Tuesday 22 May 2012

யாரும், யாரையும்...

சில காலைகளில், நம்மைப் போல பறவைகளுக்கும் சீக்கிரம் விழிப்பு வந்துவிடும் போல.

உடலின் கடிகார முட்களை, அதன் தேவைக்கு ஏற்ப நம் உடலே திருப்பி
வைத்துக் கொள்கிறது. விலாப் புறச் சிறகுகளை மனமே போதுமான
அளவில்  விரித்துக் கொள்கிறது. பறவைகளுக்கும் அப்படித்தான் இருக்க
வேண்டும்.

பறவைகள் இந்த தினத்தில் அடிக்கப்போகிற வெயிலை முன்னுணர்கிறது.
ரமணனை விடவும் வானிலை அறிவு பறவைகளிடம் துல்லியம். அதற்கு ஏற்ப எல்லாப் பறவைகளும் தன் சிறகை உலர்த்திக் கொள்கின்றன. அலகு
கோதி இடவலச் சிறகுகளைச் சீரமைக்கும் போதே, தான் பறக்கவிருக்கும்
வானின் எல்லையை முன் தீர்மானித்துவிடுகிறது.   அமர்ந்திருக்கும் கிளையில், பறவையின் கால் நகங்களுக்குள் அன்றைய மேகம், அன்றைய காற்று எல்லாம் நகரத் துவங்கிவிடுகின்றன.  அவற்றின் தானியம்,அவற்றின்
புழு, அவற்றைக் குறிவைக்கும் தாக்குதல் குறித்த பதற்றம் பறவைகளிடம்
அதிகாலையில் இல்லை. ஒரு கூட்டுப் பிரார்த்தனையுடன், சேர்ந்திசையுடன்
அவை ஒரு நாளைப் பெற்றுக் கொள்கின்றன.  பெறுதலே பேறு.

இன்று என்னுடனும், எனக்கு முன்பும் குயில்கள் எழுந்திருந்தன. எல்லாக்
குயில்களும் ஒரு குயிலாகி, இடைவிடாத கூவல்களில் பூத்தொடுப்பது
போல ஐந்தரை மணி வெளிச்சத்தைக் கோர்த்துக் கொண்டிருந்தன,  சில
தோப்புகளுக்கு மத்தியில், ஒரு தோப்புக்குள் இருப்பதாக,  ஒரு பெரும்
கூவல்களின் கூடாரத்தில் 19. சிதம்பர நகரக் காலை இருந்தது.    கூடு, கூடாரம்,  அம்பு, அம்பாரம்... இந்தச் சொற்கள் எல்லாம்    பறவைகளின்
அகராதியிலிருந்து நம்முடைய தெருக்களில் சிந்தியிருக்கலாம்.

துறைமுகப் பெருவழிகளில், கன்டெய்னர் லாரிகளிலிருந்து சிந்தும் கோதுமையை, மக்காச் சோளத்தைப் பொறுக்கக் காத்திருந்த தூத்துக்குடிப்
பறவைகள் இருபத்தி இரண்டு வருடங்கள் தாண்டி இப்போது  எனக்குள்
சிறகடிக்கின்றன.  பெரும்பாலும் மைனாக்கள் அவை.

சிட்டுக் குருவிகள் கைபேசிக் கோபுரங்களால் விரட்டப்பட்ட பின்,  சிறு
அளவில் இது போன்ற குடியிருப்புப் பகுதிகளில் ஆறுதல் பறவைகளாக
மைனாக்களே இருக்கின்றன.    தெற்குப் புறவழிச்சாலையில் நசுங்கித் தகடாகக் கிடக்கும்    இவற்றின் சிறகு   மிச்சத்தைப் பார்க்க   நேர்வது இப்போது எல்லாம் முதல் முறையாக அல்ல. வாழ்வதற்காக இதுபோன்ற
நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுக்கிறபோதே விபத்து மரணத்தையும்  அது கணக்கில் எடுத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.

