Tuesday, 17 September 2013

ஞாபக மரங்கள்.










அபாக்கஸ் வீடு என்றுதான் முன்பு அடையாளம் சொல்வார்கள். அந்த வீட்டில் இரண்டு மாமரங்கள் உண்டு. ஒன்று கிளிமூக்கு ஜாதி. இன்னொன்று உருட்டு வகை. கிட்டத்தட்ட பட்டணஞ் ஜாதியோடு சேர்த்துக்கொள்ளலாம். ஆமாம். மாம்பழத்திலும் ஜாதி எல்லாம் உண்டு. தாழ்ச்சி உயர்ச்சி உண்டு. அந்த வீட்டுக்காரர் இறந்து போனார். இரண்டு வருடங்கள் இருக்கும். அதற்காக மாமரங்கள் காய்க்காமலா போகும். இரண்டும் ரோட்டுப் பக்கமே கிளை சாய்ந்திருக்கின்றன. காய்த்துக் கிடப்பதும் அப்படித்தான். இந்த வகைக்குப் பெயர்தான் கிளி மூக்கே தவிர, கிளிகள் கடிப்பது எல்லாம் அந்த இன்னொரு உருட்டு வகையைத்தான்.
ரொம்ப நாட்களுக்குப் பின் இன்று கிளிச்சத்தம் கேட்க வாய்த்தது. கிளிச் சத்தம் பறத்தல் உடையது. கோவில் பிரகாரங்களில் கிளிபறக்கும் போதும், பறந்த பின்பும் கிளிச்சத்தம் பறந்துகொண்டிருக்கும். கிளிச் சத்தத்திற்கு நீங்கள் எந்த நிறமும் இட்டுக் கொள்ளமுடியும். அதன் பஞ்ச வர்ணம் அந்தக் கணம் நம்முடைய மனதின் சிறகுகளுடைய நிறத்தை அனுசரித்துக் கொள்ளும். இன்று நான் கேட்ட கிளிச்சத்தத்தின் நிறம் பச்சை.
அந்த மாமரத்தில் ஒரு தேர்ந்தெடுத்த., காயை விடப் பழுத்த, பழத்தை விடக் காயாக இருக்கிற ஒன்றை ஒரு கிளி கடித்துக் கொண்டிருக்கிறது. கிளியை. கிளி அசைவுகளுடன், கிளிச் சூழலில் பார்க்கவேண்டும் எனில், அதை நான் இப்போது பார்ப்பது முற்றிலும் சரியானது. ஒரு தலைகீழ்க் கிளியாக அது காம்பில் பாதி கிளையில் பாதி இருந்தது. தன்னுடைய எடை, காம்பின் தாங்கு சக்தி. கடிக்கப்படுவதன் எடையும் கடித்துமுடிப்பதற்கு எடுக்கக் கூடிய உத்தேச நேரமும் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்ட ஒரு துல்லியச் செயல்பாட்டுடன் கிளி இயங்கிக் கொண்டிருந்தது. பின்னணி இசைக் கோர்வை போல இன்னொரு கிளி சத்தமிட்டுக்கொண்டிருந்த இடம் தெரியக் காணோம். ஒரு சிறு நொடி அத்தனை மா இலைகளும் கிளியாகி. மறு நொடியில் அத்தனை பச்சைக்கிளிகளும் இலையாகிவிட்டிருந்தன.
நேற்றுத்தான் ஒரு தொலைபேச்சில் பேசுகிற எதிர் முனைக் குரலுடன் கிளிச்சத்தமும் கேட்டது. அவர்களுடைய வீட்டிற்கு எதிரே நிற்கும் மரங்களில் ஐம்பது அறுபது கிளிகள் கூட்டமாக இருக்கிறதாம். அடைகிற நேரத்தில் எல்லாக் கிளிகளும் இடும் சத்தம்தான் அப்போது கேட்பதுவாம். நான் நம்புகிறேன்.
இப்படி நூற்றுக் கணக்கில் கிளிகள் வசிக்கும் ஒரு பெரும் அரசமரத்தை பெங்களூரு பக்கத்தில் உள்ள ஹென்னூர்பெண்டே என்ற இடத்தில் பார்த்திருக்கிறேன். அங்கேதான் எங்கள் வங்கியின் பயிற்சி மையம் ஒருகாலத்தில் இருந்தது. தினசரி ஹென்னூர்பெண்டேயில் இருந்து லிங்கராஜபுரம் வரை நடந்து வருவோம். ஒரு நாள் தவறாமல் அவ்வளவு தூரம் நடப்பதற்குச் சிலருக்குத் திடமான காரணங்கள் இருந்தன. ஒரு மிக முக்கிய காரணம் லிங்கராஜபுரத்தின் சாராயக் கடை.
நான் மறுபடியும் கிளிகள்என்று ஒரு கதை அந்தப் பயிற்சிக்குப் பிந்திய கால குங்குமம்இதழ் ஒன்றில் எழுதினேன். என் தொகுப்பு எதிலும் இதுவரை சேராத, என்னிடம் பிரதி கூட இல்லாத ஒரு கதை அது. மிக அடர்த்தியான தலைமுடியுடன், மிக அடர்த்தியான மீசையுடன், நேர்த்தியான கதர் ஜிப்பா அணிந்திருக்கும் என்னுடைய அழகான புகைப்படம் ஒன்றையும் கதையுடன் பிரசுரித்திருந்தார்கள்.
கிளிகள் மாம்பழத்தைக் கடிக்கின்றன. என்னைப் போன்றவர்கள் ஞாபகத்தைக் கடிக்கிறோம். இந்த உலகத்தில் எத்தனை மாமரங்கள் உண்டோ, அத்தனை ஞாபக மரங்களும் உண்டு அல்லவாvvvv

