Friday 29 November 2019

நிலவின் குரல்








அது ஒரு சின்ன அதிர்ஷ்டம் அல்லது சின்ன விபத்து. அப்படித்தான் அது நடக்கும்.
பெருமழை தரும் முழுத் துக்கம், முழு ஆனந்தம் இன்று. குளிர்ந்த இருட்டு ஒரு கிழிந்த சுவரொட்டி போல, வீட்டின் எல்லாச் சுவர்களிலும் நாக்கு மடித்துத் தொங்கும் போது, தசராக் காளி அவள் நாக்கை என் வாயில் நீளச் சிவக்கிறாள். வேறு ஒன்றைத் தின்னக் கேட்கிறவளுக்குத் தர இன்று என்னிடம் ஒன்றுமில்லை. ஒன்றுமில்லையெனில் எல்லாம் கேட்கிறவள் அவள்.
பாலசுப்ரமணி சடையப்பன், திரைப்படம் சார்ந்த, பாலுமகேந்திரப் பள்ளிக்கூடத்துக்காரர். இன்று ஆழ் துயரத்திலிருந்து முடிவிலி நோக்கி என்று ஒரு பதிவு.
ஸியா மொஹைதீனின் துருபத் வாத்திய, யமன் ராக, இசைப்பு. 1.10.12 என்ற நீண்ட பதிவு. இன்றைக்குக் கேட்டால் பொசுங்கிப் போய்விடக் கூடும். அதிலிருந்து நகர்த்தி நகர்ந்தேன். உஸ்தாத் ஆஸாத் அலி கானின் ருத்ர வீணை. யமன் கல்யாண் ராகம். அதுவும் 1.08.54 நேரப் பதிவு. சுல்தான் கானின் சாரங்கியில் யமன் ராகம். அதே 1.03.27.
நான் ஒரு சிறிய நேர மழைப் பாட்டம் பெய்யும் நேரத்தில், மற்றொரு பாட்டம் துவங்கும் வரை கேட்க விரும்பினேன். எதையாவது, யாரிடமிருந்தாவது பெற்றுக்கொள்ள விரும்பினேன்.
ஒரு ராகமும் ஒரு தாளமும் தெரியாமல் இரண்டு கைகளையும் நீட்டிய யாசகம். பட்டியலில் அடுத்து அனவ்ஷ்கா ஷங்கர் எனும் மாய மோகினி 'நிலவின் குரல்' என 14 நிமிட சிதார் வாசிப்பில் இருந்தது.
கேட்க ஆரம்பித்துவிட்டேன். மழை நிற்பது பெய்வது குறித்த நினைப்பில்லை. சுருள் சுருள் புரள் முடியில் புற்றகன்ற நிலவின் குரல் அனவ்ஷ்காவின் வலது நடன பாதத்தின் வழி நெளிந்திறங்கியது.
என்னுடைய காலுக்கும் கட்டிலுக்கும் கீழ் அது ஒரு 12ம் நாள் நிலவைப் பார்த்துக்கொண்டு படம் விரிக்கிறது.
%


https://youtu.be/RzoO756PvL8
https://youtu.be/RzoO756PvL8



No comments:

Post a Comment