Saturday 11 August 2012

என்னவோ








அமைதியின்  விள்ளல்.


பதற்றம் குறைந்து
அமைதி வரக்கூடுமென
இந்த நகரத்தின் குறுக்கு நெடுக்கைப்
புனரமைக்கும் கால்களுடன்
வெவ்வேறு குடியிருப்புகளிடையே
வியர்த்து நடந்து திரும்பினேன்.
எந்த மாற்றமும் இல்லை
கொந்தளிக்கும் அலைகளின் உயரத்தில்.
மறுபடியும் புறப்பட்டேன்.
பத்தடிக்கும் தூரம் குறைவுள்ள
தெருமுனைப் பெட்டிக்கடையில்
வாங்கிவந்த ரொட்டியை
மேஜையில் வைத்துப் பிரித்தேன்.
அடுக்கடுக்கடுக்காகப் பிளந்துவைத்த
ஒரு வினோதப் பழம் போலக்
குவியத் துவங்கியது அமைதி.
ஒரு விள்ளல் எடுத்துகொண்டேன்.

%

சென்ற முறை மணல்.

வியர்வையின் உப்புக் கறையுடைய
என் கனத்த பருத்திச் சட்டையின்
வாடை நிரம்பிய அறையில்
அங்கங்கே சிந்திக் கிடக்கின்றன
உன்னால் அலட்சியப்படுத்தப்பட்ட முத்தங்கள்.
சமீபத்தில் பூசப்படாத
உன் விரல்களில் உரியும் நகச்சாயம்
எதை எச்சரிக்கிறது என
யூகிக்க முடியவில்லை.
உன்னுடைய வாகனத்தின் தலைக்கவசத்தில்
குப்பைபோலக் கிழிக்கப்பட்ட
என்னுடைய மீசைமுகம் கிடக்கிறது
ஏ.ட்டி.எம். மூலைக் கசங்கல்களாக.
வழமைபோல் நான் தயாரித்துத் தந்த
பீங்கான் கோப்பைத் தேனீரை
ஒரு வாய் கூட அருந்தவில்லை.
என்னவோ நிகழ்ந்துவிட்டது
சூடு பறக்கும் அதன் ஆவிக்கும்
இப்போது படர்ந்திருக்கும் ஏடுக்கும் இடையில்.
எந்த நொடியிலும் நீ எழுந்துபோகும்
சாத்தியத்தின் பேரீச்சைக்கன்று முளைக்கும்
இந்த உலர்ந்த நொடியில்
என் காலணிகளில் மினுங்கும்
சென்றமுறைக் கடற்கரை மணலை
பார்க்கத் துவங்குகிறேன்.

 %

கல்யாண்ஜி
உயிரெழுத்து -  ஆகஸ்ட் 2012.

1 comment: