Tuesday 7 May 2013

கனியான பின்னும் நுனியில் பூ.




இந்தக் கடையில் வாங்கிவிடுவோமா?நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு இருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய .வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் மேல் சற்றுச் சாய்ந்தாற்போல நின்றுகொண்டு, ‘சரி ப்பாஎன்றாள். அவள் இந்தப் பழக்கடையைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை.
ரயில் வருவதற்காக அடைத்துப் போட்டிருந்தார்கள். பத்து முப்பது வண்டிகள், கார்கள், ஆட்டோக்கள் என்று ஒன்றுக்குள் ஒன்று கோர்த்துக்கொண்டு நிற்கிற இந்த ரோட்டில் இப்படிக் காத்துக்கிடப்பது பிடித்திருந்தது. ஒரு பல்ஸர் வாகனத்தின் பின் சக்கரத்துக்குக் காற்றுப் பிடித்துக்கொண்டே, கம்பங்கூழ் தர்பூசணிக்கீற்று விற்கிற தாடிக்காரருடன்  சிரித்துக்கொண்டு இருப்பவரை இந்த உச்சி வெயில் ஒன்றும் செய்யவில்லை. சித்த வைத்தியசாலை அருகில் இருப்பது போல வாடையடிக்கிற இந்த இடத்தில் பூவரச மரம் தவிர வேறு எதையும் காணோம்,
ஆட்டோக்கள் பழுதுபார்க்கிற ஒர்க்‌ஷாப்பில் இருந்து, ‘காதலின் தீபம் ஒன்று, ஏற்றினாளே இன்றுஎன்ற பாட்டு வந்துகொண்டு இருந்தது. தினகரி வாகைப் பூவைக் காம்பைப் பிடித்துத் திருகியபடி, ‘அப்பா, உங்க ஆளு பாட்டு வரிசையா போடுதான்என்றாள். அதற்கு முன்புதான் ‘வந்ததே... ஓ,ஓ குங்குமம். கண்களே .. ஓ,ஓ சங்கமம்முடிந்திருந்தது. ‘அனேகமா அடுத்தது ‘ராசாவே ஒன்ன நம்பிதான்என்று சொல்லியபடி என் பக்கம் வரும்போது திருச்செந்தூர் பாஸஞ்சரின் சத்தம்.
வந்துகொண்டே இருந்தவள் அதே இடத்தில் நின்று, ‘நல்லா இருக்கு ப்பா ரயில் கூப்பிடுகிறதுஎன்றாள். அது எப்படி இந்த ரயில் சத்தம் மட்டும் எல்லோருக்கும் பிடிக்கிறது? தினகரி ‘நல்லாருக்கு ப்பாஎன்று என்னிடம் சொல்வது போல, நானும் ‘நல்லா இருக்குல்லா ம்மா?என்று என்னுடைய அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்ட நேரத்தில் அம்மா வைத்திருந்த சிவசைலம் தாழம்பூ கூட ஞாபகம் வருகிறது. ரயில் சத்தம் இத்தனை வருடம் கழித்து ஞாபகம் வரும்போது தாழம் பூ வாசம் வரக்கூடாதா என்ன?
சொல்லப் போனால் அது தாழம் பூ வாசனை இல்லை. பக்கத்தில் இருக்கிற இந்தப் பழக்கடையின் வாசனை. பழக்கடை என்று சொல்லக் கூடாது. பழமுதிர் சோலை. எங்கே பார்த்தாலும் பத்து அடிக்கு ஒன்று. அதற்கென்று ஒரு நீல நிற வெளிச்சம். எல்லாத் தோப்பிலும் எல்லாக் காலத்திலும் எல்லாப் பழங்களும் உதிரும் போல. காம்பில் இருந்து கழன்று நேராக இந்தக் கடையின் கூடையில் விழுந்தது போல அத்தனை மினுமினுப்பான சதைப் பற்று.
