Friday, 31 August 2012

முதற்றே உலகு.







இப்போதெல்லாம் கனவுகள் அதிகம் வருவதில்லை.
நனவுகள் இப்படித்தான் இருக்கும் என கிட்டத்தட்ட யூகித்து விட முடியும் தினங்களில், கனவுகள் தன் கண்ணாம்பூச்சி விளையாட்டை நிறுத்திவிடும் போல.

சமீபத்தில், ஆகஸ்ட் 22 இரவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்தக் கனவு வந்தது. அதுதான் முன்பு அடிக்கடி வருகிற யானைக் கனவு. இந்த முறை, வழக்கமாகச் செய்கிறது போல அது விரட்டி விரட்டித் துரத்தவெல்லாம் இல்லை.  சாதுவாக நின்றது. எனக்கு அறுபத்து ஏழு வயதாகும் போது, என் கனவு யானைக்கும் ஒப்பீட்டு அளவில் அதே வயது ஆகியிருக்கும் தானே.
ஆனால் அது முன்னிலும் அழகடைந்திருந்தது. வயதின் முதிர்வு அல்ல வயதின் கனிவு ஒரு அழகைத் தரும் என்றுதான் தோன்றுகிறது.  எங்கள் அப்பாவைப் பார்க்கையில், முன் எப்போதையும் விட அழகாகி இருப்பதை உணர்கிறேன்.  காம்பு பழுக்கையில் கனியழகு தனிதான்.

அழகு மட்டும் அல்ல, அந்த யானையின் உருவமும் அதிகரித்து இருந்தது.
சுடலைமாடன் கோவில் தெரு நடுவீட்டு வாசலில் நடைப்பக்கம் நிற்கிற அதன் உயரம் மச்சு ஜன்னல் வரை இருந்தது. இந்த ‘அகவெளி’ கார்த்திகேயன் வரைந்த யானையைப் பார்க்கையில் எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. ஒருத்தர் கனவில் வருகிற யானையை எல்லாம் இன்னொருத்தரும் பார்க்க முடியும் போலும்.  முட்டுக்காட்டிலிருந்து பைய நடந்து ஒரே ராத்திரியில் பெருமாள்புரத்திற்கு இடம்பெயர்ந்துவிடும் நெடு வனம் ஒன்று கனவுத் தொடர்ச்சி மலைகளில் இருக்கக் கூடும்.  பிறந்த நாளன்றைக்கு வந்ததுதான் வந்தது, தும்பிக்கையை என் சிரசின் மேல் வைத்து ஆசியளித்திருக்கலாம்.  எனக்குத் தும்பிக்கைச் சுருக்கங்களும் அதன் செவ்வெள்ளைச் சுட்டியும், பயத்துடன் பிடிக்கும் என்பதை அந்த
யானை அறியுமே ரொம்ப காலமாக.

நேற்றுக் கண்ட கனவில் யானை வரவில்லை. அது அதிகாலைக் கனவும் அல்ல. முன்னிரவுக் கனவு. இளைய ராஜாவின் ‘யாருக்கு யார் எழுதுவது’, தங்கராஜ் தந்ததை வாசித்துக் கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் வைத்யா குறுந்தகடும் அவனுடையதுதான்.  என்னையறியாமல் தூங்கியிருக்க வேண்டும்.  படித்துக் கொண்டிருக்கும் போதே ‘இசையில் துவங்குதம்மா” என்ற அஜய் சக்ரவர்த்தி பாடலை,   வேறெங்கிருந்தோ ஒரு
அருவி வழிவது போலத் திரும்பத் திரும்பக் கேட்கமுயன்றுகொண்டே இருந்ததும்,அந்த வித்தியாசமான குரலில் பாடலின் முதல் இரு வரிகள் மட்டும் சுழன்று சுழன்று கல் தூண்களில் சிற்பம் செதுக்கிக் காணாமல் போனதுமாக இருந்தது.