எனக்கு இந்த சமீபத்திய தினங்களில், மைனாக்களைப் பற்றிய இரண்டு
வெவ்வேறு நெடுவழிச் சித்திரங்கள் உண்டு.  வேப்ப மரத்தடியில், நிழல் விற்பனைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இடம் அது.  ஹெல்மெட்கள் -   சரி,
தலைக்கவசங்கள் -  விதம்விதமான மினுமினுப்புடன் அடுக்கிவைக்கப்
பட்டிருந்தன.  விற்கிற வடக்கத்தி முகம் எதுவும் அருகில் இல்லை.  ஒரே
ஒரு மைனா மட்டும் மேல் வரிசையில் உட்கார்ந்திருந்தது. செதுக்கப்பட்டு
இருந்தது என்பதே சரியான வர்ணனை. நான் தாண்டிச் செல்கிறவரை அது
அசையவே இல்லை. அன்று மாலைக்குள் அதனுடைய சுயசரிதையை எழுதிவிடத் தீர்மானித்துவிட்ட ஆழ்நிலை மீள்பார்வையில் அது இருந்தது.
அதன் அலகின் மேல் பிளவுக்  கடைசியில் மஞ்சள் துளியாக அதனுடைய
மொத்த வாழ்வும் திரண்டிருந்தது. எடையற்ற எடையில், அது தன்னைக் கடைசியாக நிறுத்துப் பார்த்துவிட்ட புன்னகை அதன் நிலைத்த கணகளில்.
வாழ்வு நிரம்பும் நேரத்தின் உயிரின் அசைவறு பரவசம் அது.

இன்னொன்று, மேலப்பாளையம் திருப்பத்தில். பதனீர், நுங்கு எல்லாம் விற்கிறவரின் பக்கத்தில் தேடிச் சோறு நிதம் தின்றுகொண்டிருந்தது.
மெலிவாகக் கூட இல்லை. திரட்சியான உடல். பின் புறம் குவிந்து கிடந்த
ஓலைப் பட்டையின் பச்சைக்குள்,   நுங்குச் சீவல்களுக்குள்,   இளநீர்ப் பிளவுகளுக்குள் அது, யாரும் விழித்துவிடுவதற்கு முன் செய்துமுடிக்க
வேண்டிய களவு போல, தன்மேல் வீசப்படக் காத்திருக்கும் வலையின்
எச்சரிக்கையோடு, குனிந்து குனிந்து கொத்திக் கொண்டு இருந்தது.

நான் என்னுடன் அந்த இரண்டு மைனாக்களையும், அல்லது இரண்டு வித மைனாக்களையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.     இரண்டுவிதமான
மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கும்போது,  இரண்டு
விதமான பறவைகளிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும்.

இந்த குயில் கூவல் / இந்த அக்காக் குருவிச் சத்தமும் இன்று எனக்கு
ஏதேனும் கற்றுக் கொடுக்கும்.     கற்றிலன் ஆயினும் நிச்சயம் கேட்கலாம்.
கேட்டேன்.   இந்த நாளின் இறுதிக்குள்,  சிறிதளவு நான் ஞானம் எய்துவேன்
ஆகில், அது இந்தக் கேள்வி ஞானத்தில் இருந்துதான்.

இது கேள்வி ஞானமா, கேட்டலின் ஞானமா?
இது போன்ற எந்த சந்தேகங்களும் எழாத,  சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட
பறவைக்குரல்களின் அதிகாலைத் திரட்சியை, இதைத் தட்டெழுதும் இந்த நேரத்திலும் என்னால் கேட்கமுடிகிறது.

ஒரு பறவை யாரையும் சந்தேகிப்பதில்லை.
ஒரு பறவையை யாரும் சந்தேகிக்கவும் முடியாது.





3 comments:

  1. இந்தப் பாழாய்ப் போன பட்டணத்தில் பார்க்க முடியாத கேட்க முடியாத பறவைகளை எழுத்தில் கொண்டுவந்து விட்டீர்கள் சார்:)

    ReplyDelete
  2. நெல்லை மற்றும் புற நகரில் இருப்பதால்
    தங்களால் ரசிக்க முடிகிறது
    வாழ்வை அனுபவித்து வாழ முடிகிறது

    மாநகர வாழ்க்கையில் பணத்தின் பின் ஓடவும்
    பணத்தின் குரலை மட்டுமே கேட்க காது விரும்புகிறது

    பணம் தவிர்த்து மற்றவை எல்லாம் மீதும் சந்தேகம் கொண்ட வாழ்க்கை inge

    ReplyDelete
  3. It is a nice feeling to see the birds in the early morning with a hot coffee in hand. This is my routine job inthe morning to see what type of birds are there in my front and back yard. I have kept a bird feeder to attract them and also feed them. One way it helps me to control the bugs.

    Sir,
    I find it difficult to enter my comments in Tamil. Also your comment box is not allowing me to paste my typed comments in tamil. I think this may allow if you turn off the word verification.

    Setttings -> posts and comments settings -> Show word verification - no.

    Sorry to disturb you on this.

    ReplyDelete