தினகரி வீட்டை விட்டுப் புறப்படும்போதே, ‘ஆப்பிள் வேண்டாம் ப்பாஎன்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். ‘ஏட்டீ. ஃப்ரண்டு பிள்ளை உண்டாகியிருக்காண்ணு பார்க்கப் போறே. மாதுளம் பழம் நல்லதா நாலு பார்த்து வாங்கிக்கிட்டு போ. சாக்லேட்டு ரொட்டிண்ணு எதையாவது கண்டதையும் கழியதையும்  வாங்கிட்டுப் போயிராதே. உங்க அய்யாவும் நீ சொன்ன சொல்லைத் தட்ட மாட்டா. சரிண்ணு சொல்லியிருவா..என்று சொல்கிற அம்மாவையும் மறுக்கவில்லை. ‘சரி ம்மாஎன்று சொல்லிக்கொண்டாள். லேசான சிரிப்பு வேறு என்னைப் பார்த்து. அது எப்படி என்று தெரியவில்லை! இந்தப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தட்டும் வாடாமல் முள்ளும் கோணாமல் சரியாகத் தராசைப் பிடிக்கத் தெரிந்துவிடுகிறது.
எனக்கும் மாதுளம் பழம் வாங்கத்தான் பிடித்திருந்தது. இப்போது எல்லாம் மாதுளம் பழத்துக்குச் சுளை இருப்பது போல் எட்டாக வகிர்ந்து, பூப் போல இதழ் இதழாக விரித்து நான்கு பழங்களை முன்னால் பார்வையாக வைத்துவிடுகிறார்கள். இந்த மாதுளம் பழ விதை, வெள்ளரிப் பிஞ்சு விதையை எல்லாம் இப்படி வரிசையாக அடுக்கவேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்தார்கள். எனக்குத் தோன்றுவது போல தினகரிக்கும் தோன்றுமா? ‘யாரு ப்பா சொல்லிக்கொடுத்தாங்க?என்று அவள் என்னிடம் கேட்கவேண்டும் போல இருந்தது. என் கையில் பழக்கடைக்காரர் பிளந்துவைத்த மாதுளையை ஏந்தியிருந்தேன். ஏதோ ஒரு கேரளத்துக் கோவிலில் ஆயிரம் பெரும் திரி ஏற்றுவதற்கு விளக்கின் ஒவ்வொரு திரி முகமாகத் திருப்பிக்கொண்டு இருந்தது போல, அதைத் திருப்பினேன். ‘நல்லா இருக்கு இல்லேஎன்று பக்கத்தில் தினகரி நிற்கிற ஞாபகத்தில் கேட்டேன். அவள் இல்லை.
‘நல்லா இருக்கு சார்பக்கத்தில் நிற்கிறவர் சிரித்தார். நரை முடிக்குத் தேய்க்கிற தைலமோ என்னவோ, அபிஷேகத் திருநீறு வாசனை மாதிரி அடித்தது. தாடி வளர்ந்திருந்தது. அடர்த்தியுடன் அது கன்னத்தில் இரண்டு வரிகளாக மடிந்து ஒதுங்க, அவர் சிரிப்பது நன்றாக இருந்தது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் சமயம் இவ்வளவு அழகாகத் தெரியும் மூக்கைச் சமீபத்தில் பார்த்ததில்லை. கல்லூரியில் தாவரவியல் சொல்லிக்கொடுத்த தாம்ஸன் சார் முகம் ஞாபகம் வருகிறது. தேர்வு எழுதுகிற அறையின் குறுக்கே பறந்து கத்திக்கொண்டு வலப்புற ஜன்னல் வழியாக வெளியேறிய ஒரு பயந்த மீன்கொத்தியின் சத்தம் கூடக் கேட்கிறது. ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவுகிற இந்தப் பழக்கமே என் கையில் கீற்றுக் கீற்றாகப் பிளந்து சிவந்துகிடப்பதாகத் தோன்றியது.
