் அப்படித்தான் இருந்தது. அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள். அத்தனை பேரும் மலர்ந்திருந்தார்கள். அத்தனை கண்களும் சுடர் மிகுத்திருந்தன.  நான்  எல்லோருடனும், எல்லோரின் மத்தியிலும்
இருந்தேன்.  இங்கு என்னுடன் இருப்பது வெறும் பன்னிரண்டு அல்லது
பதிமூன்று பேர்கள் அல்ல. நான் இந்த ஐம்பது வருடங்களிலும்  எழுதிய
கவிதைகளின், கதைகளின் மனிதர் அத்தனை பேரும் என நான் வரித்துக் கொண்ட தருணமாக அது இருந்தது.

அண்ணாச்சி அண்ணாச்சி என எனக்காகச் சிரித்து, எனக்காக அழுதது லிபி அல்ல.  என் மடியில் தலை சாய்த்து, தன் சுருட்டை முடியை அளையவும் தன் தோளைத் தட்டிக்கொடுக்கவுமாக என்னை அனுமதித்து இருந்தது ஆண்டிப்பட்டி முருகன் அல்ல.  சன்னதம் கொண்டவராக, பெரும்பகுதி நேரம் எழுந்து நின்றுகொண்டு, வெளிச்சப்பாடு போல, திருவாளும் காற்சிலம்பும் ஒலிக்க அவ்வப்போது சாமிவந்து உறுமிக் கொண்டும் இருந்த சாம்ராஜை அவ்வப்போது மூர்க்கமான சமருக்கு அழைத்துக் கொண்டிருந்தது இசை அல்ல. இசை பாடிய, ‘முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக’ பாடல் அவர் பாடியதல்ல.  எல்லாமும் எல்லோரும் நான் இந்த ஐம்பது வருடங்களாக எழுதிய வரிகளிலிருந்து வெளிவந்து நடமாடிய நிழல்கள்.

அதிகம் தன்னை முன் வைக்காத, அதிகம் கவனத்தைக் கோரிப் பெறாத
என் உலகத்தின் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்கள்
அறையை நிரப்பியிருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும்  முழுமையாக நிரம்பியிருந்தேன். ’அண்ணாச்சி,  உங்களை நாங்கள் முத்தமிடுவதற்கான நியாயங்கள் உண்டு’ என லிபியும் இசையும் இட்ட முத்தங்களும், செய்த தழுவல்களும், கசியவிட்ட கண்ணீரும் அதிர அதிரச்
சிரித்த சிரிப்புகளும் எனக்கு முக்கியமானவை. நான் என் தந்தையின் மடியில் என் இருபதுக்களில் படுத்திருந்ததில்லை.  ஆண்டிபட்டி முருகன் வளரும் நல்ல புகைப்படக்காரன்.  என் மடியில் கிடக்கும் அளவுக்கு என் ஏதோ ஒரு வரி, அல்லது என் ஏதோ ஒரு அசைவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய விஷயம் இது. எல்லா பெரிய விஷயங்களும் சின்ன விஷயம் ஆவதும் எல்லாச் சின்ன விஷயங்களும் பெரிய விஷயமாவதும் இது போன்ற பொழுதுகளில் தானே.

‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பு இந்த நிமிடம் ஞாபகம் வருகிறது.  நான் ’சின்ன விஷயங்களின் மனித’னாக  மட்டுமே இருக்க விரும்புகிறேன்.  அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன்.

’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.


%

Monday, 3 September 2012

ஒரு புதிய பறவை








இந்த முதல் வரியைத் தட்டச்சு செய்யும் போது, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை, கிடைக்கும் கல்யாணமாலை’ பாடல் போய்க் கொண்டு இருக்கிறது தொலைக்காட்சியில். கமலஹாஸன் ஓங்கிய பெருங்காட்டில், உயர்ந்தொரு ஆலமரத்தில் கிளிச் சத்தமிட்டுக் கொண்டு இருக்கிறார். ‘அதிலொரு ஆண்கிளி, அதனிடம் பெண் கிளி’ என்று பாடும்போது சுஜாதாவை நொடி நேரம் காட்டிவிட்டு, ஒரு பெண் குழந்தை முகம், கருப்புக் கண்ணாடியணிந்த பார்வையற்ற ஒரு பையனின் முகம் எனக் காட்சி படத்தில்  நகருமென்று ஞாபகம்.

இங்கே இந்தப் பிற்பகலில் கடவுள் அமைத்துவைத்த மேடை எதுவும் இல்லை. எந்த விகட கவிகளும் கதை சொல்லவில்லை. அவள் அல்ல, வெயில் ஒரு தொடர்கதை இந்த சிதம்பர நகரில்.

