Thursday, 5 February 2015

எல்லோரும் அற்புதர்கள்







மரபின் மைந்தன் முத்தையா , அவருடைய ‘அற்புதர்’  நூலை அனுப்பி இருந்தார். சத்குருவுடனான அவருடைய அனுபவங்களை ‘சாய்வெழுத்திலும் நேரெழுத்திலும்’ செய்யப்பட்ட பதிவு அது.

அதில் முத்தையா சத்குருவுடன் காசிக்குச் சென்றிருந்ததைப் பற்றிய ஒரு பகுதி இருக்கிறது. இருவரும் விசுவநாதர் கோவிலுக்குச் செல்கிறார்கள். கங்கைக் கரையோரமாகச் சிறுவர்கள் பட்டம் விட்டபடி இருக்கிறார்கள். சத்குரு பார்க்கிறார். ‘ Oh! It is a long time since I flew a kite ‘ என்று அவர் சொல்கையில் சத்குருவின் வலது கரம் பட்டத்தின் நூலை விடுவது போலவும் சுண்டி இழுப்பது போலவும் பாவனை செய்கிறது. அப்புறம் அவர் பட்டம் விடுகிறார். அது கரணம் அடித்து எதிரே இருந்த ஒரு பள்ளத்தில் விழுகிறது. சிறுவர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சத்குருவும் சேர்ந்து கொள்கிறார்.

எனக்கு இந்தக் காட்சியை உணர முடிந்தது. அதில் நான் இருந்தேன். பட்டம் விடும் சிறுவர்களில் நானும் ஒருவன். பள்ளத்தில் விழுந்த பட்டம் என்னுடையதுதான். அப்படி விழுந்ததற்காக ‘ஹோ’ என்று எழுந்த உற்சாகக் கூச்சலில், என்னுடைய உரத்த ‘ஹோ’ உண்டு.

நான் சிறுவயதில் மிகவிருப்பமாகப் பட்டங்கள் விட்டிருக்கிறேன். நடராஜ மாமாதான் எனக்குப் பட்டங்கள் செய்யச் சொல்லிக்கொடுத்தார். வானத்தைப் பற்றியும் காற்றைப் பற்றியும் கொஞ்சம்  அவரிடம் இருந்து அறிந்திருந்தேன். மூங்கில் ‘பிளாச்சு’  ஒன்றை வளைத்து பட்டத்தில் வில் வைக்கவும் பட்டத்தின் சூட்சுமக் கயிற்றைச் சரியாகக் கட்டவும் நடராஜ மாமாவிடம் இருந்தே என் விரல்கள் தெரிந்துகொண்டன. அது எப்போதுமே ஒரு மாயம் போல நிகழும். பத்தமடை சாய்பு கடையில் வாங்கிவந்த ட்வைன் நூல் கண்டு  முற்றிலும்  தீர்கிற உயரத்தில் வானில் என்னுடைய பட்டங்கள் பறந்திருக்கின்றன.

அது ஒரு ஆனி மாதமாக இருக்கலாம். எங்கள் வீட்டுத் ‘தட்டோட்டி’யில் இருந்து ஒரு நாள் அப்படிப் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறேன். சந்திப் பிள்ளையார் முக்கில் இருந்து மேல ரத வீதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த பெரிய தேரின் உச்சிக் கலசமும் சிவலிங்கக் கொடியும் என்னுடைய பட்டம்  எவ்வும் விரி வானத்தின் கீழ், கண்ணியிட்டுத் தொடரும் அடுத்தடுத்த வீட்டு உச்சந்தலைக் கூரைகள் தாண்டி, ஒரு கனவு போல நகர்வது தெரிந்தது.