பதிலற்றவை.



அந்தத் தெருப் பெயர் கூட எனக்குத் தெரியாது.
ஆனால் அந்தத் தெருவில்தான் அவரை எப்போதும் பார்த்து வருகிறேன். அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள். இரண்டு பையன்கள், ஒரு பெண். குழந்தைகள் இல்லாமல் அவரைப் பார்த்ததில்லை. தலையில் ஒரு பாத்திரம் இடுப்பில் ஒரு பாத்திரம் எனத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிற போது கூட ஒரு பையன் அவர் கையைப் பிடித்துக்கொண்டே நடப்பான். ஒரு பெண் குழந்தை அவர் பின்னாலேயே போகும்.

தளர்வாடை என நான் சொல்கிற நைட்டிதான் அவருடைய முழு நாள் உடையாக இருக்க வேண்டும். அந்த தொண்ணூற்றுச் சொச்சம் இருக்கும் மிகத் தளர்ந்த முதிய பெண்ணை அந்த வீட்டுக்கு உள்ளே இருந்து மிகக் கனிவுடன் அழைத்து வந்து முன்பக்கத்துப் பிரம்பு நாற்காலியில் அமர்த்தும் போதும் அதே உடைதான். அந்த நேரத்தின் சித்திரம் இப்போதும் கூட எனக்குள் தொங்குகிறது. வேலை செய்கிற மற்றொரு வீட்டுக்கு மீனோ முட்டையோ வாங்கிக்கொண்டு போகும் போதும் நைட்டியில்தான். கைபேசியில் பேசிக்கொண்டே மஞ்சள் சரக்கொன்றை உதிர்கிற வீட்டுப் பக்கத்தில், அவரைப் போல இன்னொரு வீட்டில் வேலை பார்க்கிறவரிடம், அல்லது தேய்ப்பு வண்டிக்காரரிடம் பேசும் போதும் அதே தளர்வாடை.

தான் அழகு என்று அவருக்குத் தெரியும். அவருடைய உயரம், கருப்பு நிறம், அதையெல்லாம் விட எப்போதும் அவரிடம் இருக்கும் துறுதுறுப்பின் வெளிச்சம் அவர் எதிரே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை அந்தத் தெருவில் ஒவ்வொரு முறையும் எனக்கு உண்டாக்கி இருக்கிறது.. பார்க்காதது போல் பார்ப்பதையும், பார்க்கப் படாதது போல பார்க்கப் படுவதையும் யார்தான் விரும்பவில்லை. ‘பராக்குப் பார்த்துக் கிட்டே நடக்காதேண்ணு எத்தனை தடவை சொல்லுதது’ என்று நான் அவரை எதிர்கடக்கும் நுட்பமான சிறுபொழுதில், அவர் அவருடைய இரண்டாவது பையனைப் பார்த்துத்தான் சொல்கிறார் என்பதை நீங்களும் நானும் நம்புவோமாக, அதற்கும் அப்பால் புரிந்துகொண்ட ஒரு சிறு புன்னகையுடன். அகராதிக்கு வெளியே வழியும் அர்த்தங்கள் உடைய சொற்கள் சிந்தாத வாழ்வின் பக்கங்கள் உண்டா?

