Friday, 11 May 2012

பெய்தலும் நனைதலும்.

எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே எதையும் எதிர்பார்க்காத மனநிலையில்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.’எதிர்பாராதது’ என்ற ஐம்பது வருடத்திற்கு முந்திய ஒரு திரைப்படத் தலைப்பு அப்போதே எனக்குப் பிடித்திருந்ததற்கு இப்படி ஏதாவது உளவியல் அடிப்படைகள் இருக்கலாம்.
மறுபடியும், நேற்றைய எதிர்பாராத பிற்பகல் பற்றி. அந்த நேரத்தின் கோடை
மழை பற்றி.  கோடையின் பிற்பகல்கள் எப்போதுமே இப்படி மழை வருவது போலமூடாக்குப் போட்டு அழகு காட்டுபவை. தணிந்து வருகிற வெயில் மட்டும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்.  மிகுந்த அவசரமான வேலை ஒன்று முடிக்கவேண்டிய அவசியத்துடன் காத்திருப்பது போல, அது சத்தம் காட்டாமல் நிழலோடு போகும். ஏற்கனவே பிற்பகல்கள் மௌனமானவை. மௌனத்திற்கு ஒரு அழகு உண்டு. அழகுக்குப் பயம் உண்டாக்கும் ஒரு கூரிய விளிம்பு உண்டு.  ஒரு பறவைக் குரல் இருக்காது. அங்கங்கு இருக்கும் அந்தந்த மர இலைகளின் கீழ், பறவையின் குரல்கள் ஒரு கூட்டுப் புழுக் கூடு போல் தொங்கிக் கொண்டிருக்கும்.  ஒரு செருப்புச் சத்தம் கேட்டால் ஆச்சரியம்.
‘இதே ஜோலியா போச்சு இதுக்கு. இப்பதான் அடிச்சுக் கொட்ட போகிறது மாதிரி பாவலா பண்ணும். ஒரு காத்து வந்து அப்படியே மழையக் கொண்டு
போயிரும்’.   இயற்கையின் பாவலாக்கள் அழகானவை.   புலி வருகிறது என்று நான்கு தடவைகள் சொல்லி ஏமாற்றி, வராதென ஏமாந்திருக்கும் ஐந்தாம் தடவை வரும் புலி அழகாகத்தான் இருக்கும். நேற்றைய மழை ஐந்தாம் தடவைப் புலி.
மழை இன்னும் என்னை என்னவோதான் செய்கிறது.
அதற்கு முந்திய நேரம் வரை இருந்தவனாக ஒருபோதும் இருப்பதில்லை. என்னுடைய மேகங்களும் கருத்துவிடுகின்றன. உறுமி அலைகின்றன. காற்றால் அலைக்கழிக்கப் படுகின்றன. தன் பாரம் தனக்கே கனத்து, தன்னை உடைத்துச் சிதறிக் கீழிறங்குகின்றன. பெய்யெனச் சொல்லாதே பெய்கின்றன.
நான் நீண்ட ஒரு காலத்தின் பின் மழைபார்க்க உட்கார்ந்தேன். இரண்டு வெள்ளை ப்ளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு
உட்கார்ந்து இந்த நந்தியாவட்டையில் ஊர்ந்து செல்லும் கடுத்தான் எறும்பு
பிரக்ஞையில் இருக்க, புத்தகங்கள் வாசிக்கும் என்னை சமீபத்தில் யாரும்
பார்த்திருக்கவில்லை. புத்தகங்கள் வாசிப்புப் போலத்தான் மழை வாசிப்பும். நீங்கள் பக்கங்களைத் திருப்ப வேண்டியதில்லை, மழையே தன் பக்கங்களைத் திருப்பித் தரும்.  நீங்கள் வாசிக்க விரும்புகிறவையாக அவை இராமல், மழை வாசிக்கத் தரும் தேர்ந்தெடுத்த பக்கங்கள் அவை.