அது ஓர் அழியாச் சித்திரம். அதே போல என்னிடம் இன்னொரு சித்திரம் உண்டு. அறுவடையான வயலில், இன்னும் மிச்சமிருக்கிற நெல்லின் அடித்தாள்கள் பழுப்புக் கத்திகளாகப் பாதங்களில் குத்த, விடுமுறைப் பையன்கள் பட்டம் விடுகிற ஒரு காட்சியை, முந்திய ஊர்த் திருவிழா முடிந்து இன்னொரு ஊர்த் திருவிழாவுக்குப் போகிற யானை, இடைத் தங்கலாக ஒரு உள்ளூர்த் தென்னந்தோப்பில் நின்று, தும்பிக்கை சுழற்றி ஓலை உண்பதைப் பட்டம் விடும் சிறுவர்கள் பார்ப்பது போன்ற ஒன்றை எல்லாம் பல  வருடங்களுக்கு முன், கலாப்ரியா, பாண்டிய ராஜ், நான் எல்லோரும் சேர்ந்து யோசித்த வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ திரைக் கதைக்கான குறிப்புகளில் வைத்திருந்தேன்.

இப்போதும் அந்த யானை அதே தென்னந்தோப்பில் தும்பிக்கை துளாவி நிற்கிறது. அந்தச் சிறுவர்கள் அறுவடையான வயலில் இன்னும் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காசியில் இட்ட ‘ஹோ; என்ற ஆனந்தக் கூவல் என் காதுகளில் இக் கணம் விழுகிறது.
அந்த யானை, அந்த அறுவடை வயல், அந்தப் பட்டம், அந்த ‘ஹோ’ எல்லோர்க்கும் உரியது.

எல்லோரும் ஒரே ஒரு பட்டமாவது செய்ய வேண்டும்.
எல்லோரும் ஒரே ஒரு முறையாவது பட்டம் விடவேண்டும்
எல்லோரும் ஒரே ஒரு முறை ‘ஹோ’ என்று கூச்சல் இடவேண்டும்.

பட்டம் ஒரு அற்புதம்.
பட்டம் விடுவது ஒரு அற்புதம்.
பட்டம் விடும் எல்லோரும் அற்புதர்களே.

%

Monday, 2 February 2015

மீண்டும் இறகுகள்.









மீண்டும் இறகுகள் தான்.

துயரம் சார்ந்த மன நெருக்கடி மிகுந்த நாட்களில், ‘மீண்டும்’ என்ற ஒரு சொல்லையும் ‘மறுபடியும்’ என்ற சொல்லையும் அதிகம் உபயோகிக்க நேரும் போல.

மீண்டும் நான் இன்று இறகு பொறுக்கினேன். ஒன்றல்ல நான்கு இறகுகள். அதற்கு மேலும் சிதறிக் கிடந்தன. அதிலிருந்து நான் நான்கை மட்டும் எடுத்துக் கொண்டேன். வழக்கமாக எனக்கு அருளப்படும் காக்கைச் சிறகோ புறாச் சிறகோ அல்ல இது. இது பெயர் தெரியாத பறவை ஒன்றின் உடையது. நானும் தான் எங்கள் நிலக்கோட்டைக் காலத்தில் இருந்து ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை. என்ற சொற்றொடரை எத்தனை முறைகள் உச்சரித்து வருகிறேன். இந்தப் பறவைக்கும் பெயர் தெரியவில்லை.

உதிர்ந்தவை அல்ல. பிடுங்கப் பட்ட அடையாளமும் இல்லை. வேட்டையாடப் பட்டிருக்கலாம். இந்த அதிகாலைக் குளிருக்கு முந்திய இரவில் தைப்பூச நிலா வெளிச்சத்தில் ஏதோ ஒரு பறவை ஏதோ ஒரு மிருகத்தால்  தாக்கப் பட்டிருக்கலாம். தலைகுப்புறக் கவிழ்த்தப் பட்ட வானம் போலப் பரந்து கிடக்கிற, அவுரி போன்ற குத்துச் செடிகள் நிறைந்த மைதானத்தில் அப்படி ஒரு இரவு சாத்தியம் உடையது.

கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் மூன்றில் இரண்டான மேற்பகுதி பழுப்பாகவும் இருக்கிற இறகுடைய அந்தப் பறவையை என்னால் வரைய முடியவில்லை. இந்தப் பகுதியில் இரண்டு மூன்று வருடங்களாக, தனித்தலையும் ஒரு செம்போத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த மைதானத்தில் அது தன் முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால் அதன் வாழிடம் வேறு. அது தென்றல் நகர்ப் பக்கத்துக் குத்துச்செடியோரம் தன் காப்பகத்தை வைத்திருக்கும்.

இந்த இறகுகள் ஒரு புற நகர்க் குப்பைக் கிடங்கை ஒட்டிக் கிடந்தன. . அதிகமாகிக் கொண்டு வரும் மது போத்தல்களும், நெகிழி நீர்ப்பைகளும் போலக் கிடந்த ஏழெட்டு இறகுகளில் இருந்து நான் நான்கே நான்கை மட்டுமே ஏன் எடுத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. விபத்தில் தவிப்பவர் இடையே அழகிய முகங்களை உடையவரை மட்டும் காப்பாற்றுபவனாகவே நான் இருப்பேன் போல. நான் பிசிறற்ற, கச்சிதமான தன் வடிவத்தை இழக்காத, வெவ்வேறு அளவுகள் உடைய நான்கு இறகுகளை மட்டும் குனிந்து எடுத்துக்கொண்டேன். அதற்கு மேல் பொறுக்க விடாமல் என் மேல் படைபடையாக காக்கைக் குரல்கள் கவிய ஆரம்பித்தன. நான் பறவைகளால் சினேகிக்கப்படுவேன் என்று நினைத்தது பொய்யாயிற்று. நான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் அந்தக் காக்கைகளால் சந்தேகிக்கப் பட்டேன். ’அது காக்கை இல்லை. ஆனால் அது ஒரு பறவை. அதை நீயே கொன்றாய். நாங்கள் அறிவோம்’ என்ற கூர்மையுடன் கருத்த பறவையின் மினுமினுக்கும் அலகுகள்  வியூகம் அமைத்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன். இன்னும் குறைந்தது முப்பது நிமிடங்களின் நடை பாக்கி இருந்தது வீடு அடைய. ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். வானத்தில் கலைந்து கலைந்து கதறும் பறவைகளின் சித்திரம் என்னை விரட்டியது. வெறும் நான்கே நான்கு இறகுகள் மிகுந்த பாரம் அடைந்தன. இதை எப்படி வீடு வரை கொண்டு சேர்க்கப் போகிறேன் என்று தோன்றுகிற அளவுக்குக் கனத்தன. இடது, வலது கைவிரல்களுக்கு மாறி மாறி மாற்றிக்கொண்டேன். காற்றின் வீச்சில் அந்த இறகுகளின் அடுக்கு சிதைந்துவிடக் கூடாது என்ற பதற்றம் எனக்கு இருந்தது.

மீதி இருந்த நடை தூரத்தில் நான் அமைதியற்றவனாகி இருந்தேன். ஒரு பறவையின் இரவு மரணம் என்றும் ஒரு இரவுப் பறவையின் மரணம் என்றும் நான், எனக்கே கேட்கும் அளவுக்கு சற்று உரக்கச் சொல்லியிருப்பேன் கூட. தப்பித்துச் செல்வது போல, பதுங்கி மறைவதாகக் கூட என் அசைவுகள் இருந்திருக்கலாம். சப்தமே எழுப்பாத பாதங்களுடன் தான் வீட்டில் நுழைந்தேன். வாசல் கதவுகளுக்குக் கூட என் மேல் பரிவு இருந்தது. அதன் வழக்கமான இரும்புச் சத்தத்தை இன்று இடவில்லை/

இறகுகளுடன் நுழையும் என் பைத்தியக்காரத்தனம் புதிது இல்லை என்பதால், ‘என்ன, இன்னைக்கு நாலைந்து வருது?’ என்ற கேள்வியுடன் வீடு என்னை அனுமதித்தது. வீடு என்பது இடவாகு பெயர் என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஏற்கனவே ஏழெட்டு இறகுகள் சேமிக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தில், ஒரு சிறுவனைப் போல இந்த நான்கு இறகுகளையும், ஒளித்துவைத்தேன். அந்தப் பறவையின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வியின் ஓயாத திமிறலைத் தணிக்கமுடியவில்லை.

