Monday, 31 December 2012

நல்வாழ்த்துகள்.



எல்லோர்க்கும்  புத்தாண்டு  நல் வாழ்த்துகள்.
இனிய 2013.
நல்லா இருங்க.
%
கல்யாணி.சி.

Sunday, 30 December 2012

கூடுவிட்டு...






“கூறல்கதையை 1971ல் எழுதியிருக்கிறேன். நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முன் ஜோதிவினாயகம் சிறிது காலம் நடத்திய ‘உள்களும் வெளிகளும் சிற்றிதழில் வெளிவந்தது.
போனவாரம் அந்தக் கதையை மீண்டும் நடப்பில் எழுதுகிற நிலைமை. ‘கூறல்கதையில் தாத்தா இருந்த இடத்தில் எங்கள் அப்பா. கிருஷ்ணன் இருந்த இடத்தில் நான். கிருஷ்ணனுக்கு  கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் அதே பெயர்தான். நான் அறிந்த முதல்முதல் சவரத் தொழிலாளி. அவருக்குத் தெரிந்த வாழ்வும், அவர் பேசிய நுண் அரசியலும் இன்றுவரைக்கும் எனக்குப்  பிடிபடாதவை. அந்தக் கதையின் இன்னொரு முக்கிய பாத்திரமான வெயிலை, மார்கழிப் பனி இடம் பெயர்த்திருந்தது. வெயிலின் இடத்தில் பனி இருந்ததே தவிர, வெயிலின் காரியத்தை ஒருபோதும் பனியால் செய்யமுடியாது.
அப்பாவுக்கு சவரம் செய்துவிடுவது இது முதல் முறையல்ல.அவருடைய மிக மோசமான இருதயவலிக்குப் பிந்திய தீவிர சிகிச்சையில், கோடம்பாக்கம் (பவர்ஹவுஸ் ஸ்டாப் என்பது 92ம் வருடத்திய அடையாளம். இப்போது ஏதாவது மால் அல்லது பெருவணிக வளாகங்கள் அந்த அடையாளத்தைப் பிடுங்கியிருக்கும்.) ‘பெஸ்ட் ஹாஸ்பிடலில் இருந்த சமயமே, அவருடைய இந்த, மற்றும் குளியலறை, கழிவறைப் பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன். அப்போது அப்பாவுக்கும் சற்று வயது குறைவு. இவ்வளவு முதுமையில்லை. பொய்ப் பற்கள் கிடையாது. கன்ன எலும்போடு தோல் ஒட்டிக்கொள்ளாது. கேட்புத் திறன் பழுதில்லை. எழுபதை நெருங்கும் வயதுக்கும் தொண்ணூறை நெருங்கும் வயதுக்கும் வெவ்வேறு வாடைகளை திரேகம் வைத்திருக்கிறது.
எனக்கும் அப்போது நரைத்திருக்கவில்லை. பிந்திய நாற்பதுகளில் ஒருவன் அடைகிற தற்காலிக நிறைவும் நிதானமும் என்னிடம் இருந்தன.  நான் வெற்றிகரமான என்பதைவிட மனோகரமான என்னுடைய பருவத்தில் இருந்தேன். அந்த தினங்களில் நான் அப்பாவுக்குச் செய்த சவரம் மிக நேர்த்தியான ஒன்றாக இருந்த்து. ‘கூறல்கதையில் வரும் கிருஷ்ணனின் தொழில் சுத்தத்திற்கு என்னுடையது ஒன்றும் அப்போது குறைந்ததல்ல. இப்போது அப்படி எந்தச் சவாலையும் விட என் விரல்கள் தயாராக இல்லை. இன்றைய அன்றாடமும் அப்படி எந்த உத்தரவாதங்களையும் தந்து விடாது.  ஆனால் மனம் முன்னை விடக் கனிந்திருக்கிறது. அப்பாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மூன்றாவது முதியவருக்கும், அல்லது ஒரு சிகிச்சைப் படுக்கையில் இருக்கிறவருக்கும் அதே ஒருமையுடன் இந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது.
