Wednesday 6 November 2019

நாதக் குளத்தில் ஒரு நாபிக் கமலம்.










நான் அந்த நாகஸ்வரக் கலைஞர்களைப் படம் எடுக்கவில்லை.
எனக்குக் கைபேசியில் அல்லது டிஜிட்டல் காமெராக்களில் எடுக்க அதிக உந்துதல் வருவதில்லை. நாம் தீர்மானிக்கும் நமக்குப் பிரியமான வெளிச்சத்தை, நம் இடக் கண் சுருக்கலை அவை திருடிக்கொள்கின்றன.
ஒன்பதைக் க்ளிக் செய்து, ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், நிராகரிப்பின் தலைகுனிவோடு மற்ற எட்டும் குப்பைக்கு நகர்வதன் வதை அது.
ஆனால் அவர்கள் வாசிப்பு அருமையாக இருந்தது. அது தஞ்சாவூர் வாசிப்பு. காவிரி ருசி.
எனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் இசையறிவு உடையவர்கள். எனக்கு இசை உணர்வு மட்டுமே. தங்கராஜுக்கு, நகலிசைக் கலைஞனுக்கு, வாழ்தல் இனிதெனும் பேரன்பனுக்கு எல்லாம் நுணுக்கம் தெரிந்த நிலை. மண்டபத்தின் மேலே இருந்து குதித்து, முங்கு நீச்சலில் போய், வட்டப்பாறை தொடுகிறவர்கள். நான் படித்துறையில் கால் தொங்கவிட்டுவிட்டு, ஆற்றைப் பார்க்கிறேன் என்று மீனை, அதன் நொடி நேர அரைவட்டத்தைப் பார்க்கிறவன்.
நான் நாகஸ்வர வாசிப்பை விட, தவில் இசையை, அதன் தாளக்கட்டுகள் எண் திசைகளிலும் சரம் தொடுப்பதை, நட்சரத்திரம் வெடித்து நட்சத்திரங்கள் சொரிவதை, மின்னல் கீற்றில் அண்ட பேரண்டம் ஒரு பூ மலர்த்திப் பூ உதிர்ப்பதை, தீ எழுப்பித் தீ அணைப்பதை உணர்ந்துகொண்டே இருந்தேன்.
எதிரே இருந்த இளைய தவில் கலைஞரை விட, முகமே தெரியாத ஒரு கோணத்திலிருந்து வாசித்த மூத்தவரின் விரல்களில் அவருடைய மொத்த வாழ்வின் சாதகமும் நோன்பும் உச்சத்திலிருந்து உச்சத்தின் பெருவெடிப்புக்குத் தாவித் தன்னை அழிக்கும் சன்னதம் அல்லது சன்னிதி.
இன்னும் என் அடிவயிற்றில் அதிர்கிறது அந்தத் தவிலிசை. நாதக் குளத்தில் மலர்கிறது ஒரு நாபிக்கமலம்.

*
முக நூல் - 07.11.2018

No comments:

Post a Comment