Thursday 14 November 2019

ஒலிபரப்புக் கதை







வண்டு’ என்ற ஒரே ஒரு சிறு கதையைத் தான் இந்தப் பதினோரு மாதங்களில் எழுத முடிந்தது. ஒன்றை மட்டுமே எழுதியதற்கும் வேறெதுவும் எழுதாது போனதற்கும் இந்த வாழ்க்கையைக் கேள்வி கேட்க முடியாது. அது பதில் சொல்லாது. நிறைய எழுதும் போதும் அது அப்படியேதான் கையைக் கட்டிக்கொண்டு இருந்தது. அது வேடிக்கை காட்டாது. ஆனால் வேடிக்கை பார்க்கும்.
நான் அந்தக் கதையை எழுதி முடித்த மறு நாளே ‘ காணி நிலம்’ சிற்றிதழுக்கு அனுப்பினேன். அதில் வரவேண்டும் என மிக விரும்பினேன். காணி நிலம் ஒரு காலாண்டு இதழ். அரையாண்டு ஆகப் போகிற நிலை. இன்னும் இதழ் வெளிவரவில்லை.
இதற்கிடையில் நெல்லை வானொலியில் என்னிடம் கதை கேட்டார்கள். அவர்கள் என்னிடம் ஒலிபரப்புக்குக் கதை கேட்டுப் பல வருடங்கள் இருக்கும். சரி என்று சொன்னேன். பத்துப் பன்னிரண்டு நாட்களில் அனுப்பினால் போதும் என்றார்கள். எனக்கும் போதும் போலத்தான் இருந்தது. எழுதிவிடுவேன் என்றுதான் நினைத்தேன். எழுதவில்லை. எழுதமுடியவில்லை என்பதே மெய். நிறைய மன, உடல் அழுத்தங்கள்.
நவம்பர் 5க்குள் அனுப்ப வேண்டும். மூன்றாம் தேதி கூட எழுதிவிடுவேன் என்றுதான் கணினி முன் இருந்தேன். ஆனால் அந்த முதல் வரி பக்கத்தில் வரவே இல்லை. நாலாம் தேதி இரவு வரை துளாவியும் அந்த முதல் வரி தன் விடுமுறையை முடித்துத் திரும்பி வரவே இல்லை. இரவு 11 மணிக்கு, காணி நிலத்திற்கு அனுப்பிய ‘வண்டு’ கதையை ஒரு தடவை வாசித்துப் பார்த்தேன். வேகமாக வாசித்தால் 11 நிமிடங்களும், நிதானமாக வாசித்தால் 13 நிமிடங்களும் ஆயிற்று. அதையே அனுப்பிவிட்டேன்.
ஒரு நிம்மதி. ஒரு ஏமாற்றம்.
நேற்று அந்தக் கதை ஒலிபரப்பு ஆகிவிட்டது போல. நான் திருநெல்வேலியில் இல்லை. இருந்தால் கேட்டிருப்பேன். கேட்கப்படாத அந்தக் கதை காற்றில் இருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.
இன்று காலையில் என் சுவாசத்தில் நிச்சயம் அந்தக் கதையும் நுரையீரலைச் சுத்தீகரித்திருக்கும். எழுதிய கதை எழுதியவனுக்கு அதைக் கூடச் செய்யாவிட்டால் எப்படி?





No comments:

Post a Comment