மறுபடியும் அந்தக் கனவின் நிகழிடம் 21.இ. சுடலைமாடன் கோவில் தெரு வீட்டு மாடிதான். நான் வழக்கமான என்னுடைய இடத்தில் இடது ஓரச் சன்னல் பக்கம் படுத்திருக்கிறேன். இருட்டாக இருக்கிறது.  ராத்திரி இருட்டு அல்ல. சரஸ்வதி பூஜையை ஒட்டி, தீபாவளியை ஒட்டி எல்லாம், மழை கொட்டு கொட்டு என்று கொட்டுவதற்கு முன் வாசல் முழுவதும் தட்டுப்பந்தல் போட்டது மாதிரி இருட்டுமே அந்த ஐப்பசி கார்த்திகை அடைமழை இருட்டு. யாரோ வருகிற சப்தம்.  வருவது பெரிய ஆளாகத் தெரியவில்லை. சின்னக் குழந்தையுடைய வருகையில் தளம் பூப்போல அதிருமே அப்படி. ஊஞ்சல் சங்கிலி குலுங்கியதா என ஞாபகம் இல்லை. இதை எழுதும் போது ஊஞ்சல் பலகையைக் கனவில் உந்தி அசைத்து ஆடவிடுகிறேன்.  கனவில் ஆடாத ஊஞ்சலை இப்படி இரு தினங்களுக்குப் பின்னால், வெறும் நுனிவிரல்களால் ஆட்டிவிடுவது கூட இன்னொரு கனவு போலத்தான் இருக்கிறது. எங்கேயோ பறந்த கிளிகளை, எந்தக் கோவிலின்
பிரஹாரத்திலோ பறக்கவிடாமலா இருக்கிறோம்?  அய்யப்ப மாதவன் எந்த நூற்றாண்டுச்  சீனச் சித்திர மூங்கில் இலையிலோ இன்றும் நேற்றும் கவிதையெழுதாமலா இருக்கிறார்?  அந்த ஊஞ்சலை அசைக்க கனவின் அனுமதி உண்டு. கனவே, அப்படி அந்தரத்தில் அசையும் ஒரு ஆளற்ற ஊஞ்சல்தான்.

நான் வருவது யாரென யூகிக்கும் பதற்றத்தில் எழுந்து உட்கார்கிறேன்.
‘கல்யாணித் தாத்தா” என்ற குரல் ஒரு மின்னல் போலக் கீறிக்கொண்டு அந்த இருட்டில் கேட்கிறது. குரலோடு குரலாக, அந்தக் குரலைச் சுளையாக அதிலிருந்துதான் உரித்து எடுத்தது போல ஒரு சிரிப்பு.  அடுக்கடுக்கான சிரிப்பு. சின்னஞ்சிறு பெண்குழந்தையின் சிரிப்பு. அப்படிச் சிரிப்பையெல்லாம் தொலைக்காட்சி நெடுந்தொடரில் வருகிற குழந்தைகள் மட்டுமே சிரிக்கும்.
திரும்பத் திரும்ப சிரிப்பு. மறுபடி மறுபடி,’கல்யாணித் தாத்தா’. மூன்று வயது கூட இராத முளையானுக்குப் பாவாடை.  ‘யாரு கூட வந்தே நீ?’ என்கிறேன். ‘எங்க அப்பாவும் நானும் வந்தோம். இங்கே தான் இருந்தோம்’ என்று ஓடிப் போய் அது நிற்கிற இடம், நாங்கள் எப்போதும் புழங்குகிற, நான் படிக்கிற, எழுதுகிற, வரைகிற முன் கூடம் முடிந்து (அதை எங்கள் அம்மா ‘புல் பங்களா’ என்பாள்) மச்சுப்படி இறங்குகிறதற்கு நடுவில் உள்ள
பாத்தி போன்ற இடம். அதில் யாரோ இதுவரை படுத்திருந்தது போல ஒரு கசங்கல் துணியும் பழந்தலையணை ஒன்றும் கிடக்கிறது.  இப்போதும்  அந்தக் குழந்தை  சிரிக்கிறது. ‘கல்யாணித் தாத்தா’ என்று சொல்கிறது. கனவில் கேட்ட அந்தச் சிரிப்பும் குரலும் அதிர்ந்து என்னைத் தூக்கிப் போடுகிறது. நான் விழித்து விடுகிறேன்.