இன்று அவரைக் காய்கறிக் கடைப் பக்கம் பார்த்தேன். அந்தக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடைய வழக்கமான உடையான தளர்வாடையில் இல்லை. சேலையில் இருந்தார். வாடா மல்லிக் கலர் சேலை. சற்று அதிகப் பளபளப்பு உடையது. இடையிடையே மினுங்கும் பூக்கள் தைக்கப்பட்டிருந்தன. அந்த ஆழ்ந்த கருநீலத்தில் போர்த்தப்பட்டு அவர் பெரும் கனிவுடன் நடந்துவருவது நன்றாக இருந்தது. நான் எதிரே வருவதை அவரும் பார்த்துவிட்டார். தான் முதல் முறையாக இப்படி ஒரு முழுமையான உடையில் பார்க்கப்பட்டதில் அவருக்கு சந்தோஷம், நிறைவு, வெட்கம். தலை குனிந்தே இருந்தது. வகிட்டுப் பிளவு தெரிந்தது. உள்ளிருந்து பொங்கும் அத்தனை பெரு ஊற்றையும் உதடு நடுங்கும் ஈரச் சிரிப்புக்குள் தடுத்துவிட முடியும் போல.
நான் அவரை எதிர்கொண்டு கடந்து போகிற அந்தச் சிறுகணம் அது. அவர் என் முகத்தைப் பார்த்தார். ‘காய் வாங்க வந்தீங்களா ஸார்?’ என்று மிகத் தணிந்த குரலில் கேட்டார். சிரித்தார். போய்விட்டார். ஒரு மீன் கொத்திச் சிறகுகளுடன், வாடாமல்லி நிறம் பறந்தது.
நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
எல்லாக் கேள்விகளும் நம்மிடம் பதிலை எதிர்பார்ப்பதும் இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்லும் அவசியமும் இல்லை. இது கூட நமக்குத் தெரியாதா என்ன?
12Like ·  · Promote · 

முன் சென்றவரும் முன் செல்பவரும்..



அவர் மீண்டும் இந்த வழக்கமான பாதையில், எங்கள் வீட்டை ஒட்டி, நடந்து செல்வதை இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். கடைசியாக அவரைப் பார்க்கும் போது அவர் வீடு துக்கத்தால் நிரம்பியிருந்தது. அவருடைய மனைவி கண்ணாடிப் பேழையும் ஆழ் துயிலில், ஓட்டத்தை ஓடி முடித்திருந்தார். பிரார்த்தனைப் பாடல்களாலும் வேத வசனங்களாலும் அடர்ந்திருந்த சுவர்களின் மத்தியில் நின்ற அவருடைய கையைப் பிடித்து நிற்கும் சிறுபொழுதைக் கூட நான் அடையமுடியாத நிலையில் இருந்தேன்.

அவர் ஒரு கல்லூரி முதல்வராகவும், அவர் மனவி ஒரு கல்லூரிப் பேராசிரியை ஆகவும் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள். இந்தக் குடியிருப்புப் பகுதியின் ஆதிக் குடிகளில் அவர்கள் முக்கியமானவர்கள். இந்தப் பகுதி மக்கள் நலச் சங்கத்தின் ஆரம்ப அமைப்பில் அவர் பெயர் உண்டு. இப்போது வளர்ந்து காற்றுத் துளாவும் வேப்பமரங்கள் கன்றுகளாக இருக்கும் போது அவர் பார்த்திருப்பார். அவரால் நடப்பட்டவை கூட சில இருக்கும். இப்போது தூர்ந்து போகத் தயாராகி வரும், பாலிதீன் தாட்கள், தக்கைக் கழிவுகள் மிதக்கும், கல்வெட்டாங்குழி நிரம்பிக் கிடக்கும் மழைக் காலங்களை அவர் அறிந்திருப்பார். இந்தப் பகுதி, கட்டிடங்களால் நெரிசலடைவதற்கு முன்பு நின்ற உடைமரப் பூக்களின் வாசத்தில் நிரம்பிய வேனில் காலங்களை அவர் கடந்திருப்பார். ’முள்ளு கிடக்கும் , பாத்துப் போங்க. டயர் பஞ்சராயிரும்’ என வழக்கமாக இங்கே மீன் விற்கிறவர், புதிதாகக் கோலப்பொடி விற்கவந்தவரிடம் சொல்லியிருப்பார்.