அப்பாவுக்கு நோய் ஒன்றும் இல்லை. இந்தப் பத்தாம் தேதி இரவு, தூக்கத்திற்கு இடையில் எழுந்திருந்திருக்கிறார். எண்பத்தெட்டு வயதில் இரண்டு தடவைகளாவது அப்படியான அவசியம் இருக்குமே.  வழக்கம் போல எழுந்து, வழக்கமான இடத்திற்குத்தான் போயிருக்கிறார். முதுமை பகலிலும் இரவிலும் அதற்குத் தோதுவான இடத்தை அதுவாகவே தேர்ந்து கொடுத்துவிடுகிறது. மீறமுடிவதில்லை.  தலை சுற்றியிருக்கிறது. பிடித்திருந்த டார்ச் லைட்டோடு விழுந்துவிட்டார். கையை ஊன்றியதில், வலது மேற்கை எலும்பு, தோள்ப்  பட்டை மூட்டோடு சேரும் இடத்தில் உடைந்துவிட்ட்து. நுட்பமான இடம். முறிவும் கூடுதல். அசையாமல் இருக்க, கட்டுப் போட்டிருக்கிறார்கள். இப்போது மாவுக்கட்டு எல்லாம் கிடையாது. ஒரு ஆயத்தத் தொட்டில். மணிக் கட்டை, மேற்கையை, கீழ் நெஞ்சைச் சுற்றி அசையாமல் பிடித்துக்கொண்டு, வெல்க்ரோ முணுமுணுக்கிறது. எல்லாம் இடது கையால்தான். சாப்பாடு ஒரு கரண்டியின் உதவியுடன்.
அப்பா தினசரி முகம் திருத்துகிறவர். அவரை சவரம் செய்யாத இரண்டாவது நாள் முகத்துடன் பார்த்த்து இல்லை. அம்மா இறந்த சூழ்நிலையில் கூட. இப்போது பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. முடிவெட்டிக்கொள்கிற தவணையும் தாண்டி அதிகவாரங்கள் இருக்கும். பிடரியில் முடி அப்படி மடங்கிக் கிடப்பது எனக்குப் பிடித்திருந்த்து. ஒரு, நெடுந்தூரம் பயணித்த, ஓவியனின் களையை அப்பாவுக்கு அது தந்திருந்தது. அந்த பத்து நாள் தாடி அப்படியில்லை. நோயாளித் தோற்றத்தைக் கொடுத்து அப்பாவை வேறு மாதிரியாக வரைந்துவருவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் நடமாடாத சமயங்களில் பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு அப்பா தனியாக நிற்கிற வேளைகளை அனேகமாக நாங்கள் எல்லோரும் பார்த்துவிட்டோம்.  கழுத்தை இடவலமாக அசைத்து , தன்னுடைய அதுவரையிலான தாடியைத் துல்லியமாகக் கணக்கெடுத்தபடி இருப்பதைப் பார்த்ததும் அவருக்கு முடியை வெட்டி, சவரம் செய்துவிடுவது எனத் தீர்மானித்தேன். தீர்மானத்தின் முக்கியமான ஷரத்து அதை நானே செய்து விடுவது என்பது.
மறுநாள் அப்பாவிடம் சொன்னேன். அப்பா மறுக்கவில்லை. ‘எதுக்குப் பா?என்று ஒரு பேச்சுக்குக் கூடச் சொல்லவில்லை. ஒரு முடிதிருத்தகத்தில் அமர்வது போல, உடனடியாக்க் கண்ணாடி முன் அமர்ந்துகொண்டார். அவருடைய சவர உபகரணங்கள் இருக்கும், வெள்ளை மூடியிட்ட சிவப்பு டப்பாவை எடுக்கச் சொன்னார். அந்த டப்பாவுக்கு ஒரு வாசம் உண்டு. காத்ரெஜ் சோப்பு வட்டத்தின் வாடை அது. இந்த வாசத்தை, பிறவியில் இருந்தே, அப்பா இருக்கிற எல்லா இடங்களிலும் உணர்ந்திருக்கிறேன். சோப்பைக் குழைக்கிற அந்த பிரஷ் என்னுடன் ஒரு பால்யகால சகி அளவுக்கு சினேகிதம் உடையது.  பூத்த தென்னம்பாளைக் குலையைப் பார்க்கிறபோது கூட ஒரு தடவை அதன் ஞாபகம் வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அது ஒரு ஆழ்ந்த ஞாபகம்.