இன்று காலை திருச்செந்தூர் வரை, கோவை லாலா மாரியப்பன் வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் வருகிறேன். இரண்டு பக்கமும் செய்துங்க நல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, குரும்பூர், சோனகன் விளை, அம்மன்புரம் எங்கும் ஒரு வயலில் கூட நடவாகவில்லை. ஒரு புது வைக்கோலில் அடிக்கும் வெயிலின் மினுங்கும் நிறத்திற்கும்.  எப்போதோ அறுவடையான அடித் தாளோடு மல்லாந்து கிடக்கும் வயலின் உலர்ந்த விலாவைத் தன் அலகால் கொத்தி இழுக்கும் வெயிலுக்கும் எத்தனை வித்தியாசம். ரோட்டு ஓரத்தில், இனிமேல் காற்றுக்குக் கிழிய மிச்சமில்லாத வரிகளுடன், ஒரு பைத்தியக்காரியின் கோலத்தில் அசையும் வாழைகளை வெயில் ஒரு ’பச்சைக் காட்டேரி’ போல உறிஞ்சி இருந்தது. எத்தனையோ முறைகள் திரும்பத் திரும்பப் பார்த்து மனதுள் மிகப் பசுமையாக வரையப்பட்டிருந்த சில நிலக் காட்சிகளை ஒரே ஒரு பேருந்து சன்னல் நகர்வில் முற்றாக இழப்பது என்பதும் வெயிலுக்கு இப்படி அனைத்தையும் காவு கொடுப்பதும், என்னை நொறுங்க வைத்தது/

கவிஞர்  வைரமுத்து ஒரு திரைப்பாடலில், ‘தூக்கி வளர்த்த துயரம்’ என்பார். நான் பயணச் சீட்டெடுத்த துயரமிது.  சற்றே விழுதுகள் தொங்கும், பெரும்பகுதிக் கிளைகள் வெட்டப் பட்ட ஒரு ஆலமரத்தின் சாய்ந்த நிழலில், சைக்கிளில் பிளாஸ்டிக் குடங்கள் வியாபாரம் செய்யும் ஒருவர் படுத்துக் கிடந்தார். அவர் எதையும் குடித்திருக்க மாட்டார். வெயில்தான் அவரைக் குடித்திருந்திருக்கும்.  தலை நசுங்கக் கொன்று வீசப்பட்ட ஒரு தண்ணீர்ப் பாம்பின் தொய்வு இருந்தது அவர் உடலில். ஒரு தண்ணீர்ப் பாம்பை எப்போது கடைசியாகப் பார்த்தேன் என்று நீங்கள் கேட்டால் என்னால் உடனடியாக அல்ல, எப்போதுமே பதில் சொல்ல முடியாது.

எங்கே வரவேண்டும் என்று எழுதத் துவங்கினேனோ அங்கே தான் வருகிறேன். தண்ணீர்ப் பாம்பைக் காணோம். மண் புழுவைக காணோம்.   ஆண் கிளி, பெண் கிளிகளைக் காணோம். வெயிலில் ஒரு காக்கை, இன்னொரு காக்கை இரண்டும் மட்டும் கரைந்து கொண்டே இருக்கின்றன. பொழுது போகாத பழைய சூதாடிகள், தன்னையே இரண்டு பேராக எதிர் எதிர் அமர்த்தி, குருட்டு ரம்மிகள் ஆடுவது போல, இந்தக் காக்கை கூட
எதிர் காக்கையாகவும் மாறிக் கரைந்துகொண்டிருப்பதும் ஒரு பின் நவீனத்துவப் பிற்பகலில் நிகழக்கூடியதே.

காக்கைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  சீனிக்குமார் வீட்டு வேப்ப மரத்தில் ரொம்ப நாளாக ஒரு காக்கைக் கூடு உண்டு.  மின்சார கம்பியிழை படுகிறது என  அவ்வப்போது வெட்டிவிடப்படுகிற எங்கள் தெரு வேப்பங் கன்றில் ஒரு காக்கைக் கூட்டைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் பிள்ளை உண்டான முகத்துக்கு ஒரு அழகு இருக்குமே அப்படி.

