Thursday, 31 January 2013

வாசிப்புக்குரியவர்கள்.


அப்படியெல்லாம் எனக்கு ஓவியம் பற்றித் தெரியாது எனக்கு. ஒரு அரூப
ஓவியக் கண்காட்சி வரிசையில், வழிதப்பி வந்து மிரண்டு நிற்கிற கிழட்டுப் பூனை போலத்தான் நான் நிற்பவனாக இருப்பேன். என்னிடம் உரத்துக் கூட அல்ல, மௌனமாக உச்சரிக்க எந்த செவ்வியல், நவீன, பின் நவீன ஓவியர்களின் பெயர்களும் இல்லை. ஆனாலும் ஓவியமும் ஓவியர்களும் சார்ந்த சிறு பூகோளம் எனக்குள் உண்டு.

பாஸ்கரனை ஓவியராக மட்டும் அல்ல மனிதனாகவும் ரவிசுப்ரமணியன்
அறிந்திருக்கலாம். கிருஷ்ணமூர்த்தியை இளையபாரதி அவருடைய ஓவியம் சாராத முகத்துடன் நெருக்கமாக உணர்ந்திருக்கலாம். மறைந்த ஆதிமூலத்தை என் அம்பாசமுத்திரம் நண்பர் நாறும் பூ நாதன் ஒரு தகப்பனை விட மேலான மனிதராக அறிந்திருக்கிறார். சந்ருவுக்கும் கோணங்கிக்குமான  உறவு ஓவிய வெளியைத் தாண்டிய  அகண்ட கலையின் பெரு வியாபகம் சார்ந்தது. நான் சக்திகணபதியை, அவருடனான மிகச் சிறிய நெருக்கத்தில், ஒரு ஓவியனாக, சுதைஞனாக,கேலிச்சித்திரக்காரனாக மட்டும் அறிந்திருக்கவில்லை. சுசீந்திரம் சன்னதித் தெருவீட்டில் அவரைப் பார்த்தபோதும், சுசீந்திரம் கோவில் மேல் விமானத்தில் நாங்கள் இருந்த சமயத்திலும் உணர்ந்த சக்திகணபதியின் குரலில் துக்கமும் கண்ணீரும் இருந்தன. தன் மகள் வயிற்றுப் பேத்தியை, தொட்டிலுக்குள் குனிந்து பார்த்து, அவர் சொன்ன சொற்களை, ஒரு புழுங்கிய வாடை அடிக்கும் பழஞ்சேலை சுருக்கங்களுக்கும் தொட்டில் கம்பின் கடைசல் வளைவுகளுக்கும் இடையே மட்டுமே சொல்லியிருக்க முடியும்.

புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது மருதுவுக்குப் பேசாமல் தீராது. அவருடைய உரையாடலில் குறுக்கிடும் அளவுக்கு என் சந்தோஷம் இருந்தது. சில பொழுதுகளில் சந்தோஷம் இப்படி நாகரீகக் குறைவுகளை அனுமதிக்கிறது.
அவர் அப்படியே தழுவிக் கொண்டார். அவர் சிரிப்பில் சமீபத்தில் அவர் இழந்திருந்த முன் கடைவாய்ப் பல்லின் இடைவெளி இருந்தது. அவருடன்  நான் கழித்த ‘திரைக்கூடம்’ பொழுதுகளை நினைவூட்டினேன். அஞ்சுகம் நகர் ஐந்தாவது தெருவாகி விட்டது அந்த ஷெல்லி வீதி. அவர் எப்போதும் சொல்லத் தயாராக இருக்கிற, அவருடைய செல்ல வட்டாரமான சந்திரபாபு, சோலை மலைத் தாத்தா பற்றி நுனியெடுத்துக் கொடுத்தேன். அதற்குள் சாம்ராஜ். பி.ஜி.சரவணன் எல்லோரும் வந்துவிட்டார்கள். ஒரு சொடக்குப் போடும் நேரத்துக்குள், அது வைகை மேல் பாலமாகவும், கோரிப்பாளையம் ஆகவும் தல்லாகுளமாகவும்  அழகர்கோவிலாகவும் மாறிவிட்டது. மருது  ராக்கியம்மன் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அரஸ் என்கிற திருநாவுக்கரசையும் அங்கேதான் பார்த்தேன். இதுதான் முதல் முறை. எனக்கு அரஸ் எழுதுகிற பத்திரிகை ஓவியங்களை ரொம்பப் பிடிக்கும். வரைவதை எழுதுவது என்று சொல்வது கூட, சக்திகணபதிதான்.  அரசின் வரைகோடுகளில் தென்படும் கைவைத்த பனியன் போட்ட நடுத்தர வயது மனிதர்களை நீங்களும் நானும் எங்காவது ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். நடுத்தர வயதைக் கொண்டுவருவது சுலபமில்லை. இழுத்துக் கட்டிய தோலும் அல்லாத, சுருக்கம் விழுந்த தோலும் அல்லாத நடுத்தர வயதுப் பெண்களை அரஸ் மிகச் சரியாக வரைய முடிபவராக இருக்கிறார். அவர் வரைகிற கேலிச் சித்திர முகங்கள் கடந்த இருபதுவருட பத்திரிக்கைப் பக்கங்களில், சமீபத்திய கண்ணா தவிர்த்து, வேறு யாரிடமும் பிடிபடாதவை. அவரிடம் என் கூடப் பிறந்த அண்ணன் தம்பியிடம் பேசுவது போலப் பேசிக்கொண்டு இருந்தேன். அழகற்ற முகங்களை அழகாக வரைவது பற்றி எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். முத்தாரத்தில் குமுதத்தில் தீபம் பத்திரிக்கையில் எல்லாம் ஓவியங்கள் வரைந்திருக்கிற விமலா எனும் செல்லப்பன் வரைந்த முகங்கள் அப்படிப் பட்டவை. அருமனையிலோ, தோவாளையிலோ, சுத்தமல்லியிலோ ராமையன்பட்டியிலோ, பனைவிடலிச் சத்திரத்திலோ பார்க்கமுடிகிற மூக்கும் முழியும் உடைய முகங்கள் அவை.  இந்த என்னுடைய பேச்சு அரஸ் முகத்தில் ஒரு நெகிழ்வைக் கொண்டுவந்திருந்தது. அவருடைய முகவரி அட்டையை
சந்தோஷமாக எடுத்து நீட்டினார். என்னிடம் எப்போதுமே முகம் மட்டுமே உண்டு. முகவரி அட்டைகள் கிடையாது.

அன்றோ மறு நாளோ சந்திக்க முடிந்த இன்னொரு ஓவியர் ராஜா. சுபமங்களா நாட்களில் ராமச்சந்திரனைப் பார்க்கப் போகும்போது பார்த்ததன் பின் இப்போதுதான் பார்க்கிறேன். அதே அமைதி. அதே புன்னகை. தணிந்த குரலில் பேசுகிறவர்களுக்கே உண்டான அழகு அவரிடம். விகடனில்  லே அவுட் ஓவியர். எனக்கு பாண்டியன் ஞாபகம் வந்தது. அகம்புறம் தொடரின் கடைசிப் பகுதிக்கு லே அவுட் செய்த கையோடு அவர் பேசின குரல் ராஜாவிடம் கேட்டது. வைகறை நஞ்சப்பன் வெளியிட்ட ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்கிற என் கடிதத் தொகுப்பின் முகப்பை வரைந்தவர் ராஜாதான்..அவருடைய  கைகளையும் நான் பிடித்துக் கொண்டேன். காவேரி தீரத்துக்காரர். ஒரு நதி ஒரு ஓவியனிடம் என்னென்ன ஒப்படைத்திருக்குமோ அது அவரிடம் அப்படியே இருப்பதை அந்தக் கைகளில் உணரமுடிந்தது.

புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்களைச் சிலர் பட்டியல் இடுகிறார்கள். ஒரு மாறுதலுக்கு நான் இடுகிற பட்டியல் இது. மனிதர்களை, அதுவும் ஓவியர்களை புத்தகங்கள் அல்ல என்று யாராவது சொல்லமுடியுமா, என்ன?,

%

Tuesday, 29 January 2013

பச்சைக் கனவு.







சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ’தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’ வாசித்துக்கொண்டு இருக்கிறேன். சிறு புத்தகம்தான். அனேகமாக
தாத்ரிகுட்டியை அறிந்துகொண்டவனாக இருக்கிறேன். மலையாளத்தில் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் எழுதியது. நம்முடைய யூமா.வாசுகி தமிழில் தந்திருக்கிறார்.

ஆரங்கோட்டுக் கரையிலிருக்கிற கல்பகச்சேரி இல்லத்து குரியேடத்து தாத்ரியை ஸ்மார்த்த விசாரணை செய்கிறார்கள். அவள் மீது வைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தாத்ரி ஒரு கலகம் செய்கிறாள். அதே பெண்ணுடலும் அதே பாலியலுமே அவளின் ஆயுதம். அறுபத்து நான்கு ஆண்களை அவள் குற்றவாளிகள் ஆக்கி, பெயர்களுடனும் விவரங்களுடனும்  விசாரணையில் தெரியப்படுத்துகிறாள். அறுபத்தி ஐந்தாவது நபரை அவள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அது கொச்சி மகாராஜா அல்லது அவருடைய மிக நெருங்கிய உறவினர் என்று யூகிப்பதற்கான அடையாளமாக அவருடைய மோதிரத்தை தன் தோழியின் மூலம் காட்டுகிறாள். அந்த அறுபத்து நான்கு பேரும் சாதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தின் மொத்த  வெறுப்புக்கும் நிந்தனைக்கும் உள்ளாகும் அவர்கள்  ஊரையும் வீட்டையும் விட்டுவெளியேற நேர்கிறது.

அப்படி வெளியேறியவர்களில் ஒருவர்தான் ‘காவுங்கல் சங்கரப் பணிக்கர். இந்த இடத்தில் இருந்து நான் குரியேடத்து தாத்ரியை விட்டு விலகி, முழுக்க முழுக்க சங்கரப் பணிக்கரின் பக்கம் போய்விட்டேன்.  குரியேடத்து தாத்ரிக் குட்டி பெரும் ரசிகை. கதகளிப் பாட்டும்,  கர்னாடக இசையும் தாத்ரி  அறிவாள்.
ஏழு  இரவுகள்  கதகளி கண்டும்  எட்டாம் இரவுக்காக அவள் காத்திருப்பவள்.
களரியும் கதகளியும் அறிந்த காவுங்கல் சங்கரப் பணிக்கர் செம்மந்தட்ட சிவன் கோவிலுக்கு கதகளி நிகழ்த்த வருகிறார். கீசகன் வேடம் அவருக்கு.

தாத்ரிக் குட்டி, சங்கரப் பணிக்கரை, கதகளி ஆட்டத்தின் கீசகவேடத்தைக்
கலைக்காமலேயே குளப்புரைக்கு அழைத்துவந்து கூடுகிறாள். ஒப்பனை அகலாமல்,அலங்காரம் அழியாமல் அப்படியொரு கூடியாட்டம். அவள் சங்கரப் பணிக்கரை மாயாவியாக்கிக் கீசகனுடன் லயிக்கிறாள். மனிதனை முற்றிலும் அருவமாக்கி, கலைஞனுடன் ஒரு அகாம உன்னதம் துய்க்கிறாள்.

ஸ்மார்த்த விசாரத்தின் சாதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்த சங்கரப் பணிக்கர் மட்டுமே.பிற்பாடு தன் செயல்பாட்டுக்கு வருகிறார். மற்ற அறுபத்து மூன்றுபேரும் காணாது போய்விடுகிறார்கள். பணிக்கரை அவரது  கதகளியும் களரியும் மட்டுமா உயிர்த்தெழ வைத்திருக்கும்? எனக்கென்னவோ கீசகவேடம் கலையாமல்  குரியேடத்து குளப்புரையில் பாசிபடிந்த தண்ணீரின்  பச்சை வாசனையடிக்க, தாத்ரிகுட்டியுடன் அவர் கலந்து கரைந்திருந்த மதனோற்சவத்தின  காந்தர்வமும் அவருக்குப்  பெரும் அழைப்பாக இருந்திருக்கவேண்டும்.என்று தோன்றுகிறது.