அந்தக் குழந்தை யார் ஜாடையில் இருந்தது? எங்கள் அம்மா ஜாடையிலா? அது எங்கள் அம்மா எனில், ‘எங்க அப்பா’ என்று அந்தக் குழந்தை சொன்னது யாரை? எனக்குப் பெயர் இட்டிருக்கிற எங்கள் தாத்தாவையா?
அது எங்கள் அம்மாவும் தாத்தாவும் எனில், எங்கள் அம்மாச்சி எங்கே போனாள்/ ‘தெய்வத்துக்குப் படைக்கச் சொல்லி’ கேட்பதற்கு இப்படித்தான் நீத்தார் வருவார்கள் எனில், அந்தச் சிரிப்பு எதற்கு?    அந்த ‘கல்யாணித் தாத்தா” என்ற அற்புத விளிப்பு எதற்கு?

இதோ, இதை எழுதும் இந்தக் கணத்திலும் அந்தச் சிரிப்புக் கேட்கிறது.
மீண்டும் ஒரு ஒலிநாடாவை ஓடவிட்டது போல, ‘கல்யாணித் தாத்தா”  என்ற குழந்தைக் குரல் அழைக்கிறது. அது யாராகவும் இருக்கட்டும். என் முன்னோரின் முன்னோராக, உங்கள் முன்னோரின் முன்னோராக, முதற்றே உலகு எனச் சொலும் மூலமாக இருக்கட்டும்.

அந்த ‘சின்னஞ் சிறு பெண்ணை’ வணங்குகிறேன்
 அவள் என் அன்னையெனில் அவள் வயிற்றில் நான் பிறந்தேன் என இருக்கட்டும். அவள் என் பெயர்த்தி எனில், எங்கள் மகனுக்கு அவள் மகளாகப் பிறக்கட்டும்.

%


Tuesday, 28 August 2012

ஒரு முழுமையான உச்சரிப்பு.





கொஞ்ச நாட்களாகவே ஏர்வாடி.S.I.சுல்தானைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. சரி. நாஞ்சில் நாடன் வெளியூர் போய்த் திரும்பட்டுமே என்று இருந்தேன்.  என் புத்தி என்னோடு. அவர் வெளியூரா போயிருந்தார். வெளிநாட்டுக்கல்லவா.

அவர் எப்போது போனார் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தாக்கல் கிடையாது.  வந்துவிட்டாரா என்றும் உறுதியாக அப்போது தெரியாத நிலை.
வருவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, ரவீந்திரனிடம் கேட்டேன். ‘இன்னும் வரவில்லை ஸார்’ என்றார்.  அதற்கடுத்த வாரம் மரபின்மைந்தன் முத்தையாவிடம் கேட்டேன். வந்துவிட்டதாகச் சொன்னார்.  பொதுவாக, ‘எப்ப நாஞ்சில் வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்க யோசிக்காதவன் தான் நான். போகும்போதும் ஒருவார்த்தை நம்மிடம் சொல்ல்வில்லை. வந்த பிறகும், வந்துட்டேன் கல்யாணி’ என்று சத்தம் காட்டவில்லை. குறிப்பிட்டாற் போல பத்துப் பதினைந்து பேர்களிடமாவது அவர் போகும் போதும், வந்த பிறகும் சொல்லியிருக்கத்தான் செய்வார். அந்தப் பத்துப் பதினைந்து பேர் பட்டியலில் ‘நம்ம பேரு விட்டுப் போச்சே’ என்ற தாங்கல் எனக்கு இருக்கும் இல்லையா. இன்றைக்கு நேற்றைக்கா பழக்கம்? நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட தீபம் கால வரவுசெலவு அல்லவா இது. 

உழவர் சந்தைக்குப் போனால், கத்திரிக்காய் சீனியவரைக்காய் நிறுக்கிற தராசும் அதுதான். கேரட் பட்டர்பீன்ஸ் நிறுக்கிற தராசும் அதேதான். அவ்வளவு எதற்கு?  சொத்தை சொள்ளை என்றாலும் கூட அதே தராசுதான். நாஞ்சில் அவருடைய தராசுப் பக்கம் என்னை அண்டவிடவே இல்லை. அவரைத் தப்புச் சொல்லவே முடியாது. யாரும் வாங்குவதற்கு வந்தால் அல்லவா, அவர் நிறுத்துப் போடுவார். அமாவாசை அன்றைக்கு நுனிச் சீப்பு வாழைக்காய்க்கு இருக்கிற அந்தஸ்து கூட நமக்கு இல்லாவிட்டால் அவர்தான் என்ன பண்ணுவார்?