ஏற்கனவே சிட்டுக் குருவிகள் காணாமல் போய் வெகு காலம் ஆயிற்று. மாசு பட்டு வரும் சுற்றுப் புறச் சூழல், பாரதியின் வரிகளை நாமறியாது நம்மிடமிருந்து களவாடுவதை நாம் அறியவேயில்லை. முன் தினம் எத்தனை துக்கத்துடனும், முன் இரவு எத்தனை தூக்கமற்றும் கழிந்திருப்பினும், அதை ஒன்றுமற்றதாக்கும்  உங்கள் இன்றையதினத்தின் தரையில் தத்தித் தத்தி ஏழெட்டாக நகர்ந்து, தவ்வி, பறக்கும் ஏழு சகோதரிக் குருவிகளையும் அனேகமாக இப்போது காணோம். காம்பவுண்டுச் சுவரில் இருக்கும் சாம்பல் பூனைகளின் கனவில் மட்டுமே நந்தியாவட்டை நிழலில், சோழிகளைப் போலத் தன்னை விசிறி, தானே அள்ளிக் கொள்ளும் அந்தத் தவிட்டுக் குருவிகள் நடமாடுகின்றன.

இதைத் தவிர,  தானாகத் தன் காரியம் பார்த்துக் கொள்ளும் எளிய பறவைகளாக மிஞ்சுவது மைனாக்கள் மட்டுமே. அவையும் செழிப்பாக இல்லை. சோகையாக, மெலிந்து, துன்பமிலாத நிலையே சக்தி என்று நடமாடிக்கொண்டு இருக்கின்றன. மைனாக்கள் தான் நான் அதிகம் இப்போது அடிக்கடி பார்க்கமுடிகிற பறவையென ஐந்தாண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன் அவர்களிடம் சொன்ன உண்மை இப்போது சற்றுத் திரிந்துவிட்டது.  புறநகர்ச் சாலையில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அதிகமிருந்த மைனாக்களின் நிலை இப்போது அப்படியில்லை. நாம் எப்போதுமே அழிகிற இனங்களைத் தானே கணக்கெடுப்போம். மைனாக்களின் சரணாலயம், மைனாக்கள் நல வாரியம் எல்லாம் அப்புறம்தானே வரும்.

எந்தக் கவலையும் இன்றிப் பலுகிப் பெருகுவது இந்தப்  புறாக்கள் தான்.  கல்வெட்டாங்குழி தாண்டி உள்ள, அரசு உணவு தானியச் சேமிப்புக்கிடங்கு
தனக்கு மேல் உள்ள வானத்தில் அவ்வப்போது நூற்றுக்கணக்கான புறாக்களைக் கலைத்து வீசுவதை. இன்னும்  தொடர்ந்து பெருங்கருணை மிக, அளித்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் வட்டங்களிட்டு அமைதி கொள்வது, மேகங்கள் கலைந்து நகர்வது, இப்படிப் பறவைகள் கலைந்து கலைந்து வானில் சுழலும் சித்திரங்களை வரைவது, ஒரு பெரும் அரச மரத்தின் அத்தனை இலைகளும் தனித்தனியாக அசைவது,  தீ வளர்வது,  தீ தணிவது எல்லாம்  காணமுடிகிற தினங்களும் காண  அனுமதிக்கிற வாழ்வும், சாயுங்காலங்களின் கருக்கல் அழகை முற்றிலும் இழந்துவிட்ட கணினிச் சந்ததியர்க்குக் கிடைக்குமா? 

மீண்டும் விலகிப் போகிறேன். நான் பறவைகளில் துவங்கினேன். ஒரே ஒரு
பறவையை, சிவாஜி பட நினைவுடன் சொன்னால், ‘புதிய பறவை’யைப் பற்றிக் குறிப்பிடவே விரல்கள் விரும்பின.

இரண்டு வருடங்களுக்கு முந்திய மழைக்காலத்தில்தான் அந்தப் பறவையைப் பார்த்தேன். மழைக் காலம் முடிந்து தண்ணீர் அங்கங்கே தேங்கிக் கிடந்த பருவம். சவேரியர் தெரு முடிகிற, சாராள் தக்கர் கல்லூரிக்குப் பிந்திக் கிடக்கிற மைதானத்தின் செம்மண் பரப்புத் துவங்கும் இடம் அது. பெரும்பாலும் வேப்பமரங்கள் அடர்ந்த தெரு மருங்குகள்.
ஒரு காலை நடையில் அந்த அற்புதம் நிகழந்தது.  ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதத்தின் காட்சியில், அந்த நிமிடத்துப் பாத்திரமாக நானும் மேடையில் இடப்புற நுழைவு செய்தேன்.

அங்கிருந்த தந்திக் கம்பிகளில் நூற்றுக் கணக்காக, ட்ரில் வாத்தியார் உட்காரச் சொன்னது போல, கீழ்ப்படிவுடன், அந்தக் குருவிகள் அமர்ந்து இருந்தன. குருவிகளை விடப் பெரியவை. மீன் கொத்தியின் சிறகு நிறங்கள் உடையவை. ஆனால் மீன்கொத்தியை விடச் சிறிய உடல். நல்ல வலுவான அலகைப் பார்த்தால், கொத்தித் தின்னும் உணவுப்பழக்கம்
உடையதாக இருக்க வேண்டும். வால் மட்டும் இல்லை. வாலில் ஒரு கம்பியைச் செருகின மாதிரி, ஒரு ஒற்றை வளர்ச்சி. நான் இந்தப் பக்கம் இதுவரை பார்த்தே இராத பறவை. மழைக்காலம் முழுவதும் இங்கேயே
இருந்தது. காலையில் தந்திக் கம்பிகளில் பள்ளிக்கூடம் நடத்தும். மாலை குறிப்பிட்ட, அதிக உயரமற்ற இரண்டே இரண்டு வேப்பமரங்களில் மட்டும் அடையும்.  மழைக்காலம் முடிந்து பனிக்காலத்தில் கூட இருந்தன. வெயில் வந்ததும் ஒன்றைக்கூடக் காணோம். சொல்லிவைத்தது போல, மறுபடியும் அடுத்த மழைக்காலத்தில் வந்தன. அதே தந்திக் கம்பிகள். அதே வேப்ப மரங்கள்.

அந்த இரண்டு மழைக் காலங்களிலும் என்னிடமிருந்து  குறுஞ்செய்திகள்   பெற்ற யாருக்கும் அந்தப் பறவைகள் பற்றிய ஒன்றிரண்டு வரிகளாவது இல்லாமல் போயிராது.  என் அந்தப் பருவத்தைய காலைகளில் நான் அதன் சிறகுகள் அணிந்து திரிந்துகொண்டிருந்தேன்.  என் மழைக்கால வானம் வெளிவாங்கிய பின்னும் கூட, நான் கூட்டம் கூட்டமாக அந்த பெயர் தெரியாத பறவைகளை எனக்கு உள்ளும் வெளியும் பறக்கவிட்டுக் கொண்டே இருந்தேன்.  அதன் பெயரை எனக்கிட முடியாததால், என் பெயரையே அதற்கு இட்டுக் கொண்டதும் உண்டு.

யாரிடம் கேட்டும் தெரிந்து கொள்ள முடியாத அந்தப் பறவையின் பெயரை அறிய,  அவை நாயகன் தன் ஓசை வெளியீடாகப் பதிப்பித்து
நமக்குக் கொடுத்திருக்கும் காடுறை உலகம் புத்தகத்தின் 67-ம் பக்கம் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது. அதே பறவை. அதே கூர் அலகு.
வாலில் அதே போல ஒற்றைக் கம்பி. உன்னை நான் பார்த்ததே இல்லையே என்று என்னிடம் சத்தியம் செய்வது போல அது ஒரு முட்கிளையில் ஏகாந்தம் பயிலும் படம். உலவும் பூச்சிகள்/ பல்கிப் பெருகாமல்/ பறந்துண்டு கட்டுப் படுத்தக்/ காட்டில் அலையும்/ பஞ்சரட்டை ..
என்ற அவை நாயகனின் குறிப்பு.

இது ஒரு வரத்துப் பறவையாக வந்திருக்கும் எனில் எனக்குக் கூடுதல்  மகிழ்ச்சிதான். அதனதன் வாழிடத்தில் பூச்சி புழுக்கள் மறுக்கப் பட்ட
‘ஒரு துரத்து பறவை’யாக பஞ்சரட்டை புலம்பெயர்ந்திருக்கும் எனில் துயரம் தருவது தான். புலம் பெயர்ந்தவர் மேல் நாம் கொள்ளும் அக்கறை
எவ்வளவு என்றுதான் நமக்குத் தெரியுமே.

இதோ இது செப்டம்பர்.  அக்டோபர் நவம்பரில் மழை பெய்யாதா போகும்.? நான் செம்மண்ணை நம்புகிறேன். மண் புழுக்களை நம்புகிறேன். எனவே பஞ்சரட்டைகளையும் நம்புகிறேன். அவை நிச்சயம் வரும். அவை அமர்வதற்கான தந்திக் கம்பிகளையும், அந்த இரண்டு மரங்களையும் இன்றைக்கு அடிக்கிற வெயில் துடைத்து வைக்கும் .

வெயிலை என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

%