நான், என் கிட்டப் பார்வையின் எல்லைக் குறைவுடன் ஏழாம் வகுப்பில் இருந்து வாழ்கிறவன் தானே. ஒரு கரும் பலகைக்கும் எனக்கும் உள்ள
தூரத்தின் மங்கிய எழுத்துக்களை, பாட்டு பாடிக் கொண்டே கண்பரிசோதனை  செய்யும் கிருஷ்ணமூர்த்தி டாக்டராலும். ஒரு வினோதமான விருப்ப வாசனை அடிக்கும் ஜெனித் ஆப்டிகல்ஸ் அண்ணாச்சி ஒருவராலும் தெளிவுறப் பெற்றவன் அல்லவா.
‘சிலேட்டில் எழுதி அழித்தது போல’ என்று ஒரு நிரந்தரமான உவமையை என்னிடம் வைத்திருக்கிறேன். அது ஒரு துயரமான இசை எனத் தொடர்ந்து எனக்கு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். நிறைந்து பெருகும் குற்றால அருவி, ஏக பொதிகை உச்சியில் இருந்து நான் பார்த்த பாபநாசமும் அம்பாசமுத்திரமும்,  பிள்ளையைப் போட்டு பலாப் பழம் எடுத்த ஓடைக்குள் பிணைந்துகொண்டிருந்த பாம்புகள், பூனை உண்ட
எச்சமாய் நான்கு நாட்களுக்கு முன், கதவைத் திறக்கையில் விசிறிக் கிடந்த பறவைச் சிறகுகள் ... எல்லாமே எனக்கு இப்படி சிலேட்டில் எழுதி அழித்த காட்சிகள் தான். ஒரு கிளி பறந்துபோவதை நீங்கள் காட்டினால்,
உங்கள் விரல்கள் நீள்கிற திசையில் நான் ஒரு பச்சைப் பறவையை வரைந்து கொள்வேன். நான் பார்க்கிற கிளி, எப்போதும் நீங்கள் காட்டிய
கிளியை விட அழகானது.
நேற்றுப் பார்த்த மழையும் அப்படித்தான் அழகாக இருந்தது.
தூரத்தில் இருப்பவை அடையாளம் அற அழிக்கப் படுவதால்,  அதற்கு முன் மரங்களாக இருந்தவை வெறும் அசைவுகளாகி இருக்கும். அதற்கு அடுத்த கட்டிடங்களின் அழிப்பு, அதைவிடச் சற்றுக் குறைவானது என்று தெளிவடைந்துகொண்டே வரும் என் பார்வையில் ஒரு சீனிக்கல்லின் மேல் தெறிக்கிற மழைத்துளி அற்புதமான துல்லியம் அடைந்துவிடுகிறது.
நான் வாசிக்கிற ஒரு புத்தகவரிகளின் அபாரமான வடிவ அழகு உங்களுக்குக் கிடையாது.  கைத் தயாரிப்புக் காகிதங்களில் இழையோடும்
தாவரத் துரும்பை என்னைப் போல உங்களால் ‘உணர’  முடியாது.  ஒரு செய்தித் தாள், அல்லது பத்திரிக்கைப் பக்கத்தின் மீது நான் கொள்கிற வாசனை மிக்க காதலை நீங்கள் கொள்ளவே முடியாது. அதிகம் வெளித்
தெரியாத ஒரு காகிதத் தழும்பை என்னால் மட்டுமே வருடிக் கொடுக்க முடியும். மழையையும் அப்படித்தான் அதன் வாசனையோடு, தழும்போடு
பார்த்து அமர்ந்திருந்தேன்.
இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கண்டு பிடிப்பு அல்ல. மழையின் போது
மழை மட்டுமே எஞ்சும். மழையைத் தவிர, மழை வேறெதையும் நம்மை நினைக்கவிடாது. மழை ஈரமே எனினும் அது நம்மை பஸ்பமாக்கும்.
அவரவர் சாம்பலின் வெதுவெதுப்பான குவியலில் அவரவ்ரை நிறுத்தி.’உருவாய் அருவாய், உளதாய் இலதாய்’ நம்மை மழை ஆக்கும்.
ஒரு தெருவோரப் பசு மழையில் அசையாது நிற்பதை நாம் நிறைய அவதானித்திருக்கிறோம். இந்த நொடி கல்லூர்ப் பிள்ளை கடையில் குனிந்து எச்சில் இலையைத் தின்றுகொண்டிருக்கிற கிழட்டுப் பசு, மழையில் ஒரு செவலை நிறச் சிலையாகிறது. அதன் கடை வாயில் தொங்கும் நரம்பு தென்னிய முரட்டு வாழையிலை ஒரு பச்சைக் கல் தகடாகச் செதுக்கப் பட்டுவிட்டது. கல்லில் செவலைக் கல் உண்டா, பச்சைக் கல் உண்டா? உண்டு. மழை எல்லா நிறத்தும் சிலை செய்யும். 