அந்த டப்பாவைத் திறந்து வரிசையாக எல்லாவற்றையும் எடுத்துவைத்த நொடியிலிருந்து நான், ‘கிருஷ்ணன்ஆகிவிட்டேன். கிருஷ்ணன் அணியும் வி கழுத்து மல்சட்டையை நான் எப்போது அணிந்துகொண்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் மட்டும் பார்க்கும் படி என் பெருவிரலிலும் மேல் கைப் பக்கமும் பச்சைகுத்தியிருந்தது. பாரம்பரியமாக என்னுடைய விரல்களுக்கு இடையில் அருவமாக இருந்துவரும் சவரக்கத்திக்கு, அந்த நொடியில் உருவ விமோசனம் கிடைத்துவிட்டிருந்தது. அப்பா உட்கார்ந்திருந்த நாற்காலி அரக்குக் கலரில் இப்போது தயாரிக்கப்படுகிற பிளாஸ்டிக் நாற்காலி. இணைப்புச் சக்கைகள் விலகின ஒரு மர நாற்காலி போல அது இறந்த காலத்தின் பாஷையில் முனகுவது கேட்ட்து. அப்பா நாற்காலி முதுகோடு தலையைச் சாய்த்துக் கொண்டார்,
முதலில் முடிவெட்டிவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். முடி வெட்டிக் கொள்வதைவிட, முடி வெட்டிவிடுவது எனக்குப் பிடிக்கும். அம்பா சமுத்திரம் நாட்களில், ராஜுவுக்கு நானே வெட்டிவிட்டிருக்கிறேன். யாருக்கும் அது என்னால், வீட்டுக் கத்திரியால் செய்யப்பட்ட்து எனத் தெரியாத அளவில் இருக்கும். சமீபத்திய சுபாஷ் வரை, நேர்த்தியாக முடிதிருத்திவிடுகிற எல்லோருமே என்னால் கைகுலுக்கப்பட்டவர்கள். ஒரு வாடிக்கையாளனை விட அதிக நெருக்கமுடையது அந்த உறவு. அவர்கள் அறியாமலேயே அவர்களிடமிருந்து ஒரு சீப்பையும் கத்திரியையும் சரியாக உபயோகிப்பதற்கு நான் கற்றிருக்கிறேன்.
அப்பாவுக்கு முடிதிருத்துகையில், நான் என்னை கிருஷ்ணனாக அல்ல, சுபாஷாக நினைத்துக் கொண்டேன். ஒரு ரோமக் கற்றையில் கத்திரியின் இரண்டு விளிம்புகளும் பதிந்து நறுக்கும் போது உண்டாகும் நுட்பமான சத்தத்தை நான் எளிதாக, என் முதல் சில கத்தரிப்பிலேயே அடைந்து இருந்தேன். பக்கவாட்டில், உச்சியில், பின்கழுத்தில் என்று எல்லா இடங்களிலும் பிசிறே இல்லாமல் முடி திருத்திவிட எனக்கு முடிந்தது. முடித்த பின், அப்பாவிடம், ‘நல்லா இருக்குப் பாஎன்றேன். ‘முடிவெட்டுதது படம் போடுத்து மாதிரித்தானே. உனக்குத்தான் நல்லா படம்போடத் தெரியுமேஎன்றார். அப்பா அதை இவ்வளவு அழகாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்த்து. நான் சவரத்திற்குத் தயாரானேன்.
வெதுவெதுப்பான  வென்னீரால் அப்பாவின் முகத்தை நனைக்கையில் அவர் கண்கள் மூடியிருந்தன. ஒரு குழந்தை போல இருந்தார். சோப்பைக் கரைத்து முகத்தில் நுரையை அப்பிக் கலைத்துவிடும்போது அப்பாவுக்கு ஒரு சுகமான கிறக்கம் வந்திருந்த்து. நான் புதிய பிளேடை ரேஸரில் பொருத்துகையில், லேசாக அரைக்கண் திறந்து, ‘எதிர் போடவேண்டாம்என்றார்.  அதாவது கீழிருந்து மேல் பக்கம் இழுக்கக் கூடாதாம். வெட்டுக் காயம் படாமல் இங்கே, ‘நேர்போடவே  கை நடுங்குகிறது. இதில் எதிர் எங்கே போட? ‘சரிஎன்றேன். ‘சரி அப்பாஎன்று சொல்லவில்லை.
அவர் அப்பா இல்லை. நான் கல்யாணி இல்லை. அவர் சவரம் செய்து கொள்கிறவர். நான் செய்கிறவன்.  அந்த இடத்தை நாங்கள் இருவருமே அடைந்திருந்தோம். முகத்தைத் திருப்பவேண்டிய இடங்களில் திருப்பி. முகவாயை உயர்த்த வேண்டிய சமயங்களில் உயர்த்தி, உதட்டை மடிக்க வேண்டிய நேரம் வாகாக மடித்துக் கொடுத்தார். நோயாளியின் ஒத்துழைப்பை ஆங்கிலத்தில் பாராட்டி, தோளில் தட்டிக்கொடுக்கிற ஒரு அறுவை மருத்துவர் மனநிலையை நான் எய்தி இருந்தேன். இரண்டாவது முறை சோப்பைக் குழைத்துப் பூசுகையில், அப்பா அதே சாய்ந்த தலையுடன், கிறக்கத்துடன், மூடின கண்களைத் திறக்காமல், ‘விரலை வச்சுத் தடவிப் பார்த்துக்கோ. தெரியும்என்றார்.  அப்படியே செய்தேன்.