சுல்தானைப் பற்றி எழுத ஆசைப்பட்டுவிட்டு, நாஞ்சில் மேல் பிராது கொடுக்கிற மாதிரி இருக்கிறது இல்லையா. இது பிராது இல்லை. ஆவலாதி.  ஆவலாதி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. தமிழாகத்தான் இருக்கவேண்டும். திருநெல்வேலி பக்கம் ஆதி காலத்திலிருந்தே புழக்கத்தில் இருக்கிற இந்த ‘ஆவலாதி’யின் வேர்ச் சொல் என்ன என்பதையாராவது தெரிவித்தால் நல்லது.

இந்த ஆவலாதியைச் சொல்லிவிட்டு S.I.சுல்தானைப் பற்றி மேற்கொண்டு எழுதினால்தான் சரியாக இருக்கும்.  இருக்கிற கொஞ்ச நஞ்ச பாரத்தை இறக்கி வைத்துவிட்டோம் என்றால், மனம் லேசாகிவிடும். துப்புரவான ஒரு மனதோடுதானே சுல்தான் மாதிரி ஒரு அருமையான மனிதரைப் பற்றி நான் பேசவும் வேண்டும். அதுதானே நிறைவான காரியம்.

நாஞ்சில் நாடனையோ என்னையோ போல சுல்தான் எழுதுகிறவர் அல்ல.
அப்படி அடித்துச் சொல்லவும் முடியாது. அவர் ஏதாவது எழுதியிருக்கவும் கூடும். இவ்வளவு வாசிப்பு உடைய அவர், அத்தனை இறுக்கமாகத் தன் விரல்களைப் பூட்டிவைத்திருந்திருப்பார் என ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்?   ஒன்று நிஜம்.  S. I.சுல்தான் நாஞ்சில்நாடன் படைப்புக்களை, ஒரு இடையறாத நிழல் என,நீண்ட காலமாக வாசித்துப் பின் தொடர்பவராகவே
இருக்கவேண்டும்.  நடந்தாய் வாழி  என சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும்
காவேரியோடு மூலம் தொட்டு முங்கிக் குளித்தது போல,  நாஞ்சிலின்
அத்தனை படைப்போடும் நடந்திருந்தால் மட்டுமே, இப்படி nanjilnadan wordpress.com   என்று ஒரு வலைத்தளம் துவங்கத் தோன்றும்.  தொடர்ந்து இப்படிப் பதிவேற்றிவரவும் முடியும்.

நாஞ்சில்நாடன் என்கிற படைப்பாளியாக அவருடைய ஒவ்வொரு வரியையும்,  ஒரு மனிதனாக அவருடைய ஒவ்வொரு அசைவையும் அவர்
பதிவேற்றுகிற விதம் முழுமையானது. நாஞ்சில் மகளின் திருமணத்திற்கு நாகர்கோவிலுக்கு  வரமுடியாதவர்கள் கூட, நேரில் கலந்துகொண்டது போன்ற சந்தோஷத்தைத் தருமளவுக்கு எத்தனை கல்யாணவீட்டுத் தகவல்கள், புகைப்படங்கள் சுல்தானின் தளத்தில்.  நாஞ்சில் நாடனைத்தான்
அன்றைக்குப் பார்க்க எவ்வளவு அருமையாக இருந்தது.   தன் பெண் பிள்ளையை நல்லபடியாகக் கரையேற்றின ஒரு தெற்கத்தி அப்பனின்
நிறைவுடன் முகமெல்லாம் பூரித்துப் போய் அல்லவா அவர் இருந்தார். சுல்தானும் நானும் பேசிக்கொண்டோம், ‘போன டிசம்பரில் இருந்தே அவருக்கு நல்ல பீரியட் ஆரம்பிச்சுட்டு. முகத்தைப் பாருங்களேன். எப்படி இருக்குண்ணு’ என்று.

S,I. சுல்தான் நாஞ்சிலுக்குக் கிடைத்தது போல வேறு யாருக்கும் யாரும் கிடைக்கவில்லை.அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயும் அவ்வளவு ஒத்துப் போய்விட்டது. எழுத்து இயல்பும் எழுதுகிறவன் இயல்பும் ஒரு வாசக மனதிற்கு இவ்வளவு தூரம் பிடித்துப் போனாலன்றி இதுவெல்லாம் ஒரு
போதும் சாத்தியமில்லை. ஜெயமோகன் தளத்திலும் நாஞ்சில் நாடனின் அமெரிக்கப் பயணம் பற்றிய குறிப்புகள் வந்தன எனினும், சுல்தான் கிட்டத்தட்ட ஒரு நேரடி வர்ணனை போலச் செய்துகொண்டிருந்ததற்கு அந்தத் தனிப்பட்ட காதலே காரணம்.