மழை உலகத்தின் சொற்களைப் பூராவும் அது பெய்கிறவரை அள்ளி, கடலில் எறிந்துவிடுகிறது. மழையின் போது உரையாட முடிகிறவரை நான் சந்தேகிக்கிறேன். 
எந்தச் சந்தேகமும் இன்றி, எந்த உரையாடலும் இன்றி மழை பார்த்துக் கொண்டே இருந்தேன்.  அல்லது மழை என்னைப் பார்க்கும்படி இருந்தேன்.
எங்கள் வீட்டு இரும்புக் கதவில் தபால்காரர் செருகி வைத்துவிட்டுப் போயிருந்த பத்திரிக்கைகளை மிகுந்த தாமதத்துடன் தான் பார்க்கிறேன்.
நானாகக் கூட அல்ல. பக்கத்துக் கட்டுமானத் தொழிலாளி தன் மஞ்சள்,
ஆரஞ்சுக் குடங்களோடு தண்ணீர் பிடிக்க வருகிறார். நான் ஒன்றும் கேட்கவில்லை. ‘மழை  செத்த வெறிச்சுட்டுல்லா’ என்கிறார். மழை சற்று விட்டுவிட்டது. நான் குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொள்கிறேன் என்று அர்த்தம். அவர் தோளில் தூக்கிவைத்த குடத்தோடு-’என்னமோ பொஸ்தகம் சொருவி வச்சிருக்கு’- சொல்லிவிட்டுக் கதவைச் சாத்துகிறார். இடது கையிலும் குடம் இருக்கிறது. இல்லாவிடில் அவரே எடுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருப்பார். இது போன்ற சிறு செயல்களின் மூலம் நம்மைக் காட்டிக் கொள்ளவிடாமல், இது போன்ற நிரம்பிய குடங்கள்
வழியடைக்கின்றன.
நான் அந்த இரு பத்திரிக்கைகளையும் எடுக்கிறேன்.
ஒன்றின் மீது ஒன்றாக மடித்துச் செருகப்பட்டவை. மேலே இருந்த பத்திரிக்கையில் மழையில் நனைந்த சந்தோஷத்தை உணர முடிந்தது. இரண்டாவது நனையவில்லை.’உயிர் எழுத்து’ நனைய விடாத சுற்றுத்
தாள் உடையது.
நான் அது நனைந்திருக்க விரும்பினேன். அதில் வெளிவந்து கொண்டிருக்கும் என் சமீபத்திய கவிதைகளும் நனைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.


Tuesday, 8 May 2012

ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை

இன்றைய ஹிந்து நாளிதழில் ஒரு நிழற்படம் வெளியாகியிருக்கிறது.
அவர்களது ஆவணக் காப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று.
வார்த்தைகளுக்கு அப்பால் என்று சிவப்பெழுத்துக்களில் அந்தப் படம்
பற்றிய குறிப்பு தொடர்கிறது.
குருதேவ் ரபீந்திரனாத் தாகூரை, ஒரு நியூ யார்க் சந்திப்பில்,  1930 ல், ஹெலென் கெல்லெர் சந்தித்த நேரத்தின் அற்புதமான படம்.  ஹெலென் கெல்லெர் ஏற்கனவே அழகானவராகவே இருந்திருக்கிறார். வலது கையால்
அவர் தாகூரை அணைத்திருப்பதையும் இடதுகையால் தாகூர் அவரை அணைத்திருப்பதையும் நாம் அந்தப் படத்திற்கு அப்பால் யூகித்துக் கொள்ளவேண்டும். இது போன்ற தருணங்களில் நம் கைவசம் அணைப்பைத் தவிர நம்மைத் தெரிவிக்க வேறொன்றும் எஞ்சுவதில்லை.
