Thursday, 5 July 2012

துறவின் அழுக்கு.






ஊதி ஊதி.
எந்தப் பனங்காட்டை ஊரானுக்கு
இரவல் கொடுத்துவிட்டு வந்த
மகராசியோ,
கட்டுமானக் காவலுக்குக்
கொட்டகை போட்டுக்
காத்துக் கிடக்கும் கிழவனுக்கு
கஞ்சி காய்ச்சுகிறாள்
கருக்கலில்.
ஊதி ஊதி எரிந்த தீயில்
உலை கொதிக்கிறது.
உலகு புரந்தூட்டி
ஓயாது சுரந்த முலை
தொய்ந்து கிடந்து தொட்டிலாட
திமிறித் திமிறி அழுகிற
தீ
தழல் வாய் திறந்து
தேடுகிறது காம்பை
திசை விலக்கி.

கடவுளுடையது.

பூனை கொண்டுவந்து
போட்டிருந்தது அதை, தலை மட்டும்.
அ-மாமிச உண்ணிகளான
எங்களுக்கு
அதன் அடையாளம் தெரியவில்லை.
பிளந்திருந்த வாய்.
மேலும் கீழும் ரம்பப் பற்கள்.
குட்டித் திமிங்கலம் என்றேன் நான்.
நீர்ப் பாம்பு என்றாள் அவள்.
ஒரே ஒரு முறை மட்டும்
அவசரமாகப் பார்த்த அவன்
‘அது கடவுளுடையது’  என்றான்
நிச்சயமான குரலில்.


இன்னொன்று.

பன்னீர்க் கொய்யா’  என்றார்கள்.
நிறத்தில்
அது மலரைப் போல இருந்தது.
ருசியில்
அரிநெல்லிக்காய் போல.
உண்டு முடித்ததும்
இன்னொன்று எதுவென அறியா
இன்னொன்றைப் போலவும்.

வானப்ரஸ்தம் 

ஆறு ஒழுகும்
கோவிலின் பின் விளிம்பு.
நானாகப் பெயரிட்டுக் கொண்ட
மகிழம் பூ மணத்தின்
உருவேற்றும் உச்சரிப்பில்
விம்மி வெடிக்கிறது மூச்சு.
அகன்ற கல் படிகளில்
துறவின் அழுக்கைத் துவைக்கும்
காவித் துணிக்காரர்.
வலக்கோடியின்
பூவற்ற பசுங்கொடியில் மொய்க்கும்
வெயில் நிற வண்ணத்துப் பூச்சிகள்.
காவி உடுத்திய வெயில் சிறகுடன்
ஆற்று நீராக, பெயரறு பூவாக
அலையத் துவங்கும் என்னை
அவதானித்தபடி
படகு வடிவ நீள் இலையில்
நீறும் குங்குமமும் நிறைசந்தனமும்.
சன்னிதிக்கு வெளிவந்து
உறுமித் திரியும்
ஒற்றைப் புலி மீது
ஏறித் துவங்கினேன் என்
வானப் பிரஸ்தம்.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - 2012














Tuesday, 3 July 2012

முன்னைக்கும் முன்னே.


நேற்று ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ பற்றி எழுதுவதாகவே இல்லை. அதை
முழுதாகப் படித்து முடிக்காத நிலையிலும், அது என்னையும் எழுதிய அந்தப்
பெண்ணையும் , அனேகமாக ஒவ்வொரு வரியின் கீழும் அருகருகே நிறுத்தி
வந்ததால், ஒரு தவிர்க்க முடியாமையில், சாம் ராஜுவுக்கு எழுதியிருக்க வேண்டிய ஒரு கடிதத்திற்குப் பதிலாக, எல்லோர்க்கும் அன்புடன் என எழுதப் பட்டுவிட்டது.

மீதி அத்தியாயங்களையும் வாசித்து முடித்து விட்டேன். நிச்சயம் அது நான்
எழுதிய நாவல்தான். என்னுடைய வாழ்வை பியரெத் ஃப்லுசியோ எப்படியோ இழை பிசகாமல் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்.