’திரும்பா பயணம்’  என்கிற அத்தியாயத்தின் துயரார்ந்த வரிகளின் ஊடு நடமாடும்  காவுங்கல் சங்கரப் பணிக்கர் அதற்குப் பின் தொடர்ந்து நடத்துகிற ‘மறுக்கப்பட்டவனின் கலக வரலாறு,  குரியேடத்து தாத்ரிக்குட்டியின் பெண்ணுடல் கலகத்துக்கு ஒரு உணர்வு பூர்வமான நீட்சியாகவே நிலை பெறுகிறது. வேடங்கட்ட உரிமையில்லாது அலைந்த அந்த கதகளிக் கலைஞன் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறான். கலையின் பொன் கிரீடம்  அணிந்து  நடமாடிய காவுங்கல் களரியை அவர் கடைசியாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் படியிறங்கி  நகர்வது என்பது எத்தனை வதை..அந்த நள்ளிரவில் அவர் தன் குல வீட்டைப் பார்த்துப் பிரார்த்தனையில் மூழ்கி இருக்கிறார். ஒரு கூக்குரல் கேட்கிறது.

சங்கரப் பணிக்கரின் சகோதரிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை இந்த உலகத்திற்கு உரத்துச் சொல்லும் நற்செய்தியாக அது இருக்கிறது. ‘இவனுக்குக் கச்சைகட்டி ஆட்டம் சொல்லிக்கொடுக்க நான் வருவேன்’ என்று முடிவுசெய்தபடியேதான் அவர் குன்றிறங்குகிறார்.  அதே போலத் திரும்பிவரவும்  செய்கிறார்.சுதந்திரத்துடன் ஐக்கியம் கொண்ட அந்தக் கலைஞன், தன் எதிர்த்து நிற்றலுக்கான வழியாக ,மேடையையே தேர்ந்தெடுக்கிறான். அறுவடை முடிந்த நெல் வயல்களிலும் வெள்ளரி நிலங்களிலும் ஆட்டக் களம் அமைக்கிறார். தன்னுடைய தொடர்ந்த இந்த கலைக் கலகத்தின்  மூலம் அவருடைய  கதகளிக்கும்  மக்களுக்கும் ஸ்மார்த்த விசாரப் பிரஷ்டம் உண்டாக்கிய இடைவெளிகளைத் தகர்க்கிறார்.

கொச்சி ராஜாவுக்கு முன்னால் கதகளி ஆடும்  வாய்ப்பையும் அவர் தன் சக கலைஞன் வெங்கிச்சன் மூலம் சம்பாதிக்கிறார். வெங்ஙு நாட்டு அரண்மனையில் விளக்கு வைத்த நாடக சாலையின் மூலையில் அவர் பூரண ஒப்பனைமுடித்துத் தயாராக இருக்கிறார். நாடக சாலைக்குத் தீவைப்போம் என சில பழமைவாதிகள்  ஓடிவருகிறார்கள்.சங்கரப் பணிக்கரின் முகத்து ஒப்பனையையும்  பூண்டிருந்த அணிகலன்களையும் பலவந்தமாகக் கலைக்கிறார்கள்.   பாதி அழிந்து அசிங்கமான ஒப்பனையின் மீது தாரை தாரையாகக் கண்ணீர் பெருக, ‘அணிகலன்களையும் கிரீடத்தையும் பெட்டியையும் தீயில் இட்டு, தானும் அத் தீயில் மாய்ந்து போகிறேன்’ எனத் துடிக்கிறார்.

ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் எழுதிக்காட்டாத ஒரு காட்சியை நான் எழுதிக் கொண்டேன். கீசகனின் வேடம் கலைக்காமல் குரியேடத்துக் குளப்புரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பணிக்கரின் முகம், கொச்சிராஜா நாடக சாலையின் மூலையில் பலவந்தமாக ஒப்பனை கலைக்கப்பட்டு தீப்பாயத் தயாராகிற
பணிக்கரின் முகம். கலைஞனை உருவமாக்கி, மனிதனை அருவமாக்கிக் கலந்த காமினியே தாத்ரிக் குட்டி, நீ அறிவாயா உன் கூடியாட்டத்தின் களிக்கூட்டுகாரன் தன் கலைக்கப்பட்ட ஒப்பனையின் மீது வழியவிடும் இந்தக் கண்ணீரின் தாரையை?

எப்போதும் போல ,  இப்போது நான் காவுங்கல் சங்கரப் பணிக்கராக இருக்க விரும்புகிறேன். அதே சமயம் என் கண்ணீர் உலருமுன், அந்த குடியேடத்து குளப்புரையின் பாசிவாசனை தீராப் பச்சைக் கனவையும் நான் மீண்டும் காண விரும்புகிறேன்.

%


Sunday, 27 January 2013

ஊர்த்துவம்..






முருகவேள் அண்ணன்  சொன்னது போல ‘ஈகிள்’ கடையில் முன்பதிவு செய்யவில்லை. புத்தக விழாவில் வாங்க விட்டுப் போயிற்று . கடைசி தினத்தில் ஞாபகம் வந்தது. உமாசக்தியிடம் சொல்லி எடுத்துவைக்கச் சொல்லிவிடலாம் என நினைத்தேன். தொலைபேசி அழைப்பில் அவர் கிடைக்கவில்லை. கடைசியில், ஊருக்கு வந்து மூன்று நாட்களுக்குப் பின் தங்கராஜிடம் இருந்துதான் சில்பி அவர்களின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொகுப்பு இரண்டையும் எடுத்துவந்தேன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஊர்த்துவ கணபதியை முதலில் வரைந்துதான் அந்தத் தொடரை ஆரம்பித்தாராம். நான் ஓவியர் சில்பியைச் சந்தித்தது, அப்படிச் சொல்லவும் முடியாது,’தரிசித்தது’ என்று சொன்னால் இயல்பாகவும் இராது, அதே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான். எந்தக் கோபுர வாசல் என்பது ஞாபகமில்லை. அனேகமாக மேலக்கோபுரவாசலாக இருக்கலாம். திண்டுக்கல் ரோடு வழியாக நடந்து, மேலக்கோபுரவாசலில் திரும்பி நடந்தால், சோத்துக்கடைத் தெரு முக்கில் இருக்கிற ‘பாட்டா’ கடை வந்துவிடும். அதில்தான் சொக்கன் வேலைபார்த்தான். முதலில் சேல்ஸ்மேன் அப்போது. முகங்களை விடக் கால்களையே அதிகம் உற்றுப்பார்க்கவேண்டும். அதுவும் சிரித்துக் கொண்டே. மனுஷ்யபுத்திரனை விட, முடிவற்ற ‘கால்களின்
ஆல்பம்’ கவிதை எழுத சொக்கலிங்கத்தால் முடியக்கூடும்.

69 அல்லது எழுபதாம் ஆண்டாக அது இருக்கலாம்.வேலை கிடைக்காத எனக்கு எல்லாக் காலமும் வேனில் காலம் போலத்தான் இருந்தது. வெயில் காலத்தில் மழை பெய்யக் கூடாது என்று கட்டாயமா என்ன? மழைக்கால மழையை விட, வெயில் கால மழைக்கு ரம்மியம் அதிகம். நான் மழைக்கு கோபுரவாசலில் ஒதுங்கினேன். எனக்கு முன்பே அப்படி ஒதுங்கிய ஒருவராக சில்பி நின்றுகொண்டிருந்தார். கையில் வரைபலகை. க்ளிப் மாட்டிய ஓவியக் காகிதம். பார்த்தவுடனே சில்பி என்று தெரிந்துவிட்டது.

 எல்லா உயர்ந்த கலைஞனுக்கும் பார்த்தவுடனே தன்னை  அடையாளம் தெரிவித்துவிடுகிற ஒரு தோற்றம் இருக்கிறது. தோற்றம் என்பதை விட அப்படி ஒரு அம்சம் அவர்களிடம் அமைந்துவிடுகிறது.ஜானகிராம் படிக்கட்டில் இறங்கிவருகிற ஒருவரைப் பார்த்ததும் இவர் பாடகி என்பதனை உணர முடிந்தது. அவர் பெயர் சுதா ரகுநாதன் என்பதை அப்புறம் யாரோ சொல்லத் தெரிந்துகொள்கிறேன்.  பாளை மார்க்கெட் பக்கத்து ஜவஹர் மைதானத்தில்  ஏதோ ஒரு கலை இரவு. தூரத்தில் இருந்து பார்த்தாலே இவர்தான் ஓம் பெரியசாமி என்று தெரிந்துவிட்டது. அசோகமித்திரனை அவர் கதைகளை வாசித்திருக்கிற யார் பார்த்தாலும், அவர்தான் அசோகமித்திரன் என்று தெரிந்து போகும்.  சில்பியும் அப்படித்தான் இருந்தார். இதுவரை அவர் வரைந்து வந்த அத்தனை கோடுகளையும் பார்த்தவர்களுக்கு, அவரை அடையாளம் காண்பதில் எந்தச் சிரமமும் இருந்திராது.

ஒரு ஓவியன் அவனுடைய எல்லாக் கோடுகளிலும் தன்னையும் சேர்த்தே வரைகிறான். சோபனாவின் இரண்டு நடனத் தோற்றங்களை சமீபத்தில் சுரேஷ்குமார இந்திரஜித் முகப் புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார். அலர்மேல் வள்ளியைப் போல சோபனாவையும் எனக்குப் பிடிக்கும். சோபனா எப்போதும் சோபனாவையே ஆடிக்கொண்டிருக்கிறார். அந்த இரு படங்களிலும் கூட. எந்த மெல்லிசைக்குழுவின் புல்லாங்குழல் கலைஞனும் அவனையே அவன் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

நான் சில்பியை இரு கை கூப்பி வணங்கினேன். அகன்ற நெற்றியில் திருநீறு துலங்க, யாரையும் பார்க்காமல் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் தீர்க்கமாக இருந்தது. அவரைத் தொழுவது என்பது அவர் அந்த தினத்து மழையின் முதல் தாரை விழும்வரை வரைந்திருந்த அத்தனை ஆயிரம் சிற்பங்களையும் ஒருசேரத் தொழுவது போன்றது. எந்தெந்த நூற்றாண்டுக் கல்லையும் உளியையும் விரலையும் தொழுவது அது. அடுக்கடுக்கடுக்கான பாறைகளில், அகாலம் கண்ட பெருந்தச்சர்கள் ஆண்டாண்டு  செதுக்கிய கல்லோவியங்களின் ஒற்றைப் பிரதிநிதியாக, மேலக்கோபுரவாசலில் அந்தத் தேர்ந்தெடுத்த கணத்து மழை வடித்த சிலையாக அவர் நின்றுகொண்டு இருந்தார். அவருடைய சிரிப்பு மட்டுமே அவரின் ஆசீர்வாதமாக இருந்தது.
நான் அவருடன் ஒன்றும் பேசவில்லை. மழை நிற்கும் வரை நானும் நின்றேன். மீண்டும் அவரை வணங்கிக் கொண்டேன். அவருடைய அகன்ற நெற்றியே எனக்கு விடை கொடுத்தது.

இன்று மறுபடியும் அந்த நெற்றியும் நீறும் துலங்குகிறது. சிதம்பர நகரில் அல்ல.நான் இப்போது மேலக் கோபுரவாசலில் ஒதுங்கி நிற்கிறேன்.

சொல்ல முடியாது, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் இப்போது இந்த தை நிசியில் மழைபெய்துகொண்டு  இருக்கக் கூடும். சில்பி இப்போது மழை நடனத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்குத்தான் ஊர்த்துவம் பிடிக்குமே.

%