Monday 18 June 2012

நான்காவது.

அந்தப் பையனுக்கு மிஞ்சிப் போனால், பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். முகர்ந்து பார்த்தால், இன்னும் தாய்ப்பால் வாசம் கூட அவனிடம் அகலாது  இருக்கலாம்.

இந்தப் பக்கத்துப் பையன் இல்லை. வடக்கத்திப் பையன். தூங்கிஎழுந்த முகத்தில் இந்த வயதுப் பிள்ளைகளுக்கு ஒரு அழகிருக்கும்.  களங்கம்
இன்மையின் அழகு.  வாழ்வின் இன்னும் ஒரு துளிர் விட்டிருக்கும், சுடர்
மிகுந்த இளஞ்செடியின் இளம்காற்றில் இளம் அசைவு. அசைவது தெரியாமல் ஒரு அசைவு உண்டே, அந்த அசைவு. அதனுடைய அழகு. சிரித்துக்கொண்டே இருந்தான். வாய்விட்ட சிரிப்பில்லை. ஆனால் சிரிப்பு. அல்லது சிலிர்ப்பு அது.

வரிகள் இட்ட சிவப்பு பனியன். கீழே ஒரு நீல ஜீன்ஸ். பழைய புத்தகங்கள் மட்டுமே வாங்கிப் பள்ளிக்க்கூடம் போகிற பிள்ளைகள் போல, பழைய
உடைகள் மட்டுமே அணிந்துகொண்டு இந்தத் தெருவையும்   இந்த இன்னொரு அதிகாலையும் புதிதாக்கிக் கொண்டிருக்கிற இன்னொருத்தன்.
அவன் தெரு நாய்களின் சினேகிதனாக இருந்தான். இன்னும் வெயில்வரத்
துவங்காத, வைகாசிக் காற்றடிக்கிற, இந்த ஒதுங்கிய தெருவில், அவன் கருப்பு, வெள்ளை, பழுப்பு என இங்கே திரியும் மூன்று தெரு நாய்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தான்.

அந்தக் கருப்பு நாயைக் கண்டு, இந்த வெங்கடாத்ரி நகரில், சிதம்பர நகரில் பயப்படாதவர் இல்லை. எல்லோரும் ஒரு முறையேனும் அதனால் குரைக்கப்பட்டிருக்கிறார்கள். அனேகம் பேருக்குக் கனவில் அதனுடைய உறுமல் கேட்ட பதற்றம் உண்டு.  கண்களிலும் கோரைப் பற்களிலும் சூனியக்காரக் கிழவியின் சாயல்கள்இருப்பதாக,  வழக்கமாக நான்கு வார்த்தைகள் மற்றவரிடம் பேசக் கூட யோசிக்கிற ஒருவர் சொன்னார். அதற்குப் பின் அதன் கண்களையும் பற்களையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக்கு.  ஆனால்,இதுவரை அந்தச் சூனியக்காரக் கிழவி அகப்படவே காணோம்.

அந்தப் பையன் ’விடாது கருப்பின்’ உச்சந்தலையைத் தடவிக் கொடுத்துக்
கொண்டு இருந்தான். அது’சுகமாக’த் தலையைக் குனிந்து கொடுத்துக்
கொண்டிருந்தது. வலது கையால் கருப்பு நாயைத் தடவிக் கொடுக்க, பழுப்பு நாய் அவனுடைய வலது கைக்குக் கீழ், கன்றுக் குட்டி மடி முட்டுவது
போலத் தலையைத் தாழ்த்திக் கொடுக்கிறது.  பழுப்பு நாய் சற்று பூசிய
உடம்புடனுள்ளது.  ஒரு வளர்ப்பு வீட்டின் மாமிசத்தட்டிலிருந்து விலகி
இப்போதுதான் முதல் முறையாகத் தெருவுக்கு வந்தது போலச் ‘செழிப்பாக’ இருந்தது.  அது அந்தப் பையனின் விரல்களை உடல் முழுவதும் விரும்பியது.  ஒரு பெரும் விழைவுடன் தன்னுடைய உடலைச்
செல்லமாக வளைத்து அவனிடம் ஒப்புக் கொடுத்தது.  திரட்சி நிரம்பிய
அந்த உடல், வேலிக்கருவையும் எருக்கலம் புதரும் அசையும் இந்தத்
தெருவோர விளிம்பில்,  இதுவரை கண்டறியாத ஒரு பையனின் மென்  வருடலுக்கு,  ஒரு இசையின் அலையாகத் தணிகிறபோது நமக்குள்ளே உண்டாகும் உணர்வு, அபூர்வமானது.

வலமும் இடமுமாக அவன் தடவிக் கொடுக்க, மூன்றாவதாக வந்து இணைந்து கொண்ட வெள்ளை நாய் தன் வாலசைவில் அவனுடன்
உடனடியாகக் காட்டிய நெருக்கத்தைப் பார்த்ததும் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். ஏற்கனவே இசைத்துக் கொண்டிருந்த பண்ணை, வேறொரு வாத்தியத்தில் வாசிக்கிறதாக, அவன் இடது கையால் அந்த வெள்ளை
நாயின் முதுகை கழுத்திலிருந்து வால் பக்கமாக நீவிவிடுகிறான்.  ஒரு
சிட்டுக்குருவியைப் போல விடுதலையின் அழகுடன் மினுங்கின அவன்
கண்கள். அவன் வேறு யாரையோ எதிர்பார்ப்பது போலத் தெருக்கோடி
வரை பார்க்கிறான். தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி எங்கோ
தூரத்தில் இருந்து தன்னைப் பார்த்துகொண்டிருக்கும் இன்னொருவருடைய
கழுத்தில் வீசுவது போல இருந்தது பார்வை.  தெருக் கடைசியில் கருப்பும்
வெள்ளையுமான உடலுடன் ஒரு நாய் இவனுடைய திசையில் ஓடிவர
ஆரம்பித்திருந்தது.  மரநிழல் விழுந்தசையும் தரையை, கைக்கு வந்த
வாக்கில்,ஒரு தாளைக்கிழிப்பது போல,  வெயிலோடு கிழித்தெடுத்து
அது ஓடிவந்தது.