கன்னம் ஒட்டிய, தோல் தளர்ந்துவிட்ட இன்னொருவரின் முகத்தில் எந்த வெட்டுக் காயமும் இல்லாமல், அதிகபட்ச சதவிகித நேர்த்தியுடன் சவரத்தை முடித்த்தே எனக்குப் போதுமானதாக இருந்த்து. அப்பா இப்படி அப்படி முகத்தைத் திருப்பிப் பார்த்தார். அண்ணாந்து, வழக்கமாக அவருடைய தாடையில் கத்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரதேசங்களைத் தடவிப் பார்த்தார். அப்படியொன்றும் அவருக்குத் திருப்தியில்லை என்று தெரிந்தது. நான் ஒவ்வொன்றாகக் கழுவித் துடைத்து, அதனதன் இடத்தில் வைத்து சவர டப்பாவை மூடினேன். அதையெல்லாம் அள்ளிப் போட்டிரு’ என்று அப்பா முக அசைவால் தரைப் பக்கம் காட்டினார். நாற்காலியைச் சுற்றிச் சிதறிக்கிடந்த நரைமுடியை எல்லாம் குனிந்து ஒன்றுசேர்த்துச் சேகரித்தேன். எழுந்துபோய் தூரப்போட்டுவிட்டு வந்தேன்.
கிருஷ்ணனாக இருந்து கல்யாணியாக மீளும் நேரம் சமீபித்துக் கொண்டிருந்த்தை உணர முடிந்தது. கூடு விட்டுக் கூடு பாய்வதில், ஆதிக் கூட்டுக்குத் திரும்புகிற நேரம் பதற்றம் நிரம்பியது. பாய்ந்திருக்கிற கூட்டில் இருந்து மீளமுடியாமல் போகும் அபாயம் நம்மைத் துரத்தத் தொடங்கி விடுகிறது.
அப்பா இருந்த நாற்காலியில் இருந்து இரண்டு அடி தள்ளி நின்று பார்க்கிறேன். கச்சிதமாக ஒழுங்கு செய்யப்பட்ட தலைமுடியுடன், மழமழப்பாகத் திருத்தப்பட்ட முகத்துடன் அப்பா இருந்தார். அன்றைக்குச் சாயந்திரம் நடக்கவிருக்கும் த.மு.எ.க.ச புத்தக வெளியீடு ஒன்றிற்குத் தலைமையேற்கத் தயாராகிவிட்ட உற்சாகமான களை வந்துவிட்டிருந்தது. செய்வன் திருந்தச் செய்துவிட்ட சந்தோஷம் எனக்கு. கொஞ்சம் கூடுதலாக முயன்றிருந்தால், இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று தோன்றியது.  எதையாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. அப்பாவைப் பார்த்து, “ ஜோரா இருக்கு ப்பாஎன்றேன். அப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை.
திரும்பாத பார்வை இன்னும் எதிரே இருக்கும் கண்ணாடியிலேயே இருந்த்து. இவ்வளவு சிரத்தையாக, ஒரு மணி நேரம் செலவழித்து, நான் செய்திருக்கும் இந்தக் காரியத்தின்  நிறைவில், அப்பா சொல்லப் போகும் வார்த்தைகளுக்குக் காத்திருந்தேன். வலது காதின் கீழ் துடைக்கப்படாமல் விடப்பட்ட சோப்பு நுரையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டே சொன்னார்,
‘அப்படியே விட்டுட்டு, நல்லா வளர்ந்த பிறகு வள்ளிநாயகத்துக் கிட்டே சொல்லி தாடியோடு ஒரு ஃபோட்டொ எடுத்துக்கிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்
அப்பா சொல்லி முடிப்பதற்குள், ‘கூறல்கதையின் பக்கங்களில் இருந்து ஒரு பறவையின் எச்சம் போல் அந்த இடத்தில் நான் சொத்தென்று விழுகிறது போல இருந்த்து.
எல்லோரும் தாத்தாவும் கிருஷ்ணனுமாக ஆகிவிடமுடியாது. முக்கியமாக, அப்பாவும் நானும்.