நாங்கள் இங்கே குடிவந்த முதல் சில நாட்களிலேயே, அவர் இந்தப் பக்கம் நடை செல்வதைப் பார்த்திருக்கிறோம். முதல் நாள் பார்க்கும் போதே பேசினார், ஆயுள் முழுவதும் பார்த்தால் கூட ஒரு வார்த்தை பேசத் தயாராக இல்லாத இந்தக் காலத்தில். ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வார். தெரு விளக்கு எரியவில்லை எனில், தண்ணீர் வரவில்லை எனில் எங்கே புகார் செய்ய வேண்டும் என வழி காட்டுவார். மாநகராட்சிக்கு கூட்டாகப் புகார் மனுக் கொடுக்கவேண்டும் எனத் தூண்டுவார். மாமிசக் கழிவுகளைக் கொட்டி, இந்தப் பகுதியின் காற்றை மாசுபடுத்துகிறவர்கள் மேல் தனி நபராக நடவடிக்கை எடுத்தார்.

ஒருகட்டத்தில், இரண்டு பேரும் ஓய்வு பெற்ற பின், அவர் முன்னே நடந்து செல்ல அவருடைய மனைவி சற்று மெதுவாக நடந்து செல்வார்கள். பத்து முப்பது அடி அவர் முன்னால் போய்விடுவார். இவர் வாசல் தெளித்துக்கொண்டு இருக்கிற, கோலமிடுகிற எங்கள் வீட்டு, அடுத்த வீட்டுப் பெண்களிடம் பேசிக்கொண்டு நிற்பார். அவர் கூப்பிடமாட்டார். இங்கேயே பார்த்துக்கொண்டு நிற்பார். ‘ஸார், ரொம்ப நேரமாக உங்களுக்காக நிற்கிறார்’ என்று யாராவது சொன்னாலும், பேச்சைப் பாதியில் விட மனது இராது. ஓய்வுபெற்ற பேராசிரியைக்கு உள்ளே இருக்கும் அடிப்படையான பெண் இந்தக் காலைநேரப் பேச்சுகளை நடையை விட விரும்பியதில் ஆச்சரியம் இல்லை.

எல்லா நாட்களிலுமா பேசுகிற மன நிலை இருக்கிறது? அவர் முன்னால் வேகமாக நடக்க இந்த அம்மா, மெதுவாக அவர் பின்னால் போகும். அவர் திரும்பித் திரும்பி, பின்னால் இவர் வருகிறாரா என்று பார்த்துக்கொண்டே போவார். ஆட்டுக்குட்டி வருகிறதா என்று பார்த்துக்கொள்கிற மேரி.

‘வருகிறேன், வருகிறேன். நீங்கள் போங்கள்’ என்று சைகையில் இங்கிருந்து கையசைக்க, சார் முக்குத் திரும்பு முன் இந்தப் பக்கம் ஒரு முறை மீண்டும் பார்த்துக்கொள்வார்.

இன்று அவர் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், அவர் மனைவியை இழந்த துக்கம் வடிந்துவிட்டதா என்று தெரியவில்லை. தனிமை அவர் அசைவுகளில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை நிதானிக்க முடியவில்லை.

ஒன்றை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தார். சற்று அங்கங்கே நிற்கக் கூடச் செய்தார்.

பின்னால் அவர் மனைவி இன்னும் வந்துகொண்டுதான் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும் இல்லையா.
6Like ·  · Promote ·