Tuesday 21 August 2012

நிறமற்ற பறவை



இன்று என்னுடைய அறுபத்து ஏழாவது பிறந்த நாள். இன்னும் நிறைய மனிதர்களை அடைய வேண்டும். நல்ல வண்ணம் மண்ணில் வாழ
வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். கொஞ்சம் எழுதவேண்டும்.

எல்லோர்க்கும் என்னுடைய அன்பும் வணக்கமும் நல் வாழ்த்துகளும்.





நிச்சயம் அது பறவை.
________________________


குனிந்திருந்தேன்
கால பெருவிரல் நகத்தின் வெடிப்புக்குள்.
அது அப்போதுதான் பறந்து சென்றது.
என்ன நிறப் பறவை அது
எனச் சொல்ல முடியாத
சிறகடிப்பின் வேகம்.
நிறமற்ற பறவை என
இப்போது வைத்துக் கொள்வோம்.
நிச்சயம் அது ஒரு பறவை என்பது
போதுமானதாக இருக்கிறது
மீண்டும் நிமிர்ந்து  நான்
உங்களைப் பார்க்க.

%

கல்யாண சுந்தரம்
கல்யாணி
T.S
கல்யாணியண்ணன்
நடுவான்
வள்ளி மாப்பிளை
சங்கரியப்பா
கல்யாணித் தாத்தா
மற்றும்
கல்யாண்ஜி


5 comments:

  1. நிகரற்ற நெல்லையாருக்கு
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள், வணக்கங்கள்

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துகளும் அன்பு வணக்கங்களும் சார்:)

    ReplyDelete
  4. Many Happy Returns of The Day.

    ReplyDelete

  5. கீரைப் பாத்திகளிடையே
    ஒளிந்திருக்கும் சாம்பல் நிற
    முயலின் கண்களை
    ஒரு மூன்றாம் பிறை இரவில் பார்ப்பது

    தட்டாங்கல் ஆட்டத்தில்
    தொலைந்த கூழாங்கல்லுக்கு
    ஆற்றங்கரையில் இணைக்கல்
    தேடும்போது ஒற்றைக் கொலுசு
    கிடைப்பது

    புத்தகம் நடுவே காய்ந்துபோன
    பூவிலிருந்து என்றோ திறக்கும்
    போது வரும் சாம்பிராணிக் கல் வாசம்

    காடாறு மாதத்திற்கு
    முந்தைய இரவை
    புணர்ச்சிக்குப் பின் கழிப்பது

    காட்சிசாலை பாம்புகளுக்கு
    தீனி பகிர்வது

    பழக்கிய யானையின்
    பின்னங்கால் சங்கிலி
    அவிழ்ந்த பின்னும்
    அதை ஞாபகத்தால் சுமப்பது


    ஒரு சர்க்கஸ் கோமாளியும்
    ஒரு நல்மேய்ப்பன் வெட்டியானும்
    சூடு மாறாத சாராயத்தை
    ஒரு தகனப் பாடலுடன் பருகுவது

    ஒரு ரயில் பயணத்தில்
    சூல் கொண்ட வயிற்றை
    தடவிக் கொடுப்பது

    வண்ணதாசனுடன் பேசுவது

    (இன்று பேசிய 30 நிமிடங்களுக்கு- 22-08-2012)

    -நேசமித்ரன்

    ReplyDelete