தற்காலிகமாக, என்னுடைய பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். அந்த நான்கு இறகுகளும் இதை ஆட்சேபிக்காமல் இருக்கவேண்டும்.


Saturday, 13 December 2014

இப்படியாக...






’நீங்க நான் - ஃபிக்‌ஷன் எழுதுங்க’ என்று என்னிடம் முதலில் சொன்னது கௌரி ஷங்கர் தான். அது என்னுடைய நிலக்கோட்டை பருவத்தில். 81 – 85 ம் வருடங்களில் ஏதோ ஒரு நாளில்.

அது நான் மிகத் தீவிரமாகக் கதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம். ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’ தொகுப்பின் அத்தனை கதைகளிலும் நிலக்கோட்டை மண்ணின் வாசமும் மனிதர்களின் சாயலும் இருக்கும். ’வேறு வேறு அணில்கள்’ கதையில் வரும் சிலம்பாயியை அங்கே தானே பெற்றேன். அந்த, ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’யில் வரும் ரொட்டிக்காரர் இது போன்ற ஒரு மழைக்காலத்தில்தான் மரக்கதவைத் திறந்துகொண்டு வந்தார்.  மேல் கொக்கியின் உலோகச் சத்தம் இப்போது கூடக் கேட்கிறது.  அவருக்குத் தலை துவட்டக் கொடுத்த தேங்காய்ப் பூ துண்டின் ஈரக் கனம், புழுங்கல் வாடை இன்னும் அகன்றுவிடவில்லை. அந்தச் சிறு பறவை மரக்கதவு விரிசலின் தூரத்தில், மழையில் சிறகொடுக்கிக் கிடந்தது. இன்னும் எனக்கு அது பெயர் தெரியாத பறவையாகவே இருக்கிறது.

எனக்கு கௌரிஷங்கர் மீது ரொம்பக் கோபம். இப்படிக் கதை எழுதுகிற ஒருவனை, அ-கதை எழுதச் சொல்கிறாரே, இது எதனுடன் சேர்த்தி?’ என்று வருத்தம் கூட. இந்தக் கோவில்பட்டிக்காரர்களே இப்படித்தான். எதையும் சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேரே சொல்லிவிடுகிறார்கள். சரியாகவும் சொல்லிவிடுகிறார்களே, என்ன பண்ண? தேவ தச்சனும் இதே மாதிரி ஒரு சிரிப்புடனேயே,, கி. ராஜநாராயண மாமா மணிவிழா முடிந்து மதுரை காலேஜ் ஹவுஸ் மாடியிருந்து இறங்குகிற படிக்கட்டுகளின் டானா திருப்பத்தில், ’கடைசியாகத் தெரிந்தவர்’ கதையைப் பாராட்டிச் சொல்கிறார். அதை நம்புகிறவன் கௌரிஷங்கர் சொன்னதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்? ஒரு வேளை, நம்பினதால்தான்  கோபம், வருத்தம் எல்லாம் வந்ததோ என்னவோ?

அவர் அப்படிச் சொல்லிவிட்டாரே என்பதற்காக, நான் மறுநாளே, கையில் வைத்திருந்த பேனாவை மூடி வைத்துவிட்டு, வேறு பேனாவில்  வேறு நிற மை அடைத்து அ-கதைகளை எழுத ஆரம்பித்துவிடவில்லை. போன மாதம் வரை, இந்த தனுஷ்கோடி, அகஸ்தியர் அத்தை, பழனியாண்டி மாமா உட்பட, கதைகளாக மட்டுமே எழுதி வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் எந்தக் கதை முழுக்க முழுக்க கதை? எந்த எழுத்து முற்றாக முற்றிலும் புனைவு? இந்த வாழ்வு அ-கதை எனில், இந்த வாழ்வில் மனிதர்க்கு நிகழ்வதெல்லாம் அ-புனைவு எனில், எழுதப்பட்ட கதைகளும், எழுதப்படப் போகிற கதைகளும் அ-கதை அன்றி வேறென்ன?