சுல்தானை சலாகுதீன் ஸார் மகள் கல்யாணத்தில் வைத்துதான் ஏர்வாடியில் முதல்முதல் சந்தித்தேன். என்னுடைய ‘அகம் புறம்’ தொடர் விகடனில் முடிந்திருந்த நேரம். நாஞ்சிலின்  ‘தீதும் நன்றும்” வந்துகொண்டு இருந்தது. எனக்குப் பிந்திய வரிசையில் சுல்தான் இருந்தார். அகம்புறம் தொடரில் சலாகுதீன் ஸார் வீட்டுக்குக்கு, அவருடைய அம்மா இறந்த துக்கம் கேட்கப் போனது பற்றியும். தன்னுடைய அம்மாவின் விசிறி பற்றி சலாகுதீன் ஸார் சொன்னதும் ஒரு பகுதி இருக்கும்.  அந்தப் பகுதியை சிலாகித்து, சலாகுதீன் சின்னாப்பாவுக்கும் அவருக்குமான நெருக்கத்தின் புள்ளியில் இருந்து சுல்தான் அந்த அறிமுக உரையாடலைத் துவங்கினார்.
அத்துடன் சரி. அப்புறம் எந்தத் தொடர்பும் கிடையாது.

திடீரென்று நாஞ்சில் நாடனுக்கு ஆரம்பித்து இருந்ததைப் போலவே, எனக்கும் ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். பழையது, புதியது என அவ்வப்போது நிறையப் பதிவேற்றினார். எங்கே இருந்துதான் சேகரிப்பாரோ, கிறக்கம் வருகிற அள்வுக்கு என் புகைப்படங்களை, என்னைப் பற்றிய, என் எழுத்து மீதான செய்திகளை அதில் குவித்தார். அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது என வைராக்கியமாக இருந்த என்னை. தினசரி மூன்று தடவைகளாவது அந்தப் பக்கங்களைப் பார்க்கும்படி செய்தார். என்ன பின்னூட்டங்கள் எத்தனை பேர் எதற்கெல்லாம் எழுதுவார்கள் என்ற ஏக்கம் கூட ஒரு கட்டத்தில் வர ஆரம்பித்துவிட்டது. நல்லவேளை தூக்கத்திற்கு எந்தப் பழுதும் இல்லை.

இதே சமயத்தில் சக்தி ஜோதிக்கு, வண்ணநிலவனுக்கு, தோப்பில் மீரானுக்கு, ச.விஜயலட்சுமிக்கு எல்லாம் இணைய தளங்களை  வரிசையாய் ஆரம்பித்தார். வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், தோப்பில் மீரானுக்கு எல்லாம் அத்திபூத்தாற் போல புகைப்படங்கள். கலாப்ரியா மற்றும் தங்கராஜ் புண்ணியத்திலெனக்குக் கொஞ்சம் ஜாஸ்தி. காணும் காணாததற்கு என்னை சுல்தான் அவ்வப்போது எடுத்துக்கொண்டதும் உண்டு. சக்தி ஜோதி பற்றிக் கேட்கவே வேண்டாம். புகைப்படங்களுக்கும் கவிதைகளுக்கும் தட்டுப்பாடே கிடையாது அவரிடம்.

ஒரு சூதாடியைப் போல, சாயுங்காலம் ஆனாலே. சீட்டுக்கட்டைத் தேடி உள்ளங்கை ஊறல் எடுக்கும் அளவுக்கு, நான் என்னுடைய சுல்தான் தளத்தைத் தவிர்க்க முடியாமல் ரசிக்க ஆரம்பித்தேன். ஆளற்ற வீட்டில் நிலைக் கண்ணாடி பார்க்க அலுக்குமா என்ன?