%






Thursday, 27 December 2012

எதன் கொலோ?




பசித்தவன் மட்டுமா பழங்கணக்குப் பார்க்கிறான்? என்னைப் போல, எழுதுகிறவன் பார்க்கிறவை அனைத்தும் பழங்கணக்குதானே. மீள் பார்த்தல் அற்ற எழுத்து சாத்தியமா? அறுபதுக்களின் கலைமகள் தீபாவளி மலர்களில்
ஃபோட்டொ என். ராமகிருஷ்ணா என்று கீழே பெயருள்ள நிறையப் புகைப்படங்கள் வரும். அனேகமாக புகைப்படக்காரரின் குடும்பத்துப் பெண்களும் குழந்தைகளும் இருப்பார்கள். அது அல்ல விஷயம். அவர் எடுத்த
தூரத்துக் காட்சிகளில், அனேகமாகக் கட்டிடங்களின் படங்களின் மேலோர
இடது அல்லது வலது விளிம்பில் ஒரு மரக்கிளையோ இலையோ தெரிந்து, அந்தப் படங்களின் அழகை உயர்த்திவிடும். அந்த எட்டிப்பார்க்கும் கிளையோ இலையோ மாதிரி, கொஞ்சமாவது பழைய ஞாபகங்கள் எட்டிப்பார்க்கிற புனைவுகள் மேலும் ஒரு அடர்த்தியை அடைந்துவிடுகின்றன.

நான் சமீபத்தில் உபயோகித்த ஒரு கோடுபோட்ட நோட்டை, அதன் அத்தனை பக்கங்களும் எழுதித் தீர்ந்துவிட்ட நிலையில், திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அட்டை வடிவமைப்பே நன்றாக இருக்கிறது. இளம் பச்சை நிறம்.  கீழே வரவர பச்சை அடர்கிறது. நடுவில் மேல் நோக்கிய முகம், மேல் நோக்கி விரித்த கைகளுடன் ஒரு பெண்ணென யூகிக்கவைக்கும் கோட்டுருவம். அவரே விருட்சமாகித் தளைத்தது போல,கிளைவிட்டு இலை விட்டது போல, கோட்டுருவக் கிளைகளும் ஒளிச்சேர்க்கை நடத்தி உயரும்
இலைகளும்.

உள்ளே என்னென்னவெல்லாமோ. நிறையக் கவிதைகள், பிரசுரமானவையும், பிரசுரத்திற்கு லாயக்கற்றவை என நான் தீர்மானித்தவையும்.  சமீபத்தில் ராஜுமுருகனுக்கு  நெருக்கடி மிகுந்த ஒரு மனநிலையில் எழுதியனுப்பிய முன்னுரை, இதையெல்லாம் விட முக்கியமாக, சென்ற விடுமுறையில் வந்திருந்த என் பேரனுக்கு வரைந்து காட்டியிருந்த , அவன் விரும்பிக் கேட்ட,
ஆந்தை, தவளை, மாடு,கன்றுக்குட்டி மற்றும் ‘காக்காய்’ படங்கள். ஒரு ரோபோ, ஒரு கார். அவையும் அவனுடைய விருப்பமாகத்தான் இருக்கும்.
போதாதா இவை? திரும்பிபார்க்க ஒரு நோட்டுப் புத்தகத்தில் இவ்வளவு இருந்தால், அதன் வரிகளுக்குள் வராததாக எவ்வளவு இருக்கும்? வரிகளின் இடையில் எவ்வளவு ஒளிந்தும் ஒளித்துவைக்கப் பட்டும் இருக்கும்?