அப்படிப் பார்த்தால், நான் எத்தனையோ காலம் காலமாக, முன்பு கதைகள் என்ற பெயரில் அ-கதைகளையும், இப்போது அ-கதைகள் என்ற பெயரில் கதைகளையும் தானே எழுதிவந்துகொண்டு இருக்கிறேன்.

ஜெயகாந்தன் எழுதிய, ‘உன்னைப் போல் ஒருவனும்’ ‘பிரளயமும்’ கதையெனில், அவர் எழுதிய ‘சிலர் உள்ளே இருக்கிறார்கள்’ கதைகளே அல்லவா? அவர் எழுதிய ‘நினைத்துப் பார்க்கிறேன்’ அ-புனைவு எனில், ‘ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்’ மட்டும் புனைவாகி விடுமா என்ன? எல்லோரும் நினைத்துத்தான் பார்க்கிறோம். எழுதுகிற எழுத்தெல்லாம் நினைத்துப் பார்க்கப் படுபவைதான்.  நினைவு என்பது நனவின் மீள் பார்வை. ‘உதய சூரியனும்; ‘நடந்தாய் வாழி காவேரியும்’  எழுதின தி.ஜானகிராமன் ‘உயிர்த்தேனும்’ ‘செம்பருத்தியும்’ எழுதுவார். லா.ச.ரா ‘அபிதா’ எழுதி ‘சிந்தா நதியும்’ எழுதுவார். அ.முத்துலிங்கத்துக்கு, ‘அங்கே இப்போது என்ன நேரமும்’ ‘மஹாராஜாவின் ரயில் வண்டியும்’ ஒரே திசைத் தண்டவாளங்களில் ஓடுபவைதான். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணை எழுத்து’வும் ‘நெடுங்குருதி’யும் மல்லாங் கிணற்று வேப்பங்காற்றுப் பட்டவைதான். கலாப்ரியாவின் ‘எட்டயபுரமும்’ ‘நினைவின் தாழ்வாரங்களும்’ கவிதையா, அ-கவிதையா? இதில் புனைவென்ன கதை என்ன? அ-புனைவு, அ-கதையின் முதல் எழுத்தாக வரும் ஆனா ஆவன்னாவுக்கு எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் எல்லாம் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தம் தான். உண்மை என்ற அர்த்தம் வாழ்வு என்ற ஒரே பெரும் அர்த்தம். அவள் என்று சொல்வதெலாம் அவனைத்தானே. சிவன் என்று சொல்வதெலாம் உமையைத் தானே.

நான் முன்பே சொன்னது போல, எல்லோரும் கோடற்ற ஒரு கோட்டின் மேல் தான் எழுதிக்கொண்டு வருகிறோம். காட்டில் விழுகிற ஒற்றையடிப்பாதை தான் கடலிலும் நமக்கு விழுகிறது. மண் புழுவுக்கு ஒரு வலசை. மடப் பிடிக்கு ஒரு வலசை. எல்லாம் இந்த ஈர நிலத்தின் உள்ளும் வெளியிலும் தான். இன்றைக்கு வர்ம சிகிட்சை வரிசையில் எனக்கு இடப்புறம் இருந்த இளைஞன் பிசகிச் சிரித்த சிரிப்பு என்னைப் பார்த்து அல்ல, அவனைப் பார்த்தே. தங்கவேல் பழமுதிர் சோலையில், தாழிப் பெருவயிறும், கூடு கொம்புமாய், மிச்சப் பழத்தோல் வீசப்படக் காத்திருக்கும் கிழட்டுக் பசுவின் கண்களைப் பார்க்கும் போது, ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, எங்கள் தெருவில் நடந்த ஒரு கல்யாண வீட்டு வாசலில் சோறு வாங்குவதற்கு நின்ற முதிய நரிக்குறவனின் மினுமினுத்த கண்கள் தானே ஞாபகம் வருகின்றது. அவருக்கும் இப்படி ஒரு பசித்த பெரு வயிறு கோவணத்திற்கு மேல் இறங்கிக் கிடந்தது.