கதை அப்படித் தானே போகும். இந்தச் சரியான சமயத்தில், சுல்தானுக்கு வேலைப் பளு அதிகரித்து விட்டது.  ஒரு பொறுப்பான உத்தியோகத்தில் வெளியூரில் அவரும், உள்ளூரில் குடும்பமும் இருக்கிற அவருக்கு இப்படியான சந்தர்ப்பங்களும் வரும்தானே. அவரால் நாஞ்சில் நாடன் தளம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எங்களையும் அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. எப்போதாவது, அவருக்கு அல்லது வலைத்தள வாசகனுக்கு மறந்துவிடக் கூடாது என்று,  ஒரு மாதத்திற்கு ஒரு தடவை ஒரு கவிதை, அதற்கு ஒரு அபாரமான கிளிப் படம், அணில் படம், கல்மண்டபப் படம் என்று போட்டுவந்தார். இது எப்படிப் போதும், விடிந்ததும் பல் தேய்க்காமல் ஏதாவது ஒன்று என்னைப் பற்றி தினசரி பார்த்து வந்தவனுக்கு? காணவில்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தது. சிரித்தால் கூட, நெடு நாள் கிடையில் கிடந்த சீக்காளி சிரிக்கிற மாதிரி இருந்தது என் சிரிப்பு.  ‘என்ன சுல்தான். இப்படிப் பண்ணிட்டீங்களே?’ என்று கேட்கவா முடியும்?

ஆனால், இதற்கெல்லாம் சேர்த்துவைத்து, சுல்தான் நாஞ்சில் நாடனை அப்படிக் கொண்டாடிக் கொண்டு இருந்தார். அது ஒரு வகைக் கொண்டாட்டம் தான். ஒன்று இடுப்பில் வைத்திருப்பார், அல்லது தலையில் வைத்திருப்பார். இப்போது முத்திக் கொண்டிருப்பார். கொஞ்ச நேரம் கழித்து, தொட்டிலில் கிடக்கிற பிள்ளை தூங்குவதைப் பார்த்து நிற்கிற தகப்பன் மாதிரிக் கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.  அவர் சொல்லுவார். அல்லது நீங்கள் சொல்லுவதைப் பாட்டுக் கேட்பது மாதிரி ரசித்துத் தலை
ஆட்டிகொண்டிருபார். பூப் போல யாரும் இல்லாத நேரத்தில் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சிக் கொள்வார். அப்படியே யார் இருந்தால் என்ன என்று மடியில் போட்டுத் தாய்ப்பால் கொடுப்பார். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எந்தப் பிரதிபலனும் அவருக்கில்லை. ஆனாலும் கொண்டாட்டம். ஆனாலும் திருவிழா. இலக்கியத்தின், இலக்கியவாதிகளின் இயங்குதளத்துக்குள், இப்படி அடுத்த மனிதரை மனதாரக் கொண்டாடுகிறவர்கள் கண்ணுக்கெட்டின தூரத்திற்கு யாருமே இல்லை.
,
நான் ஏர்வாடி S.I. சுல்தானை  வாழ்த்துகிறேன்.
எல்லோரும் அவரவர் கண்ணாடியில் அவரவர் முகத்தைப் பார்க்கிறோம்.
அவரவர் ஊதுகுழல்களை ஊதுகிறோம். அவரவர் பாடல்களை மட்டும் இசைக்கிறோம்.  சுல்தானின் காரியம் சுல்தான் அல்ல. அவருடைய செயல் நாஞ்சில் நாடனை வரைவது. கொஞ்சம் கூட, அதிகப்படியான கூடுதலான ஒப்பனைகளை அவர் நாஞ்சிலுக்குச் செய்வதில்லை. நாஞ்சில் எந்த அளவுக்கு, எத்தனை பற்கள் தெரியச் சிரிப்பாரோ, அவ்வளவுதான். எத்தனை நரையோ அவ்வளவுதான். நாஞ்சில் எப்படி இருக்கிறாரோ அப்படி. அவர் எழுத்து எப்படி இருக்கிறதோ அப்படி.  ஊதிப் பெருக்கின எந்த அனாவசிய  பிம்பங்களையும் . அவர் கட்டமைப்பதில்லை. மற்றவரின் எந்தக் கேலிச் சித்திரங்களையும் மறந்தும் வரைவதில்லை.