பையனுக்கு முகமெல்லாம் சந்தோஷம். இத்தனைக்கும் அவன் இதுவரை  குரலை எழுப்பவே இல்லை. எந்தப் பெயர் சொல்லியும் அவற்றைக் கூப்பிடவில்லை. வா, வா என்று சைகையால் கூட அழைக்கவில்லை. செய்ததெல்லாம் வருடல். நீவல். உச்சியில், காதோரத்தில் துவங்கி வளைந்த மேல் முதுகில் வால் வரை.
பிராணிகள் உணர்வு பூர்வமானவை, மனிதரை விடவும்.  மனிதர்கள் உச்சி முகரப்பட விரும்புவது போல, அவையும் உச்சிவருடலை விரும்புகின்றன.
வருடலின் வாசனை நுகர அவற்றால் முடிகிறது.  அதற்கும் இன்னொரு விலங்குக்கும், அது மனிதனாகவும் இருக்கலாம், உண்டாகிற தொடுதலின் அதிர்வை எங்கிருந்தாலும் அவை உணர்ந்துவிடுகின்றன.
அந்த நான்காவது நாய் இன்னும் வந்துவிடவில்லை.
மூன்று நாய்களும் அவனும் மட்டும் இருக்கிற அந்தக் காட்சி நீடித்துக் கொண்டே இருக்க விரும்பினேன். ஏதோ ஒரு ரவி வர்மாவின் புராணிகச்
சித்திரம் ஒன்றில் கூட இப்படியொரு நாயைப் பார்த்த ஞாபகம். காசியில்
பைரவர் சன்னதிக்குப் போகிற பாதையெல்லாம் மாலையணிந்து நடமாடும் பைரவர்கள்.  நான் காசியிலிருந்து விலகி, பைரவர்களிடமிருந்து விலகி, எங்கள் தெரு எங்கள் தெருவாக மட்டும் இத்தனை அழகுடன் இருப்பதை விரும்பினேன்.

எனக்கு இந்த தினம் மறுபடி வராது என்று தோன்றுகிறது.
இந்தப் பையனை நிச்சயமாக மறுபடி நான் சந்திக்கவே போவதில்லை என்பது முதலில் இருந்தே உறுதியாகிவிட்டிருந்தது. நான் அந்தப் பையனாக அல்ல, அவனை நோக்கி வந்துகொண்டிருக்கும் நான்காவது
நாயாக இருக்க விரும்பினேன்.

“இல்லாத ஒரு நான்காவது நாயுடன்
விளையாடுவது போல
புரண்டுகொண்டிருக்கின்றன
காலை வேம்பின் கசப்பு நிழலில்
மூன்று நாய்கள்”

என நான் ஏற்கனவே எழுதிருந்த கவிதையில் வருமே, அதே நான்காவது
நாயாக.

4 comments:

  1. எனக்கு இந்த தினம் மறுபடி வராது என்று தோன்றுகிறது.
    இந்தப் பையனை நிச்சயமாக மறுபடி நான் சந்திக்கவே போவதில்லை என்பது முதலில் இருந்தே உறுதியாகிவிட்டிருந்தது. நான் அந்தப் பையனாக அல்ல, அவனை நோக்கி வந்துகொண்டிருக்கும் நான்காவது
    நாயாக இருக்க விரும்பினேன்.



    ஒவ்வொருவரும் கதை எழுத கவிதை எழுத கட்டுரைகள் எழுத எந்தெந்த ஊர்களுக்கோ பயணிக்கிறார்கள்.

    தான் வசிக்கும் தெருவில் கண்ட ஒரு காட்சியின் வாயிலாக இவ்வளவு உணர்சிகளை வாசகனுக்கு முழுதாகப்
    பரிமாறும் உங்களுக்குக் காலேமெல்லாம் எங்களின் நன்றிகள்

    ReplyDelete
  2. வண்ண நிலவன் போல ஒரு வரி எழுதி விட்டால் போதும் என்று கூறி/எழுதி இருக்கிறீர்கள்.



    நான் அந்தப் பையனாக அல்ல, அவனை நோக்கி வந்துகொண்டிருக்கும் நான்காவது
    நாயாக இருக்க விரும்பினேன்.

    இந்த ஒரு வரி போதும் சார்.


    என் வருத்தமெல்லாம் இந்த வரியை வாசிக்க வல்லிக் கண்ணனும், பாரதியும் இன்று இல்லையே என்பதே

    ReplyDelete
  3. உசிவருடல் அருமை..

    ReplyDelete
  4. திரட்சி நிரம்பிய
    அந்த உடல், வேலிக்கருவையும் எருக்கலம் புதரும் அசையும் இந்தத்
    தெருவோர விளிம்பில், இதுவரை கண்டறியாத ஒரு பையனின் மென் வருடலுக்கு, ஒரு இசையின் அலையாகத் தணிகிறபோது நமக்குள்ளே உண்டாகும் உணர்வு, அபூர்வமானது. Arumai
    Thiyagarajan

    ReplyDelete