ஹெலென் தன் இடக்கை விரல்களால் குருதேவை வாசித்துக் கொண்டிருக்கிறார். தாகூரின் வலக் கன்னத்துத் தாடி இழைகளில் எழுதப்
பட்டிருக்கும் தாகூரை அவர்  விரல்கள் வாசித்து நகர்கின்றன. தாகூர் எனும்
மனிதன்  சில வரிகளாக தன்னை ஒப்புக் கொடுத்து நிற்கும் நிலை. ஒரு சிலை போல நிற்கிறார் அவர்.  ஒரு பெண்ணால், அல்லது ஹெலென் கெல்லெர் போன்ற அழகிய மனுஷியால் வாசிக்கப்படும் நேரத்தின் பூரண
அதிர்வில் நிற்கிற தாகூர். அவருக்குப் பார்க்க முடியும். ஹெலென் கெல்லெரை பௌதிகமாகவும் அவர்  அறிந்திருக்கிற உயர்நிலை அவருடைய சற்றே உயர்ந்து இடுப்பளவில் அசையாது நிற்கிற வலது கையில் தெரிகிறது. நான் கற்பனை செய்துகொள்கிறேன்.  ஹெலென் கெல்லெரை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொள்வதற்கான தவிப்பில்
தாகூரின் வலது கை இருப்பதாக.
இந்த நாளின் முகங்களின் பரிச்சயத்தில், எல்லா முகங்களையும் வேறொரு முகத்தின் சாயலுடன் ஞாபகப்படுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ள எனக்கு, குருதேவரின் முகத்தில் ஓஷோவின், சத்குரு ஜக்கி வாசுதேவின் சாயல் எல்லாம் மேக நிழல் போல் விழுந்து நகர்கிறது. கோபுரங்களின் மேல் சாயுங்கால வெளிச்சம் விழுந்து நகர்வதைப் பார்த்தவர்களுக்கு, அக்கணம் மேலும் புரிபடும் கோபுர தரிசனம் போல அது.
 தாகூர் ஒரு பெரும் தழுதழுப்பில், நிறைவின் பெருக்குடன் இருந்திருக்க வேண்டும். அவர் பார்வை, இதற்கு முன் அவர் அடைந்திராத ஒரு பார்வையுடன் இருக்கிறது. நானே அதற்கு முன் பல முறை அவரை உடனிருந்து பார்த்திருப்பது போலவும், இப்போது குருதேவ் அடைந்திருக்கும் உணர்வுச் செறிவான முகத்தை இதற்கு முன் அவர் அடைந்ததே இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும் எனவும் தோன்றுகிறது.
ஹெலென், பார்வைத் திறனற்றோரின் மேல் நோக்கிய பார்வையுடன் இருக்கிறார். ஒரு வெதுவெதுப்பான,  இதுவரை வாசிக்கக் காத்திருந்த ஒரு
உயிருள்ள கவிதையை வாசிக்கிற, ஒரு குளிர் தடாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, அவரே குளிர்தாண்டிய தடாகம் ஆகிவிடுகிற நேரத்தின் மலர்ச்சி ஹெலெனின் உதடுகளில் மலர்ந்திருக்கிறது. எனக்கு நிச்சயம்,  ஹெலெனுமே இதற்கு முன்பு இத்தனை ஒளிரும் அழகுடன் இருந்திருக்கவே மாட்டார்.
நான் இப்போது குருதேவாகக் கூட அல்ல, ஹெலென் கெல்லெர் ஆக இருக்க விரும்புகிறேன்.
எனக்கு  ப்ரெய்ல் தெரியும், தாகூரை விரல்களால் வாசிக்கிற
அளவுக்கு.

Monday, 7 May 2012

பெயர் தெரியாமல் சில பறவைகள்.

கொஞ்ச நேரம் 'சமவெளி'  பக்கத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
கோபால் சொல்லச் சொல்ல ஒவ்வொன்றாகச் செய்துகொண்டு வந்தேனே தவிர, அதற்கு முந்தி ஆனா ஆவன்னாவும் தெரியாது. அதற்குப் பிந்தியும் அவ்வன்னா அக்கன்னாவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் பெரிய ஆசை
ஒன்றும் இல்லை.