நான் தினகரி எங்கிருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தினகரி பழக்கடைகளில் ஒரு தானியம் கொத்துகிற சிறு பறவை ஆகிவிடுவாள். ஒரு கருப்புத் திராட்சையைப் பிய்த்து வாயில் இடுவாள். அடுத்து பச்சையை. ஒரு நாவல் பழத்தை. ஒரு சிவந்த ப்ளம் பழத்தைக் கூட. கடைக்காரர்களுக்கும் அவளைப் பார்த்தால் ஒரு பறவையாகத்தான் தோன்றிவிடுமோ என்னவோ? ஒன்றும் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், ‘நல்லா இருக்கா பாப்பா?என்றுதான் கேட்கிறார்கள். அல்லது அப்படிக் கேட்பது போலச் சிரிக்கிறார்கள்.
தினகரி கையில் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழப் பாக்கெட்டைக் கையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து காட்டுகிறாள். இறக்குமதியானது என்றுகூடக் கடைக்காரர் சொல்லவில்லை.  அப்படிச் சொன்னால் மதிப்புக் குறைவு. ‘இம்போர்ட்டட்  சார்என்கிறார். நான் தினகரியை இங்கே வரச் சொல்கிறேன்.
‘இதை எடுங்க சார். நல்லா இருக்கும்பக்கத்தில் நின்ற தாடிக்காரர்   மாதுளை இருக்கும் கூடையில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்துப் பொறுக்கிக் கொடுக்கிறார். உள்ளங்கை ஈரத்தால் அதன் தோலைத் தடவிய படி ‘அணில் நகம் பட்டிருக்குஎன்கிறார்.. தேங்காயைச் சுண்டிப்பார்த்துத் தருவது போல ஒன்றைச் சுண்டிக்கூடப் பார்த்தார். ஒன்றை சரியில்லை எனத் தனியாக வைத்தார். அது சரிந்து கூடைக்குள் உருண்டபோது, ‘அடஎன்று சிரித்தார். அந்தச் சிரிப்பு வித்தியாசமாக இருந்தது. என்னிடம் அவர் நீட்டிய மாதுளைகளை வாங்கிக் கொண்டேன்.
அவருடைய கையில் இருந்த பையில் கொய்யாப் பழங்கள் இருந்தன. கிருஷ்ணன் கோவில் பழங்கள் போல. மிகச் சீராகப் பொறுக்கியெடுத்த பழங்களின் தேர்வுதான். ஒன்றைச் சரியாகத் தேர்கிறவர் இன்னொன்றையும் அப்படியே செய்வார் என்று நம்பலாம். அது எப்படி கொய்யாப் பழமும் மாதுளம் பழமும் ஒன்று ஆகுமா என்று திருப்பியும் கேட்கலாம். அவரை ஒட்டி, அவருடைய வேட்டியைப் பிடித்தபடி ஒரு பெண்குழந்தை இருந்தது. கையில் இருந்த குடையின் நிழல் அதனுடைய தோள்வரை விழ, அது அப்பாவையும் என்னையும் பார்த்தது.
அகலமான கண்கள். அகலமான கண்களில் மட்டும் எப்போதும் சமபங்கு கண்ணீரும் சமபங்கு சிரிப்பும் நிரம்பியிருப்பது போலவே இருக்கிறது. எந்தப் பிரயாசையும் இன்றி, ஒரு பேரழகு வந்துவிடுகிறது அந்தக் கண்களால் பார்க்கிற யாருக்கும். அது தன் அகண்ட கண்களால் அப்பாவைப் பார்த்தது. என்னைப் பார்த்தது. சிறு வெட்கம் வந்து கீழே குனிந்து சிரித்தது. குடையின் பிளாஸ்டிக் கைப்பிடிக்குள் ஒளிந்திருக்கும் நீல நிற, ஆரஞ்சு நிறக் குமிழிகளை வெளியே உதறிச் சிந்துவது போல் குடையை லேசாகச் சுழற்றியது. மறுபடியும் அப்பாவைப் பார்த்தது.
தினகரி இவ்வளவு நேரமும் எங்கள் மூன்று பேரையும்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் போல. என்னுடைய முதுகை லேசாகச் சுரண்டினாள். அது போதாது என என் தோள்ப்பட்டையை வலுவாக உலுக்கினாள்.