நாஞ்சில் நாடன் எப்படிச் செயல்படுகிறாரோ, அப்படி மட்டுமே சுல்தானின் வலைத் தளமும் செயல் படுகிறது.  நெருடலும் இல்லை. திகட்டலும் இல்லை. அர்ப்பணிப்பு மட்டுமே. வேற்று மொழிகளில், மேலை இலக்கிய வெளிகளில். சுல்தானைப் போன்ற முன் உதாரணங்கள் இருக்கலாம்.  தமிழில் இல்லை. தமிழில் சுல்தான் மட்டுமே.

நான் ஏர்வாடி S. I. சுல்தான் என முழுதாக, மனமார உச்சரிக்கிறேன்.  அது கூட, நாஞ்சில் நாடன் என உச்சரிப்பது போலத்தான் இருக்கிறது.

%


Saturday, 25 August 2012

அந்த அறை, இந்த வானம்.








இதற்கு முந்திய வானம்..
_________________________

கிட்டத்தட்ட பின்னிரவுத் துவக்கத்தில்
ஏதோ ஒரு உணவக மேஜையின்’
முட்கரண்டிகள் பீங்கான் உரையாடல்களீன்
மத்தியிலிருந்து
இடதுவிரல்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை
நான் வாசித்துகொண்டிருக்கும்
அயல்கவிதைவரிகளுக்கும்
மலர்களின் மௌனம் பற்றிய
திரைப்பாடல் குரல்களுக்கும் இடையில்
பத்திரப்படுத்துகிறேன்.
தண்ணீருக்கு மத்தியில்
முளைத்த முள்மரக் கூடுகளில்
வரத்துப் பறவைகள் இட்ட
கருப்புப் புள்ளிகளுடைய
பிசிபிசுத்த முட்டைகள் போல
புல்சருகு அடுக்கில் வெதுவெதுத்திருக்கும்
அவற்றின் மேல் அமர்ந்து
அடைகாக்கத் தோன்றுகிறது எனக்கு.
பாதி கேட்கப்பட்ட பாடலுக்கும்
மிச்சமிருக்கும் கவிதை வரிகளுக்கும்
நடுவில் தொங்குகிறது
இதற்கு முன் நான்
மிதந்துகொண்டிருந்த வானம்.

%

யாரோவின் சாயல்கள்.

’யாரோ சொன்னது மாதிரி’
என்று இவரின் முகம் பார்த்து
அவர் துவங்கினார் பேச்சை.
இவரை, அவரை, மேலும்
எவர் எவரையோ தெரிகிறது
அந்த ‘யாரோ’வைத் தவிர.
யாரோவின் சாயல்களை
யாராவது சொன்னால் நல்லது.

%

மழைக்கு முந்திய

இன்னும் கேட்கும்படி இருக்கிறது
தொண்டைச் செருமலுடன் துவங்கும்
அவளுடைய உரையாடல்கள் நிரம்பிய
ஓர் இரவும் இரண்டு பகல்களும்.
அவள் அதிகம் கீழ் நின்ற
மூங்கில்புதரின் வேறுவித இலையசைவு.
கருத்தரங்கக் குறிப்புகளை வாசித்து
தன்னை அடுக்கிக்கொள்வதற்கு முன்
அருந்திய காப்பிக் கோப்பையின் அடியில்
கருத்து நெளிந்து, விபத்து ரத்தம் என
உறைந்து மினுங்கும் மிச்சத் திரவம்.
கடிப்பின் வளைவுடன் ரொட்டித் துண்டுகள்.
ஒரு பிரத்தியேக வாசனைத் தெளிப்பின்
மயக்கம் களையாத் காற்றில்
கண்ணாடிக்குள் பிம்பம் உருட்டி
மேஜை விளிம்பில் புரட்டிக் கொள்ளும்
அடர் மஞ்சள் பென்சில் கூர்.
புதிய விமான நிலையத்திற்கான
போக்குவரத்து தூரத்தைத்
தாமதமாகக் கணக்கிட்ட அவசரத்தில்
குளியலறையில் விடப்பட்டுவிட்ட
பூத்தையலுடைய உள்ளாடைகள்.
மற்றும் இவற்றினிடையே
மலர்ந்துதிர்ந்து மலர்ந்த
இசை நிரம்பிய சில முத்தங்கள்.
இதற்கு மேலும் உயிர்ப்புடன்
ஒருபோதும் இருப்பதற்கில்லை
மழைக்கு முந்திய ஈரப்பதத்துடன்
அந்த அறையும்
அவனைப் போல் ஒருவனும்.

%

கல்யாண்ஜி.