Thursday 16 November 2017

வெயிலை வரைவது











ஒரு சாப்பாட்டு மேஜையை வரைவது என்று தீர்மானித்தாயிற்று.
நான்கு மர நாற்காலிகளை வரைவது நான்கு காடுகளை வரைவது.
ஒரு காடு போதுமென ஒரே ஒரு மர நாற்காலி மட்டும்.
துணிச் சுருக்கங்களை வரையும் கை நேர்த்தி எனக்குக் குறைவு.
கற்பனையில் எட்டிப் பார்த்த பூப் போட்ட மேஜை விரிப்பைத்
தவிர்த்துவிட்டேன்.
கண்ணாடிப் பழ ஜாடிகளையும் திரட்சி மினுங்கும் ஆப்பிள்,
திராட்சைக்குலைகளையும் அப்புறப் படுத்தினேன்,
தினசரிப் பார்வையில் பதிந்த  அன்றாட ஏனங்கள், தட்டு, தம்ளர்,
கரண்டிகள் மட்டுமே.
செவ்வியல் ஓவியங்களில்  எப்போதும் சாப்பாட்டு மேஜையின்
கீழ் ஒரு பூனை உட்கார்ந்திருக்கும்.
அசையா ஒன்றை வரைகையில் அசையும் ஒன்று தரும்  சுரீரென்ற
உயிர்ப்புக்காக  அதையும் வரைந்தாயிற்று.
தூரிகை நுனிக்கு வர, இறுதிவரத் தன்னை  அனுமதிக்க மறுத்தது
பக்கவாட்டிலிருந்து சாய்ந்து
மேஜையில் இடது ஓரம் விழுந்து மஞ்சள் திரவமாக மடிந்து கீழே
வழிந்துகொண்டு இருந்த வெயில் தான்.
ஒப்புக் கொள்கிறேன், வெயிலை வரைவது என்பது வெயிலிடம்
தோற்பதே.

1 comment:

  1. அசையா ஒன்றை வரைகையில் அசையும் ஒன்று தரும் சுரீரென்ற
    உயிர்ப்பு
    இங்கு வெயிலானது. ஓவியமும் அழகானது!

    ReplyDelete