நான் அருகிருக்க, ஒரு உறவினர், வேப்பிலையில் பொதிந்த அவருடைய பச்சைப் பிள்ளையைக் குழிக்குள் வைக்கும் போது, துளியளவு மஞ்சள் நிற நாசியுடன் சுண்டு விரல் பருமனுக்கு ஒரு வெள்ளைக் குண்டலப் புழு கண்ணில் பட்டது இன்னும் ஏன் ஞாபகம் இருக்கிறது? இரண்டு தினங்களுக்கு முன், நான் இதுவரை பார்த்திராத ஒரு மிருகச்சாவின் தோற்றத்தில், மல்லாந்து, நான்கு கால்களும் மேலே உயர்த்தி விறைத்துக்கிடந்த ஒரு செவலை நாய் ஏன் தீயில் பொசுக்கப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கீழ்வெண்மணிச் சாவையும் ராமையாவின் குடிசையையும் நினைவில் விம்ம வைத்தது?

ஏதோ இந்த உலகின் மொத்தப் பரப்பிலும் முழுக்கப் படர்ந்து தழுவிவிடுவது போன்ற களங்கமற்ற ஆசையில், மழைக்குப் பிந்திய படர் தாவரங்கள் அதனதன் குறுநீலப் பூக்களுடனும் பச்சைப் பேதைமையுடனும் சாலையோர மண்ணிலிருந்து தார்ப் பாதையின் எட்டுத் திசைகளிலும் கைவீசி இருக்கிறதே. பத்து நாட்களுக்கு இடையில் ஒரு காக்கை இறகு அல்லது புறாத் தூவி எப்படியும் எனக்குக் கிடைத்து விடுகிறதே. எத்தனை பேர் கவனித்தும் கவனியாமலும் என்னைத் தாண்டிப் போகிறார்கள்? எத்தனை பேரை கவனித்தும் களிகூர்ந்தும் நான் கடந்து செல்கிறேன்?
இவற்றை, இவர்களை எழுதினால், இவை புனைவா, அ-புனைவா? கதையா, அ-கதையா? எதுவாகினும் சரி. இவற்றை, இவர்களைப் பற்றி நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக, , என்னுடைய ‘சமவெளி’ எனும் வலைப் பூவிலும், முகநூல் பக்கங்களிலும், ஆரம்பத்தில் தொடர்ந்தும், இடையில் அவ்வப்போதும், இப்போது எப்போதாவதும் எழுதிவந்தேன், வருகிறேன்.

பெரிதினும் பெரிதை எல்லாம் நான் எழுதிவிடவில்லை. சிறிதினும் சிறிதையே எழுதினேன். அந்தச் சிறிதினும் சிறிதில் பெரிதினும் பெரிதை உணர்கிறவனாக நான் இருக்கிறேன். எனக்குச் சின்ன விஷயங்களே பெரிய விஷயங்கள்.

ஒருவெள்ளைத் தும்பைப் பூ, ஒரு சிறிய கழச்சிக் கல், ஒரு மணல் பரல், ஒரு உப்புக் கல், ஒரு துளிக் கண்ணீர், ஒரு ஈரச் சிறகுதறல், ஒரு நுனிப் பீடிச் செங்கங்கு, லச்சுமியின் உச்சி நரைச் சிகையில் கிடக்கும் ஒற்றை வேப்பம் பூ, தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் பாட்டிலில் நடனமிட்டுச் சுழலும் ஒற்றை நீள் மயிர்,, பென்சில் சீவும் நேரப் பெருவிரல் ரத்தச் சொட்டு. சாம்பல் பூத்துக் கிடக்கும் லீலாச் சின்னம்மையின் சிதை எலும்பு, காலில் மிதிபடும் தக்காளி விதைச் சிதறல், எரிந்தணைந்த கார்த்திகை விளக்கு, ஜன்னலுக்கு வெளியே வளரும் பேரீச்சைச் செடி,, இருட்டுக் கட்டிலில் படுத்திருந்த ஒரு முதிய பெண்ணின் உள்ளங்கையில் உறைந்தும் உருகியும் கிடந்த அவரின் வாழ்வு, ஆனந்த விகடனில் எழுதிய ‘நசுங்கிப் போனவை, போல, எழுதப் படாமல் என்னைச் சுற்றி மிச்சமிருக்கும் ‘நசுங்கிப் போகாதவை’ எல்லாமும் தான் நான் இப்படிச் சின்னச் சின்னதாக என் வாழ்வில் கண்டடைந்தவை. அல்லது இவைகளின் ஊடாகவே நான் என் வாழ்வைக் கண்டடைந்து வருகிறேன்.

என் வாழ்வு பெரியதும் இல்லை. சிறியதும் இல்லை. அது வாழ்வு. நான் பெரிய மனிதனும் இல்லை. சிறிய மனிதனும் இல்லை. மனிதன். சின்ன விஷயங்களின் மனிதன்.

இப்படித்தான் இருக்கிறேன் நான்.

இப்படி இருப்பது போதும் எனக்கு.


கல்யாணி.சி                                19.சிதம்பரம் நகர், பெருமாள்புரம்               
08.11.2014.                                        திருநெல்வேலி - 627007.




கனிவுடன்.

இத் தொகுப்பில் தேர்ந்தெடுத்துப் பிரசுரமானவற்றையும், இவை தவிர்த்துச் ‘சமவெளி’யில் பதிவாகியிருக்கிற இன்னும் பலவற்றையும் எழுதுவதற்குப் பெரும் தூண்டுதலும் ஊக்கப் பின்னூட்டங்களும் தந்திட்ட அனைத்து முகநூலர்களையும் நான் நெகிழ்வோடு நினைத்துக் கொள்கிறேன். எனக்கு அவர்கள் மிகவும் தேவையாக இருந்தார்கள். நான் எழுதுவதை வாசிக்க வாசிக்க, நானும் அவர்களுக்குச் சற்று தேவையாக இருந்திருக்கக் கூடும்.
%                                
அது நிறைய நேரம் கோரும், அலுப்பூட்டுகிற ஒரு பெரிய வேலைதான். நானாக இதைச் செய்திருக்கவே மாட்டேன். ‘சமவெளி’ வலைப் பூவிலும் என் முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட, ஒழுங்கற்ற இடைவெளிகளுடன் சிதறிக்கிடந்த அத்தனை வரிகளையும் தேடியெடுத்து, தொகுத்து, வகைப்படுத்தி, எழுத்துருச் சீர்மையுண்டாக்கி அனுப்பிக் கொடுத்து, என் தேர்வைச் சுலபமாக்கிய சக்தி ஜோதிக்கு என் நன்றி உரித்தாகிறது.
ஒரு முக்கிய மான கட்டத்தில், கணினிப் பயன்பாட்டில் அச்சுக் குழப்பங்கள் உண்டாகித் திகைத்த நேரத்தில், மிகக் குறைந்த அவகாசத்தில் அதைச் சீர்செய்து தந்த வடிவமைப்பாளர், தம்பி ஆர்.சி.மதிராஜுவுக்கும் என் நன்றி
%
2001ல் என்னை அடையாளங்கண்டு என் சிறுகதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டதில்  துவங்கி, 2012 செப்டம்பரில், வண்ணதாசன் – 50 என மதுரையில் ஒரு விழா எடுத்து. என்னைச் ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ என இன்று வரை நிலை நிறுத்திவரும் சந்தியா பதிப்பகத்தினரை வணங்குகிறேன்.
%
தன்னுடைய புனைவுகளாலும், அதைவிடக் கூடுதலாகத் தன்னுடைய அ-புனைவுகளாலும் நவீன தமிழுக்குத் தொடர்ந்த பங்களிப்பை அளித்துவருகிற திரு.அ.முத்துலிங்கம் அவர்களின் கையில் இந்தத் தொகுப்பைக் கனிவுடன் சேர்க்கிறேன்.

கல்யாணி.சி.