யாருடைய வாழ்க்கையையோ வாழ்கிற நான், 28.06.2012ம் தேதி பிற்பகலில்
எழுதியது யாருடைய கவிதையை?  ஒரு சொல்  எப்போது' யாருடையது' எனும் தன் அடையாளங்களைத் துறந்து, எல்லோருடையதும் ஆகிறது?

இந்த வரிகள் என்னுடையதா, எல்லோரினுடையதா?

%

பெற்றதை வழங்கிவிட்டுப்
பிறவியை முடித்துக் கொள்வேன்.
கற்றதை அகற்றிக் கொள்ளும்
கல்வியைக் கற்றுச் செல்வேன்.
விற்றதே போதும் என்று
வியாபாரம் முடித்துக் கொள்வேன்.
நிற்றலே நன்று என்றால்
நடத்தலை நிறுத்திக் கொள்வேன்.
பற்றது அற்றுப் போகும்
பக்குவம் தேடிச் செல்வேன்.
முற்றினால் உதிரும் என்னும்
முழுமையைப் புரிந்து கொள்வேன்.
வெற்றியும் தோற்கும் என்றோர்
விதியேற்று யுத்தம் செய்வேன்.
மற்றுளோர்க் கெல்லாம் பெய்யும்
மழையினில் நனைந்து கொள்வேன்.
புற்றினுள் உறையும் நானே
பூவிலும் அமர்ந்து செல்வேன்.
சுற்றிலும் உம்மை வைத்து
என்னையே சுற்றிக் கொள்வேன்.
அற்றமே ஆதி என்னும்
அகரத்தை எழுதிச் செல்வேன்.
எற்றுக்கோ என்னும் கேள்வி
எழுமெனில் அன்றே எல்லாம்
முற்றிலும் முடித்துக் கொள்வேன்,
முன்னைக்கும் முன்னே செல்வேன்.

%

முற்றிலும் முடித்து, முன்னைக்கும் முன்னே செல்வது யார்? நானா, அல்லது
பியரெத் ஃப்லுசியோவா?

சின்னச் சின்ன வாக்கியங்கள்..
------------------------------------------

"சின்னச் சின்ன வாக்கியங்கள்''  வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  பியரெத்  ப்லூசியோ   எழுதியது.   வெ . ஸ்ரீராம்  மொழிபெயர்ப்பு.  ஆனால்  அப்படித் தெரியாது .   நீங்களோ ,  நானோ  அல்லது இதை வாசிக்கிற யாருமோ
அவர்களே  இதை எழுதி,  வாசித்துக்   கொள்கிறது போலத்தான் .இருக்கிறது .
ஒரு  தாய்க்கும் மகளுக்குமான உலகையும் வாழ்வையும்  அதனுடைய   மிக நெகிழ்வு நிரம்பிய உணர்வு நிலைகளையும்  அண்மையான  கோணத்தில் சொல்கிற இதன்  ஒவ்வொரு  சின்ன வரியையும் ,  சின்னச் சின்ன வாக்கியத்தையும் ,  எனக்கும்  என்னுடைய முதிர்ந்த  தந்தைக்கும்  இடையிலான வாழ்வையும் உணர்வுகளையும்   சொல்கிறது  போல  இருக்கிறது.

முதல்  பத்தியில் இருந்து அப்புறம் நகர்ந்து, தொடர்ந்து  இதை வாசித்துக் கொண்டிருக்கும் மனநிலையோடு   நான் எழுத ஆரம்பித்தால்,  ஒரு  வேளை   அது   ஒரு அறுபத்து  ஐந்து  வயது மகனுக்கும் ,  எண்பத்து  ஏழு வயதுத்  தகப்பனுக்கும் இடையிலான  வாழ்வின்  நெடும்  பாலத்தையும் அதன் கீழ்   பெருகியோடும் துல்லியமானதோர்    பெரு  நதியையும்  நமக்கு முன்னால் கொண்டுவந்து எழுத்தில்  நிறுத்துவதாக  இருக்கும்..