‘என்ன, ஸ்ட்ராபெர்ரி வாங்கணுமா?நான் தினகரியைக் கேட்டேன். என் கையில் அவர் பொறுக்கி எடுத்துக் கொடுத்த மாதுளைகள் இருந்தன. மாதுளைக்கு மட்டும் கனியான பின்னும் நுனியில் பூ.
தினகரி என்னை நகர்த்திக்கொண்டு போனாள். அவளுடைய குரல் மிகவும் தணிந்திருந்தது. என்னுடைய பைக் சாவியை பைக்கிலேயே வைத்துவிட்டது போலவும், அது அங்கே இருக்கிறதா தினகரி என்று கேட்பது போலவும் நான் இன்னும் சற்று அவரை விட்டு நகர்கிறேன்.
‘அந்த ஆளு யாரு தெரியுமா ப்பா?என்று கேட்டாள்.
‘எந்த ஆளும்மா?என்று பழக்கடையைப் பார்த்தேன். பழக்கடைக்குள் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரும் ஒரு பொட்டுக் கூடக் கசங்காத வெள்ளைச் சட்டைதான் போட்டிருந்தார்கள். இப்போது ரொம்பப் பேர் போடுகிற மாதிரி ‘மந்திரி வெள்ளை’.  மந்திரிகள் பழமுதிர் சோலை வைக்கக் கூடாது என நிபந்தனைகள் உண்டா என்ன?
தினகரி எரிச்சல் படவே இல்லை. வாகைப் பூவைக் குனிந்து எடுத்த அதே நிதானத்துடன் இருந்தாள். ஒரு காட்டுப் பழத்தை முகர்ந்து பார்க்கும் அதே சமனுள்ள துறவுடன் என்னைப் பார்த்தாள். ‘உங்களிடம் மாதுளம் பழங்கள் பொறுக்கிக் கொடுத்தானே அந்த ஆள்என்றாள். நான் எப்படி உடனடியாக அவரைப் பார்க்காமல் இருக்கமுடியும்? ‘அய்யோ. உடனே அங்கே பார்க்காதீங்க அப்பாஎன்று கடித்த பற்களுக்குள் முனங்கினாள்.
எனக்குப் புரியவில்லை. அவரைப் பார்க்காவிட்டால் நான் எங்கே பார்க்கவேண்டும் என்றும் தெரியவில்லை. தரையில் யாரோ சப்போட்டா விதையைத் துப்பியிருந்தார்கள். கருப்புக் கருப்பாக, பளபளவென்று கிடந்தன.
‘அந்த ஆளுதாம் பா. எங்க காலேஜ் போகிற டவுண் பஸ்ஸில, ஒரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற பொண்ணு கழுத்தில கிடந்த சங்கிலியைக் கட் பண்ணப் பார்த்துட்டுப் பிடிபட்டவன். அந்த மூக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எல்லாரும் உதைச்ச உதையில அன்னைக்கு அவன் மூக்குல இருந்து ரத்தம் வடிஞ்சுக்கிட்டே இருந்துது. சட்டையை வச்சு ஒத்தி ஒத்தி எடுத்துக்கிட்டே இருந்தான்’ -  தினகரி சொல்லிக்கொண்டே போனாள். நான் தினகரி சொல்வதைக் கேட்டுக்கொண்டும் அந்த ஆளைப் பார்த்துக்கொண்டும் இருந்தேன்.
‘இருக்கட்டும் மாஎன்றேன்.
கொஞ்சம் கூட அந்த ரத்தம் ஒழுகுகிற முகம் எனக்குள் பதியவே இல்லை. முற்றிலும் எனக்குப் பக்கத்தில் நின்று மாதுளைகளை அவராகவே தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஒருவராகவே இருந்தார்.