அந்தப் பக்கத்தின் நிறமே நன்றாக இருக்கிறது. சாயம் போன ஜமுக்காளம்
மாதிரி இருக்கிற அதற்கு என்ன நிறம் என்று சொல்லலாம்?.    தவிட்டு கலர், பிஸ்கட் கலர் எல்லாம் கூடச் சரியாக இராது. எப்போதோ எங்கள் அம்மா சொன்ன ‘கொக்கோ’ கலர் சரியாக இருக்கும் போலிருக்கிறது. கொக்கோ என்றால் அசல் கொக்கோ இல்லை. ஒரு டம்ளர் பாலில் ஒரு கரண்டி போட்டுக் கலக்கின கொக்கோ.  மண் கலர், யானைக் கலர், சிலேட்டுக் கலர், செங்காமட்டைக் கலர் என்று அன்றாடத்தின் புழக்கத்தில் இருக்கிற ஏதோ ஒன்றின் ஜாடைக்கு மிக நெருக்கமாக நிறங்களைக் கொண்டுவந்துவிடும் நேர்த்தி இப்போது இருக்கிறதா? தேன் கலர் சீப்பு என்று யோசித்துப் பார்த்தால் தலைவாரும் சீப்பை விட, ‘ஒசரத்தில்’ இருந்து உள்ளங்கையில் நாடாவாக ஊற்றப்படும் தேனின் பிசுபிசுப்பான அழகு எவ்வளவு அழகாக ஞாபகம் வருகிறது.
நமக்கு ஏன் இப்படி எளிதாக ஞாபகம் வைத்திருக்கவும். எளிதாக ஞாபகப் படுத்தவும் வர வரத் தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது?
இந்த வலைபக்கத்தின் நிறத்தைப் போலவே, வலது ஓரமாக ‘ரெட்டை
ரெட்டை’யாக ஆறு பறவைகள், எந்த என்னுடைய முயற்சியும் இல்லாமல்
பறந்துகொண்டிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு தடவை
ஏதாவது பதிவேற்றும் போது, பதிவேற்றலாமா என நினைத்துக் கடையைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறபோது, ஒன்று இரண்டு, மூன்று என ஆறும் சரியாக இருக்கிறதா, ஏதாவது ஒன்று பறந்துபோய்விட்டதா எனவும்
பார்த்துக் கொள்கிறேன். சமயத்தில் அவை அப்படியே மொத்தமாக வலது பக்கத்தில் இருந்து பறந்து வெளியே போய்விட்டு, நான் என்னுடைய கடைசி வரியைத் தட்டெழுதி முடிக்கும் போது, இடது பக்கத்தின் வழியாக ஏன் நுழையக் கூடாது என்றும் தோன்றுகிறது.
கிறுக்குத்தனம் என்று ஆனபின், அதற்கு ஏதாவது அளவு உண்டா?  அவை
அங்கிருக்கிறது மட்டும் அல்லாமல், அதனதன் குரலில் சத்தம் போடுவது கூட எனக்குக் கேட்கிறது. பறக்கிற சமயம் பொதுவாக, பறவைகள் சத்தம் இட்டுக் கொண்டு பறக்காது எனினும், வலைப்பக்கப் பறவைகளுக்கு அந்த சுதந்திரம் இருக்காவிட்டால் எப்படி?   எனக்கு சின்ன வயதில் இருந்தே அடைக்கலாங் குருவிகளே அதிகப் பழக்கம் என்பதால், தற்சமயத்துக்கு
எனக்குக் கேட்பது அந்தச் சத்தம்தான். போகப் போக கிளிச் சத்தம், வேனில் காலத்தில் இப்போது நடப்பில் உள்ள அக்காக் குருவிச் சத்தம் எல்லாம் கேட்கத்தானே செய்யும்.
இதையெல்லாம் விட இந்த என் பக்கங்களை வாசிக்கிற ராம்ஜி யாஹூவுக்கோ குமரகுருபரனுக்கோ அல்லது வாசிக்கப் போகிற நிலாமகள், சித்திரவீதிக்காரனுக்கோ அவரவர்களுக்கு விருப்பமான பறவைகளின் குரல்கள் கேட்கும்.   அப்படிக் கேட்குமெனில், இந்தப் பறவைகள் மட்டும் அல்ல, நானுமே கடைசி வரை பெயர் தெரியாது
இருக்கச் சம்மதம்.