இந்தப்   புத்தகத்தை  சாம்ராஜிடமிருந்து  பெற்றேன். அவர் இன்னும் வாசிக்கக் கூட இல்லை.   அவர் வாசிக்காத புத்தகங்களும் வாசித்துக் கொண்டிருக்கிற  சில  புத்தகங்களும்  மேஜையில் இருக்க , அவர்  வாசித்து முடித்த மிக நல்ல புத்தகங்கள்  அடுக்கப் பட்ட இரும்புச் சட்ட வரிசையின் அண்மையில்,  மிகப் பிந்தி  உறங்கிய  அந்த இரவு எனக்கு,  என்னுடைய   அண்மையான தினங்களில்  மிக முக்கியமானதும்  விருப்பமான ஒன்றுமாக இருக்கிறது..

இரண்டு இரண்டே  கால் மணி அளவில்தான்  கண் அயர்ந்திருப்போம்.   நான்  அந்தப் புத்தகங்களின்   அண்மையில், முந்திய இரவின் சாம்ராஜ் சொற்களை  ஏற்று இழுத்த சுவாசம்  அதன்  வெதுவெதுப்பும்   உண்மையும்  மாறாமல் என் மீது உறைந்திருக்க,  அப்படியே இறந்து கிடக்க  விரும்பினேன்.   ஆகாச முத்து எனும் அவருடைய அறை  நண்பரும் இல்லாமல்,  சாம்ராஜ் மட்டும்  மறுநாள்   எதிர்கொள்ளப்போகிற  ஒரு துக்ககரமான காலையைப் பற்றிக் கூட  அப்போது நான் கொஞ்சநேரம்   யோசித்துக் கொண்டேன்.

சாக   நினைக்கிறவர்களை  வாழ்வு  அப்படியெல்லாம் சுலபமாகச்  சாவதற்கு  அனுமதித்து விடாது.   அது  அசோகமித்திரன் கதைகளில் வரும்  மற்றொரு
தினத்தை எனக்குத் தருவது போல,  நான் கேட்பதற்கான  முதல் சத்தத்தை
தண்ணீருக்காக ஒரு வயதான அடி பைப்பில் யாரோ  தளர்வே  இல்லாமல் இயக்குவதில் இருந்து தந்தது.  அந்தப் பைப்புக்கும் அதை அடிக்கிற கைக்கும்
ஒரு தவிர்க்க முடியாத  நீண்ட கால உறவு இருப்பதை,  அந்தச்  சத்தம்  என்
ஜன்னலுக்கு வெளியே துருப்பிடித்த குரலில் சொல்லிச்  சொல்லித் தீரவே இல்லை . ஒரு தண்ணீருக்கான குரலைக் கேட்ட பிறகு எந்த மனிதனால் செத்துப் போகமுடியும்?  நான்   மிகுந்த  அமைதியுடன்,  சாம்ராஜ்    தந்த இந்த 'சின்னச்  சின்ன வாக்கியங்கள்'' புத்தகத்தையும் , ஷோபா சக்தியினுடைய
'எம்..ஜி..ஆர்..கொலை வழக்கு'' சிறுகதைத் தொகுப்பையும்  ஒரு  கசங்கிய ஜவுளிக்கடைப் பையில் வாங்கிக் கொண்டு  வந்தேன்.

'வாழ்வு'', 'மரணம்'' இரண்டும் சின்னஞ் சிறு சொற்கள்தான்.. ஆனால்  வாழ்வதும் , சாவதும் அப்படி ஒன்றும் சின்னச் சின்ன வாக்கியங்களுக்குள்
அடங்கிவிடுவன  அல்ல..

பத்தொன்பது அத்தியாயங்களை  வாசித்து விட்டேன்.  இன்னும் ஏழே  ஏழு
அத்தியாயங்களில்  என் வாசிப்பு முடிந்துவிடும்.   அவ்வளவு நிச்சயமாகவும்
உத்தரவாதமாகவும்  இந்த வாழ்வைப் பற்றிச் சொல்லிவிட முடியுமா  என்ன?

%