‘இருக்கட்டும் மாஎன்று மறுபடி தினகரியிடம் சொல்லிக்கொண்டே அவரும் அந்தச் சின்னப் பெண்ணும் நிற்கிற இடம் பக்கம் நகர்ந்தேன். எனக்கு என்னவோ அவருடைய முகத்தை மறுபடி நெருக்கத்தில் பார்க்கவேண்டும் போல இருந்தது. பக்கவாட்டில் அந்த மூக்கு நன்றாகத்தானே இருந்தது. அவரால் நல்ல கொய்யாப் பழங்களைப் பொறுக்க முடிகிறது தானே. இவ்வளவு அகன்ற கண்களுடைய சிறுமி கூட அவருடைய பெண்தானே. நான் யோசித்துக்கொண்டே போகையில் என் கையில் வைத்திருந்த மாதுளைகளில் ஒன்று சற்றுப் பிசகி கீழே உருண்டு விழுந்தது. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமாக உருளும் போல. அது தன் போக்கில் உருண்டு நிற்கிறவரை பார்த்துக்கொண்டே நின்றேன்.
குடையைக் கழுத்தோடு இடுக்கிக் கொண்டு அந்தச் சிறு பெண், உருண்டுபோயிருந்த பழத்தை எடுத்து நீட்டியது. சிரித்தது. இன்னொரு மாதுளை போல இருக்கிற அந்த முகத்தின் கனிவு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்தப் பெண்குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது போல, நான் அதனுடைய  அப்பாவைப் பார்த்துச் சிரித்தேன். என்னுடைய சிரிப்பை ஒரு பரிசு பெறுவது போல அவர் வாங்கிக் கொண்டார். தன்னுடைய இடது கையால் மகளின் தலையைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து இழுத்தார். தன் குழந்தையின் முகத்தை அதே இடது கையால் அதனுடைய இரண்டு கன்னமும் இழுபட வருடினார். அப்படி இழுபடும் போது அவருடைய மகளின் உதடுகள் ஒரு குருவிக் குஞ்சினுடையதைப் போல குவிந்து பிளந்தன.
இன்னும் ஒருமுறை ஒரு பழம் உருள வேண்டும். அதை அது எடுத்துக் கொடுக்க வேண்டும். என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். அதனுடைய அப்பா இடது கையால் அணைத்துக் கொள்ள, வாய் இப்படி, குருவிக் குஞ்சைப் போலப் பிளக்க வேண்டும். நான் அந்தக் கணத்தை மீண்டும் மீண்டும் விரும்பினேன். ஒரு தகப்பனின் கை இதைவிட நெருக்கமாகத் தன்னுடைய சின்னஞ்சிறு மகளின் கன்னத்தை வருடமுடியாது என்று தோன்றியது,
நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
‘இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு பழம் உங்க கையால செலக்ட் பண்ணிக் கொடுங்க’  என்று சிரித்தேன். பக்கத்தில் குடையோடு நிற்கிற அவருடைய பெண்ணை அவரைப் போலவே இழுத்து என்னோடு சேர்த்துக் கொண்டேன்.
தினகரி ஒன்றுமே சொல்லாமல் என் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுடைய கைகளை சமீபத்தில் என் கைகளில்  வைத்துக கொண்டது இல்லை. எடுத்துவைத்துக் கொண்டேன். லேசாகத் தட்டிக்கொடுத்துக் கொண்டே சொன்னேன், ‘அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவு தான் மா’.
தினகரியின் கைவிரல்கள் என் கைகளுக்குள் லேசாக அதிர்ந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு இறுக்கிப் பிடித்தது. அவள், அவ்வளவு தான் ப்பா’  என்று சொல்லியபடி என்மீது பூப்போலச் சாய்ந்துகொண்டாள்.
குடையை முதுகுக்குப் பின்னால் நன்றாகச் சாய்த்து, எங்கள் இருவரையும் பார்க்கிற அந்தக் குழந்தையின் முகத்தில் திரும்பத் திரும்ப ஒரு முடிக் கற்றை பறந்துவிழுந்து கொண்டிருந்தது
தினகரி என்னை விட்டு விலகி அந்தக் குழந்தையிடம் போனாள். முகத்தில் விழுகிற முடியை ஒதுக்கிவிட்டாள். பக்கத்தில் நிற்கிற அதனுடைய அப்பாவைப் பார்த்துக்கொண்டே               
‘கண்ணு ரெண்டும் நல்லா இருக்குஎன்றாள்.
%


ஆனந்த விகடன்
17-4-2013.





No comments:

Post a Comment