Friday 22 June 2012


தொலைத்துத் தொலைத்து
---------------------------------------


மதுச் சாலை தொலைக்காட்சியில்
சிறுத்தை தாக்கிய தேயிலைத் தோட்டச் சிறுமி.
இடுக்கியை நீங்கிய ஐஸ்கட்டி அமிழல்
மினுமினுக்கும் திரவத்தில்.
தீவிர மறுப்பை மீறி, என்னை வல்லழைத்து
இங்கு இருத்தியிருக்கும் அவன்
அடுத்தடுத்த இரண்டாவது மிடறில்.
காளான் பொறுக்கிவந்து சமைத்தவளின்
பொன்னிறப் பூனைமுடி,
நீலநிற சீமெண்ணெய் விளக்கின்
அலையும் வெளிச்சத்தில் இட்ட
பின் கழுத்து முத்தங்கள்,
அதிகம் உவப்பற்ற உண்ணிப் பூ வாசனை
வரிசை தப்பும் முன்பின்னுடன்
எத்தனையாவது முறையாகவோ இன்றும்
சொல்கிறான் எதிர்-அவன்.
ஈரமான வெங்காயக் கீற்றுகளின்
அடுக்குகளுக்குள் புகத் தவிக்கும்
மல்லாக்கொட்டைப் பருப்புகளைக்
கிளறிக்கொண்டு நான்.
முட்கரண்டியின் கூர்மையும்  உலோகக் கனமும்
 எப்போதும் பிடிக்கிறது எனக்கு.
தாதன் குள்ம் வெயிலில் கிடக்கும்
தண்டவாளங்களில்
திருச்செந்தூர் பாஸஞ்சர் போகிற சப்தம்
தேய்கிறது உள்ளுக்குள்.
என்பங்கு அறைவாடகையை
இன்னும் கொடுக்காத தாழ்வுணர்ச்சி
கையோடு திருகி எடுக்கிறது
சட்டையின் இரண்டாவது பொத்தானை.
மின்தடையில் புள்ளிகள் மொய்க்கும்
முட்டாள் பெட்டியின் செவ்வகச் சீறல்
உண்டாக்கும் பதற்றம் அளவற்றது.
ஒரே மடக்கில் விழுங்கிய
முதல் மிடறின் இருட்டில்
தொடர்பின்றி விரிகிறது பிரும்மாண்டமாய்
“பூக்கள் நிரம்பிய அல்மாண்ட்ஸ்ஓவியம்.
அடுத்த மிடறுகளைக் குவளையில் வார்க்கும்
களகளப்பின் கண்ணாடி இசையை
உங்களில் ஒருவரும் ரசிக்கக் கூடும்
தொலைத்துத் தொலைத்துக் கண்டுபிடிக்கிறான்
கழிப்பறையிலிருந்து திரும்புகிற அவன்
அறிமுகமற்றவரின் தோளில் கையூன்றி
தொலைந்து போன அவனது இருக்கையை.
யாருடைய கைபேசியோ ஒலிக்கும்
நோக்கியா திசையில் பளீரிடுகிறது
ஒருமையில் பெயர்சொல்லி. என் குரல்.
அவனே ஒரு நிழலாக
அசைந்து வருகையில்,
செய்தித் திரையில் காட்டுகிறார்கள்
மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின்
மூடிய ஐந்து நீல உடல்களை
மீண்டும் மீண்டும்.
எந்த மேஜையின் மத்தியில் இருந்தோ
தரையில் மோதும் கண்ணாடிச் சிதறலுடன்
பீறிட்டு எழுகிறது
நானும் சொல்லியிருக்கவேண்டிய
ஒரு மிக உரத்த வசை.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து

No comments:

Post a Comment