இந்த மூன்று கவிதைகளையும், அதன் கவிதைத் தன்மைக்காக அல்ல, வாசகனுக்கு அல்லாமல், எழுதிய எனக்கே மீட்டுத் தரும்  அந்த வரிகள் கிழித்துப் பறக்கவிட்டிருக்கும் என் தேதிகளுக்காக, பத்திரப்படுத்துகிறேன்.

%

விபத்துக்கு உள்ளாக்குவேன்
என பயமிருக்கும் எவரும்
இந்த வாகனத்தில் இருந்து
இறங்கிக் கொள்ளலாம்.
இப்போதுதான் அரசு உரிமம் பெற்றிருக்கிறேன்
எனினும்
இந்த வாகனத்தை நான் செலுத்திக் கொண்டிருப்பது
பிறவியில் இருந்து.
இறங்கும் முன்
இதுவரை அமர்ந்து நீங்கள் கொறித்த
அவதூறுப் பட்டாணிகளை
நீங்கள் வாசித்த நாற்றமெடுக்கும்
புலனாய்வுப் பத்திரிக்கைகளை,
உங்கள் கூந்தலில் சூடி உதிர்ந்த
பூக்களைக் கூட இங்கே
விட்டுவிட்டுச் செல்ல வேண்டாம்.
உங்களின் இதுவரையிலான சுவாசத்தை
நான் இன்னும் சிறிது தூரத்தில்
ஒப்படைத்துவிடுவேன்
என் பயணத்தின் நெடுஞ்சாலைக் காற்றிடம்.

%

நேற்று முன்தினம்
நீண்ட ஓர் இரவுப் பயணத்தில்
பழுதான பேருந்தில் இருந்து இறங்கி
ஒரே ஒரு நட்சத்திரம் பார்ப்பதற்காக
வாழ்ந்தது போல இருந்தது.
நேற்று எனிலோ
அடர்வனம் புகுந்து, நெடுவழி தொலைந்து
ஆளற்ற அருவியின்
நீர்ச்சிற்பம் பார்த்து
நிற்பதற்கென.
விடிவதற்கு முன்பே, இன்றெழுந்து
பசி கிள்ளும் வயிற்றுடன்
தச்சுவேலைக்குச் செல்லும்
இவர்களைப் பார்த்து நிற்பது
எதன் கொலோ?

%

இந்த கோடைகால முற்பகலில்
உங்களுக்கு விதிக்கப்பட்ட ச்ப்தங்களுக்கு
மத்தியில் நீங்கள் இருப்பீர்கள்.
முற்றிலும் நரைத்துவிட்ட
என் கன்னங்களில் படியும்
வெயிலை நசுக்குகின்றன,
ஒரு மரத் தச்சனின் இழைப்பு.
ஒரு புதர்ப்பறவையின் அதிரும் குரல்,
ஒரு தாமதச் சேவல் மற்றும்
கினிக்கோழியின் ஒன்றின்மேலொன்றாக
அடுக்கப்பட்டுச் சரியும்
கொலைபடு குரல்.
\இதையெல்லாம்விடத் துயரமான ஒன்று.
யார் வீட்டுப் பின் முற்றத்திலோ
தொடர்ந்து அலையடித்துத் தெறிக்கும்
துணிதுவைப்பின் ஈரச்சத்தம்.
பப்பாளி மரத்தில் அமர்ந்த
முதல் காக்கையில் துவங்கி,\
கூரியர் வினியோகிப்பவர் சைக்கிள் டயர்
பிருபிருத்து மணல் உதிர்க்கும் 
இன்னொடிவரை
கல் தேய, கை தேய
துவைக்கும் சேற்றுப் புண்நிரம்பிய\
அந்த விரல்கள் நெறிக்கட்டும்
வேப்பம் பூக்களில் இளைப்பாறும்
இந்த வியாழக்கிழமை சூரியனின் கழுத்தை,
என்னைச் சாட்சி வைத்து.

%